என் மலர்
நீங்கள் தேடியது "உடல் எடை"
- ஐடி ஊழியர்களில் பெரும் சதவீதம் பேர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
- சிறு வயதிலிருந்தே சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.
இந்தியாவில் அதிக எடை கொண்ட உடல் குண்டானவர்கள் எண்ணிக்கை 2050 -ம் ஆண்டுக்குள் 450 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் பெரும்பாலோர் அதிக எடை கொண்டவர்களாகக் இருக்க வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கூட பெரும்பான்மையானவர்கள் குண்டாக இருப்பவர்கள். சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உடல் பருமனில் இந்தியா தற்போது உலகில் 3-வது இடத்தில் உள்ளது.
சில ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவைக் கூட விஞ்சி, உலகின் 2-வது அதிக உடல் பருமன் கொண்ட நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர்களில் பெரும் சதவீதம் பேர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் பிரச்சனை நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
அதிக எடை கொண்டவர்களுக்கு வேறு பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. வகை 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம். இதய நோய்கள், கொழுப்பு கல்லீரல், மன நோய்கள், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.
உணவு உட்கொள்ளும் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உடல் பருமனுக்கு முக்கிய சிகிச்சை கவனத்துடன் சாப்பிடுவதுதான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவு நேரம் என்பதால் திடீரென சாப்பிடுவது எடை அதிகரிக்க வழிவகுக்கும். சீரான உணவு வழக்கமான உடற்பயிற்சி, உடல் செயல்பாடு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது ஆகியவற்றுடன் உடல் பருமனிலிருந்து விடுபட உதவும்.
பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளில் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்று உலக உடல் பருமன் கூட்டமைப்பு கூறுகிறது.
சிறு வயதிலிருந்தே சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.
காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள். உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு ஒவ்வொரு நாளும் அவசியம்.
குழந்தைகள் அதிகமாக மொபைல் போன்கள் மற்றும் டிவிகளைப் பயன்படுத்துவதும் மைதானத்தில் விளையாடுவது குறைவதும் உடல் பருமனுக்குக் காரணமாகின்றன என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கவலையும் மன அழுத்தமும் தொப்பை வர முக்கிய காரணிகள்.
- குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாக கூடுகிறது.
ஆழ்ந்த உறக்கம் பசித்தன்மையை தூண்டும் ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும். அதே நேரத்தில் தூக்கமின்மை அதிகம் சாப்பிட வைத்துவிடும் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.
சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று இப்படி ஒரு முடிவைத்தருகிறது. அதுவும் பெண்களுக்கு.
சரியாக தூங்காத பெண்கள், முறையாக தூங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவு உட்கொள்வதாக தெரியவந்துள்ளதாம்.
கவலையும் மன அழுத்தமும் தொப்பை வர முக்கிய காரணிகள். சரியாகத் தூங்கும்போது இவை இரண்டையும் விரட்டலாம்.
7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களை விட குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாக கூடுகிறது. 7 மணி நேரத்திற்கு குறைவாகவோ, 9 மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள், மற்றவர்களைவிட, பருமனாகவும், எடை போடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு நன்றாக உறங்கும்போது, அடுத்த ஒரு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். உடற்பயிற்சி தூக்கத்தை சீராக்க உதவும் என்பதால், நம் தூங்கும் முறையை சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம்.
- இவர்களால் வேகமாக நடக்க முடியாது.
- மாடிப் படிகளில் ஏறி, இறங்க முடியாது.
உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதேசமயம் கொரோனாவிற்கு முன்புவரை, இந்த பாதிப்புகள் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் கொரோனா பொதுமுடக்க காலங்களில், செல்போன் உலகிற்குள் சிக்கிக்கொண்டவர்களால் இன்றுவரை அதிலிருந்து வெளிவர இயலவில்லை. மக்களின் இயல்பான வெளியுலக செயல்பாடுகள் குறைந்துவிட்டன. அவர்கள், ஒரே இடத்தில் படிக்கவும், வேலை செய்யவும், வீட்டிற்குள்ளேயே விளையாடவும் கற்றுக்கொண்டதால், உடல் பருமன் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
இயல்பான குழந்தைகளை விட, இவர்கள் மிக எளிதாகவே சோர்ந்து விடுவார்கள். குறிப்பாக, அன்றாட வேலைகளை செய்வதே இவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். உடல் பருமன் காரணத்தால், நிறைய குழந்தைகள் கவன சிதைவிற்கு உள்ளாவதாக நிறைய ஆய்வுகள் விளக்குகின்றன. பலர் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள்.
'ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமன் பிரச்சினைகள், இப்போது சிறு குழந்தைகள் வரை வந்துவிட்டது. ஒரு வகுப்பில், 50 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், அதில் 5 குழந்தைகள் உடல் பருமனாக இருப்பது சகஜமாகிவிட்டது. இவர்களால் மற்ற குழந்தைகளைப் போல வேகமாக நடக்க முடியாது. மாடிப் படிகளில் ஏறி, இறங்க முடியாது. உடற்கல்வி வகுப்புகளில், இயல்பான குழந்தைகளைப் போல துள்ளிக் குதித்து விளையாட முடியாது.
இத்தகைய காரணங்களால், அவர்கள் இயல்பான குழந்தைகளிடமிருந்து வேறுபடுகிறார்கள். கூடவே பருமனான குழந்தைகள் அணியக்கூடிய பெரிய சைஸ் உடை நாகரிகமும், அவர்களை மற்ற குழந்தைகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும். இதனால் அவர்கள், தனிமை நிறைந்த தனி உலகிற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இது அவர்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கும்.
- தற்போது அறிமுகமாகியுள்ளது பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).
- இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது
தற்போது உடல் எடையை உயரத்துடன் தொடர்புபடுத்தி அளவிடும் பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) புழக்கத்தில் உள்ளது. 1830-க்குப் பிறகு அடால்ப் க்யூடெலட் என்ற பெல்ஜிய கணிதவியலாளரால் கண்டறியப்பட்ட இம்முறை தோராயமானது. தற்போது இதற்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது, பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).
உடலின் மொத்த எடையோடு, வயிற்றிலுள்ள கொழுப்பையும் அளவிட்டு ஆரோக்கியமான எடை அளவு கணக்கிடப்படுகிறது. இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது. வயிற்றிலுள்ள கொழுப்புக்கும், இதய மற்றும் நீரிழிவு நோய்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று.
2012-ல் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி உடல்பருமனால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் ஐரோப்பியர்களில் பலருக்கும் இடுப்பின் அளவு 34-40 அங்குலம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார் மேயோ கிளினிக் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஜோஸ் மெதினா இனோஜோஸா. பி.எம்.ஐ. பின்தங்கியது, இடுப்பில் சேரும் கொழுப்பை அளவிடுவதில்தான். பி.வி.ஐ. உடல் எடையையும், வயிற்றிலுள்ள கொழுப்பையும் துல்லியமாக பாடி இமேஜ் முறையில் அளவிடுகிறது.
- உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும்.
- சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவராக டாக்டர் அகிலா எல்லாளன் பணியாற்றுகிறார். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து அவர் கூறியதாவது;
உடல் பருமன் என்பது எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு திரட்சி என வரையறுக்கப்படுகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை கொண்டிருக்கும். சமூகம் மற்றும் பொருளாதார தாக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளும் உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
உடல் பருமன் என்பது உலக அளவில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். 21-ம் நூற்றாண்டில் நவீன உலகில், உடல் பருமன் என்பது கவலையாக உள்ளது. மோசமான உணவு முறைகள், வாழ்வியல் மாற்றங்கள், போதிய தூக்கமின்மை, ஹார்மோன் குறைபாடுகள், புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்கள், ஸ்டீராய்டு மருந்துகள், மரபியல் உடல் செயல்பாடு குறைதல் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
நமது உடல்நிலை குறியீடு எண் பி.எம்.ஐ. மூலம் கணக்கிடப்படுகிறது. இது ஒரு நபரின் எடையை உயரத்தினால் கணக்கிடும் முறையாகும். உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி உடல் பருமன் என்பது பி.எம்.ஐ 30- ஐவிட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருப்பது சரியான அளவாகும்.
உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இருதய நோய்கள், நீரழிவு, ஆஸ்துமா, சில வகை புற்று நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், கருவுறாமை, மாதவிடாய் கோளாறுகள், உளவியல் சார்ந்த பிரச்சினைகள் என பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
இதற்கு நோயின் அடிப்படை காரணத்தை அறிந்து நீர், நெருப்பு, ஆகாயம், நிலம், காற்று ஆகிய பஞ்சபூதங்களின் கோட்பாடுகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் வகைகள் வருமாறு:-
யோகா, மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை ஒருங்கிணைக்கும் முறையாகும். உடல் சுத்திகரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுவதற்கான செயல் முறையாகும்.
நல்ல உடல் நலத்தை நாடும் ஒவ்வொருவரும் சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். சிறு தானிய உணவுகள், பருவ கால காய்கறிகள் மற்றும் பழங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகியவை சிறந்தவை. உணவு முறைகள் உடல் நல ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செரிமானத்தை சீர்படுத்தவும் உதவுகிறது.
விரத முறைகள் மூலமும் இதனை தவிர்க்கலாம். விரதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவை விருப்பத்துடன் தவிர்க்கும் முறையாகும். விரதத்தின் தொடக்கத்தில் 'எனிமா' மூலம் குடலை முழுமையாக சுத்தம் செய்யப்படும். இம்முறையில் உடலில் உள்ள கழிவுகள் சிறந்த முறையில் வெளியேற்றப்படும்.
நீராவி குளியல்
நீராவி குளியல் என்பது சரும துவாரங்கள் வழியாக நச்சு கழிவுகள் வெளியேற்றப்படும். இது தோஷ சமநிலை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவுகிறது.
வாழை இலை குளியல்
வாழை இலை பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது ஒரு ஹீலியோ தெரபி முறையாகும். வாழை இலையில் பொட்டாசியம், வைட்டமின், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் நிலை சமப்படுத்த உதவுகிறது.
மண் குளியல்
மண் குளியல் என்பது தோளில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மண்ணில் உள்ள கந்தகம், சல்பர், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் புரோமின் போன்ற தாதுக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் மற்றும் விளைவுகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
- நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.
சமூகத்தை அச்சுறுத்தி வரும் ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்று உடல் பருமன். ஆண், பெண், குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், பலர் அவதிப்படுகின்றனர். தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேத மருத்துவம் சில மூலிகைகளைப் பரிந்துரைக்கிறது. அது குறித்து காண்போம்.
வெந்தயம்: வெந்தயத்தில் இருக்கும் 'கேலக்டோமேனன்' நீரில் கரையக்கூடியது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. வெந்தய விதைகளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சிறிது வெந்தயப் பொடியைக் கலந்து குடிக்கலாம் அல்லது இரவில் வெந்தய விதைகள் அரை டீஸ்பூன் அளவு ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்ததும், காலை உணவுக்கு முன்பு மென்று சாப்பிடலாம்.
குக்குலு: ஆயுர்வேத மருந்துகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படும் மூலிகை குக்குலு. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கும். இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்கும் மூலிகையான இதைத் தேநீராக்கிக் குடித்து வரலாம்.
விஜய்சர்: விஜய்சர் என்பது வேங்கை மரம் ஆகும். இதன் பட்டை உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குறிப்பாக வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த மூலிகைப் பட்டையைத் தேநீராக்கிக் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
திரிபலா: கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்த கலவையே 'திரிபலா' எனப்படுகிறது. உடலில் கலந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. இதை இரவு உணவுக்குப் பிறகும், காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
புனர்னவா: மூக்கிரட்டை கீரை என்று அழைக்கப்படும் இது, எடை இழப்புச் செயல்பாட்டில் பயனுள்ளதாக இருக்கும். இதன் டையூரிடிக் பண்புகள், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாகச் செயல்பட உதவும். பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்களை இழக்காமல், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்கும் நச்சு தண்ணீர் உடலில் சேர்வதைத் தடுக்கிறது. மூக்கிரட்டைக் கீரையைத் தேநீராக்கிக் குடிக்கலாம்.
லவங்கப்பட்டை: உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவும் லவங்கப்பட்டை, வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கிறது. இதில் இருக்கும் 'சின்னமால்டிஹைட்' வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. லவங்கப்பட்டையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் தேநீராக்கிக் குடிக்கலாம்.
கருஞ்சீரகம்: கருஞ்சீரகம் பலவிதமான பயன்பாடுகளுக்கு உகந்தது. குறிப்பாக எடைக்குறைப்பு மற்றும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தக் கூடியது. நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.
- கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
- உணவில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளடங்கி இருக்கும் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். புரதம் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஏனெனில் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. அதனை அதிகம் உட்கொண்டால் உடல் பருமனை ஏற்படுத்திவிடும் என்ற விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு உட்கொள்ளும் உணவில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. கார்போஹைட்ரேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டியதில்லை. அதுவும் போதுமான அளவில் இடம்பெற வேண்டும். உடல் எடை குறைப்பு விஷயத்தில் உலவும் மேலும் சில கட்டுக்கதைகள் குறித்து பார்ப்போம்.
புரதம் உட்கொள்வது
உடல் எடையை குறைக்கும்போது நுண்ணூட்டச்சத்துக்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் புரதம் மேக்ரோ நுண்ணூட்டச்சத்துகளை கொண்டுள்ளவற்றுள் முக்கியமானதாகும். இதனை உட்கொள்வது நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.
அதேவேளையில் புரதத்தையே முதன்மையான உணவாக உட்கொள்ளக்கூடாது. அப்படி புரதத்தை அதிகமாக உட்கொள்வது சருமம் வறட்சி அடைவதற்கு வழிவகுக்கும். சில தேவையற்ற உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். அதனை தவிர்க்க காலை உணவுடன் புரதத்தை சேர்த்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும் சமயங்களிலும் உட்கொள்ளலாம்.
உணவு உட்கொள்வதை தவிர்ப்பது
விரதம் இருப்பது அல்லது பட்டினி கிடப்பது உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் என்பது முற்றிலும் கட்டுக்கதைதான். பட்டினி கிடப்பது, குறைவாக சாப்பிடுவது, சில உணவுகளை அறவே தவிர்ப்பது உடல் எடை இழப்புக்கான யுக்தி அல்ல.
அப்படி சில நாட்கள் உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடித்துவிட்டு மீண்டும் பழையபடி உணவு உட்கொள்ள தொடங்கியதும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடுவீர்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். சீரான இடைவெளியில் உணவு உட்கொள்வதே சிறந்தது. அது பசியை தூண்டாது. அதனால் அடிக்கடி சாப்பிடும் எண்ணம் தோன்றாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடாதது
உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்பவர்கள் சூரியன் மறைந்த பிறகு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் உண்மையல்ல. ஒருவருடைய உடலில் கலோரிகள் அதிகம் சேரும்போதுதான் உடல் எடை அதிகரிக்கும்.
ஏற்கனவே உடலில் கலோரிகள் குறைவாக இருக்கும்பட்சத்தில் சூரியன் மறைந்த பிறகு சாப்பிடுவது உடலுக்கு எந்தவொரு தீங்கையும் விளைவிக்காது. தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது இரவு தடையற்ற தூக்கம் பெற உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.
மாத்திரைகள் சாப்பிடுவது
உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பதற்குரிய மாத்திரைகள் புழக்கத்தில் இருக்கின்றன. பவுடர், டானிக்குகள் வடிவிலும் கிடைக்கின்றன. அவை உடல் எடையை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதுவும் கட்டுக்கதைதான்.
ஏனெனில் சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால் மட்டுமே மாத்திரைகள் வேலை செய்யும். இல்லாவிட்டால் அதனை உட்கொள்வதில் பயனில்லை. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள், டானிக்குகளை உட்கொள்வதும் தவறானது.
நச்சு நீக்கும் பானங்கள் பருகுவது
'டீடாக்ஸ்' எனப்படும் பானங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதுவும் கட்டுக்கதைதான். டீடாக்ஸ் பானங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை அளிக்கலாம். இருப்பினும் உடலில் உள்ள கொழுப்பை முழுமையாக நீக்குவதற்கு உதவாது. வழக்கமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தாலே போதுமானது.
- குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
- கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தற்போது குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி- கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அத்தகைய பானங்கள் பற்றி பார்ப்போம்!
எலுமிச்சை-வெள்ளரி பானம்: சிறிய வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனை அகன்ற ஜாரில் போட்டு இரண்டு டம்ளர் நீர் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு புதினா இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும். இந்த சாறினை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம். இது குறைந்த கலோரிகளை கொண்டது. அதனால் உடலில் சேரும் கலோரிகளை கட்டுப்படுத்துவதோடு, நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். இதனை பருகினால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம்.
லவங்கப்பட்டை, ஸ்ட்ராபெர்ரி பானம்: 4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறிதளவு லவங்கப்பட்டை, புதினா சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனை வடிகட்டி, ஒரு மணி நேரம் கழித்து பருகலாம். இரவில் பிரிட்ஜில் வைத்துவிட்டு காலையிலும் பருகலாம். கோடை காலத்தில் உடல் வெப்பத்தை குறைப்பதோடு, எடை குறையவும் உதவும்.
மோர்: பசியின்மை, செரிமான கோளாறு கொண்டவர்களுக்கும், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் மோர் சிறந்த நிவாரணம் தரும். வயிறு சார்ந்த பிரச்சினைகளை கொண்டவர்கள் தினமும் மோர் அருந்துவது நல்லது. மிக்சியில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி அதனுடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி இலைகள், சிறிதளவு கேரட் சேர்த்து விழுதாக அரைத்து, பருகலாம்.
எலுமிச்சை சாறு கலந்த கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் இருக்கின்றன. இவை உடல் எடையை குறைக்க உதவும். சூடான நீரில் கிரீன் டீ பேக் ஒன்றை போடவும். அதனுடன் அரை எலுமிச்சை பழ சாறு கலந்து பருகலாம். வெறுமனே கிரீன் டீ பருகுவதற்கு பதிலாக எலுமிச்சை பழ சாறு சேர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
எலுமிச்சை, இஞ்சி, தேன் பானம்: அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கிவிட்டு தலா ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி பருகவும். உடல் எடை குறைப்புக்கு இது சிறந்த பானமாக கருதப்படுகிறது.
கேரட் - ஆரஞ்சு ஜூஸ்: கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் போன்றவை இருப்பதால் பசியை கட்டுப்படுத்தும். குறைவாக சாப்பிடுவதற்கும் வழிவகுக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி எடையை குறைப்பதோடு, நீர்ச்சத்தையும் தக்கவைக்கும். கேரட், ஆரஞ்சு பழம் இரண்டையும் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவேண்டும்.
காய்கறி-பழ ஜூஸ்: கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவைகளில் இருக்கும் நார்ச்சத்துக்கள் பசியை கட்டுப்படுத்தி, அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுக்கும். கேரட், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, கீரை, பீட்ரூட் போன்றவற்றை ஜூஸாக்கி பருகலாம். அவற்றுடன் சிறிதளவு கல் உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் பெரும்பாலானவை கிளைசெமிக் குறியீட்டு எண்களை குறைவாக கொண்டிருப்பதால் சர்க்கரை அளவையும் கட்டுக்குள்வைக்கும்.
அன்னாசி லெமனேட் பானம்: அன்னாசி பழத்தில் எடையை குறைக்க உதவும் கொழுப்பு அமில ஆக்சிடென்டுகள் இருக்கின்றன. ஒரு அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை பழசாறு, சிறிதளவு மிளகு தூள் கலந்து பருகலாம். காலை வேளையில் இந்த பானத்தை பருகுவது எடையை குறைப்பதோடு, புத்துணர்ச்சியையும் தரும்.
பீட்ரூட்-புதினா ஜூஸ்: இரண்டு பீட்ரூட்களை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி புதினா இலை, இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஜூஸாக்கி தேவைக்கு நீர் கலந்து பருகலாம். பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதில் நார்ச்சத்தும் அதிகம். வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது. குடலை சுத்தம் செய்வதுடன் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும்.
- மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அசாம் அரசு அறிவித்தது.
- குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது.
அசாம் மாநிலத்தில் போலீசார் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் உடல் எடையை குறைக்க முடியாத போலீசாருக்கு விருப்ப ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அசாம் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், அசாம் மாநிலத்தை தொடர்ந்து அரியானாவிலும் உடல் எடை அதிகம் கொண்ட போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை அதிகம் கொண்ட போலீசார் களப் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானதாக குறிப்பிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் அனில் விஜ், இதன்மூலம் குற்றமல்லதா மாநிலமாக மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.
உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வராத காவல்துறையினர் 3 மாதங்களில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அசாம் அரசு அறிவித்திருந்த நிலையில் அரியானா அரசும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
- உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு.
*இயற்கை வழி பிரசவமாக (சுகப்பிரசவம்) இருந்தால் குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குப் பிறகும், அறுவை சிகிச்சையாக (C - section) இருந்தால் ஆறு மாதத்திற்குப் பின்பும் உடற்பயிற்சிகள் தொடங்கலாம்.
*ஆரம்ப நிலை உடற்பயிற்சி முதல் படிப்படியாக அதிகரித்து கடினமான உடற்பயிற்சிகள் வரை செய்யலாம்.
*இயன்முறை மருத்துவர் உங்களை முழுவதும் பரிசோதித்து பின் எந்தெந்த தசைகளுக்கு வலிமை பயிற்சிகள், இலகுவாக்குவதற்கான பயிற்சிகள், தாங்கும் ஆற்றலுக்கான பயிற்சிகள் (Cardiac Endurance), எடை குறைய உதவும் பயிற்சிகள் எனத் தனித்தனியாகப் பிரித்து கற்றுக்கொடுப்பர்.
*ஒவ்வொரு பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், இதனை செய்தால் போதும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
*மேலும் குழந்தையை அதிக நேரம் தூக்க வேண்டும் என்பதால் கைகள், தோள்பட்டைக்கான பயிற்சிகள் வழங்குவார்கள். கூடவே,எப்படி, எவ்வாறு குழந்தையை தூக்குவது, எந்த முறையில் பால் கொடுப்பது போன்ற யுக்திகளையும் கற்றுக் கொடுப்பர். இதனால் உடல் வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.
கவனிக்க வேண்டியவை...
* யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், சில பயிற்சிகளை குழந்தை பிறந்த பின்பு செய்யக் கூடாது. அதேபோல சில பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
* அதேநேரம், உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு. தாய்ப்பால் உற்பத்தி செய்ய நிறைய சக்தி தேவைப்படும். கூடவே கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகள் சராசரியாக மற்றவர்களுக்கு தேவைப்படுவதை விட ஒரு பங்கு அதிகமாக தேவைப்படும் என்பதால், அளவைக் குறைப்பது புத்திசாலித்தனம் இல்லை.
*போதிய அளவு உறக்கம் என்பது புது தாய்மார்களுக்கு கிடைக்காது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், தூக்கம் சரியாக இல்லை எனில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் மீது நாட்டம் (Sugar Cravings) வரும். இதனால் நொறுக்குத் தீனி, சாப்பாடு அதிகம் சாப்பிடுவது, இனிப்பு வகைகள் உண்பது என உடல் எடை அதிகரிக்குமே தவிர தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. எனவே, கட்டாயமாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.
*பிஸ்கட், சிப்ஸ், கேக் போன்ற நொறுக்குத் தீனிகள் தின்பதற்கு பதில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த சாலட்கள், வேகவைத்த பயிறு, கடலை வகைகளை தாராளமாக உண்ணலாம். இதனால் எடையும் ஏறாது, ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
*சரிவிகித உணவு முறையை (Balanced diet) கட்டாயம் தொடர வேண்டும். பேலியோ, நீர், கீட்டோ டயட் போன்றவற்றை கடைபிடிப்பதில் முழு பலன் இருக்காது.
*சினிமா நடிகைகள், இணையதள பிரபலங்கள் மட்டும் குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் எடையை குறைக்கிறார்களே என்று சிலருக்கு தோன்றலாம். ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து மாறுபடும் என்பதால், நமக்கானதைத் தேடி, அறிந்து அதன் வழி மாற்றிக்கொள்வது நல்ல பலன்களை தரும்.
*தாங்களாகவே நடைப்பயிற்சி, ரன்னிங், நடனம், வெறும் உணவு வழியாக எடையை குறைப்பது போன்றவை செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என நினைத்தால் செய்யலாம். ஆனால், சில வகையான தசை வலிமை பயிற்சிகள், தசை இலகுவாக இருக்க பயிற்சிகள் எனக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகு வலி, முன் வயிற்றில் தசை பிரிவதை தடுப்பது போன்ற பல பேறுக்காலத்திற்குப் பின் வரும் சிக்கல்களை தவிர்க்க முடியும்.
நம் உடலிற்கு எது பொருந்துமோ அதன் வழியை பின்பற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்து நடப்பதே என்றென்றைக்கும் சிறந்தது.
- அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்பற்றலாம்.
- இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'.
இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'. வழக்கமான உணவு முறையில், சிறிய மாறுதல்கள் மட்டும் செய்வது இந்த உணவு முறையின் சிறப்பு. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
அட்கின்ஸ் முறையின் அடிப்படை விதி, கார்போஹைட்ரேட் இல்லாத அல்லது குறைவாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவதாகும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து தான், உடல் எடை அதிகரிப்புக்குக் காரணம். இதில், கொழுப்பைக் கரைப்பதிலேயே பலரும் கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால், மாவுச்சத்து அதிகரிப்பைப் பற்றி கவலை கொள்வதில்லை. அட்கின்ஸ் உணவு முறையில், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்தால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று உறுதியாக கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட்டை குறைக்கும் போது, உடலின் வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இது, குளுக்கோசை எரித்து சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும். உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றும். இதனால் எடைக் குறைப்பு என்பது எளிதாகிறது.
அட்கின்ஸ் டயட்டின் 4 நிலைகள்:
ஆரம்ப நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் 20 கிராம் மட்டுமே இருக்க வேண்டும். அவற்றையும் காய்கறி சாலட், பழங்கள் ஆகியவற்றின் மூலமே பெற வேண்டும். கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்த நிலையில், 30 கிராம் வரை கார்போஹைட்ரேட் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றில் அதிகம் உலர் பழங்கள், விதைகள், மாவுச்சத்து அதிகமில்லாத காய்கறிகள், குறைந்த அளவிலான பெர்ரி பழ வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
இதனால், 2-வது வாரத்திலேயே எடைக் குறைப்பைப் பார்க்க முடியும். மூன்றாவது நிலையில், பராமரித்தல் முறையில், எடைக் குறைப்பை மெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். இதில் முழு தானியங்கள், புரதம் உள்ள உணவுகள், நல்ல கொழுப்புள்ள உணவுகள், பால் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதில், உடல் எடை குறைய குறைந்தபட்சம் 1 மாதம் வரை தேவைப்படும்.
நான்காவது நிலையில், சீரான எடையை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பது முக்கியமானதாகும். இதற்கு அனைத்து சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். எடைக் குறைப்பில் உணவுகள் மூலம் 70 சதவீத கலோரிகளை எரித்தால், மீதமுள்ள 30 சதவீத கலோரிகளை உடற்பயிற்சியால் மட்டுமே எரிக்க முடியும். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும்.
கிழங்கு வகைகள், சோளம், மாம்பழம், சப்போட்டா, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பப்பாளி வகைகள், பேக்கரி உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்திய உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், வெள்ளை நிறப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னரே பின்பற்ற வேண்டும்.
- குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான்.
- குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.
குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் 'ஆரோக்கியமான குழந்தை' என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும்இருக்க வேண்டும்.
உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன் பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.
குழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம். குழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.
உடல் பருமனான குழந்தைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி டயட்டில் வைக்க கூடாது, ஏனெனில் டயட் அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான ஆற்றல்களை வழங்காது.
எடையை குறைக்க வேண்டும் என்பதை விட நல்ல ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்தினாலே படிப்படியாக உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான திண்பண்டங்களை கொடுக்க வேண்டும்.
குறைவான ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து, காய்கறி மற்றும் பழங்களை அவர்கள் உணவும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தினமும் காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்.
குழந்தைகளிடம் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிளிங், சுறுசுறுப்பான விளையாட்டுகள் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.
குறிப்பாக அதிக எடை கொண்ட குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.