search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரிழிவு"

    • குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
    • கர்ப்ப காலத்தின் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை அவசியம்.

    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

    *Gestational Diabetes Mellitus (GDM)

    குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

    *Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

    ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

    கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.

    இதற்கு முக்கியமான காரணிகள்...

    * குடும்பப் பின்னணியில் நீரிழிவு

    * 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்

    * திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை

    * சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்

    * பருமன், அதிக எடை

    * முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்

    * நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை

    * அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு

    * பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்

    * முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.

    இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...

    கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

    இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

    பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்

    *கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    *நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    *குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    *சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    *எடை கூடுதல்

    *உயர் ரத்த அழுத்தம்

    *கரு கலைதல்

    *மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    *டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    *வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    *ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    *நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்

    *கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    *கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்

    *பிறப்புநிலைக் கோளாறுகள்

    *பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    *மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    *மஞ்சள் காமாலை

    *ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    *பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    *குறைப் பிரசவம்

    *Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    *மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

    கட்டுப்படுத்துவது எப்படி?

    மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

    ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.

    தயக்கம் வேண்டாம்!

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக

    அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்

    விளக்கப்படும்.

    *வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

    • நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது.
    • நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவுகளையும் சாப்பிட முடியாது.

    நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை நீரிழிவு நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

    பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி2, ஈ, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும், பிளாவினாய்ட்ஸ், பாலிபினால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது.

    பாகற்காயில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள் போன்றவை குறைந்த அளவே இருப்பதாலும், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதாலும், இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருட்கள் இருப்பதாலும், சர்க்கரை நோயாளிகள் உணவில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரையை குறைக்கும் சரண்டி, விசைன், இன்சுலின் போல செயல்படும் பாலிபெப்டைட் - பி போன்றவை இருப்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பொதுவாக பாகற்காயின் விதைகளால் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும், நாம் விதையையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அது கருப்பை சுருக்குதலை ஏற்படுத்தி கருக்கலைப்பு கூட நேரலாம். பாகற்காயில் உள்ள கசப்பை போக்குவதற்கு, அதை தயிரில் ஊறவைத்தோ அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம்.

    மேலும் பாகற்காயில் உள்ள லெக்டின், திசுக்களில் உள்ள செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவி புரிகிறது. மேலும் இது பசியை குறைத்து, உணவை குறைவாக உட்கொள்ள செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைகிறது.

    நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும்
    • நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    நீரிழிவு நோயைத் தவிர்க்க உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சேர்க்க வேண்டும். வெங்காயத்தையும் சேர்க்கலாம்.

    இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும், இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    ஒரு வெங்காயத்தில் கிட்டத்தட்ட 44 கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, போலெட், பொட்டாசியம், சல்பர் போன்றவை அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தில் கிட்டத்தட்ட 17 வகையான பிளாவினாய்ட்ஸ், (ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ்) இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 11 ஆகும். இது மிகக் குறைந்த அளவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், குறிப்பாக ஆன்தோசயனின் மற்றும் கொர்சிட்டின், செல்களின் அழற்சியை குறைத்து நீரிழிவு நோய், இதய நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் கொர்சிட்டின், கணையம், கொழுப்பு, கல்லீரல் மற்றும் தசைகள் உள்ள செல்களுடன் ஒருங்கிணைந்து சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கிறது.

    கோடையில் வெங்காயம் சாப்பிடுவதோ அல்லது அதன் சாற்றைக் குடிப்பதோ வெப்பத்தை ஏற்படுத்தாது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையானதாக வைத்திருக்கும்.

    வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள அதிகமான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக எஸ்சர்சியா, ஸ்டபைலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் வராமல் ஓரளவு தடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள 'ஆனயானின் ஏ' என்ற வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதாலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பிளவினாய்ட்ஸ் அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிகவும் குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    - நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • 100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

    நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு நுங்கு ஒரு சிறந்த பழமாக திகழ்கிறது. நுங்கில் அதிக அளவு வைட்டமின் சி, ஈ, எ, பி1, பி2, பி7 இருக்கிறது. நுங்கில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு 35 என்ற மிகக் குறைந்த அளவு இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் நுங்கை பயமின்றி உண்ணலாம்.

    100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது. இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், நீர்ச்சத்து சமநிலைக்கு பெரிதும் உதவி புரிகிறது. நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை உட்கொள்ளும்போது வயிறு கனத்துப் போவதால் பசி குறைந்து, மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடாமல் தடுக்கப்படுகிறது. முற்றிய நுங்கை சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படலாம். அதனால் முற்றிய நுங்கை சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கலாம். இதனை நீரிழிவு நோயாளிகளும் அச்சம் இன்றி அளவாக எடுத்து கொள்ளலாம்.

    மேலும் நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், வேர்க்குரு போன்ற பிரச்சினைகளும் குறைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    • சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.
    • நீரிழிவு நோயாளிகள் சிறப்பு காலணிகளை வாங்குவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுவது உண்டு. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாகப் பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகின்றன. இதன் காரணமாகப் பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியாமல் போகின்றன.

    இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவருடன் அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.

    சிறப்பு காலணிகளை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகையான காலணிகளைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களைப் பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.

    நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    நீரழிவு தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தைக் குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கால்களில் எந்தப் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

    • நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • ஊறுகாயில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது.

    உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி…

    இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள நீரிழிவு நோயின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    ஊறுகாயில் மிகக் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது ஒருமுறை ஊறுகாய் சாப்பிடலாம். இதில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது. ஒரு ஊறுகாயில் கிட்டத்தட்ட 57 மில்லி கிராம் சோடியம் இருக்கிறது. இது ரத்த கொதிப்பை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பக்கவாதம், இருதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

    ஊறுகாயில் உள்ள அதிகமான அளவு சோடியம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகப்படுத்துகிறது. மேலும் அதிகமான அளவு சோடியம் சில சமயம் வயிறு புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அதிகமான அளவு சோடியம் எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற செய்து எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுத்தி எலும்பின் அடர்த்தியை இழக்கச் செய்து எலும்பு முறிவை ஏற்படுத்தலாம்.

    அதனால் கலோரிகள், கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் அதிகமான அளவு சோடியம் இதில் இருப்பதால் ஊறுகாயை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எப்போதாவது ஒருமுறை சேர்த்துக் கொள்ளலாம்.

    உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம்.

    நீரிழிவு நோயாளிகள் ஒருசில உணவுகளை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோயை வாழ்நாள் முழுவதும் கட்டுக்குள் வைக்க வேண்டியது முக்கியம்.
    • செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதற்கு இன்சுலின் ஒரு சாவியாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி உலகின் பெரும்பாலான மக்களுக்கு மிகப் பெரிய கவலை தரும் விஷயமாக உள்ளது. உடல் செயல்பாடுகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இளைஞர்களிடையே முக்கியமாக 40 வயதிற்கும் குறைவான நபர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

    நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல. சமநிலையான டயட் மற்றும் வாழ்க்கைமுறை, அதனுடன் இன்சுலின் போன்ற தேவையான மருந்துகள் போன்றவை முறையாக கையாளப்பட்டாலும் நீரிழிவு நோயை எப்போதும் சீராக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

    நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி நிறைய வாழ்க்கைமுறைகளை கடைபிடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். வழக்கமான கண்காணிப்பு முதல் ஸ்கிரீனிங், மருத்துவரை அணுகி பரிசோதித்தல் போன்றவை மிகவும் அவசியம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை காரணமாக எழும் பிற பிரச்னைகளால் அதிக மன அழுத்தம், சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றையும் எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    நீரிழிவு நோயை ஏற்றுக்கொள்வதும், வாழ்நாள் முழுவதும் அதனை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதும் மிகவும் முக்கியம். இதனால் விரக்தி ஏற்பட்டாலும் உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்.

    பொதுவாக செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதற்கு இன்சுலின் ஒரு சாவியாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயில் ஏற்படும் இன்சுலின் குறைபாட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று செயல்பட முடியாததால் செல்களின் ஆற்றல் குறைந்து உடலில் சோர்வு ஏற்படுகிறது.

    உடல் சோர்வு ஏற்பட வேறு சில காரணங்களாக கருதப்படுவது:

    1. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருத்தல் அல்லது மிக குறைவாக இருத்தல்.

    2. நீரிழிவு நோயின் பக்க விளைவுகளான சிறுநீரக பாதிப்பு, இருதய நோய், பக்கவாதம், வைட்டமின் பாதிப்பு போன்ற பிரச்சினைகள்.

    3. தூக்கமின்மை மற்றும் உடல் பருமன்.

    4. உட்கொள்ளும் மாத்திரைகளின் விளைவுகள்.

    5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

    6. நெடுங்காலமாக இருக்கும் நோய்த்தொற்று.

    7. வேறு சில தொடர்புடைய நோய்கள்.

    8. வைட்டமின் குறைபாடு.

    9. மனஅழுத்தம்.

    10. ரத்தசோகை.

    நீரிழிவு நோயானது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தின்மீது கவனம் செலுத்துவது அவசியம். எனவே தொடர் பரிசோதனை மற்றும் முறையாக மருந்துகள் உட்கொள்ளுதல் அவசியம்.

    • உணவு பழக்கத்தில் செய்யும் சில தவறுகளும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.
    • வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.

    நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. உணவு பழக்கத்தில் செய்யும் சில தவறுகளும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். உண்ணும் உணவை உடலானது ஆற்றலாக மாற்றுவதற்கு உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் சீராக நடைபெற வேண்டும்.

    குறிப்பாக கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடலால் சரியாக பயன்படுத்த முடியாத போது நீரிழிவு நோய் உண்டாகிறது. வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.

    தினமும் தயிர் சாப்பிடுவது

    தயிர் ஆரோக்கியமான புரோபயாடிக் உணவாகக் கருதப்பட்டாலும், அதை தினமும் உணவில் சேர்க்க முயற்சிப்பது தவறானது. தினமும் தயிர் சாப்பிடும்படி ஆயுர்வேதம் பரிந்துரைக்கவில்லை.

    தினமும் தயிர் சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மோசமான வளர்சிதை மாற்றத்திற்கும் வித்திடும்.

    தாமதமாக சாப்பிடுவது

    இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதனால் செரிமான அமைப்புக்கு போதிய நேரம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இரவு உணவை அதிகமாக சாப்பிடுவதும் செரிமானம் தாமதமாக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். இரவில் அதிக உணவு உட்கொள்வது கல்லீரலுக்கும் சுமையை உண்டாக்கும். வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இறுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

    அதிகமாக சாப்பிடுவது

    உணவை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டதாக உணர்ந்தாலும் தட்டில் இருக்கும் உணவை வீணாக்காமல் உட்கொள்ளும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது அதிகமாக உணவு உட்கொள்வதற்கு காரணமாகிவிடுகிறது. ஆரம்பத்திலேயே குறைவாக உணவை தட்டில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

    அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உணவை பரிமாறிக்கொள்ளலாம். அதனால் உணவு வீணாகாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் ஏற்படாது. பசி நீங்கிய பிறகும் அதிகமாக சாப்பிடுவது உடல் பருமன், கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

    பசியின்றி உண்பது

    உடலின் சமிக்ஞைகளை கவனிக்காமல் சாப்பிடும் பழக்கத்தை நிறைய பேர் கொண்டிருக்கிறார்கள். பசி எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஸ்நாக்ஸ், ஜூஸ், பலகாரம் சாப்பிடுவார்கள். உணவும் அப்படித்தான். ஏற்கனவே வயிறு நிரம்பி இருந்து பசி எடுக்காவிட்டாலும் சாப்பிடும் வழக்கத்தை சிலர் கொண்டிருப்பார்கள்.

    இரண்டு மூன்று மணி நேரத்திற்கு இடையே பசி எடுக்காவிட்டாலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படி சாப்பிடுவது இன்சுலின் உணர்திறனை குறைத்துவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். குடல் வீக்கத்தை அதிகரிக்கும். இறுதியில் நீரிழிவு நோய்க்கு வழிவகுத்துவிடும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோயால் ஏறக்குறைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன.
    • கீழ்க்கண்ட பாதிப்புகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோயால் ஏறக்குறைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன. கீழ்க்கண்ட பாதிப்புகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது:

    இதய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு, இதய தசை நோய் (Cardiomyopathy), உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மன ஆரோக்கிய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினால் கோபம், எரிச்சல், வெறுப்பு, சலிப்பு போன்றவை ஏற்படலாம்.

    கண் பாதிப்பு: கண் விழித்திரை பாதிப்பு, கண் அழுத்த நோய் (Glaucoma), கண் புரை போன்ற கண் பார்வை குறைபாடு பிரச்சினைகள் வரலாம்.

    சிறுநீரக பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரக செல்கள் பாதிப்படைவதால் சிறுநீரகங்கள் வீக்கம் அடைகின்றன. ரத்தம் வடிகட்டும் செயல்பாடு குறைவதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.

    நரம்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்படைந்து டிமென்ஷியா, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    சரும பிரச்சினைகள்: நீரிழிவு நோயாளிகள் சருமத்தில் கருமையாதல், சருமத்தில் தடிப்பு உருவாகுதல் (அகான்த்தோஸிஸ் நைக்ரிகன்ஸ்), தோல் தொற்று, கொப்பளங்கள், தோல் வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படலாம்.

    நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து தொற்றுகள் ஏற்பட வழி வகுக்கிறது.

    நீரிழிவு மாத்திரைகளை சரியான நேரத்திலும் அளவிலும் உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு இந்த பாதிப்புகள் பெருமளவு குறையும்.

    • கால்களில் அதிகப்படியான திரவ சேகரிப்பால் கால்களில் வீக்கம் (எடிமா) ஏற்படுகிறது.
    • நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்.

    உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், சுரக்கும் இன்சுலினை உபயோகிக்காமல் இருப்பதும் தான் என்பது நீரிழிவு நோய். இன்சுலின், நமது உடலில் உள்ள குளுகோஸை ஆற்றலாக மாற்ற உதவும். அது நடக்க தவறும் போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும்.

    கால்களில் அதிகப்படியான திரவ சேகரிப்பால் கால்களில் வீக்கம் (எடிமா) ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் பலருக்கு பெரிபிரல் வாஸ்குலர் நோய் இருப்பதால் ரத்த ஓட்டம் குறைந்து கால் வீக்கத்தை உண்டாக்கலாம். கூடுதலாக வேறு நோய்கள் இருக்கும்போது கால் வீக்கம் ஏற்படலாம். குறிப்பாக இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, தைராய்டு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், உட்கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் ஆகியவற்றால் கால் வீக்கம் ஏற்படலாம்.

    நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பவர்கள், வயதான பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பொதுவாக கால் வீக்கம் காரணமின்றி ஏற்படலாம்.

    நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:

    பாதங்களை இதயத்தின் மட்டத்தை விட அதிகமான அளவில் உயர்த்தி வைத்திருத்தல். இதனால் ரத்தக்குழாயின் (வெயின்ஸ்) அழுத்தம் குறைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

    உடற்பயிற்சி செய்தல்: இது ரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் (லிம்ப்) ஓட்டத்தையும் அதிகரிக்க செய்து வீக்கத்தை குறைக்கிறது.

    அதிக உடல் எடை இருந்தால் அதை குறைக்க வேண்டும்.

    உணவில் உப்பின் அளவை ஒரு நாளைக்கு 2000 மில்லி கிராமுக்கு குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மெக்னீசியம் அளவை பரிசோதனை செய்யுங்கள். ஏனெனில் சில சமயம் மெக்னீசியம் குறைபாட்டால் கால் வீக்கம் ஏற்படலாம்.

    வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளின் காரணமாக இது இருந்தால் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து மருந்துகளை மாற்றிக்கொள்ளலாம்.

    இவை தவிர இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றால் வீக்கம் ஏற்படும் போது அதற்குரிய மருத்துவ நிபுணரிடம் காண்பித்து அவர்களின் பரிந்துரைப்படி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

    இம்முயற்சிகள் அனைத்தும் பயனளிக்காவிடில் உங்கள் மருத்துவர் டையூரிட்டிக் மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது, அது உடலில் உள்ள தேவையற்ற நீரை அகற்றி வீக்கத்தை குறைக்க உதவும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.
    • பக்கவாதம் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் இவற்றை பின்பற்ற வேண்டும்...

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவில் சர்க்கரையின் அளவு இருந்தால் ஏன் பக்கவாதம் ஏற்படுகிறது? அதற்கான சரியான காரணம் என்ன? அதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் பக்கவாத நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாவது கீழ்கண்ட காரணங்களால் என கண்டறியப்பட்டுள்ளது.

    1) நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாத போது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி (இன்பளமேஷன்) ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

    2) பாதிப்படைந்த ரத்த நாளங்களில், தமனிக்குழாய் தடிப்பு (அதிரோஸ்கிலோரிடக் பிளேக்) ஏற்பட்டு ரத்த நாளங்களில் அடைப்பு உருவாகிறது. இது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து பக்கவாதத்தை ஏற்படுத்துகின்றது.

    3) பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதலாக இருதய நோய், அதிக கொலஸ்ட்ரால், சிறுநீரக பாதிப்பு, ரத்த கொதிப்பு, உடல் பருமன் போன்றவையும் இருப்பதால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது.

    பக்கவாதம் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் இவற்றை பின்பற்ற வேண்டும்:

    ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தல், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்தல், புகை பிடித்தல் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிதல், உடல் எடை குறைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், மீன் அல்லது கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளை போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல்.

    • திடீரென்று பார்வை இழந்தால் உடனே உங்கள் டாக்டருடன் தொடர்பு கொள்ளவும்.
    • புகை பிடிக்கக்கூடாது, மதுபானம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

    நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் பராமரிக்க வேண்டியவை.

    பாத பராமரிப்பு

    * தினமும் உங்கள் பாதங்களை பரிசோதியுங்கள்.

    * பாதங்களை தினமும் வெதுவெதுப்பான நீரில் கழுவி மாய்ஸ்ர் ரைசிங் லோஷனைத்தடவுங்கள்.

    * பாதங்களில் உணர்ச்சி குறைவாக இருந்தால் அதிகப்ப டியான சூட்டையும், அதிகப்படியான குளிர்ச்சியையும் தவிர்க்கவும். கால்களில் கச்சிதமாக பொருந்தும் ஷூக்கள், சாண்டல்கள் அணியவும். கட்டி, ஆணி போன்றவர்களுக்கு நிபுணரிடம் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

    * கால் நகங்களை சரியாக வெட்டிக்கொள்ளுங்கள்.

    * காலணி இல்லாமல் நடக்காதீர்கள். நீங்களே அறியாமல் காயம்பட்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

    கவனிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகள்

    * உங்கள் பாதங்கள் அல்லது முன்னங்கால்களில் சிவப்பு, நீலம் அல்லது பழுப்பு புள்ளிகள் பாதத்தில் திடீர் வலி அல்லது கடுமையான வலி.

    * பாதத்தில் காயம் இல்லாத போதும் ஒரு விதமான நாற்றம்.

    * பாதம் அல்லது காலில் வீக்கம்.

    * புண் வெடிப்பு கொப்புளம்.

    கண் பராமரிப்பு

    * திடீரென்று பார்வை இழந்தால் உடனே உங்கள் டாக்டருடன் தொடர்பு கொள்ளவும்.

    * கண் நிபுணரை கலந்தா லோசிக்கவும். செயற்கை கண் மருத்துவரை அல்ல.

    * உங்கள் கண் டாக்டரிடம் உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதையும் கூறவும். கண் சொட்டு மருந்தினால் ஊக்குவிடப்பட்டு கண்மணிப்பாப்பா மீது சோதனை மேற்கொள்ளபட வேண்டும்.

    * கண் பரிசோதிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்கு வாகனம் ஓட்ட வேண்டாம்.

    * முறையாக ஆண்டுதோறும் கண்களைச் சோதித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் கருவுற்றிருந் தால் மற்றும் நீரிழிவு நோயும் இருந்தால் முதல் மூன்று மாத காலத்தில் கண் டாக்டரை கலந்தாலோசிக்கவும்.

    * புகை பிடிக்கக்கூடாது, மதுபானம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

    கவனிக்கவேண்டிய ஆபத்தான அறிகுறிகள்

    * மங்களான பார்வை.

    * கண்ணில் நிழல் போன்ற திரை.

    * இரட்டைப் பார்வை.

    * சிவந்த எரிச்சலுடன் கூடிய கண்கள்.

    * மேகமூட்டப் பார்வை கண்களில் வலியுடன் கூடிய அழுத்தம்.

    * பார்வை களத்தில் மிதக்கும் திட்டுகள்.

    * கண் புரை.

    * விழி அழுத்தமிகைப்பு (க்ளைகோமா)

    * விழித்திரை சிதைவு.

    டாக்டர் பி.செல்வம் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்

    ×