search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரிழிவு"

    • நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:

    பொதுவாக பலரையும் வாட்டக்கூடிய நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய் என்று இதனை கூறலாம். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:

    பூஞ்சை தொற்று: இது விரலின் நுனியில் தொடங்கி பின்னர் மையத்திற்கு பரவுகிறது. பொதுவாக கால் விரல்களை பாதிக்கிறது. குறிப்பாக காலில் ஷூ அல்லது விரல்களை மூடுமாறு அணியும் காலணிகளை அணிபவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெர்மெட்டோபைட் எனும் பூஞ்சையால் ஏற்படும் இந்த தொற்று ஒனைக்கோமைக்கோசிஸ் அல்லது டினியா உன்குயம் என்று அழைக்கப்படுகிறது.

    நகங்களில் ஏற்படும் காயம்: நகத்தின் மேல் காயம் ஏற்பட்டால் நகத்தின் கீழ் உள்ள ரத்த நாளங்களை வெடிக்க செய்து, ரத்தம் அதிகமாக சேர்ந்து நகத்தின் நிறத்தை மாற்றும். பொருந்தாத காலணிகள் அல்லது இறுக்கமான காலணிகளை அணிந்து நடப்பது, ஓடுவது அல்லது வேலை செய்வதால் ஏற்படும் அழுத்தம் அல்லது காயங்களால் நகத்தின் நிறம் மாறலாம்.

    மெலனோமா: சில சமயம் ஓர் அரிய நிகழ்வாக தோலில் ஏற்படக்கூடிய மெலனோமா புற்றுநோய் காரணமாக நகத்தின் நிறம் கருமையாக மாறும்.

    நோய் பாதிப்பு: இதய நோய், சிறுநீரக பாதிப்பு அல்லது ரத்த சோகையினால் கூட நகத்தின் நிறம் கருப்பாக மாறலாம். உங்கள் கால் நகம் கருப்பாக மாறும் போது மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து அது குறித்து தகுந்த பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
    • இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    நீரிழிவு பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி, வேக வைக்காமல், ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்குவதால் கிடைக்கும் அரிசி பச்சரிசி ஆகும். நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஊறிய நெல்லை அரைப்பதத்திற்கு வேகவைத்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் உமியை நீக்குவதால் கிடைக்கும் அரிசி புழுங்கல் அரிசி ஆகும்.

    நெல்லை வேகவைக்கும்போது உமியில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி, ஒரைசினால் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து உள்ளதாக திகழ்கிறது. புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 38 ஆகும், ஆனால் பச்சரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 55 ஆகும்.

    புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் பச்சரிசியை விட குறைவாக இருப்பதாலும், புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி, ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நார்ச்சத்து பச்சரிசியை விட அதிகமாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது.

    புழுங்கல் அரிசி ஊற வைப்பது, வேக வைப்பது, உலர்த்துவது என்ற மூன்று நிலைகளை கடந்து பெறப்படுவதால் ஜீரணத்தை எளிதாக்கி வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. புழுங்கல் அரிசியில் ஆந்தோசையனின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அளவு அதிகமாக உள்ளது.

    இது செல்களில் ஏற்படும் அழற்சியையும், ஃபிரீரேடிகல்கள் பாதிப்பையும் குறைக்கிறது. பச்சரிசியை ஒப்பிட்டு பார்க்கும்போது, புழுங்கல் அரிசியில் அதிகமான அளவு கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ் ஆகியவை இருக்கிறது. இத்தகைய நன்மைகளை பெற்றிருக்கும் புழுங்கல் அரிசி, நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும்.
    • கோழி மற்றும் மீன் இறைச்சி சாப்பிடுவது நல்லது.

    பொதுவாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். சிவப்பு இறைச்சி என்பது பாலூட்டிகளில் இருந்து பெறப்பட்ட இறைச்சியாகும். இதில் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சி அடங்கும். இதை பார்க்கும்போது சிவப்பு நிறமாக இருப்பதால் இதை சிவப்பு இறைச்சி என்று கூறுகின்றனர்.

    கோழி மற்றும் மீன் இறைச்சி சாப்பிடுவது நல்லது. கோழி இறைச்சியில் புரதம் அதிகமாக இருப்பதாலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதாலும் நாம் இதை சாப்பிடலாம். பொறித்த வடிவிலோ, வறுத்த வடிவிலோ சாப்பிடக்கூடாது.

    மீன் இறைச்சியிலும் அதிகமாக புரதங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியத்திற்கு நன்மையான பொருட்கள் உள்ளன. மேலும் வைட்டமின் டி, வைட்டமின் பி 6, பி 12 போன்றவையும் இருக்கிறது. 2018-ம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 48 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆகையால் நீங்கள் சிவப்பு இறைச்சியை குறைவாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறையும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர்.
    • இரண்டுமே பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

    இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர். நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 நீரிழிவு நோய் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய். இவை இரண்டுமே பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான மக்கள் டைப்-1 மற்றும் டைப்-2 இரண்டுமே ஒரே மாதிரியானவை என்று நினைத்து குழப்பமடைகிறார்கள். இருப்பினும், இந்த இரண்டிற்கும் இடையே பல வித்தியாசம் உள்ளது. இரண்டுமே நாள்பட்ட நோய்கள் மற்றும் நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கும். ஆனால் இதற்கான காரணங்கள் மற்றும் அவை உடலை பாதிக்கும் விதம் என ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபடுகின்றன.

    முதலாவது தோன்றும் நீரிழிவு நோயை டைப்-1 என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தோன்றுவதால், இது சிறார் நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்து விடுவதால் இவர்களுக்கு இன்சுலின் மூலம் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் 10 சதவிகிதம் பேர் டைப் -1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வயது வந்தவர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் பெரும்பாலும் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது டைப்-1 யை காட்டிலும் சற்று வயது அதிகமானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை நாம் டைப்-2 நீரிழிவு நோய் என்று சொல்கிறோம். இது இன்சுலின் போதுமான அளவு சுரக்காததாலும் இன்சுலின் செயலாற்ற எதிர்வினை நிலை இருப்பதாலும் இது ஏற்படுகின்றது. மொத்த நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டைப்-1 நீரிழிவு நோயை விட டைப்-2 நீரிழிவு நோய் மிகவும் பொதுவானது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • இளைஞர்களும் குழந்தைகளும் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
    • டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது.

    ஒரு காலத்தில் நீரிழிவு நோய் என்பது மிகவும் அரிதானது என்பதால் நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அது ஒரு பெரிய விஷயமாக கருதப்பட்டது. இன்றோ, நீரிழிவு நோயால் பாதிக்கப்படாத குடும்பத்தைக் காண்பது அரிது.

    அதிகமான இளைஞர்களும் குழந்தைகளும் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கை உயர்வுக்கு பல ஆபத்து காரணிகள் உள்ளன அவை சுறுசுறுப்பு குறைந்த வாழ்க்கை முறை, அதிக பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவை ஆகும்.

    இளம் வயதினருக்கு நீரிழிவு நோயால் பாதிப்படைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது:

    1) உடல் எடை அதிகமாக இருத்தல். குறிப்பாக வயிற்றின் சுற்றளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருத்தல்,

    2) உடல் பருமனால் இன்சுலின் எதிர்மறை நிலை,

    3) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் நீரிழிவு நோய் பாதித்திருத்தல்.

    இளம் வயதில் அதிக பசி எடுப்பது பொதுவானது, ஆனால் அதிக பசி எடுப்பது நீரிழிவு நோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம், அப்படியாமால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

    முக்கிய அறிகுறிகள்: பாலியூரியா (அடிக்கடி சிறுநீர் கழித்தல்), பாலிடிப்ஸியா (அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்), பாலிபேஜியா (அடிக்கடி பசி எடுத்தல்), உடல் சோர்வு, மங்கலான பார்வை, காரணம் இல்லாமல் திடீர் எடை இழப்பு, கழுத்து மற்றும் இடுப்பில் தோல் கருமை நிறமாக மாறுதல், அடிக்கடி தொற்று ஏற்படுதல் மற்றும் பாதங்களில் எரிச்சல், மதமதப்பு அல்லது உணர்ச்சியின்மை.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • நல்ல உணவு உண்ணாமல் வாழ்வதில் அர்த்தமில்லை.
    • வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே நீரிழிவு நோய் பாதிக்கும் என்பது தவறான எண்ணம்.

    நீரிழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அவரது வாழ்க்கை முறை மிகவும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயை வேரிலிருந்தே ஒழிப்பதற்கான வழியை விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு தொடர்பான பிற நோய்களின் அபாயத்தை நாம் குறைக்கலாம்.

    நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் ஆகும்.

    நீரிழிவு நோயின் எல்லா நிலையிலும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் உணவுப் பழக்கங்களால் கட்டுப்படுத்த முடியாது.

    பொதுவாக நீரிழிவு நோயில் டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகை இருக்கிறது.

    டைப் 1 நீரிழிவு நோயானது இன்சுலின் சார்ந்த நிலையாகும். இந்நிலையில் கணையத்தில் உள்ள இன்சுலின் உருவாக்கும் செல்கள் முற்றிலும் அழிந்துவிடுவதால் நாம் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் டைப் 1 நீரிழிவு நோய்க்கு உணவு பழக்கங்களின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது.

    டைப் 2 நீரிழிவு நோய் வேண்டுமானால் உணவு பழக்கங்களை மாற்றி, உடல் எடையைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப் படுத்தலாம். ஆனால் டைப் 2 பாதித்த ஆரம்பக்கட்டத்தில் இது சாத்தியம். மேலும் பல ஆண்டுகளாக டைப் 2 நீரிழிவு பாதிப்பு நீடித்ததால் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்கள் மெதுவாக அழியத் தொடங்கும். இந்நிலையில் உணவு பழக்க வழக்கங்களால் மட்டுமே கட்டுப்படுத்துவது சிரமமாகும். மாத்திரைகளின் உதவி கண்டிப்பாக தேவைப்படும். மாத்திரைகளின் தேவைகளை தீர்மானிப்பது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்களின் எண்ணிக்கை, அதன் செயல்பாடு மற்றும் திசுக்களில் உள்ள இன்சுலின் எதிர்மறை நிலையின் அளவாகும்.

    நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது,

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
    • சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளான கோதுமை, சிறுதானியங்கள், ஓட்ஸ், பிரவுன் ரைஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

    மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளான பீன்ஸ், அவரை, புரொக்கோலி (பச்சை பூக்கோஸ்), பாகற்காய் போன்ற காய்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தரைக்கு அடியில் விளையும் கிழங்குகளை குறைத்துக் கொள்ளவேண்டும். புரதம் அதிகமாக உள்ள பால், முட்டையின் வெள்ளைக் கரு, கோழிக்கறி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டக்ஸ்) குறைவாக உள்ள பழங்களை உண்ணலாம்.

    பட்டை தீட்டிய அல்லது பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினால் நல்லது. ஏனென்றால் கைக்குத்தல் அரிசியின் சர்க்கரை உயர்தல் குறியீடு குறைவு.

    நீரிழிவு நோயாளிகள் கிழங்கு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், கிழங்கு வகைகளை அறவே தவிர்க்கத் தேவையில்லை. சர்க்கரை வள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு போன்றவற்றைச் சிறிதளவில் வாரம் ஒரு முறை அல்லது ஒரு வேளை சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாகக் கிழங்கு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்காமல் இருப்பதே நல்லது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம்.
    • ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது.

    நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்படும். இதோ மருத்துவர் என்ன சொல்கிறார்கள் என இங்கு அறிந்துக் கொள்வோம்.

    இளநீரில் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவு கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

    இளநீரை எல்லோரும் 'நேட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிவரேஜ்' என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இதில் அதிகமான அளவு சோடியம், பொட்டாசியம், சிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து இருக்கிறது. இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம். ஒரு டம்ளர் இளநீர் நமக்கு 45 கலோரிகள் கொடுக்கிறது. பாட்டிலில் அல்லது டின்களில் வரும் குளிர்பானங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது. ஆனால் பாட்டில் குளிர்பானங்களில் ஒரு டம்ளரில் 30 கிராம் சர்க்கரை இருக்கிறது.

    இதில் நார்ச்சத்து இல்லாதது ஒரு சிறிய குறையாக கருதப்படுகிறது. இளநீரில் உள்ள எல்-ஆர்ஜினின், வைட்டமின்-சி, இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்துகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இளநீரில் உள்ள லாரிக் ஆசிட் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. இளநீரை காலையில் குடிப்பது உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும்.

    இளநீரில் நிறைய நன்மைகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை, அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் இளநீர் பருகலாம். அதற்கு மேல் குடித்தால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்களுக்கு இளநீர் குடிக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம். ஆனாலும் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின் படி, சரியான அளவு இளநீரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நமது உடல் கடிகாரம் தினசரி தாளத்திற்கு ஏற்ப செயல்படுகிறது.
    • இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

    நீரிழிவு நோயால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக சிறுநீரகம், இதயம் போன்ற அத்தியாவசிய உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பல பிரச்சினைகள் தொடங்குகின்றன.

    சீனாவின் ஷாங்காயில் உள்ள ஜியாடாங் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வில் இரவில் செயற்கை வெளிப்புற ஒளிக்கும், நீரிழிவு நோய் அபாயத்திற்கும் இடையேயான உறவை அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். செயற்கையாக வானத்தை பிரகாசமாக்கும் லைட்டுகள் சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டு உள்ளதாம்..

    விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் நியான் அல்லது எல்.இ.டி. ஒளியால், குளுக்கோசின் வளர்சிதை மாற்றம் குறைவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அலுவலகம், மால் போன்ற இடங்களில் சற்று கூடுதலாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகமாக இருக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    அதாவது உடலானது, எல்.இ.டி. விளக்குகளால் இரவு, பகலுக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் பகலில் சுரக்கும் கார்டிசோல் இரவிலும் சுரக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.

    உண்மையில், நமது உடல் கடிகாரம் தினசரி தாளத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. அதன்படி, இருட்டாக இருக்கும்போது, மெலடோனின் உற்பத்தி அதிகரிக்கிறது, இதன் காரணமாக நமக்கு தூக்கம் வரும். காலையில், ஒளியுடன், சுரப்பியின் செயல்பாடு நம்மை எழுப்புகிறது. ஆனால் இரவில் நாம் பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும்போது, மெலடோனின் ஹார்மோன் அடக்கப்பட்டு, அதிக சர்க்கரை உருவாவதை ஊக்குவிப்பதாகவும் அந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு.
    • உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக இருக்குமாம். பெருமாலான நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு. நீரிழிவு நோயினால் ஏற்படும் முடி உதிர்தலுக்கு சீரான இரத்த ஓட்டம் இல்லாததே என்று சொல்லலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்க காரணம், நீரிழிவு நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களை அடைய முடிவதில்லை. இதனால் உச்சந்தலை நுண்ணறைகள் பலவீனமடைந்து முடி உதிர்தல் ஏற்படுகிறது.

    நாள்பட்ட சர்க்கரை நோய் ஆக்ஸீஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை குறைக்கலாம். இதன் விளைவாக வாஸ்குலர் குறைபாடு இது முடி உதிர்தல், கூந்தல் உடைவு, முடி உதிர்தல் உண்டாக்கும்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, பாலிகுலைட்டிஸ் எனப்படும் பாக்டீரியா தோல்தொற்று ஏற்பட்டு முடி உதிர்வை ஊக்குவிக்கிறது. முடி உதிர்தல் தலையில் மட்டுமின்றி கை, கால்கள் மற்றும் உடம்பின் வேறு பகுதிகளிலும் ஏற்படலாம்.

    நீரிழிவு நோய் உடலில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும், முடியின் வேர்களை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

    மோசமான இரத்த ஓட்டம் முடி உதிர்தலுக்கு பங்களித்தால், நீரிழிவு நோயை நிர்வகித்தல் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி மீண்டும் வளரவும் உதவும்.

    மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினாலும் கூடுதலாக தைராய்டு நோய் இருக்கும் நிலையிலும் முடி உதிரும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு செல்கள் மயிர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தி அலோபீசியா ஏரியேட்டா (திட்டு திட்டாக முடி விழுதல்) என்ற நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

    நீரிழிவு நோயாளிகள் முடி உதிர்தலுக்கு சிகிச்சை

    உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவு அளவாக இருந்தால் மயிர்க்கால்கள் மற்றும் முடியின் முனைகளில் ஆக்ஸிஜன் விநியோகம் தடையில்லாமல் பெற முடிகிறது.

    உணவு முறையில் சர்க்கரை அளவை குறைத்து மெலிந்த புரதங்களை சேர்க்க வேண்டும். இது முடியின் வலிமையை மேம்படுத்தவும், உச்சந்தலையை வலுவாக வைக்கவும் உதவும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோய் இருப்பவர்கள் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் அதிகமாக மெலிவது கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படலாம்

    இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்ட பலருக்கும், 40 வயதுக்கு கீழே உள்ளவர்களில் சிலருக்கும் பொதுவான நோயாக நீரிழிவு பிரச்சினை இருக்கிறது.

    ரத்த சர்க்கரை குறித்து அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும், அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் அவசியமானது. அதே சமயம், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்கடங்காத வகையில் செல்லும்போது உடல் உள் உறுப்புகளை அது கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கத் தொடங்கும். இந்த பாதிப்புகளை நீங்கள் மீண்டும் சரி செய்ய இயலாது.

    நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மாவுச்சத்தில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. மனிதனின் உடலில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுக்கோசை செல்களுக்கு உள்ளே எடுத்துச் சென்று நமக்கு சக்தியைக் கொடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் குறைவாக சுரப்பதால் இந்த குளுக்கோசால் செல்களுக்கு செல்ல முடிவதில்லை அதனால் தசை மற்றும் கொழுப்பில் உள்ள குளுக்கோஸ் பயன்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் மெலிகிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் அதிகமாக மெலிவது கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படலாம்:

    1) ரத்தத்தில் அதிகமான சர்க்கரை அளவு.

    2) நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் மெட்பார்மின் போன்ற மாத்திரைகளால் உடல் மெலியலாம்,

    3) ஹைபர் தைராய்டிசம் அல்லது புற்றுநோய் அல்லது செலியாக் நோய் போன்று வேறு சில நோய்களின் பாதிப்பாக இருக்கலாம்.

    ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயபடிக் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
    • கர்ப்ப காலத்தின் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை அவசியம்.

    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

    *Gestational Diabetes Mellitus (GDM)

    குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

    *Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

    ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

    கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.

    இதற்கு முக்கியமான காரணிகள்...

    * குடும்பப் பின்னணியில் நீரிழிவு

    * 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்

    * திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை

    * சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்

    * பருமன், அதிக எடை

    * முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்

    * நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை

    * அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு

    * பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்

    * முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.

    இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...

    கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

    இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

    பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்

    *கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    *நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    *குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    *சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    *எடை கூடுதல்

    *உயர் ரத்த அழுத்தம்

    *கரு கலைதல்

    *மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    *டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    *வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    *ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    *நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்

    *கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    *கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்

    *பிறப்புநிலைக் கோளாறுகள்

    *பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    *மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    *மஞ்சள் காமாலை

    *ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    *பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    *குறைப் பிரசவம்

    *Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    *மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

    கட்டுப்படுத்துவது எப்படி?

    மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

    ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.

    தயக்கம் வேண்டாம்!

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக

    அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்

    விளக்கப்படும்.

    *வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

    ×