search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவம்"

    • 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம்.

    திருப்பதி:

    சதீஷ்கர் மாநிலம் பிஜப்பூர், உசூர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தேவா. இவரது மனைவி போஜ்ஜா.போஜ்ஜாவுக்கு ஏற்கனவே 4 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தேவா தனது மனைவியுடன் ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

    மீண்டும் கர்ப்பமான போஜ்ஜா பிரசவத்திற்காக கடந்த 2-ந் தேதி பத்ராசலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போஜ்ஜாவுக்கு இது 8-வது பிரசவம் ஆகும்.

    அங்கு போஜ்ஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரது ஹீமோகுளோபின் அளவு 5.1 கிராம் இருப்பதால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் போஜ்ஜா வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் சுகப்பிரசவத்தில் போஜ்ஜாவுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தேவாவுக்கு 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போஜ்ஜாவுக்கு ஏற்கனவே பிரசவம் பார்த்த டாக்டர்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பிரவசம் பார்த்ததால் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வடக்குபாளையம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் மனைவி சுபாஷிணி (வயது 23) தனது 2-வது பிரசவத்திற்காக சென்றார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. நர்சும், உதவியாளர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுபாசிணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே அங்கிருந்த நர்சு சுபாஷிணிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் சுபாஷிணியை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும், இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

    தற்போது சுபாஷிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து குழந்தையின் தந்தை கோபிநாதன் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுபாஷிணியின் குடும்பத்தினர் குழந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். பிரவசத்தின் போது குழந்தை இறந்து பிறந்த சம்பவம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
    • கர்ப்ப காலத்தின் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை அவசியம்.

    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

    *Gestational Diabetes Mellitus (GDM)

    குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

    *Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

    ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

    கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.

    இதற்கு முக்கியமான காரணிகள்...

    * குடும்பப் பின்னணியில் நீரிழிவு

    * 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்

    * திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை

    * சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்

    * பருமன், அதிக எடை

    * முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்

    * நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை

    * அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு

    * பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்

    * முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.

    இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...

    கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

    இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

    பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்

    *கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    *நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    *குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    *சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    *எடை கூடுதல்

    *உயர் ரத்த அழுத்தம்

    *கரு கலைதல்

    *மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    *டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    *வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    *ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    *நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்

    *கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    *கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்

    *பிறப்புநிலைக் கோளாறுகள்

    *பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    *மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    *மஞ்சள் காமாலை

    *ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    *பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    *குறைப் பிரசவம்

    *Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    *மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

    கட்டுப்படுத்துவது எப்படி?

    மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

    ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.

    தயக்கம் வேண்டாம்!

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக

    அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்

    விளக்கப்படும்.

    *வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

    • யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
    • உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு.

    *இயற்கை வழி பிரசவமாக (சுகப்பிரசவம்) இருந்தால் குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குப் பிறகும், அறுவை சிகிச்சையாக (C - section) இருந்தால் ஆறு மாதத்திற்குப் பின்பும் உடற்பயிற்சிகள் தொடங்கலாம்.

    *ஆரம்ப நிலை உடற்பயிற்சி முதல் படிப்படியாக அதிகரித்து கடினமான உடற்பயிற்சிகள் வரை செய்யலாம்.

    *இயன்முறை மருத்துவர் உங்களை முழுவதும் பரிசோதித்து பின் எந்தெந்த தசைகளுக்கு வலிமை பயிற்சிகள், இலகுவாக்குவதற்கான பயிற்சிகள், தாங்கும் ஆற்றலுக்கான பயிற்சிகள் (Cardiac Endurance), எடை குறைய உதவும் பயிற்சிகள் எனத் தனித்தனியாகப் பிரித்து கற்றுக்கொடுப்பர்.

    *ஒவ்வொரு பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், இதனை செய்தால் போதும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

    *மேலும் குழந்தையை அதிக நேரம் தூக்க வேண்டும் என்பதால் கைகள், தோள்பட்டைக்கான பயிற்சிகள் வழங்குவார்கள். கூடவே,எப்படி, எவ்வாறு குழந்தையை தூக்குவது, எந்த முறையில் பால் கொடுப்பது போன்ற யுக்திகளையும் கற்றுக் கொடுப்பர். இதனால் உடல் வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    கவனிக்க வேண்டியவை...

    * யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், சில பயிற்சிகளை குழந்தை பிறந்த பின்பு செய்யக் கூடாது. அதேபோல சில பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    * அதேநேரம், உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு. தாய்ப்பால் உற்பத்தி செய்ய நிறைய சக்தி தேவைப்படும். கூடவே கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகள் சராசரியாக மற்றவர்களுக்கு தேவைப்படுவதை விட ஒரு பங்கு அதிகமாக தேவைப்படும் என்பதால், அளவைக் குறைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

    *போதிய அளவு உறக்கம் என்பது புது தாய்மார்களுக்கு கிடைக்காது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், தூக்கம் சரியாக இல்லை எனில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் மீது நாட்டம் (Sugar Cravings) வரும். இதனால் நொறுக்குத் தீனி, சாப்பாடு அதிகம் சாப்பிடுவது, இனிப்பு வகைகள் உண்பது என உடல் எடை அதிகரிக்குமே தவிர தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. எனவே, கட்டாயமாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.

    *பிஸ்கட், சிப்ஸ், கேக் போன்ற நொறுக்குத் தீனிகள் தின்பதற்கு பதில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த சாலட்கள், வேகவைத்த பயிறு, கடலை வகைகளை தாராளமாக உண்ணலாம். இதனால் எடையும் ஏறாது, ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

    *சரிவிகித உணவு முறையை (Balanced diet) கட்டாயம் தொடர வேண்டும். பேலியோ, நீர், கீட்டோ டயட் போன்றவற்றை கடைபிடிப்பதில் முழு பலன் இருக்காது.

    *சினிமா நடிகைகள், இணையதள பிரபலங்கள் மட்டும் குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் எடையை குறைக்கிறார்களே என்று சிலருக்கு தோன்றலாம். ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து மாறுபடும் என்பதால், நமக்கானதைத் தேடி, அறிந்து அதன் வழி மாற்றிக்கொள்வது நல்ல பலன்களை தரும்.

    *தாங்களாகவே நடைப்பயிற்சி, ரன்னிங், நடனம், வெறும் உணவு வழியாக எடையை குறைப்பது போன்றவை செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என நினைத்தால் செய்யலாம். ஆனால், சில வகையான தசை வலிமை பயிற்சிகள், தசை இலகுவாக இருக்க பயிற்சிகள் எனக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகு வலி, முன் வயிற்றில் தசை பிரிவதை தடுப்பது போன்ற பல பேறுக்காலத்திற்குப் பின் வரும் சிக்கல்களை தவிர்க்க முடியும்.

    நம் உடலிற்கு எது பொருந்துமோ அதன் வழியை பின்பற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்து நடப்பதே என்றென்றைக்கும் சிறந்தது.

    • கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது.
    • ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.

    பிள்ளைப்பேறு, பெண்களுக்கு மறுபிறவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கர்ப்ப காலத்தில் பலருக்கு பயம், குழப்பம், பதற்றம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வு மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை கையாள்வதற்கு யோகா எந்த வகையில் உதவும் என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஜெயபிரபா.

    கர்ப்ப காலத்தில் எந்த மாதத்தில் இருந்து யோகா பயிற்சி தொடங்கலாம்?

    கருவுற்று இருக்கும் பெண்கள் மூன்று மாதம் முடிந்து, 4-வது மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பயிற்சிக்குத் தயாராக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று காலை, மாலை இரண்டு வேளையும் உடலை வருத்தாமல் எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகளை, பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்யலாம். ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.

    கர்ப்பிணிகள் என்னென்ன யோகாசனங்களை செய்யலாம்?

    தடாசனம், பத்தகோணாசனம், வஜ்ராசனம், யோகா நமஸ்காரம், ஆனந்த சயனாசனம், பாலாசனம், சவாசனம், மகாமுத்திரா மற்றும் மூச்சுப் பயிற்சி என மொத்தம் எட்டு ஆசனங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவத்தை உடல் மற்றும் மனரீதியாக எதிர்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்துகிறது. இவற்றை பயிற்சியாளரின் துணையுடன் செய்வதே பாதுகாப்பானது.

    எத்தனை மாதங்கள் இந்தப் பயிற்சிகளை செய்ய வேண்டும்?

    பிரசவம் வரை இந்தப் பயிற்சிகளை செய்யலாம். 8-வது மாதத்தில் பயிற்சி செய்யும்போது லேசாக மூச்சு வாங்கும். மூச்சுப் பயிற்சிகளை ஆரம்பத்தில் இருந்து செய்யும்போது இந்த சிரமம் ஏற்படாது. குழந்தையின் எடை கூடும்போது உட்கார்ந்து எழும் பயிற்சிகள் செய்வது சற்று சிரமமாக இருக்கும். மற்ற பயிற்சிகளை சற்று இடைவெளி விட்டு ஓய்வெடுத்து செய்யலாம்.

    கர்ப்பகால யோகா பயிற்சிகள் செய்வதன் நன்மைகள் என்ன?

    கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது. கர்ப்பிணிகள் தன்னைப்போல, பல கர்ப்பிணிகளுடன் ஒன்றாக சேர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்யும்போது தனிமை பயம் நீங்கும். ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதால் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் தாயின் உடல்நிலை சீராக இருக்கும். தேவையில்லாத எதிர்மறை சிந்தனைகள் குறையும். வயிற்றில் இருக்கும் கருவைத் தாங்குவதற்கும், எளிதாக பிரசவிப்பதற்கும், எலும்புகள், தசை மற்றும் தசை நார்களை உறுதியாக்குவதற்கும், உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதற்கும் இந்தப் பயிற்சிகள் உதவும்.

    • சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
    • சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது.

    தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புபடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

    * பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வது, பணி நிமித்தம் காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, 35 வயதை எட்டிய பிறகு கருத்தரிப்பது போன்றவை சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    * உடல் பருமனும் சிசேரியன் பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. பி.எம்.ஐ. அளவு 25-க்கு மேல் இருந்தால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாகிவிடும்.

    * சில பெண்கள் பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்துக்கொள்வதற்கு விரும்புகிறார்கள்.

    * பிரசவ அறையில் அதிக நேரம் செலவிடும் சூழலும் சிசேரியனை தேர்ந்தெடுக்க காரணமாகிவிடுகிறது. குழந்தை பிறப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்தும் பிரசவ வலி ஏற்படாதபோது, தாய்-சேய் இருவரது உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு சிசேரியனை தேர்ந்தெடுக்க நேரிடுகிறது.

    சுகப் பிரசவத்திற்கு வழிமுறைகள்

    * சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது. பிரசவம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும், ஆபத்துக்களையும் குறைக்கும்.

    * நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் (ஸ்டெமினா) தேவைப்படும். பிரசவமும் அது போன்றதுதான். மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகுவதுபோல 10 மாத கர்ப்ப காலத்தையும் கருத வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

    * தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இயற்கையாகவே சுக பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனினும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உடல் நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமானது.

    * 'ஸ்குவாட்' எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியை செய்வது பிரசவத்தை எளிதாக்கும். கால்களை நேர் நிலையில் வைத்துக்கொண்டு மூட்டுகளை நன்றாக மடக்கியபடி குனிந்து நிமிரும்போது இடுப்பு பகுதிகள் விரிவடையும். கருவில் இருக்கும் குழந்தை எளிதாக பிரசவ நிலைக்கு வருவதற்கு வழிவகுக்கும். இந்த பயிற்சியை மருத்துவ ஆலோசனை பெற்று உடற்பயிற்சியாளரின் அறிவுரையின்படி மேற்கொள்ள வேண்டும்.

    * பிரசவ காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் மையங்கள் இருக்கின்றன. அங்கு பயிற்சி பெறுவது பிரசவத்தை எளிதாக்கும்.

    * கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. உடலுக்கு போதுமான புரதம் மற்றும் ஆற்றலை வழங்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் கருப்பையை வலுவாக்க முடியும்.

    • பிரசவ வலியால் துடித்ததால் பெண் கண்டக்டரான வசந்தம்மா, பாத்திமாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.
    • பெண் கண்டக்டர் வசந்தம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

    பெங்களூரு:

    அசாமை சேர்ந்தவர் பாத்திமா (வயது 22). இவரது கணவர் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் உள்ள காபி தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான பாத்திமா கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு பெங்களூருவில் இருந்து சிக்கமகளூரு நோக்கி புறப்பட்ட கர்நாடக அரசு பஸ்சில் சென்றார். அவருடன் மகன் மற்றும் மாமியாரும் சென்றனர்.

    அந்த பஸ்சில் வசந்தம்மா (52) என்ற பெண் கண்டக்டராக இருந்தார். பஸ், ஹாசன் அருகே உதயாபுரா பகுதியில் சென்றபோது, பாத்திமாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது மாமியாரும், பஸ்சில் பயணம் செய்த சக பயணிகளும் செய்வதறியாது திகைத்தனர்.

    பின்னர் அவரை பஸ்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், பிரசவ வலியால் துடித்ததால் பெண் கண்டக்டரான வசந்தம்மா, பாத்திமாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.

    இதையடுத்து டிரைவரிடம் பஸ்சை சாலையோரம் நிறுத்த சொல்லிய வசந்தம்மா, பஸ்சில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டார். பின்னர் தான் வைத்திருந்த பெட்சீட்டை வைத்து மற்ற பெண் பயணிகள் உதவியுடன் பஸ்சில் வைத்தே பாத்திமாவுக்கு வசந்தம்மா பிரசவம் பார்த்தார்.

    அப்போது அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சக பயணிகள் ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். அந்த பெண், ஏழ்மையில் இருப்பதை அறிந்த வசந்தம்மா, தன்னிடம் இருந்த பணம் மற்றும் சக பயணிகளிடம் இருந்து பணம் வசூலித்து ரூ.1,500-ஐ அவரிடம் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணும், அவரது பச்சிளம் பெண் குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் சாந்திகிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தனர்.

    பெண் கண்டக்டர் வசந்தம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உதவியாளராக பணியாற்றி உள்ளார். அதன்பிறகு தான் அரசு பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்தார். பிரசவ வார்டில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து பாத்திமாவுக்கு அவர் பிரசவம் பார்த்தார்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு மனிதாபிமானத்துடன் பிரசவம் பார்த்த கண்டக்டர் வசந்தம்மாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    • ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
    • தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை உருவம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருைடய உறவினர்கள் அன்னவாசலில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ், அங்கிருந்து வெள்ளையம்மாளை ஏற்றிக்கொண்டு பரம்பூர் அரசு மருத்துவமனையை நோக்கி சென்றது. ஆம்புலன்சை சுபாஸ் சந்திரபோஸ் ஓட்டினார். அப்போது வெள்ளையம்மாளுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். உடனே வெள்ளையம்மாளுக்கு ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவர் அருண்பாண்டியன் பிரசவம் பார்த்தார். இதில் வெள்ளையம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், சேயும் பரம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    • கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
    • தான் கர்ப்பமாக இருப்பது குறித்து தனக்கே தெரியாது என்றும் பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காளம் மாநிலம், கொல்கத்தா, கஸ்பா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 22ம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது வீட்டின் கழிவறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

    பிறந்த குழந்தை அழ ஆரம்பித்ததால், கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெண் ரத்த வெள்ளத்தில் படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இந்நிலையில், பச்சிளங்குழந்தை மறுநாள் காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண்ணை அழைத்து சென்ற போது பிரசவம்
    • பிரசவம் பார்த்த இருவருக்கு உறவினர்கள் நன்றி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சின்ன வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி(வயது 21). இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் தனலட்சுமி தற்போது 2-வது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்சில் சின்னவெண்மணி கிராமத்திற்கு விரைந்து சென்று அங்கு பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த தனலட்சுமியை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பிரசவ வலி அதிகமானதால் உடனடியாக அவசரகால மருத்துவ நுட்புனர் ஆனந்தராஜ் அவருக்கு முதலுதவி அளித்தார். அப்போது செல்லும் வழியிலேயே தனலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக தாயையும், சேயையும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனலட்சுமியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் பாபுவிற்கும், முதலுதவி சிகிச்சை அளித்த ஆனந்தராஜுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • உணவில் அதிக அளவு இஞ்சி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • முருங்கைக்கீரை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    கர்ப்பக் காலத்திலேயே ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால்தான், குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமான உடலைப் பெறமுடியும். பேரிக்காய், மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் சிறந்தவை. பப்பாளி, அன்னாசிப்பழம் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரைநோய் பாதித்த கர்ப்பிணிகள், மாம்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை பிறந்த பிறகு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், உணவில் அதிக அளவு இஞ்சி சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    ஓட்ஸ் கஞ்சி, காய்கறிகள், பழங்களை தினமும் சாப்பிடவேண்டியது அவசியம். ஒவ்வோர் இரண்டு, மூன்று மணிநேர இடைவெளிக்கும் நடுவே உணவு உட்கொள்ளலாம். இனிப்பு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது, பால் அருந்துவது நல்லது. சுறா வகை மீன்களைச் சாப்பிடுவது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவும். தண்ணீர் தினசரி நான்கு லிட்டர் பருகலாம். புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் நிறைந்த உணவுகள் தாய்ப்பால் சுரப்புக்கு மிகவும் நல்லது. முட்டை, பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    • மருத்துவ பயன்களை 'மாதுளை மணப்பாகு' அள்ளிக்கொடுக்கும்.
    • இடுப்பு பகுதிகளை வன்மையாக்க 'உளுந்து தைலம்' என்ற சித்த மருந்து நற்பலன் தரும்.

    "வைத்தியர் ஐயா, புதுசா கல்யாணமான என் பொண்ணு வாந்தி வாந்தியா எடுத்து, மயக்கம் போட்டு விழுந்துட்டா, நீங்க தான் வந்து என்னனு பாத்து நல்ல செய்தியா சொல்லணும்" என்று திருமணமான புதுமணப்பெண்ணின் வாந்தி, பித்த வாந்தியா? அல்லது கர்ப்ப வாந்தியா? என்று நாடி பார்த்து கணித்து சொல்லும் காலம் மலையேறிவிட்டது. இனி அதைப்போன்ற காட்சிகளை பாக்கியராஜ் படங்களில் தான் பார்க்க முடியும். நவீன அறிவியல் அசுர வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளும் பரிசோதனை கிட் வைத்து மாதந்தோறும் பரிசோதனை செய்து அவர்களே உறுதி செய்துகொள்வது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

    திருமணமான அடுத்தடுத்த மாதங்களில் சிறுநீர் சோதனை அட்டையில் இரட்டை கோடு வந்ததும் தம்பதிகளுக்கு அளவளாவிய மகிழ்ச்சி. பெண்கள் தம் வயிற்றில் கருவை சுமப்பதில் தான் (மகப்பேறு காலம்) அவர்களுக்கு உச்சகட்ட ஆனந்தம். அவர்களுக்கு தாய்மை மிகப்பெரிய பரிசு. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாயாக இருப்பது என்பது மிகச்சிறந்த உணர்வு. அத்தகைய மகப்பேறு காலத்தில் அவர்கள் சமாளிக்கும் உடல் உபாதைகள் ஏராளம். மகப்பேறு காலத்தின் முதல் 3 மாதங்களில் மசக்கை எனும் கர்ப்பகால வாந்தியை சமாளிப்பது பலருக்கு மிகக்கடினம்.

    சிலருக்கு இந்த மசக்கை கர்ப்பகாலம் முழுவதும் குமட்டி, குமட்டி வாந்தி எடுக்கும் நிலை, மகளிரை துன்புறுத்தும். கர்ப்ப காலத்தில் சுரக்கும் அதிகப்படியான ஹார்மோன் முக்கியமாக பீட்டா-எச்சிஜி எனும் சுரப்பு அதிகரிப்பால் இந்த மசக்கை உருவாகும். திருமணமான பெண்கள் மாதவிலக்கு தள்ளி போவதுடன் இந்த மசக்கை உண்டாவதை கர்ப்ப காலத்தின் அடையாளமாக கொள்ளலாம். உண்ட உணவு சிறிது கூட வயிற்றில் தங்காமல் அப்படியே வாந்தியாகி பெண்களை சோர்வடையச்செய்யும். அதற்கான தீர்வை தேடுபவர்கள் ஏராளம்.

    கர்ப்ப காலத்தில் மருந்துகளை கட்டுப்பாடோடு பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை உலக அளவில் விடுத்த முதல் நிகழ்வு 1960 களில் நடந்த தாலிடோமைடு என்ற மருந்தால் ஏற்பட்ட விபரீதம். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்தது. என்னவெனில் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மசக்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்த மருந்தால் ஜப்பான், கனடா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிறந்த சிசுக்கள் பலவும் கை,கால் குறைபாடுள்ளவையாக இருந்தது குறிப்பிடத்தக்க வருத்தம் தரும் நிகழ்வு. ஆனால் அவர்களுக்கு சித்த மருத்துவம் தரும் எளிய மருந்து 'மாதுளை மணப்பாகு'.

    சித்த மருத்துவ கணிப்புப்படி அதிகரித்த பித்தம் ஒன்றிணைந்து, இந்த மசக்கையை உண்டாக்குவதால் மாதுளை பித்தத்தை குறைத்து வாந்தியை நிறுத்தும் தன்மை உடையது. இது மிகவும் பாதுகாப்பானது. மாதுளையில் அதன் நிறத்திற்கு காரணமான அதிகப்படியான ஆன்தோசயனின் நிறமிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியத்தையும் நல்ல போஷாக்கையும் அளிக்கும் மாதுளம் பழம் என்பது பலரும் அறிந்தது. அதனைக் கடந்து கர்ப்பகாலத்தில் மாதுளை பழச்சாற்றினை எடுத்துக்கொள்ள பிறக்கும் குழந்தை அழகாகவும்,புத்தி தெளிவாகவும் பிறக்கும் என்பது வாய்மொழி செய்தி அந்த வரிகளை உறுதி செய்கின்றன நவீன அறிவியலின் சில ஆய்வுகள்.

    மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் தன்மையுள்ள பாலிபினோலிக் வேதிப்பொருட்கள் உடல் உறுப்புகளுக்கு நன்மையையும் தோலிற்கு அழகையும் கொடுக்கக்கூடியது. அதில் உள்ள வேதிப்பொருட்களால் கர்ப்பகாலத்தில் கருவின் மூளையில் ஏற்படும் காயங்களை தடுத்து, புத்தி தெளிவை உண்டாக்குவதாக எலிகள் மீது நடத்திய ஆய்வுமுடிவுகள் கூறுவது சிறப்பு. மேலும் நஞ்சுக்கொடியின் அழுத்தத்தை குறைத்து, தடைபட்ட கருவளர்ச்சியை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு மருத்துவ பயன்களை 'மாதுளை மணப்பாகு' அள்ளிக்கொடுக்கும்.

    மாதுளை மட்டுமல்லாமல் மசக்கையில் பலனளிக்கும் பல மூலிகை கடைசரக்குகள் உள்ளது. மசக்கையில் இருந்து விடுபட இஞ்சியை அவ்வப்போது நீரில் அல்லது பாலில் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளலாம். பல வெளிநாடுகளில் கூட 'மார்னிங் சிக்னஸ்' எனப்படும் மசக்கை வாந்தியை கட்டுப்படுத்த இஞ்சியை மருந்தாக்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாலில், ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொண்டாலும் வாந்தி குறையும். டீ, காபிக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். புதினா இலைகளை தேநீராக்கி குடிப்பதன் மூலமும் பலன் பெறமுடியும். கர்ப்ப காலத்தில் மசக்கை வாந்தியால் ஏற்படும் சத்துக்கள் இழப்பையும், கருவில் வளரும் மகவுக்கு தேவையான போஷாக்கையும் ஈடுகட்ட இரும்புசத்து மாத்திரைகளையும் பாதுகாப்பான சத்துமருந்துகளையும் எடுத்துக்கொள்வது அவசியம்.

    சித்த மருத்துவத்தில் உள்ள 'அயசெந்தூரம்' மற்றும் 'அன்னபேதி செந்தூரம்' ஆகிய மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்ல பலன் தரும். அத்துடன் நெல்லிக்காய் லேகியம் எனும் சித்த மருந்து, சத்துக்களை உள்ளடக்கிய அமிர்த பெட்டகமாக உள்ளதால் அதனையும் எடுத்துக்கொள்ளலாம். அதியமான் அவ்வைப்பாட்டிக்கு கொடுத்த நெல்லிக்கனியைப் போல, பெண்கள் தம் கருவில் உள்ள மகவிற்கும் கொடுத்து வருங்கால சந்ததியின் ஆயுள்ரேகையை கருவிலேயே உறுதிசெய்யலாம்.

    மேலும் 'கருவேப்பிலை சூரணம்' எனும் சித்த மருந்தையும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்து அனீமியா எனும் ரத்தகுறைவு நோய்க்கு தீர்வு தரும். கருவேப்பிலை ஈர்க்கினை சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்து கஷாயமிட்டு குடிப்பதாலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இயற்கையாய் கூடும். மசக்கை வாந்தியும் நிற்கும். கர்ப்ப கால அசீரணமும் நீங்கும். மசக்கையைத் தொடர்ந்து பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு அசீரணம், புளியேப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகிய குறிகுணங்கள் ஏற்பட்டு அவர்களைத் துன்புறுத்தும். இதற்கு ஏலக்காய் முதன்மையாக சேர்ந்த 'ஏலாதி சூரணம்' என்ற சித்த மருந்து உதவும்.

    அவ்வப்போது இதனை எடுத்துக்கொள்ள நன்மை தரும். மேலும் இதனால் பிரசவ காலத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் தோலில் ஏற்படும் கருப்பு நிறமாற்றம் குறையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் வலி, இடுப்பு பகுதியில் வலி போன்ற உபாதைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நல்லது. இந்த வலிகளுக்கு வெளிப்பிரயோக சித்த மருந்துகளை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். சித்த மருத்துவத்தில் சிறப்பு மிக்கது உள் மருத்துவம் மட்டுமல்ல. வெளி மருத்துவமும் கூட தான். அந்த வகையில் இடுப்பு பகுதிகளை வன்மையாக்க 'உளுந்து தைலம்' என்ற சித்த மருந்து நற்பலன் தரும்.

    அதை ஐந்தாம் மாதம் முதலே கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்த துவங்குவது நல்லது. வலியை குறைக்க 'பிண்ட தைலம்' என்ற மருந்தை பயன்படுத்தலாம். 'குந்திரிக்க தைலம்' என்ற சித்த மருந்தினை அடிவயிற்றில் தடவ தசைகள் தளரும். மகப்பேறுகாலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் பருவங்களில் தனித்தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை சித்த மருத்துவம் பட்டியலிடுகிறது. அவற்றை முறையாக சித்த மருத்துவர் ஆலோசனையைப் பெற்று எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவத்திற்கு வழிகோலும்.

    மாறாக, நஞ்சுக்கொடி மகவின் கழுத்தை சுற்றி இருத்தல், அதிக எடை உள்ள மகவு, அதிக ஆபத்துமிக்க பிரசவம் என்று கணிக்கப்பட்டவர்களும் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்வது பிரசவத்திற்கு பின் நல்லபலன் தரும். கர்ப்ப காலத்தில் கடைசி மாதங்களில் 'பாவனபஞ்சாங்குல தைலம்' என்ற சித்தமருந்து பெரும் பயனளிக்கும். கருப்பையானது விரிவடையும் போது அதன் பின்பகுதியில் உள்ள மலக்குடலை அழுத்தும்போது மலச்சிக்கலை உண்டாக்கும். அதுவே பின்னாளில் பல பெண்களுக்கு மூலவியாதிக்கு வித்திடும். அவர்கள் பாவன பஞ்சாங்குல தைலத்தை பயன்படுத்த கர்ப்ப சூடு, சிறுநீர்ப்பாதை எரிச்சல், மலச்சிக்கல் இவற்றை போக்கும்.

    மேலும் கர்ப்பத்தில் குறைவான பனிக்குடநீரைக் கொண்டுள்ள பெண்களுக்கு தண்ணீர்விட்டான் எனும் மூலிகை சேர்ந்த மருந்துகள் நல்ல பலன் தரும். நவீன வாழ்வியலில் துரித உணவுகளை அதிகம் நாடும் பெண்கள் கர்ப்ப காலத்திலே சர்க்கரை நோயில் அகப்பட்டு கொள்வதை சமீப காலங்களில் அதிகம் காண முடிகிறது. நடை பயிற்சி, உடல் பயிற்சி, இயற்கை உணவு முறைகள் இவற்றை பின்பற்ற மறந்தக்காரணத்தால் 'ஜெஸ்டேஷனல் டயாபடீஸ்' எனும் கர்ப்ப கால நீரிழிவு பலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் வகையில் மாறிவிடுகிறது.

    அதற்காக சித்த மருத்துவம் கூறும் உணவு முறைகளும், மருத்துவ முறைகளும், யோகாசன பயிற்சி முறைகளும் பின்பற்றுதல் அவசியம். அந்த வகையில் மற்றொரு சவாலான நோய்நிலை கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தம் அதாவது 'ஜெஸ்டேஷனல் ஹைப்பர்டென்ஷன்'. இதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவம் மேற்கொண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது.

    இல்லாவிட்டால் பிரசவகாலத்தில் வலிப்பினை ஏற்படுத்தி பல்வேறு சிக்கல்களை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்தும். பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் சித்த மருத்துவம் கூறும் யோகாசனப் பயிற்சிகளை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் தனித்தனி முறைகளை பயிற்சி செய்து வருவது நல்லது. இதனால் தாய்க்கு மன சோர்வு, உடல் சோர்வு நீங்கி நிம்மதியான தூக்கம் வரும். கருவில் வளரும் மகவுக்கும் ஆரோக்கியம் கிட்டும்.

    முதல் மூன்று மாதங்களில் தாடாசனம், உத்தனாசனம், சேது பந்தாசனம், பூர்ணதிதலி ஆசனம், கட்டிசக்ராசனம் ஆகியவற்றுடன் பிராணாயாமம் செய்தல் சிறப்பானது. கர்ப்ப காலத்தின் நடு மூன்று மாதங்களில் தாடாசனம், கட்டி சக்ராசனம், வஜ்ராசனம், அனந்தாசனம், சீதலி பிராணாயாமம், நாடி சுத்தி பிராணாயாமம் இவற்றை பயிற்சி செய்தல் நல்லது. கடைசி மூன்று மாதங்களில் அர்த்த திதலி ஆசனம், பூர்ண திதலி ஆசனம், பிராணாயாமம், தியானம், மற்றும் ஓய்வு நிலை பயிற்சிகளை செய்தல் நல்லது. இவை சுகப் பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

    கர்ப்ப காலத்தின் போது கணவனின் கையைப்பிடித்து சிறிது தூரம் மேற்கொள்ளும் உல்லாச நடை கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் மாற்றத்தை உண்டாக்கி மன உறுதியையும், ஆனந்தத்தையும் தரும். இதனை புரிந்துகொண்டு ஆண்கள் செயல்படுவதும், அவர்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்வதும் இன்றைய அவரச வாழ்வியலில் அவசியமான ஒன்று. இயற்கை உணவும், வாழ்வியல் நெறிமுறைகளும், இன்னும் பல சித்த மருத்துவமுறைகளும் காலம் கடந்து நம்மை காத்துக்கொண்டு நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நலப்பெட்டகமாக உள்ளது. அதனைப் பின்பற்றி வாழ்தல் எளிய சுகப்பிரசவத்திற்கு மட்டுமின்றி மெய்நலத்திற்கும் வழிவகுக்கும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    ×