search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான்"

    • வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள்.
    • ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    • ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, ஊர் திரும்பும் போது இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    ஓடும் ரெயிலில் இளம் வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோகர் பகுதியில் வசித்து வந்த அக்ஷய் என்ற 22 வயது வாலிபர் ராமேஸ்வரத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, ஊர் திரும்பும் போது இந்த துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பகவத் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அக்ஷய் மற்றும் சித்தோகர் பகுதியை சேர்ந்த மேலும் பலர் ராஜஸ்தானில் இருந்து கிளம்பியுள்ளனர். சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடித்த பிறகு, அங்கிருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப அக்ஷய் மற்றும் அவருடன் வந்த குழுவினர் கஜூராஹோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியுள்ளனர்.

    ரெயில் பயணத்தின் போது அக்ஷய்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த நிலையில், அக்ஷய் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மருத்துவம் படிக்க விரும்பிய அக்ஷய் அடுத்த மாதம் செர்பியாவுக்கு சென்று மருத்துவ படிப்பை தொடர இருந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

    • மோகன் தாஸ் அக்கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்
    • கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணையை துவங்கியது

    இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் மத்திய-மேற்கு பகுதியை சேர்ந்தது குச்சமான் நகரம்.

    இங்குள்ள ரஸல் கிராமத்தில் 15 வருடங்களாக வசித்து வந்தவர் 72 வயதான மோகன் தாஸ் எனும் ஆன்மிக குரு. இவர் அக்கிராமத்தில் உறவினர்கள் இருந்தாலும் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று மாலை கிராமவாசிகளிடம் பேசி கொண்டிருந்தார். அதற்கு பிறகு உறங்க சென்றார்.

    இன்று காலை அவரை காண கிராமவாசிகள் சென்ற போது அவர் தரையில் கிடந்தார். அவர் கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார்.

    அவர் உயிரிழந்து கிடந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் ஆசிரமத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிரிழந்த ஆன்மிக குருவின் சடலத்தை மீட்டனர்.

    "இச்சம்பவம் கொலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறோம். கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறோம். உடற்கூராய்வு நடந்து முடிந்ததும் அவர் உடல், ரஸல் கிராமத்திலேயே வசிக்கும் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என குச்சமான் நகர காவல்துறை அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்தார்.

    • ராஜஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்ததால் மந்திரி பதவி பறிப்பு
    • ரெட் டைரி குறித்து தன்னிடம் அசோக் கெலாட் தெரிவித்தது குறித்து தகவல்

    ராஜஸ்தான் மாநில மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர் ராஜேந்திர குத்தா. மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அசோக் கெலாட் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.

    இந்த நிலையில் நான் இல்லை என்றால், முதலமைச்சர் அசோக் கெலாட் சிறையில் இருந்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜேந்தி குத்தா கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர ரதோருக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வரிமான வரித்துறை சோதனை நடத்தியபோது, முதலமைச்சர் அசோக் கெலாட், தன்னிடம் எந்தவொரு விலை கொடுத்தாவது 'ரெட் டைரி'யை மீட்க வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து என்னிடம் அந்த டைரி எரிக்கப்பட்டு விட்டதா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். குற்றம் ஏதும் இல்லை என்றால், அவர் அவ்வாறு தொடர்ந்து கேட்டிருக்கமாட்டார். நான் இல்லை என்றால் முதலமைச்சர் சிறையில் இருந்திருப்பார்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    அசோக் கெலாட் அரசின் மோசடி செயல்கள் குறித்த ரெட் டைரி குறித்து முக்கியமான தகவலை ராஜேந்திரா குத்தா குறிப்பிட்டுள்ளார். உண்மை தெரிந்தவர்கள் தற்போது இதற்கு பதில் சொல்வார்களா? என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

    தனது பதவி நீக்கம் குறித்து ராஜேந்திர குத்தா கூறுகையில் ''என்னை ராஜினாமா செய்யும்படி நீங்கள் கேட்டிருந்தால், நான் செய்திருப்பேன். என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும்'' என்றார்.

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்ற ஆறு பேர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 2021 நவம்பர் மாதம் அதில் ஒருவரான ராஜேந்திர குத்தா மந்திரி சபையில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சச்சின் பைலட்- கெலாட் இடையே மோதல் ஏற்பட்டபோது அசோக் கெலாட்டிற்கு ஆதரவு நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.
    • கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் சிவாணா பகுதியை சேர்ந்தவர் அனுமந்தர் ராம் (வயது 45). இவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் தங்க நகைகளை வாங்கி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

    1½ கிலோ நகை கொள்ளை

    இதற்காக அவர் நெல்லை சிந்துபூந்துறை செல்விநகர் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தற்போது நெல்லையில் அவரது உறவினரான ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் தங்கியிருந்து கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் தனது வீட்டின் பூஜை அறையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள சுமார் 1½ கிலோ நகைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துள்ளார். நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு உடன்குடி சென்ற நிலையில் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு அங்கு 1½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    3 தனிப்படை

    இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், நெல்லை சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை கும்பலை பிடிக்க துணை போலீஸ் கமிஷனர் சரவணக் குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் அதாவது மெஹரா ராமிற்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் மெஹரா ராமுடன் தொழில் ரீதியாகவும், நட்பின் அடிப்படையிலும் பழக்கத்தில் உள்ள வடமாநில வியாபாரிகள், வடமாநில வாலிபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அப்பகுதியில் சந்திப்பு பஸ் நிலையம் வரையிலும் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்ப ட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை எழும்பூரில இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஜோத்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது
    • ஏப்ரல் 30 மற்றும் மே 7ந் தேதி ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வந்து சேரும்.

    திருப்பூர் :

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஜோத்பூருக்கு சிறப்பு ரெயில் (எண்:06056) இயக்கப்பட உள்ளது.நேற்று மற்றும் மே 4ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயில், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரெயில் நிலையங்களில் நின்று கேரள மாநிலம் பாலக்காடு, காசர்கோடு வழியாக மங்களூரு சென்றடையும். அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும். மறுமார்க்கமாக ஏப்ரல் 30 மற்றும் மே 7ந் தேதி ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வந்து சேரும்.

    வழக்கமாக வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து இயக்கப்படும். ஆந்திரா வழியாக பயணிக்கும். ஆனால் இந்த ரெயில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் வழியாக பயணித்து ராஜஸ்தான் செல்கிறது.

    • பட்ஜெட்டை தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
    • பாஜக தலைவர் வசுந்தரா ராஜே அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. நிதித்துறை பொறுப்பும் முதல் மந்திரி அசோக் கெலாட்டிடமே உள்ளதால் பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார். அசோக் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்து உரையை வாசித்துக்கொண்டு இருந்தார். சுமார் 7 நிமிடங்கள் வாசித்த நிலையில், அவர் கடந்த ஆண்டின் பட்ஜெட் உரையை படிப்பதை தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, கவனித்தார். உடனடியாக அவர் அசோக் கெலாட்டிடம் இதைக் கூறினார்.

    உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசிப்பதை நிறுத்தினார். தவறுதலாக வாசித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர், இந்த ஆண்டின் பட்ஜெட்டை வாசித்தார்.

    முதல்வரின் இந்த கவனக்குறைவை சுட்டிக்காட்டி, பாஜக எம்.எல்.எக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, முதல்வர் அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார். வசுந்தரா ராஜே பேசுகையில், "நான் முதல் மந்திரியாக இருந்தபோது பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்துக்கொள்வேன். கடந்த பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.

    இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, இது கசிந்துவிட்டதா? என்று பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறினார்.

    இன்று முதல்வர் கெலாட் பழைய பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலம் ராஜஸ்தான் சட்டசபை அவமதிக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த அசோக் கெலாட், 'உங்கள் கையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட்டின் நகலில் இருந்து என்னிடம் இருக்கும் பட்ஜெட் உரையில் வேறுபாடு இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். பட்ஜெட் உரை கசிந்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும்? தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்த பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது" என்றார்.

    • 10 ஆண்டுகளாக இந்த சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
    • சிலைக்கு உள்ளே சென்று பக்தர்கள் பார்க்க லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உலகிலேயே உயரமான சிவன் சிலை அமைக்கப் பட்டுள்ளது. தியான தோற்றத்தில் ஒரு குன்றின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 369 அடி உயரமுள்ளது. ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலைக்குள் 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகளும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பக்தர்கள் சிலைக்கு உள்ளே சென்று பார்க்கலாம்.

    சிலைக்கு உள்ளே ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் டன் உருக்கு மற்றும் இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. . இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் லேசர் ஒளி விளக்குகள் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த சிலை அமைந்துள்ள பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் சிலை திறப்பு விழாவில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் கலந்து கொள்கிறார்.

    • சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு
    • அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இதையடுத்து முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

    2020-ம் ஆண்டு அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக் கூடாது என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பைலட் போர்க்கொடி தூக்கியபோது கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இதற்கிடையே, 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று இரவில் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையை உணர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட்டை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி இருக்கிறார். ஆனால் அசோக் கெலாட், தன் கையில் எதுவும் இல்லை என்றும், எம்எல்ஏக்கள் தன் மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

    இது ஒருபுறமிருக்க, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்திருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் கூட்டத்தை நடத்துவதற்காக காத்திருந்தனர். சச்சின் பைல்ட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்றனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வராததால் கூட்டம் நடைபெறவில்லை. இதன்மூலம் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

    • கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
    • 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது.

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்தார்.

    இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் 'நான் சக்தி உதான்' திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தும் முதல் மாநிலமாக ராஜஸ்தானில் உள்ளது.

    கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

    இத்திட்டத்திற்காக 2022-23 நிதியாண்டில் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 33 மாவட்டங்களில் உள்ள 60,361 அங்கன்வாடி மையங்களில் 1.15 கோடி பயனாளிகளுக்கும், மாநிலத்தில் உள்ள 34,104 அரசுப் பள்ளிகளில் 26.48 லட்சம் பயனாளிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது. இதற்காக மொத்தம் ரூ. 104.78 கோடியை ஆர்எம்எஸ்சிஎல் செலவிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபை நோக்கி சென்ற பாஜகவினரை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.
    • பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன

    லம்பி நோயை கட்டுப்படுத்த மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியதுடன், இது தொடர்பாக ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. லம்பி நோய் பாதிப்பு, வேலையின்மை, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி முழக்கம் எழுப்பினர்.

    பாஜக அலுவலகத்தில் இருந்து சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். அங்கு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சட்டசபை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதுடன், போலீசாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார். லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • தோல் கட்டி நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
    • இந்நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாடுகள் லம்பி ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பசுவை அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார். 

    அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாடு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவரது ஆதரவாளர்கள் மாட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராவத், 'பாருங்கள். இந்த அரசு மீது கோமாதாவுக்கும் கோபம் வந்துவிட்டது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்து ஊசிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இந்நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

    அதேசமயம், சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

    கூட்டத்தொடர் தொடங்கும் முன், முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'லம்பி ஸ்கின் எனப்படும் தோல் கட்டி நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்நோயிலிருந்து மாடுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.

    ×