search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Israel relation"

    • இஸ்ரேலில் பிரதமர் மோடி மிகவும் விரும்பப்படும் தலைவர்
    • பிரதமர் மோடி உடனடியாக கண்டனம் தெரிவித்தார்

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர் 11-வது நாளாக தொடர்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் சிக்கலை தீர்க்க இஸ்ரேல் தற்போது முயலவில்லை. இப்பொழுது புதியதாக எழுந்திருக்கும் தீவிர பிரச்சனையை தீர்க்க போராடுகிறோம். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்தால்தான் மீண்டும் இது போன்ற தாக்குதல்கள் நடக்காது.

    இந்தியா மீது இஸ்ரேல் நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலில் மிகவும் விரும்பப்படும் தலைவர். பிற நாடுகளை விட இந்தியாவின் மீதுதான் இஸ்ரேலியர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் எங்கள் பக்கம் நின்றது. மோடி உடனடியாக கண்டனம் செய்தார். பிற நாட்டினர் உடனடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை; பிறகுதான் தெரிவித்தனர்.

    அமெரிக்கர்கள் எங்களுக்கு துணை நிற்கின்றனர். மேலும் அமெரிக்கர்களுக்கு இந்தியாவுடன் தற்போது வலுவான உறவு உள்ளது. நாங்கள் இந்தியாவை நம்புவதால், அவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிடுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

    சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். அதில் சுமார் 1000 இந்தியர்கள் மட்டுமே இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பினார்கள்; அவர்களையும் நாங்கள் பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

    இவ்வாறு நவோர் கிலான் தெரிவித்தார்.

    • இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்
    • இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி 2017ல் சென்றார்

    கடந்த சனிக்கிழமையன்று பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது வான்வழியாக 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியது. மேலும் தரைவழியாகவும், நீர்வழியாகவும் தாக்குதல் நடத்தியது. இதில் 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

    இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது போர் அறிவித்து ஹமாஸ் பயங்கரவாதிகளை தீவிரமாக வேட்டையாடி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. பலியான அப்பாவி இஸ்ரேலிய பொது மக்களின் குடும்பங்களுக்கு எங்களின் பிரார்த்தனைகள். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கிறது" என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    "இந்தியா, உலகில் ஒரு முக்கியமான நாடு. பயங்கரவாதத்தை குறித்த முழுமையான புரிதல் இந்தியாவிற்கு உள்ளதால் இஸ்ரேலை ஆதரிக்கிறது", என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் (Naor Gilon) தெரிவித்தார்.

    பல தசாப்தங்களாக நடக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் இந்தியா, இஸ்ரேலை ஆதரித்ததில்லை. தற்போது இந்தியா எடுத்திருக்கும் ஆதரவு நிலை பல விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

    1962ல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இந்தியா, இந்திய-சீன போரில் இஸ்ரேலின் உதவியை பெற்றாலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கிடையே சமமான பார்வையை கொண்டிருந்தது.

    1970-களில், பாலஸ்தீன ஆதரவு நிலை எடுத்த ஒரே அரபு நாடுகளல்லாத தேசமாக காங்கிரஸ் சார்பாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா இருந்து வந்தது.

    2000-வது ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் மத்திய அமைச்சராக இருந்தவர் எல்.கே. அத்வானி. அதே வருடம், இஸ்ரேலுக்கு செல்லும் முதல் வெளியுறவு துறை அமைச்சர் எனும் அந்தஸ்தை பெற்றவர் அவர் அரசை சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.

    2003ல் வாஜ்பாய் அரசு நடைபெறும் போது இந்தியாவிற்கு வந்த முதல் இஸ்ரேலிய பிரதமர் எனும் அந்தஸ்துடன் ஏரியல் ஷெரோன் இங்கு சிறப்பான உபசரிப்பை பெற்றார்.

    2004-2014 காலகட்டத்தில் பாலஸ்தீனிய ஆதரவு நிலையை விட்டு கொடுக்காமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இஸ்ரேலுடன் உறவை வளர்த்தது.

    2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி பிரதமரானார். அப்போது முதல் இஸ்ரேல்-இந்திய உறவு வலுப்பெற தொடங்கியது. பிறகு 2014, 2015, 2016 ஆகிய வருடங்களில் இரு தரப்பு முக்கிய தலைவர்களின் பரஸ்பர வருகை அதிகரித்தது. இரு நாடுகளுக்கிடையே பல ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் அளவிற்கு உறவு வலுவடைந்தது.

    2017ல் மோடி இஸ்ரேலுக்கு சென்றதன் மூலமாக இஸ்ரேலுக்கு செல்லும் 'முதல் இந்திய பிரதமர்' எனும் அந்தஸ்தை பெற்றார்.

    தற்போது இந்தியா வெளிப்படையாக இஸ்ரேல் ஆதரவை எடுத்திருப்பது அதன் வெளியுறவு கொள்கையில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள போதெல்லாம் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்து வருவதாக அரசியல் விமர்சிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×