search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத்தொகை"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் மற்றும் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்கள் குறித்து நாங்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்திற்கும் முதலமைச்சர் ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். அவரே நேரடியாக வந்து திட்டங்களை தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார்.

    மத்திய அரசு சார்பில் மருத்துவமனை தர சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் நிதி கிடைக்கும். அதன் அடிப்படையில் இன்று ஈரோடு அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்ய வந்துள்ளோம். மருத்துவமனை அருகே பாலம் அமைக்கும் போது சர்வீஸ் சாலை அமைக்காமல் விட்டு விட்டார்கள்.

    இப்போது சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்றால் மருத்துவமனை இடம் பாதிக்கப்படும். ஆனால் கண்டிப்பாக சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கும், மதுபான விலை உயர்விற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. மதுபான விலை உயர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.மேலும் அனைத்து மதுவிற்கும் விலை உயர்த்தவில்லை.எனவே இரண்டையும் தொடர்பு படுத்துவது சரியாக இருக்காது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் பெரும் பகுதியான வேலை முடிந்து விட்டது. திட்டத்தின் தொடக்க பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது.

    மேலும் ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் சோதனையோட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் முடிக்கப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்படும் தேதி ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று மாலை தமிழக அமைச்சர்களின் சொத்து பட்டியலை தமிழக ஆளுநரிடம் வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,

    அண்ணாமலை அவர் வேலையை செய்கிறார். அவர் என்ன செய்கிறார் என்று நாங்கள் பார்த்தால் எங்கள் வேலை கெட்டுபோய்விடும். எங்களுடைய வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

    • 1000 ரூபாய் வழங்க ஆயிரதெட்டு நிபந்தனைகள் விதிக்கிறார்கள்.
    • தி.மு.க. அட்டை வைத்திருப்பவர்களுக்கு தான் விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. நூற்றாண்டு பொன்விழா மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த ஏற்பாடு நடக்கிறது.

    இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வருவது குறித்து தீர்மானக் குழு ராயப்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசித்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பென்ஜமின், பொன்னையன், செம்மலை, தம்பிதுறை, பாலகங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் 2 கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் வழங்காமல் தி.மு.க.வினருக்கே வழங்கப்படுகிறது.

    1000 ரூபாய் வழங்க ஆயிரதெட்டு நிபந்தனைகள் விதிக்கிறார்கள். தி.மு.க. அட்டை வைத்திருப்பவர்களுக்கு தான் விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது.

    தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்குதான் தருகிறார்கள். தன்னார்வலர்கள் மூலம் படிவம் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் விண்ணப்ப படிவம் வழங்குகின்றனர். தகுதியுடையவர்களுக்கு வழங்குவது இல்லை. தி.மு.க. பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பப் படிவம் கொடுக்கிறார்கள்.

    தி.மு.க.வுக்கு பாராளு மன்ற தேர்தலில் சரியான பதிலடி கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 நாட்களில் வாங்காதவர்களுக்கு ரேசன் கடைகளில் கொடுக்க முடிவு.
    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சலுகை இல்லை.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    நடப்பு ஆண்டில் 1 கோடி பெண்களுக்கு உதவி தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் வீடு வீடாக நேற்று முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கும் வகையில் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் வழியாக மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் வழங்கப்படுகிறது.

    சென்னையில் 2 கட்டமாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் நாளைக்குள் (சனிக்கிழமை) கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு வேளை விடுபட்டவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் வழங்கப்படலாம்.

    24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அவரவருக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரத்திற்கு சென்று சமர்பிக்க வேண்டும்.

    படிவங்களை பூர்த்தி செய்ய இயலாதவர்களுக்கு முகாம்களில் உதவி செய்ய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய பணி மாலை 5 மணி வரை நடந்தது.

    தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 2¼ கோடி பேர் பயன்பெற்று வருகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சலுகை இல்லை.

    மேலும் ஆண்டிற்கு 2.5 லட்சம் வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் இது தவிர ஏற்கனவே பிற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவி தொகை பெறுபவர்களும் மகளிர் உரிமைத் தொகையை பெற முடியாது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இன்று 2-வது நாளாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. நாளைக்குள் 90 சதவீதம் பேருக்கு படிவங்கள் சென்றடையும் வகையில் ஊழியர்கள் முனைப்புடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    படிவம் பெற முடியாமல், விடுபட்டு போனால் கூட பயப்பட தேவையில்லை. ரேசன் கார்டை நியாய விலை கடைகளுக்கு நேரில் கொண்டு சென்றால் கூட படிவங்கள் வழங்கப்படும். படிவங்கள் வழங்குவதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் வடக்கு, மத்தியம், தெற்கு என 3 மண்டலங்களாக பிரித்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. சென்னையில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மகளிர் உரிமை தொகை பெற தகுதி உடையவர்களாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் படிவங்களை வழங்கி, பெறுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 1.5 லட்சம் பேருக்கு நேற்று படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வீடு வீடாக வழங்கும் பணியில் ரேசன் கடைகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று கூட்டுறவுதுறை பதிவாளர் எச்சரித்துள்ளார். எக்காரணத்தை கொண்டும் வெளிநபர்களால் விண்ணப்பம் வழங்கப்படுவதற்கு அனுமதி இல்லை.

    மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
    • இத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

    ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.7 ஆயிரம் கோடி அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    தமிழகத்தில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி அன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இத்திட்டத்தை செயல்படுத்த 2 மாதம் உள்ள நிலையில் இதற்கான பணிகளை கூட்டுறவுத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்கள் யார்?, யார்-யார்? இதை பெற முடியும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கான வழிமுறைகள், விண்ணப்பிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு தெரிவித்துள்ளன.

    இந்த திட்டத்தில் உரிமைத் தொகை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் பிற உதவி தொகைகள் பெறுபவர்கள் மகளிர் உரிமை தொகை பெற முடியாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளன.

    திட்டத்தினை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் ஒருங்கிணைத்து செயல்படுத்துவார். இதற்காக மாவட்ட, வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் அரசால் அச்சடிக்கப்பட்டு கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள், டோக்கன்கள் அனைத்து ரேசன் கடைகளுக்கும் உரிய காலத்திற்குள் கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் குடும்ப அட்டை எண், பயனாளிகள் முகாம்களுக்கு வருகை புரிய வேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும்.

    இந்த விண்ணப்ப படிவத்தை ரேசன் கடை பணியாளர்கள் வீடு வீடாக வழங்க உள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகள் ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒவ்வொரு ரேசன் கடை ஊழியர்களும் தங்கள் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு தெரு வாரியாக சென்று வீடுகளுக்கு விண்ணப்பங்களை வழங்குவார்கள்.

    விண்ணப்பத்தில் அந்த குடும்பத்தின் அட்டை எண்ணை குறிப்பிட்டு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் முகாமில் பதிவு செய்யப்படும்.

    எந்த நேரத்தில் பயனாளிகள் வர வேண்டும் என்பதை பதிவு சீட்டில் குறித்து ஊழியர்கள் வழங்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு குடும்பத்தினர் பயன்படுத்தக் கூடாது.

    ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் எந்தெந்த நாட்களில் எந்தெந்த தெருக்களில் வசிக்கும் குடும்பங்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்ற விவரத்தை ரேசன் கடைகளில் அனைவருக்கும் தெரியும் வகையில் தகவல் பலகை வைக்கப்படும்.

    பொது வினியோகத் திட்டத்தில் ரேசன் பொருட்களை வாங்காத அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று விண்ணப்ப படிவம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உரிமை தொகை பெற விரும்பினால் ரேசன் கடைகளுக்கு நேரடியாக சென்று பெற்று விண்ணப்பிக்கலாம்.

    மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன்கள் வருகிற 20-ந்தேதி முதல் வீடு வீடாக வினியோகம் செய்யப்படுகிறது. ரேசன் கடை ஊழியர்கள் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    முன்னதாக 18-ந்தேதி அனைத்து ரேசன் கடை பணியாளர்களுக்கும் 30 பேர் கொண்ட குழுக்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியினை இணை பதிவாளர்கள், துணைப் பதிவாளர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள் வழங்குவார்கள்.

    மேலும் முகாம் நடக்கும் இடம் குறித்து ரேசன் கடைகளில் தமிழில் தகவல் பலகை அமைக்க வேண்டும். குடும்ப அட்டை எண், முகாம் நடக்கும் இடம் மற்றும் நாள் போன்ற விவரங்களை விண்ணப்ப படிவங்களில் ஊழியர்கள் எழுதி தயாராக வைத்திருக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் தெரிவித்து உள்ளார்.

    • கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்படும்.
    • வருகிற 24-ந் தேதிக்கு பிறகு இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும்.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதன் முதற்கட்டமாக சென்னையில் வீடுவீடாக விண்ணப்பம் கொடுக்க தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை முழுமையாக பயன்படுத்த உள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து இவர்கள் வீடு வீடாக விண்ணப்பம் வழங்குவார்கள். பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் 2 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் 1,417 ரேஷன் கடைகள் உள்ளது. இதனால் மொத்தம் 3,550 மையங்கள் அமைக்க முடிவு செய்து உள்ளோம். வருகிற 24-ந் தேதிக்கு பிறகு இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும்.

    கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்படும். இந்த மையங்களுக்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறினார்.

    • மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
    • தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

    இதில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
    • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற தி.மு.க. அரசு. தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனை விதித்தது.

    நேற்றைய தினம், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்க, தி.மு.க. எதிர்பார்க்கும் தகுதிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

    குடும்பத்தின் மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது, இவர்கள் கொடுப்பதாகக் கூறிய மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வாங்க, குடும்பத்தில் யாருமே வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் உள்ளது.

    தமிழக மக்கள் கடினமான உழைப்பாளிகள். வேலைக்குச் செல்லாமல், டீக்கடை, பஜ்ஜி கடை, பிரியாணி கடையில் பாக்சிங் செய்து திரிய, தமிழக மக்கள் அனைவரும் திமுகவினர் இல்லை என்பதை, முதலமைச்சருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

    அடுத்த தகுதி, மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாதாம். ஷாக் அடிக்கும் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி வைத்திருக்கும் திறனற்ற தி.மு.க. அரசுக்கு, மின்சாரக் கட்டணம் கட்டவே எளிய மக்களின் பாதி வருமானம் போய் விடுகிறது என்பது தெரியாதா?

    தமிழகத்தில் 99.6 லட்ச வீடுகள், 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று, சென்ற ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு தெரிவித்தது. இந்த 99.6 லட்ச குடும்பங்களிடமும் குடும்ப அட்டை இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதம் 300 யூனிட்டுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படாது என்ற விசித்திரமான நிபந்தனையை இட்டுவிட்டு, ஒரு கோடி மகளிர் பயனடைவார்கள் என்று எப்படிக் கூறுகிறார் முதலமைச்சர்?

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக, தி.மு.க. உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டு இருக்கலாம். உங்கள் நிபந்தனைகள் பெரும்பாலும் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர, தமிழக மக்களுக்கு அல்ல.

    நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

    முதலமைச்சரிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
    • 2024 மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அ.தி.மு.க. தொடங்கி விட்டது.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் காவலர் நலவாழ்வு திட்டம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனால் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் அந்த காவலர் நலவாழ்வு திட்டத்தை தற்போதைய தி.மு.க. அரசு நிறுத்தி விட்டதாக தெரிகிறது.

    அந்த திட்டம் இருந்திருந்தால் தற்போதைய டி.ஐ.ஜி. தற்கொலை ஏற்பட்டிருக்காது. டி.ஐ.ஜி. தற்கொலை பற்றி அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை. காவலர் குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை. அவருக்கும் மன அழுத்தம் இல்லை என தெரிகிறது. எனவே அவரது இறப்பு தற்கொலையா என விசாரிக்க வேண்டும்.

    தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்கு உள்ள அவர் ஊழல் தடுப்பு பிரிவை கண்காணித்து வருகிறார். இது எப்படி சரியாக இருக்கும்.

    தி.மு.க.வின் தற்போதைய அமைச்சர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகளில் தற்போதைய தி.மு.க. வக்கீல்கள் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் அவர்கள் விடுதலையாகி வருகிறார்கள்.

    தி.மு.க. அமைச்சர்கள் பாதி பேர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயந்து போய் உள்ளனர். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேசன் கடை முகாம்களில் பெண்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டமாக திரள்வதை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் தான் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், வயல்வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், மீனவ மகளிர்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு பணிபுரியும் பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டது இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடி திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த திட்டத்துக்கு "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெறும் பெண் பயனாளிகளை கண்டறிவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டு உள்ளது. அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் தான் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக தனியாக வருமான சான்றிதழ்பெற்று இணைக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று பல்வேறு பொருளாதார தகுதிகளும் வரையறுத்து வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் இன்றே இதற்கான பணிகளை தொடங்கினார்கள். ஒவ்வொரு ரேசன் கடைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பயனாளிகள் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    இதற்காக கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் ரேசன் கார்டுகளை ஆய்வு செய்து தனி பட்டியல் தயாரிக்க உள்ளனர். அதன் மூலம் எளிதாக தகுதியான பயனாளிகளை கண்டுபிடிக்க முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி எண்களுடன் விண்ணப்பம் தயாரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

    விண்ணப்ப படிவங்கள் அச்சடித்து முடித்ததும் அவை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அவர்கள் அந்த விண்ணப்ப படிவங்களை சரி பார்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனித் தனியாக பிரிப்பார்கள்.

    பின்னர் அந்த விண்ணப்ப படிவங்கள் வீடு வீடாக வழங்கப்படும். இதற்காக குழுக்கள் அமைக்கப்படும். பொதுவாக ஒவ்வொரு ரேசன் கடைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 600 முதல் 1000 ரேசன் கார்டுகள் இருக்கும். அவை அனைத்துக்கும் விண்ணப்பங்கள் வழங்க வேண்டியது இருக்காது.

    ஏனெனில் சிலர் ரேசன் கடைகளில் எந்த பொருளும் வேண்டாம் என்று எழுதி கொடுத்திருப்பார்கள். வசதி வாய்ப்பு உள்ள அவர்களுக்கு இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. மற்ற கார்டுதார்களுக்கு வீடு தேடி சென்று விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்படும்.

    அந்த விண்ணப்பத்தில் ரேசன் கார்டு எண்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதோடு டோக்கன் ஒன்றும் வழங்கப்படும். அதில் எந்த தேதியில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

    ரேசன் கடை முகாம்களில் பெண்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டமாக திரள்வதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ரேசன் கடைகளுக்கு கூட்டமாக வந்து விண்ணப்பங்களை கொடுக்க வேண்டியது இல்லை. குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும்.

    பெண்கள் அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் போதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறுவதற்கு தங்களுக்கு தகுதி இருக்கிறதா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே விண்ணப் படிவங்கள் பெற்றதும் அதை குடும்ப தலைவிகள் கவனமாக படித்து பார்த்து பூர்த்தி செய்ய வேண்டும்.

    விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் பெறப்பட்டதும் அவை ஆய்வு செய்யப்படும். மாத உரிமைத் தொகை பெற எந்தெந்த விண்ணப்பதாரர்களுக்கு தகுதி இருக்கிறது என்பது அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

    ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை மற்ற பெண் பயனாளிகள் பயன்படுத்த முடியாது. ஏனெனில் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஒரு எண் வழங்கப்பட்டு இருக்கும். எனவே ஒரு விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து அதை மற்றவர்கள் பயன்படுத்த இயலாது.

    எந்த பொருளும் வேண்டாம் என்று எழுதி கொடுத்திருப்பவர்களில் யாராவது உரிமைத் தொகை பெற விரும்பினால் அவர்களும் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். அந்த விண்ணப்பமும் ஆய்வு செய்யப்படும்.

    இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த நடைமுறைகள் தொடங்கப்படும். விண்ணப்பிக்க உரிய அவகாசம் இருப்பதால் யாரும் அவசரப்பட்டு ரேசன் கடைகளுக்கு கும்பலாக வர தேவையில்லை.

    இவ்வாறு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.

    மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் குடும்ப தலைவிகளில் பலரும் இதற்கான தகுதி வரையறைக்குள் வர மாட்டார்கள். எனவே வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்கள் இந்த வாய்ப்பை மிக எளிதாக பெற முடியும்.

    விண்ணப்பங்கள் கையில் கிடைத்ததும் அவற்றை சரியாக பூர்த்தி செய்து வழங்கும் பட்சத்தில் ரேசன் கடை ஊழியர்களுக்கும் மற்றும் கலெக்டர்கள் தலைமையிலான குழுவினருக்கும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி அரசே ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம் அச்சடித்து கொடுப்பதால் இதில் இடைத்தரகர்களுக்கு வாய்ப்பே கிடையாது.

    விண்ணப்பம் எழுதி தருகிறேன். அல்லது விண்ணப்பம் வாங்கி தருகிறேன் என்றெல்லாம் இடைத்தரகர்கள் புகுந்து அப்பாவி பெண்களை ஏமாற்றுவதற்கு இந்த திட்டத்தில் வாய்ப்பே இல்லை. இதன் மூலம் உண்மையான பயனாளிகள் பயன் பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    தொடக்கத்திலேயே சிறு சிறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு இருப்பதால் இந்த திட்டம் இந்தியாவின் மிக முக்கியமான முன்னோடி திட்டமாக மாற வழி வகைசெய்யப்பட்டுள்ளது.

    • செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
    • இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். பல்வேறு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக பயனாளிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ரேஷன் கடை அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய திட்டம்.

    இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கூட்டம் இது.

    தலைமுறை தலைமுறையாக பயனளிக்கப் போகும் திட்டம் இது.

    சமூக நீதி என்ற கோட்பாட்டுடன் இந்த அரசு செயல்படுகிறது.

    பெண்களின் உழைப்பு ஆண்களின் உழைப்புக்கு நிகராகவே இருக்கிறது.

    செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஒரு கோடி விண்ணப்பங்களை ரேஷன் கடைகள் மூலம் விநியோகித்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

    உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் இத்திட்டம் பயனாளிகளைச் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சாலையோரம் வசிப்பவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    • மகளிர் உரிமைத் தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    • எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அங்கு உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2002-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டதிற்கு பொது வினியோக நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலை கடை அமைந்திருக்கும் விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்.

    குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்ப தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

    குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்ப தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

    திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர்.

    ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க செய்யலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.

    5 ஏக்கருக்கு குறைவாக நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புஞ்சை நிலம் வைத்துள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

    பொருளாதார தகுதிகளுக்காக தனியாக வருமான சான்று அல்லது நில ஆவணங்களை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க தேவையில்லை.

    விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ஆண்டுக்கு ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டினால் உரிமைத்தொகை பெற இயலாது.

    அதேபோன்று ஆண்டு வருமானமாக ரூ.2½ லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துவர்களும் விண்ணப்பிக்க இயலாது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் இதில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர) அதாவது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உரிமைத்தொகை பெற முடியாது.

    சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் விண்ணப்பிக்க இயலாது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

    இவர்கள் திட்டத்தின் பிற தகுதிகளை பூர்த்தி செய்து, எந்தவித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லையெனில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

    இவ்வாறு வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

    ×