search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tender coconut"

    • இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம்.
    • ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது.

    நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்படும். இதோ மருத்துவர் என்ன சொல்கிறார்கள் என இங்கு அறிந்துக் கொள்வோம்.

    இளநீரில் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவு கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

    இளநீரை எல்லோரும் 'நேட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிவரேஜ்' என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இதில் அதிகமான அளவு சோடியம், பொட்டாசியம், சிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து இருக்கிறது. இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம். ஒரு டம்ளர் இளநீர் நமக்கு 45 கலோரிகள் கொடுக்கிறது. பாட்டிலில் அல்லது டின்களில் வரும் குளிர்பானங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது. ஆனால் பாட்டில் குளிர்பானங்களில் ஒரு டம்ளரில் 30 கிராம் சர்க்கரை இருக்கிறது.

    இதில் நார்ச்சத்து இல்லாதது ஒரு சிறிய குறையாக கருதப்படுகிறது. இளநீரில் உள்ள எல்-ஆர்ஜினின், வைட்டமின்-சி, இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்துகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இளநீரில் உள்ள லாரிக் ஆசிட் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. இளநீரை காலையில் குடிப்பது உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும்.

    இளநீரில் நிறைய நன்மைகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை, அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் இளநீர் பருகலாம். அதற்கு மேல் குடித்தால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்களுக்கு இளநீர் குடிக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம். ஆனாலும் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின் படி, சரியான அளவு இளநீரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இளநீர் ரூ.15 முதல் 17 வரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது. இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர் ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். இதில் சோடியம்,பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்டவை அடங்கி உள்ளது. இளநீர் குடிப்பதால் உடல் சூடு கட்டுப்படுவதுடன், மலச்சிக்கல், சிறுநீர் எரிச்சல், வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாவதுடன், முகப்பருக்கள் கட்டுப்பட்டு சரும பாதிப்பும் சீராகும்.மேலும் ரத்தத்தை சுத்திகரித்து ரத்த கொதிப்பை குறைத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடையவும் உதவுகிறது.இதில் உள்ள லாரிக் அமிலம் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது.

    இவ்வளவு சத்துக்கள் சிறப்புகள் வாய்ந்த இளநீரை எப்பொழுது வேண்டுமானலும் குடிக்கலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ள தென்னை சாகுபடியில் தற்போதைய சூழலில் பெரியளவில் வருமானம் கிடைப்பதில்லை.தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடவே இளநீர் ஒன்றை ரூ 15 முதல் 17 வரை இடம் குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டிக் கொள்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலைத்து நின்று வருமானத்தை அளிக்கக்கூடிய தென்னை சாகுபடியை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றோம். தேங்காய் மற்றும் இளநீரை பறித்து விற்பனை செய்வதில் ஏற்பட்டுள்ள கூலி உயர்வு, இடுபொருட்கள் ,பராமரிப்பு செலவு அதிகரிப்பு, விலை குறைவு போன்ற காரணங்களால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றோம். இந்த சூழலில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய கோடைகால பானமான இளநீரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.ஆனால் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கும் இரண்டு மடங்கு விலைக்கு விட்டு விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் வியர்வை சிந்தி உழைப்பை கொட்டி இரவு பகல் பாராமல் பாடுபட்டு பொருளை விளைவித்த எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை.

    எனவே அரசு விவசாயிகளிடம் நேரடியாக இளநீரை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். லாபத்தை விவசாயியும் அரசும் பங்கிட்டு கொள்ளலாம். இதன் மூலமாக விவசாயியும் பயன் அடைவதுடன் வேலையில்லா தொழிலாளர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தனர்.

    • இளநீர் தேவைக்காக வீரிய ஒட்டு ரக தென்னைமரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
    • மழையின் காரணமாக இந்த வாரம் இளநீர் விலை ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் இளநீர் தேவைக்காக வீரிய ஒட்டு ரக தென்னைமரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இதில் உற்பத்தியாகும் இளநீர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்நிலையில் மழை காரணமாக இளநீர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து இளநீர் உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், நாடு முழுவதிலும் பல இடங்களில் மழை பெய்கிறது. அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் மட்டுமே இளநீருக்கான தேவை குறைந்துள்ளது. மழையின் காரணமாக இந்த வாரம் இளநீர் விலை ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 28 ரூபாயாகவும்,எடைக்கு ஒரு டன் இளநீர் 10,250 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. தினமும் இளநீரை குடித்து வந்தால், உடலில் எந்த நோயும் வராது.
    தமிழர்களாகிய நாம் வெப்ப மண்டல பகுதியில் வாழ்கிறோம். நம் வாழ்வியலில் இயல்பாகவே மோர், இளநீர், நீராகாரம், எலுமிச்சை சாறு முதலான பானங்களையும், பழச்சாறுகளையும் பருகி வருவது வழக்கமாகும். பின்னர் தேயிலை, காபி என வெப்ப பானங்களுக்கு பழக்கப்பட்டு தற்போது இவையும் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாகி விட்டது.

    நமக்கு என்று, நம் பாரம்பரிய மரபு வழி மாற்றுப்பானங்கள் நம் முன்னோர் வைத்துள்ளனர். ஆம்.. இளநீர், மோர், எலுமிச்சை சாறு இன்னும் அதிகமாக நம் பாரம்பரிய குளிர்பானங்கள் உள்ளன. இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் சர்வசாதாரணமாக கிடைக்கும் இளநீர், தற்போது நகர்புறங்களில் கிடைக்கிறது. கலப்படம் செய்ய முடியாத ஒரு குளிர்பானம் என்றால் அது இளநீர் தான். இயற்கை கொடுத்த அற்புத சீதனம் இளநீர்.

    இளநீரைப் பொருத்தவரையில், பகல் நேரத்திலும் குடிக்கலாம், இரவு நேரத்திலும் குடிக்கலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்சினையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடல் சூடு தணிக்கப்படுகிறது. இனிமையான இரவு தூக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், இதய துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

    தினமும் இளநீரை குடித்து வந்தால், உடலில் எந்த நோயும் வராது. உடல் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் மேலை நாட்டு மோகம் நம்மை ஆட்டிப்படைக்கிறது. வெளிநாட்டு குளிர்பான பாட்டில்களை நான்கு பேருக்கு மத்தியில் திறந்து குடிப்பதையும், குளிர்பான பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பதையும் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் பாரம்பரிய குளிர்பானங்களை விற்பனை செய்யும் நன்னாரி சர்பத் விற்பனையாளர், இளநீர் விற்பனையாளர்களை இளக்காரமாக நினைக்கிறோம்.

    இளநீர் குடிப்பதை இன்றைய தலைமுறையினர் விரும்புவது இல்லை, இளநீர் விற்பவர்களை குறைத்து மதிப்பீடு செய்யும்போக்கு சமுதாயத்தில் புரையோடி போய் உள்ளது. இயற்கை கொடுத்த அற்புத இளநீர் என்னும் பானத்தை நமக்காக விற்பனை செய்பவர்கள் செல்வந்தர்கள் அல்ல.. குபேரபுரியில் உள்ள மாட மாளிகையில் வாழ்பவர்களும் அல்ல.

    அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மரபு சார்ந்த இளநீரை விற்பனை செய்யும் அவர்களுக்கு நாம் கைகொடுத்து உதவ வேண்டாமா? 
    ×