search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Body Weight"

    • பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பார்க்கப்படுவது வழக்கம்.
    • வனத்துறையின் எடை மையத்தில் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    இந்த முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி என்ற வளர்ப்பு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தது.

    தற்போது யானைகள் முகாமில், 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பார்க்கப்படுவது வழக்கம்.

    அதன்படி முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை கணக்கெடுப்பு நேற்று நடந்தது.

    இதற்காக முதுமலையில் இருந்து கூடலூர் தொரப்பள்ளிக்கு வளர்ப்பு யானைகள் அழைத்து வரப்பட்டது.

    பின்னர் வனத்துறையின் எடை மையத்தில் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.

    தெப்பக்காடு வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் சங்கர், முதுமலை, சுஜய், சேரன், ரகு, மசினி, கிரி, செந்தில் வடிவு உள்பட 15 வளர்ப்பு யானைகளுக்கும் உடல் எடை சரிபார்க்கப்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    கோடை காலத்தை விட தற்போது வளர்ப்பு யானைகளின் உடல் எடை சராசரியாக 130 கிலோ வரை அதிகரித்துள்ளது. மஸ்து உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    • இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
    • தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.

    நம் முன்னோர்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்வு செய்து அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்ளவும் செய்தார்கள். அதிலும் குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அது சாத்தியமில்லாததாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கையாண்ட உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் ஆயுளை நீட்டிக்க செய்தன. இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறி சென்றதன் பின்னணியில் இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் உங்கள் கவனத்திற்கு....

    செரிமானம் மேம்படும்:

    இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டால் அதனை ஜீரணமாக்குவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். அதைவிடுத்து இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அவற்றின் செயல்பாடு தாமதமாகும். இரவு 7 மணிக்குள் சாப்பிடுவது செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகை செய்யும்.

    ஊட்டச்சத்து உறிஞ்சப்படும்:

    உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்க வேண்டும். இரவு உணவை முன்கூட்டியே உண்ணும்போது உடல் சுறுசுறுப்பாக இயக்கி ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்முறையை துரிதப்படுத்தும். இரவு தாமதமாக உட்கொள்ளும்போது அந்த செயல்முறையும் தாமதமாகும்.

    தூக்கத்தை வரவழைக்கும்:

    இரவில் தாமதமாக சாப்பிடும்போது உணவு ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவதன் மூலம் உடல் தூக்கத்திற்கு சீக்கிரமாகவே இசைந்து கொடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.

    ஆற்றல் மேம்படும்:

    தூக்கத்தின்போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்முறை நடைபெறும். ஆனால் இரவில் தாமதமாக சாப்பிடும்போது செரிமானம் ஆவதற்கே உடலின் ஆற்றல் முழுவதும் செலவிடப்படும். அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்காது. இரவில் தூங்கினாலும் கூட காலையில் மந்தமான உணர்வு எட்டிப்பார்க்கும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிட்டுவிட்டு தூங்கினால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைத்து, அடுத்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட முடியும்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்:

    தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக அளவு உணவு உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவு 7 மணிக்கு முன்பு சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும். வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    குடும்ப நேரம்:

    இரவு உணவை குடும்பத்தினருடன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நேரத்தை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி உணவருந்தும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்படி செய்வது இரவு உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கத்தை தடுத்துவிடும்.

    உடல் எடை நிர்வகிக்கப்படும்:

    மாலை, இரவு நேரங்களில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு குறைந்துவிடும். அதனால் உடலில் சேரும் கலோரிகளை எரிப்பது சவாலானது. தாமதமாக சாப்பிடும்போது உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக மாறக்கூடும். அதனால் உடல் எடை அதிகரிக்க தொடங்கும். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உடல் எடையை நிர்வகிப்பதற்கு இரவு உணவை சீக்கிரமாக உட்கொள்வது நல்லது.

    • குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான்.
    • குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.

    குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் 'ஆரோக்கியமான குழந்தை' என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும்இருக்க வேண்டும்.

    உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன் பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.

    குழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம். குழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.

    உடல் பருமனான குழந்தைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி டயட்டில் வைக்க கூடாது, ஏனெனில் டயட் அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான ஆற்றல்களை வழங்காது.

    எடையை குறைக்க வேண்டும் என்பதை விட நல்ல ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்தினாலே படிப்படியாக உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான திண்பண்டங்களை கொடுக்க வேண்டும்.

    குறைவான ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து, காய்கறி மற்றும் பழங்களை அவர்கள் உணவும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    தினமும் காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்.

    குழந்தைகளிடம் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிளிங், சுறுசுறுப்பான விளையாட்டுகள் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

    குறிப்பாக அதிக எடை கொண்ட குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்பற்றலாம்.
    • இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'.

    இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'. வழக்கமான உணவு முறையில், சிறிய மாறுதல்கள் மட்டும் செய்வது இந்த உணவு முறையின் சிறப்பு. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    அட்கின்ஸ் முறையின் அடிப்படை விதி, கார்போஹைட்ரேட் இல்லாத அல்லது குறைவாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவதாகும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து தான், உடல் எடை அதிகரிப்புக்குக் காரணம். இதில், கொழுப்பைக் கரைப்பதிலேயே பலரும் கவனம் செலுத்துகின்றனர்.

    ஆனால், மாவுச்சத்து அதிகரிப்பைப் பற்றி கவலை கொள்வதில்லை. அட்கின்ஸ் உணவு முறையில், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்தால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று உறுதியாக கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட்டை குறைக்கும் போது, உடலின் வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இது, குளுக்கோசை எரித்து சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும். உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றும். இதனால் எடைக் குறைப்பு என்பது எளிதாகிறது.

    அட்கின்ஸ் டயட்டின் 4 நிலைகள்:

    ஆரம்ப நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் 20 கிராம் மட்டுமே இருக்க வேண்டும். அவற்றையும் காய்கறி சாலட், பழங்கள் ஆகியவற்றின் மூலமே பெற வேண்டும். கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்த நிலையில், 30 கிராம் வரை கார்போஹைட்ரேட் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றில் அதிகம் உலர் பழங்கள், விதைகள், மாவுச்சத்து அதிகமில்லாத காய்கறிகள், குறைந்த அளவிலான பெர்ரி பழ வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

    இதனால், 2-வது வாரத்திலேயே எடைக் குறைப்பைப் பார்க்க முடியும். மூன்றாவது நிலையில், பராமரித்தல் முறையில், எடைக் குறைப்பை மெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். இதில் முழு தானியங்கள், புரதம் உள்ள உணவுகள், நல்ல கொழுப்புள்ள உணவுகள், பால் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதில், உடல் எடை குறைய குறைந்தபட்சம் 1 மாதம் வரை தேவைப்படும்.

    நான்காவது நிலையில், சீரான எடையை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பது முக்கியமானதாகும். இதற்கு அனைத்து சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். எடைக் குறைப்பில் உணவுகள் மூலம் 70 சதவீத கலோரிகளை எரித்தால், மீதமுள்ள 30 சதவீத கலோரிகளை உடற்பயிற்சியால் மட்டுமே எரிக்க முடியும். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும்.

    கிழங்கு வகைகள், சோளம், மாம்பழம், சப்போட்டா, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பப்பாளி வகைகள், பேக்கரி உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்திய உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், வெள்ளை நிறப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னரே பின்பற்ற வேண்டும்.

    • யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
    • உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு.

    *இயற்கை வழி பிரசவமாக (சுகப்பிரசவம்) இருந்தால் குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குப் பிறகும், அறுவை சிகிச்சையாக (C - section) இருந்தால் ஆறு மாதத்திற்குப் பின்பும் உடற்பயிற்சிகள் தொடங்கலாம்.

    *ஆரம்ப நிலை உடற்பயிற்சி முதல் படிப்படியாக அதிகரித்து கடினமான உடற்பயிற்சிகள் வரை செய்யலாம்.

    *இயன்முறை மருத்துவர் உங்களை முழுவதும் பரிசோதித்து பின் எந்தெந்த தசைகளுக்கு வலிமை பயிற்சிகள், இலகுவாக்குவதற்கான பயிற்சிகள், தாங்கும் ஆற்றலுக்கான பயிற்சிகள் (Cardiac Endurance), எடை குறைய உதவும் பயிற்சிகள் எனத் தனித்தனியாகப் பிரித்து கற்றுக்கொடுப்பர்.

    *ஒவ்வொரு பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், இதனை செய்தால் போதும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

    *மேலும் குழந்தையை அதிக நேரம் தூக்க வேண்டும் என்பதால் கைகள், தோள்பட்டைக்கான பயிற்சிகள் வழங்குவார்கள். கூடவே,எப்படி, எவ்வாறு குழந்தையை தூக்குவது, எந்த முறையில் பால் கொடுப்பது போன்ற யுக்திகளையும் கற்றுக் கொடுப்பர். இதனால் உடல் வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    கவனிக்க வேண்டியவை...

    * யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், சில பயிற்சிகளை குழந்தை பிறந்த பின்பு செய்யக் கூடாது. அதேபோல சில பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    * அதேநேரம், உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு. தாய்ப்பால் உற்பத்தி செய்ய நிறைய சக்தி தேவைப்படும். கூடவே கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகள் சராசரியாக மற்றவர்களுக்கு தேவைப்படுவதை விட ஒரு பங்கு அதிகமாக தேவைப்படும் என்பதால், அளவைக் குறைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

    *போதிய அளவு உறக்கம் என்பது புது தாய்மார்களுக்கு கிடைக்காது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், தூக்கம் சரியாக இல்லை எனில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் மீது நாட்டம் (Sugar Cravings) வரும். இதனால் நொறுக்குத் தீனி, சாப்பாடு அதிகம் சாப்பிடுவது, இனிப்பு வகைகள் உண்பது என உடல் எடை அதிகரிக்குமே தவிர தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. எனவே, கட்டாயமாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.

    *பிஸ்கட், சிப்ஸ், கேக் போன்ற நொறுக்குத் தீனிகள் தின்பதற்கு பதில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த சாலட்கள், வேகவைத்த பயிறு, கடலை வகைகளை தாராளமாக உண்ணலாம். இதனால் எடையும் ஏறாது, ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

    *சரிவிகித உணவு முறையை (Balanced diet) கட்டாயம் தொடர வேண்டும். பேலியோ, நீர், கீட்டோ டயட் போன்றவற்றை கடைபிடிப்பதில் முழு பலன் இருக்காது.

    *சினிமா நடிகைகள், இணையதள பிரபலங்கள் மட்டும் குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் எடையை குறைக்கிறார்களே என்று சிலருக்கு தோன்றலாம். ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து மாறுபடும் என்பதால், நமக்கானதைத் தேடி, அறிந்து அதன் வழி மாற்றிக்கொள்வது நல்ல பலன்களை தரும்.

    *தாங்களாகவே நடைப்பயிற்சி, ரன்னிங், நடனம், வெறும் உணவு வழியாக எடையை குறைப்பது போன்றவை செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என நினைத்தால் செய்யலாம். ஆனால், சில வகையான தசை வலிமை பயிற்சிகள், தசை இலகுவாக இருக்க பயிற்சிகள் எனக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகு வலி, முன் வயிற்றில் தசை பிரிவதை தடுப்பது போன்ற பல பேறுக்காலத்திற்குப் பின் வரும் சிக்கல்களை தவிர்க்க முடியும்.

    நம் உடலிற்கு எது பொருந்துமோ அதன் வழியை பின்பற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்து நடப்பதே என்றென்றைக்கும் சிறந்தது.

    • குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
    • கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

    உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தற்போது குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி- கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அத்தகைய பானங்கள் பற்றி பார்ப்போம்!

    எலுமிச்சை-வெள்ளரி பானம்: சிறிய வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனை அகன்ற ஜாரில் போட்டு இரண்டு டம்ளர் நீர் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு புதினா இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும். இந்த சாறினை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம். இது குறைந்த கலோரிகளை கொண்டது. அதனால் உடலில் சேரும் கலோரிகளை கட்டுப்படுத்துவதோடு, நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். இதனை பருகினால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம்.

    லவங்கப்பட்டை, ஸ்ட்ராபெர்ரி பானம்: 4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறிதளவு லவங்கப்பட்டை, புதினா சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனை வடிகட்டி, ஒரு மணி நேரம் கழித்து பருகலாம். இரவில் பிரிட்ஜில் வைத்துவிட்டு காலையிலும் பருகலாம். கோடை காலத்தில் உடல் வெப்பத்தை குறைப்பதோடு, எடை குறையவும் உதவும்.

    மோர்: பசியின்மை, செரிமான கோளாறு கொண்டவர்களுக்கும், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் மோர் சிறந்த நிவாரணம் தரும். வயிறு சார்ந்த பிரச்சினைகளை கொண்டவர்கள் தினமும் மோர் அருந்துவது நல்லது. மிக்சியில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி அதனுடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி இலைகள், சிறிதளவு கேரட் சேர்த்து விழுதாக அரைத்து, பருகலாம்.

    எலுமிச்சை சாறு கலந்த கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் இருக்கின்றன. இவை உடல் எடையை குறைக்க உதவும். சூடான நீரில் கிரீன் டீ பேக் ஒன்றை போடவும். அதனுடன் அரை எலுமிச்சை பழ சாறு கலந்து பருகலாம். வெறுமனே கிரீன் டீ பருகுவதற்கு பதிலாக எலுமிச்சை பழ சாறு சேர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

    எலுமிச்சை, இஞ்சி, தேன் பானம்: அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கிவிட்டு தலா ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி பருகவும். உடல் எடை குறைப்புக்கு இது சிறந்த பானமாக கருதப்படுகிறது.

    கேரட் - ஆரஞ்சு ஜூஸ்: கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் போன்றவை இருப்பதால் பசியை கட்டுப்படுத்தும். குறைவாக சாப்பிடுவதற்கும் வழிவகுக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி எடையை குறைப்பதோடு, நீர்ச்சத்தையும் தக்கவைக்கும். கேரட், ஆரஞ்சு பழம் இரண்டையும் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவேண்டும்.

    காய்கறி-பழ ஜூஸ்: கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவைகளில் இருக்கும் நார்ச்சத்துக்கள் பசியை கட்டுப்படுத்தி, அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுக்கும். கேரட், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, கீரை, பீட்ரூட் போன்றவற்றை ஜூஸாக்கி பருகலாம். அவற்றுடன் சிறிதளவு கல் உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் பெரும்பாலானவை கிளைசெமிக் குறியீட்டு எண்களை குறைவாக கொண்டிருப்பதால் சர்க்கரை அளவையும் கட்டுக்குள்வைக்கும்.

    அன்னாசி லெமனேட் பானம்: அன்னாசி பழத்தில் எடையை குறைக்க உதவும் கொழுப்பு அமில ஆக்சிடென்டுகள் இருக்கின்றன. ஒரு அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை பழசாறு, சிறிதளவு மிளகு தூள் கலந்து பருகலாம். காலை வேளையில் இந்த பானத்தை பருகுவது எடையை குறைப்பதோடு, புத்துணர்ச்சியையும் தரும்.

    பீட்ரூட்-புதினா ஜூஸ்: இரண்டு பீட்ரூட்களை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி புதினா இலை, இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஜூஸாக்கி தேவைக்கு நீர் கலந்து பருகலாம். பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதில் நார்ச்சத்தும் அதிகம். வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது. குடலை சுத்தம் செய்வதுடன் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும்.

    • குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனை மூலம் கண்டறிய வேண்டும்.
    • மன மற்றும் உடல் நலனை பாதிக்கும்.

    தற்போதைய நவீன வாழ்க்கை முறை காரணமாக பல குழந்தைகள் இன்று உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் காணப்படுகின்றனர். உடல் பருமன் காரணத்தால் காலப்போக்கில் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    இவர்களின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கும் பல நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உடல்பருமனால் ஏற்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு தகுந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை கற்று கொடுப்பது உடல் பருமனை குறைக்க நல்ல வழி.

    அத்தோடு சில குழந்தைகள் இப்போதெல்லாம் வயது மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள் என்பதால், அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனை மூலம் கண்டறிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

    குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாழ்க்கை முறை தேர்வுகள், உளவியல் சிக்கல்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை பின்னணி உள்ளிட்ட சில காரணங்கள் காணப்படுவதோடு உடல் பருமன் கொண்ட நபர்கள் அடங்கிய குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

    அத்தோடு உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்பட அதிகம் சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட மோசமான உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், மிட்டாய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

    அதிக எடை கொண்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 2 மடங்கு அதிகமாக காணப்படுவதோடு அதிக எடை இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    கழுத்து பகுதியை சுற்றி சேரும் கொழுப்பு காரணமாக காற்றுப்பாதைகள் மிகவும் சிறியதாகி, சுவாசிப்பதை கடினமாக்குகிறது, குறிப்பாக இரவில். இது தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும், மரணத்திற்கு கூட வழிவகுக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறலை உண்டாக்கும் OSA நிலை இளம் குழந்தைகளையும் பாதிக்கலாம்.

    • கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
    • உணவில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.

    உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளடங்கி இருக்கும் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். புரதம் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஏனெனில் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. அதனை அதிகம் உட்கொண்டால் உடல் பருமனை ஏற்படுத்திவிடும் என்ற விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு உட்கொள்ளும் உணவில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. கார்போஹைட்ரேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டியதில்லை. அதுவும் போதுமான அளவில் இடம்பெற வேண்டும். உடல் எடை குறைப்பு விஷயத்தில் உலவும் மேலும் சில கட்டுக்கதைகள் குறித்து பார்ப்போம்.

    புரதம் உட்கொள்வது

    உடல் எடையை குறைக்கும்போது நுண்ணூட்டச்சத்துக்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் புரதம் மேக்ரோ நுண்ணூட்டச்சத்துகளை கொண்டுள்ளவற்றுள் முக்கியமானதாகும். இதனை உட்கொள்வது நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

    அதேவேளையில் புரதத்தையே முதன்மையான உணவாக உட்கொள்ளக்கூடாது. அப்படி புரதத்தை அதிகமாக உட்கொள்வது சருமம் வறட்சி அடைவதற்கு வழிவகுக்கும். சில தேவையற்ற உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். அதனை தவிர்க்க காலை உணவுடன் புரதத்தை சேர்த்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும் சமயங்களிலும் உட்கொள்ளலாம்.

    உணவு உட்கொள்வதை தவிர்ப்பது

    விரதம் இருப்பது அல்லது பட்டினி கிடப்பது உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் என்பது முற்றிலும் கட்டுக்கதைதான். பட்டினி கிடப்பது, குறைவாக சாப்பிடுவது, சில உணவுகளை அறவே தவிர்ப்பது உடல் எடை இழப்புக்கான யுக்தி அல்ல.

    அப்படி சில நாட்கள் உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடித்துவிட்டு மீண்டும் பழையபடி உணவு உட்கொள்ள தொடங்கியதும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடுவீர்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். சீரான இடைவெளியில் உணவு உட்கொள்வதே சிறந்தது. அது பசியை தூண்டாது. அதனால் அடிக்கடி சாப்பிடும் எண்ணம் தோன்றாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

    சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடாதது

    உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்பவர்கள் சூரியன் மறைந்த பிறகு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் உண்மையல்ல. ஒருவருடைய உடலில் கலோரிகள் அதிகம் சேரும்போதுதான் உடல் எடை அதிகரிக்கும்.

    ஏற்கனவே உடலில் கலோரிகள் குறைவாக இருக்கும்பட்சத்தில் சூரியன் மறைந்த பிறகு சாப்பிடுவது உடலுக்கு எந்தவொரு தீங்கையும் விளைவிக்காது. தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது இரவு தடையற்ற தூக்கம் பெற உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

    மாத்திரைகள் சாப்பிடுவது

    உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பதற்குரிய மாத்திரைகள் புழக்கத்தில் இருக்கின்றன. பவுடர், டானிக்குகள் வடிவிலும் கிடைக்கின்றன. அவை உடல் எடையை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதுவும் கட்டுக்கதைதான்.

    ஏனெனில் சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால் மட்டுமே மாத்திரைகள் வேலை செய்யும். இல்லாவிட்டால் அதனை உட்கொள்வதில் பயனில்லை. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள், டானிக்குகளை உட்கொள்வதும் தவறானது.

    நச்சு நீக்கும் பானங்கள் பருகுவது

    'டீடாக்ஸ்' எனப்படும் பானங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதுவும் கட்டுக்கதைதான். டீடாக்ஸ் பானங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை அளிக்கலாம். இருப்பினும் உடலில் உள்ள கொழுப்பை முழுமையாக நீக்குவதற்கு உதவாது. வழக்கமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தாலே போதுமானது.

    • தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
    • நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.

    சமூகத்தை அச்சுறுத்தி வரும் ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்று உடல் பருமன். ஆண், பெண், குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், பலர் அவதிப்படுகின்றனர். தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேத மருத்துவம் சில மூலிகைகளைப் பரிந்துரைக்கிறது. அது குறித்து காண்போம்.

    வெந்தயம்: வெந்தயத்தில் இருக்கும் 'கேலக்டோமேனன்' நீரில் கரையக்கூடியது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. வெந்தய விதைகளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சிறிது வெந்தயப் பொடியைக் கலந்து குடிக்கலாம் அல்லது இரவில் வெந்தய விதைகள் அரை டீஸ்பூன் அளவு ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்ததும், காலை உணவுக்கு முன்பு மென்று சாப்பிடலாம்.

    குக்குலு: ஆயுர்வேத மருந்துகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படும் மூலிகை குக்குலு. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கும். இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்கும் மூலிகையான இதைத் தேநீராக்கிக் குடித்து வரலாம்.

    விஜய்சர்: விஜய்சர் என்பது வேங்கை மரம் ஆகும். இதன் பட்டை உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குறிப்பாக வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த மூலிகைப் பட்டையைத் தேநீராக்கிக் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

    திரிபலா: கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்த கலவையே 'திரிபலா' எனப்படுகிறது. உடலில் கலந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. இதை இரவு உணவுக்குப் பிறகும், காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    புனர்னவா: மூக்கிரட்டை கீரை என்று அழைக்கப்படும் இது, எடை இழப்புச் செயல்பாட்டில் பயனுள்ளதாக இருக்கும். இதன் டையூரிடிக் பண்புகள், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாகச் செயல்பட உதவும். பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்களை இழக்காமல், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்கும் நச்சு தண்ணீர் உடலில் சேர்வதைத் தடுக்கிறது. மூக்கிரட்டைக் கீரையைத் தேநீராக்கிக் குடிக்கலாம்.

    லவங்கப்பட்டை: உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவும் லவங்கப்பட்டை, வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கிறது. இதில் இருக்கும் 'சின்னமால்டிஹைட்' வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. லவங்கப்பட்டையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் தேநீராக்கிக் குடிக்கலாம்.

    கருஞ்சீரகம்: கருஞ்சீரகம் பலவிதமான பயன்பாடுகளுக்கு உகந்தது. குறிப்பாக எடைக்குறைப்பு மற்றும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தக் கூடியது. நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.

    • உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும்.
    • சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவராக டாக்டர் அகிலா எல்லாளன் பணியாற்றுகிறார். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து அவர் கூறியதாவது;

    உடல் பருமன் என்பது எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு திரட்சி என வரையறுக்கப்படுகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை கொண்டிருக்கும். சமூகம் மற்றும் பொருளாதார தாக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளும் உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

    உடல் பருமன் என்பது உலக அளவில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். 21-ம் நூற்றாண்டில் நவீன உலகில், உடல் பருமன் என்பது கவலையாக உள்ளது. மோசமான உணவு முறைகள், வாழ்வியல் மாற்றங்கள், போதிய தூக்கமின்மை, ஹார்மோன் குறைபாடுகள், புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்கள், ஸ்டீராய்டு மருந்துகள், மரபியல் உடல் செயல்பாடு குறைதல் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    நமது உடல்நிலை குறியீடு எண் பி.எம்.ஐ. மூலம் கணக்கிடப்படுகிறது. இது ஒரு நபரின் எடையை உயரத்தினால் கணக்கிடும் முறையாகும். உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி உடல் பருமன் என்பது பி.எம்.ஐ 30- ஐவிட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருப்பது சரியான அளவாகும்.

    உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இருதய நோய்கள், நீரழிவு, ஆஸ்துமா, சில வகை புற்று நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், கருவுறாமை, மாதவிடாய் கோளாறுகள், உளவியல் சார்ந்த பிரச்சினைகள் என பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

    இதற்கு நோயின் அடிப்படை காரணத்தை அறிந்து நீர், நெருப்பு, ஆகாயம், நிலம், காற்று ஆகிய பஞ்சபூதங்களின் கோட்பாடுகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் வகைகள் வருமாறு:-

    யோகா, மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை ஒருங்கிணைக்கும் முறையாகும். உடல் சுத்திகரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுவதற்கான செயல் முறையாகும்.

    நல்ல உடல் நலத்தை நாடும் ஒவ்வொருவரும் சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். சிறு தானிய உணவுகள், பருவ கால காய்கறிகள் மற்றும் பழங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகியவை சிறந்தவை. உணவு முறைகள் உடல் நல ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செரிமானத்தை சீர்படுத்தவும் உதவுகிறது.

    விரத முறைகள் மூலமும் இதனை தவிர்க்கலாம். விரதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவை விருப்பத்துடன் தவிர்க்கும் முறையாகும். விரதத்தின் தொடக்கத்தில் 'எனிமா' மூலம் குடலை முழுமையாக சுத்தம் செய்யப்படும். இம்முறையில் உடலில் உள்ள கழிவுகள் சிறந்த முறையில் வெளியேற்றப்படும்.

    நீராவி குளியல்

    நீராவி குளியல் என்பது சரும துவாரங்கள் வழியாக நச்சு கழிவுகள் வெளியேற்றப்படும். இது தோஷ சமநிலை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவுகிறது.

    வாழை இலை குளியல்

    வாழை இலை பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது ஒரு ஹீலியோ தெரபி முறையாகும். வாழை இலையில் பொட்டாசியம், வைட்டமின், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் நிலை சமப்படுத்த உதவுகிறது.

    மண் குளியல்

    மண் குளியல் என்பது தோளில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மண்ணில் உள்ள கந்தகம், சல்பர், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் புரோமின் போன்ற தாதுக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

    உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் மற்றும் விளைவுகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது அறிமுகமாகியுள்ளது பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).
    • இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது

    தற்போது உடல் எடையை உயரத்துடன் தொடர்புபடுத்தி அளவிடும் பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) புழக்கத்தில் உள்ளது. 1830-க்குப் பிறகு அடால்ப் க்யூடெலட் என்ற பெல்ஜிய கணிதவியலாளரால் கண்டறியப்பட்ட இம்முறை தோராயமானது. தற்போது இதற்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது, பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).

    உடலின் மொத்த எடையோடு, வயிற்றிலுள்ள கொழுப்பையும் அளவிட்டு ஆரோக்கியமான எடை அளவு கணக்கிடப்படுகிறது. இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது. வயிற்றிலுள்ள கொழுப்புக்கும், இதய மற்றும் நீரிழிவு நோய்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று.

    2012-ல் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி உடல்பருமனால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் ஐரோப்பியர்களில் பலருக்கும் இடுப்பின் அளவு 34-40 அங்குலம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார் மேயோ கிளினிக் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஜோஸ் மெதினா இனோஜோஸா. பி.எம்.ஐ. பின்தங்கியது, இடுப்பில் சேரும் கொழுப்பை அளவிடுவதில்தான். பி.வி.ஐ. உடல் எடையையும், வயிற்றிலுள்ள கொழுப்பையும் துல்லியமாக பாடி இமேஜ் முறையில் அளவிடுகிறது.

    மெனோபாஸ் காரணமாக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம்.
    50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

    ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண் டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

    சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற் றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், ‘எக்ஸ்சர்சைஸ் பேண்டு’ எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

    தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.
    ×