search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Delhi"

    • செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி எனும் குடியிருப்பு உள்ளது
    • இரு இளைஞர்கள் அவர் மகளை தங்களுடன் ஆடுமாறு துன்புறுத்தினர்

    டெல்லி தலைநகர் பகுதிக்கு உட்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த பகுதி, ஃபரிதாபாத் (Faridabad).

    இங்குள்ள செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி (Princess Park Society) எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 52 வயதான பிரேம் மேத்தா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த குடியிருப்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு வட இந்தியர்கள் கொண்டாடும் கார்பா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு டாண்டியா ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த கொண்டாட்டத்தில் பிரேம் மேத்தாவின் மகளும் பங்கேற்றார்.

    அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் பிரேம் மேத்தாவின் மகளை நெருங்கி, தங்களுடனும் டாண்டியா ஆட்டம் ஆடுமாறு வற்புறுத்தினார்கள். மேலும், அவருடைய தொலைபேசி எண்ணையும் கேட்டு வற்புறுத்தினார்கள். இதனால் பிரேம் மேத்தாவின் மகள் செய்வதறியாது திகைத்தார்.

    இதை கண்ட பிரேம் மேத்தா, தகாத செயலில் ஈடுபட்ட அந்த இரண்டு இளைஞர்களிடம் சென்று கோபமாக பேசினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல வாக்குவாதம் அதிகரித்து மோதலாக மாறியது.

    மோதல் முற்றியதில், அந்த இருவரும் பிரேம் மேத்தாவை கீழே தள்ளி விட்டனர். கீழே விழுந்த அவர் சுயநினைவை இழந்தார்.

    உடனடியாக அங்கிருப்பவர்கள் உதவியுடன் அவர் மகளும், குடும்பத்தினரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேத்தா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடி வந்த ஒரு குடும்பம், இரு இளைஞர்களின் அக்கிரமத்தால் சோகத்தில் மூழ்கிய செய்து அப்பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    • குர்ப்ரீத்திற்கு லேனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது
    • துர்நாற்றம் வீச துவங்கியதும் உடலை மறைக்க குர்ப்ரீத் வழி தேடினார்

    மேற்கு புது டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங்.

    குர்ப்ரீத், தனது சொந்த வேலைக்காக அடிக்கடி சுவிட்சர்லாந்து செல்வது வழக்கம். அவ்வாறு சென்றிருந்த போது அந்நாட்டை சேர்ந்த லேனா பெர்கர் எனும் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகி வந்தனர். சுவிட்சர்லாந்து செல்லும் போதெல்லாம் லேனாவை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் குர்ப்ரீத்.

    சமீப சில மாதங்களாக குர்ப்ரீத்திற்கு லேனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

    லேனா, வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக குர்ப்ரீத் சந்தேகிக்க தொடங்கினார். தன்னுடன் உறவில் இருந்து கொண்டே வேறொரு ஆணுடன் அவர் பழகுவதை விரும்பாத குர்ப்ரீத், லேனாவை கொல்ல திட்டமிட்டார்.

    எனவே, தனது திட்டத்தை செயல்படுத்த இந்தியாவில் வேறொரு பெண்ணின் தகவல்களை கொடுத்து ஒரு காரை வாங்கினார். பிறகு லேனாவை இந்தியாவிற்கு வர சொல்லி அழைப்பு விடுத்தார். குர்ப்ரீத்தின் அழைப்பின் பேரில் லேனா, அக்டோபர் 11 அன்று இந்தியா வந்தார். வந்தவருடன் 4 நாட்கள் வரை சிரித்து பேசி மகிழ்ந்திருந்த குர்ப்ரீத், அடுத்த நாள் லேனா எதிர்பாராத விதமாக அவரை தாக்கி, அவர் கை, கால்களை கட்டி பிறகு கொலை செய்தார்.

    சில நாட்களானதும், வீட்டிலேயே வைத்திருந்த லேனாவின் சடலத்திலிருந்து துர்நாற்றம் வீச துவங்கியது. உடலை மறைக்க வழி தெரியாமல் தவித்த குர்ப்ரீத், தான் வாங்கிய வேறொரு பெண்ணின் காரில் சடலத்தை ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் வைத்து, காரை நீண்ட தூரம் ஓட்டி சென்று, அங்குள்ள ஒரு அரசு பள்ளிக்கு அருகே ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரமாக வீசி விட்டு வேகமாக காரில் சென்று விட்டார்.

    லேனாவின் உடலை கண்ட எவரோ தகவல் கொடுத்ததன் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்விற்கு அனுப்பி வைத்து, விசாரணையை துவங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆராய்ந்ததில் குர்ப்ரீத் கார் சென்று வந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில் குல்ப்ரீத்தை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.

    இறுதியில் குற்றத்தை குல்ப்ரீத் ஒப்பு கொண்டார்.

    குல்ப்ரீத் வீட்டிலிருந்த மற்றொரு காரையும், சுமார் ரூ. 2.25 கோடி பணத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர், மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புது டெல்லியில் ஒரு சந்திப்பில் நிதின் கட்கரி உரையாற்றினார்
    • சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுகின்றன

    இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி (66).

    இந்திய தலைநகர் புது டெல்லியில், "க்ரிசில் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கான்க்லேவ் 2023" எனும் இந்தியாவின் உள்கட்டமைப்பில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கான ஒரு சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது;

    அரசாங்கம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தாலும் உள்கட்டமைப்பு அமைப்பதில் பங்கு பெறும் நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற தயங்குகின்றன. இதனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது திட்டங்களுக்கு டிபிஆர் எனும் 'விரிவான திட்ட அறிக்கைகள்' (Detailed Project Reports) தயாரிக்க மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. இது மட்டுமின்றி சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. நிலையின்றி அடிக்கடி உயரும் விலையினால் டிபிஆர் உருவாக்குவது மிக கடினமாக உள்ளது. எங்குமே ஒரு முழுமையான டிபிஆர் உருவாக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைகளிலும் பல தவறுகள் இடம்பெறுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்கள் இந்தியாவில் 14லிருந்து 16 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் 8லிருந்து 10 சதவீத அளவிலேயே உள்ளது. இதனால் திட்டங்களுக்கான செலவுகள் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகி விடுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல பிரிவுகளில் அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது
    • சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தெருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது

    இந்திய தலைநகர் புது டெல்லியின் நோய்டா (Noida) பகுதியில் உள்ள நிதாரி (Nithari) கிராம பகுதியில், கடந்த 2006 டிசம்பர் மாதம், ஒரு வீட்டின் வெளியே உள்ள வடிகால் பாதையில் பல எலும்பு கூடுகளை பொதுமக்கள் கண்டனர். இது குறித்து உடனடியாக அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

    பொதுமக்கள் அளித்த புகாரை அளித்து, காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

    அந்த வீட்டை காவல்துறையினர் மேலும் ஆய்வு செய்யததில் பல குழந்தைகளின் உடல் பாகங்கள் கிடைத்தன. அந்த பகுதியின் சுற்று வட்டாரத்தில் வசித்து வந்த பல சிறுவர் சிறுமியர் உடல்கள் அவை என்றும் தெரிய வந்தது.

    மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு காவல்துறையிடமிருந்து மத்திய புலனாய்வு துறையிடம் (CBI) ஒப்படைக்கப்பட்டது. அந்த வீட்டின் வேலைக்காரன் சுரிந்தர் கோலி (Surinder Koli) மற்றும் மொனிந்த சிங் பந்தெர் (Moninder Singh Pandher) ஆகியோர் அந்த குழந்தைகளை கடத்தி, தகாத உறவில் ஈடுபட்டு, அவர்களை கொன்றதாக சிபிஐயின் தீவிர விசாரணையில் தெரிய வந்தது.

    ஆதாரத்தை மறைக்க அக்குழந்தைகளின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியதாக கோலி தெரிவித்தான். குற்றத்தை ஒப்பு கொண்ட கோலி, உயிரிழந்தவர்களின் உடல்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், அவர்களின் உடல் பாகங்களை உண்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

    பல பிரிவுகளில் அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இறுதியாக அவர்கள் இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    இதனை எதிர்த்து அவர்கள் செய்த மேல்முறையீட்டு வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், நாட்டையே உலுக்கிய 17 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குற்ற வழக்கில் இன்று தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம், போதுமான ஆதாரம் இல்லாததால், அவர்கள் இருவரையும் அனைத்து வழக்கிலிருந்தும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.

    • ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது
    • ரிக்டர் அளவுகோளில் 3.1 என இந்த நில அதிர்வு பதிவாகியது

    இந்திய தலைநகர் புது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்புற பகுதிகளில் இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.

    இன்று மாலை 04:08 மணியளவில் அரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், டெல்லிக்கு தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வு, ரிக்டர் அளவுகோளில் 3.1 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடி விட்டனர்.

    இது குறித்து அவசர கால பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ள டெல்லி காவல்துறை, லிஃப்டை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், கட்டிடங்கள், மரங்கள், சுவர்கள், தூண்கள் ஆகியவற்றின் அருகே நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 எனும் எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளது. இத்துடன் நில அதிர்வு காலங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.

    புது டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தலைநகர் டெல்லியில் இம்மாதம் இது இரண்டாவது முறையாக நடைபெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத தொடக்கத்தில் டெல்லியை உள்ளடக்கிய வட இந்திய பகுதிகளில் அடுக்கடுக்காக ஏற்பட்ட நில அதிர்வுகள் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • இக்கடைக்கு திங்கட்கிழமை வாராந்திர விடுமுறை நாளாகும்
    • முன்னதாக கண்காணிப்பு கேமிராவை செயலிழக்க செய்தனர்

    இந்திய தலைநகர் புது டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது ஜங்க்புரா. ஜங்க்புராவில் உயர் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி போகல்.

    இங்குள்ள பிரபல நகைக்கடை உம்ராவ் ஜுவல்லர்ஸ். இக்கடை 4 தளங்களை கொண்டது.

    இக்கடைக்கு வாராந்திர விடுமுறை நாள் திங்கட்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை விற்பனை நடைபெற்றது. அதற்கு பிறகு விற்பனை நேரம் முடிந்ததும், கடை உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இக்கடையை கொள்ளையடிக்க நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த கொள்ளையர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்திற்கு மேல், கடை மூடியிருந்த நேரத்தில் கடையின் மேற்கூரைக்கு எப்படியோ வந்தனர். அங்கிருந்து தரைப்பகுதிக்கு வந்திறங்கினர்.

    முன்னதாக அக்கடையின் கண்காணிப்பு கேமிராக்களை திருடர்கள் செயலிழக்க செய்தனர். அதற்கு பிறகு அக்கடையின் தரைதளத்தில் உள்ள "ஸ்ட்ராங் ரூம்" எனப்படும் பாதுகாப்பு பெட்டக அறையில் துளையிட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளையும், வெளியில் ஷோ ரூமில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை கடையை திறந்து பார்த்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்த அனைத்து நகைகளும் பறி போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தனர்.

    கொள்ளையர்கள் செயலிழக்க செய்யும் முன்பு வரை கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். எவரையும் காவலில் எடுக்கவில்லை என்றும் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    நேற்று அரியானாவில் உள்ள அம்பாலாவில் ஒரு கூட்டுறவு வங்கியில் இதே போன்று துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்
    • இந்தியாவிற்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் கடமைப்பட்டிருப்பதாக கிர்பி தெரிவித்தார்

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இம்மாதம் 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட பல உறுப்பினர் நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் ராஜாங்க பேச்சுவார்த்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபைக்கான 78-வது அமர்வில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு உலகம் பயணிக்க வேண்டிய திசை குறித்து தன்னம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்பட்டு வருகிறார். பெரும் செயல்கள் ஜி20 மாநாட்டில் செய்து முடிக்கப்பட்டன. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தலைமையேற்ற இந்தியாவிற்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். திட்டமிடுதல் மட்டுமல்லாது செயல்படுத்தலிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இந்தியாவில் இருந்த 2 நாட்களும் மிக மிக ஆக்கபூர்வமான நாட்களாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜி20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமரும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்திட்டம் 8.9 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகிறது
    • கட்டிட பரப்புளவு மட்டுமே 1.8 லட்சம் சதுர மீட்டர் ஆகும்

    இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உலகிலேயே மிகப்பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (International Convention And Expo Centre) ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

    "யஷோபூமி" என பெயரிடப்பட்டுள்ள இம்மையம் "மைஸ்" எனப்படும் சந்திப்புகள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (Meetings, Incentives, Conferences, and Exhibitions) ஆகிய நோக்கங்களுக்கான மையமாக 8.9 லட்சம் சதுர மீட்டர் திட்ட மதிப்பீட்டில், 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பில் அமையவுள்ளது.

    இதில் அமையவுள்ள மாநாட்டு மையம் 15 மாநாட்டு மையங்களை உள்ளடக்கி மொத்தமாக 73,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். இதில் ஒரு முக்கிய கருத்தரங்க மண்டபமும், கலைநிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய அரங்கமும், 13 சந்திப்பு அறைகளும் என சுமார் 11 ஆயிரம் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் வகையில் அமையவுள்ளது.

    மைய கருத்தரங்க மண்டபம் சுமார் 6 ஆயிரம் விருந்தினர்கள் ஒன்றாக அமரும் வகையில் உள்ளது.

    கலைக்கூட அரங்கில் 2500 விருந்தினர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த சந்திப்புக்களை நடத்தும் வகையில் 8 தளங்களில் 13 சந்திப்பு கூடங்கள் அமைக்கப்படுகிறது.

    1.07 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உலகிலேயே பெரிய கண்காட்சிக்கூடமும் அமையவுள்ளது. மழைநீர் சேகரிப்புக்கான வசதி, மறுசுழற்சி மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு, சோலார் மின்சார வசதி என பசுமைவழி சார்ந்த முறைகளில் இயற்கையோடு இணைந்தவழியில் திட்டம் முழுவதும் கையாளப்பட்டுள்ளது.

    புதுடெல்லியின் துவாரகா செக்டார் 21-ல் உள்ள டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ விரைவு ரெயில் நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இணைப்பு வசதியை துவாரகா செக்டார் 25-ல் உருவாக்கப்பட்டுள்ள புது மெட்ரோ ரெயில் நிலையத்தையும் நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த புதுரெயில் நிலையம் வழியாக யஷோபூமி, டெல்லி விமான நிலைய மெட்ரோவுடன் இணைக்கப்படவுள்ளது.

    மெட்ரோ வழியாக புதுடெல்லியிலிருந்து யஷோபூமிக்கு செல்ல 21 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

    • உலகின் முக்கிய தலைவர்கள் டெல்லிக்கு வருகின்றனர்
    • பிரகதி மைதானத்தை சுற்றிலும் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது

    சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி20.

    இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு, இந்திய தலைநகர் புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும், அதிபர்களும் புது டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பிலும், விருந்தோம்பலிலும் எந்தவித குறைபாடுகள் இன்றி இரு நாட்களிலும் மாநாடு நடைபெற அரசு தரப்பில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

    பிரகதி மைதானத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காவல் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானங்கள் முதல் பட்டங்கள் கூட பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    புது டெல்லி காவல்துறையின் ரெயில்வே காவல் பிரிவு, மத்திய ரெயில்வே காவல்துறையுடன் இணைந்து டெல்லி ரெயில்வே நிலையம் அருகே ரோந்து பணிகளை மேற்கொண்டது. பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது.

    புது டெல்லியின் மதுரா சாலை, பைரோன் சாலை, புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்க சாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 7 நள்ளிரவில் இருந்து செப்டம்பர் 10 வரை அனைவருக்குமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், மருந்து மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை புது டெல்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள், அவசரகால வாகனங்கள், மற்றும் விமான நிலையம், பழைய டெல்லி ரெயில்வே நிலையம் மற்றும் புது டெல்லி ரெயில்வே நிலையம் செல்லும் வாகனங்கள் ஆகியவை மட்டுமே அடையாளங்கள் உறுதியான பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும்.

    இன்று (செப்டம்பர் 7) கோகுலாஷ்டமி விடுமுறையுடன், செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 10-ம் தேதி வரை என தொடர்ந்து நான்கு நாட்களுக்கு புது டெல்லியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புது டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடத்தப்படுவதை பெருமையாக கொள்வதால், இத்தனை கட்டுப்பாடுகளையும் டெல்லி மாநகர மக்கள் வரவேற்கிறார்கள்.

    • பல்வேறு காரணங்களால் சில தலைவர்கள் வரவில்லை
    • சில நாட்டு தலைவர்களின் வருகை உறுதியாகவில்லை

    உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா உட்பட இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க அனைத்து நாடுகளின் தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில அதிபர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ரடார் ஆகியோர் பல்வேறு காரணங்களால் வர மாட்டார்கள் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃப்யுமியொ கிஷிடா, ஜெர்மனி அதிபர் ஓலஃப் ஷோல்ட்ஸ், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான், சவுதி அரேபியா இளவரசர் மொஹம்மத் பின் சல்மான், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா, தென் கொரியா அதிபர் யூன் சுக்-இயோல், ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் டாயிப் எர்டோகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

    இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய உறுப்பினர்கள் பங்கேற்கிறார்களா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், நைஜீரிய அதிபர் போலா டினுபு மற்றும் மவுரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் வந்திறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    • செப்டம்பர் 9, 10 தேதிகளில் புது டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது
    • சீன-அமெரிக்க உறவு சமீப காலங்களில் சீர்குலைந்திருக்கிறது

    உலகின் 19 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு ஜி20.

    உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்ட இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்தது.

    தற்போது இம்மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் ரஷியாவின் சார்பில் பங்கேற்பார் என ரஷியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    ரஷிய உக்ரைன் போரில், ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு வரும் நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பது தவிர்க்க முடியாததாகும். சமீப காலங்களாக வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் காரணங்களுக்காக சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கசப்பான நிலையை அடைந்திருக்கிறது.

    இப்பின்னணியில் அமெரிக்க அதிபரை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக, ரஷிய அதிபர் புதினை போல சீன அதிபரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டு தூதர் லி கியாங், சீனாவின் சார்பாக புது டெல்லிக்கு வருகை தருவார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்து சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த வெளியுறவு துறையின் செய்தித்தொடர்பாளர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    அண்மை காலங்களில், கடந்த 2022 நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்
    • துப்பாக்கியின் பின்புறத்தாலும் சுமைலாவின் முகத்தில் ஸோனு பலமாக தாக்கினார்

    புது டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சாஸ்திரி பூங்கா பகுதி.

    இங்குள்ள புலாந்த் மஸ்ஜித் அருகில் சகோதரிகளான சோனு (30) மற்றும் அவர் தங்கை சுமைலா வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    தன் கணவருக்கும் தன் தங்கை சுமைலாவிற்கும் தவறான உறவிருப்பதாக சோனு சந்தேகம் அடைந்திருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக சகோதரிகள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்திரமடைந்த சோனு துப்பாக்கியால் தனது தங்கை சுமைலாவை முகத்திலேயே சுட்டார்.

    துப்பாக்கியின் ரவை சுமைலாவின் முகத்தில் தாக்கியும் ஆத்திரம் அடங்காத சோனு, அத்துப்பாக்கியின் பின்புறத்தால் சுமைலாவின் முகத்தில் பலமாக தாக்கினார்.

    இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த சுமைலாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த சாஸ்திரி பூங்கா காவல்துறையினர் சோனுவை கைது செய்தனர். சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சோனுவிற்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×