search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்"

    தவுட்டுப்பாளையம் பகுதியில் நாய் தொல்லை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அதிக அளவில் நாய்கள் தெருக்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான நாய்கள் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கருக்கள் காவிரி பகுதி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கும்பலாக சுற்றி திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும், ஆற்றுக்கு குளிக்க வருபவர்களையும் நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்துவதும், கடிப்பதுமாக உள்ளதால் தெருநாய்களை பிடித்து நாய்கள் காப்பகத்தில் ஒப்படைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அரியலூரில் சுற்றி திரியும் வெறிநாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் சிக்கி தவிக்கின்றனர்
    • நாய்களை பிடித்து செல்ல கோரிக்கை எழுந்துள்ளது

    அரியலூர், 

    அரியலூர் நகரில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது.  இந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதுடன், உணவு பொருட்களை கையில் எடுத்து செல்லும் பொதுமக்களை விரட்டவும் செய்கின்றனர். குழந்தைகளுடன் செல்பவர்கள், பெரும் அச்சத்துடன் நாய்களை கடந்து செல்கின்றனர். எனவே நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது

    நாகர்கோவில், நவ.6-

    வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, பறக்கை, கோட்டாறு, ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் அதிக அளவில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

    தற்போது தெருநாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் உணவு கிடைக்காத வேளைகளில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தூரத்தி செல்கிறது. அப்போது சிலர் சாலைகளில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். சிலரை தெரு நாய்கள் கடித்தும் உள்ளது.

    இது ஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முடிகள் உதிர்ந்த நிலையில் நோய் வாய்பட்டும், காயங்களுடனும் காணப்படுகிறது. இவ்வாறு நோய்கள் பாதித்த நாய்கள் பொதுமக்கள் அருகில் வரும்போது அவர்கள் கூடுதல் அச்சம் அடைகின்றனர்.

    தெருநாய்களின் தொல்லை அதிகம் உள்ள பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த சாலையை விட்டு விட்டு தெருநாய்கள் தொல்லை இல்லாத சாலை வழியாக சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது.
    • பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியின்றி அரசயில்கட்சியினரால் பேனர்கள் வைக்கப்படுகிறது.

    முக்கிய சிக்னல் சந்திப்புகளில் வைக்கப்படும் பேனர்களால் உயிர் பலி ஏற்படுகிறது. இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.

    அதில், எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து வந்து அந்த பேனரை அகற்றினர்.

    மேலும் பேனர் வைத்த அமைப்பின் நிறுவனர் அசோக்ராஜ் உட்பட நிர்வாகிகளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபோல் பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து அசோக்ராஜ் கூறுகையில், ஆதரவற்ற, தெருவோர செல்ல பிராணிகளை மீட்டு வளர்த்து வருகிறோம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களை காப்பாற்றியுள்ளோம். நோணாங்குப்பத்தில் 4 ஆண்டுக்கு முன் மிக மோசமான நிலையில் மீட்டெடுக்கப்பட்ட நாய்க்கு பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தோம்.

    கலெக்டர், புதுவையில் பேனர் வைக்க தடையில்லை என கூறியுள்ளதால் ராஜீவ்காந்தி சிக்னலில் யாருக்கும் பாதிப்பின்றி பேனர் வைத்தோம். ஆனால் நாய்க்கு பேனர் வைக்கக் கூடாது என போலீசார் அகற்றிவிட்டனர் என்றார்.

    ராஜீவ்காந்தி சிக்னலில் பெரியளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல.
    • கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன.

    பெங்களூரு:

    பெங்களூரு பொம்மனஹள்ளி அருகே கூட்லு கேட் பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுகிறது.

    இந்த நிலையில் கூட்லு கேட் பகுதியில் இருந்து நகர பகுதியான ஓசூர் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி அங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் ஒரு வீட்டின் அருகே சாலையில் சிறுத்தை ஒன்று தென்படுகிறது.

    அப்போது அந்த சாலையில் உள்ள தெருநாய்கள் விரட்டியதும் சிறுத்தை அங்கிருந்து தப்பி விடுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கூட்லு கேட் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட், சிங்கசந்திரா, குட்லு கேட் ஆகிய பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் குழு தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அது பெரிய பூனையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. நேற்றிரவு ஒரு குழுவை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அங்கு அனுப்பியிருந்தோம். பின்னர் மேலும் ஒரு குழு அங்கு குவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

    இதனிடையே பரப்பன அக்ரஹாரா போலீசாரும் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன. 

      வெள்ளகோவில்:

      வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், கச்சேரிவலசு, இந்திரா நகர், அய்யனூர், குமாரவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அப்குதிகளில் இதுவரை நாய்கள் கடித்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இந்நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் தங்கவேல் (வயது 37) என்பவர் ஆடுகளை வளர்த்து ஜீவனம் செய்து வருகிறார். சம்பவத்தன்று தங்கவேல், வழக்கம் போல் தனது ஆடுகளை மேய்த்து பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அடுத்த நாள் காலையில் பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஆடுகளின் நிலைமையை கண்டு தங்கவேல் பதறி போனார். 6 செம்மறி ஆடுகள், 2 வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்தன, இதனால் தங்கவேல் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து தெருநாய்கள், ஆடுகளை கடித்து இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • ‘நூரி’ என்ற வார்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடர்புடையது.
      • ராகுல் காந்தி தனது முகநூல் பக்கம், யூடியூப் பக்கத்தில் நாயின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

      பிரயாக்ராஜ்:

      காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாயார் சோனியாவுக்கு அளித்த நாய்க்கு 'நூரி' என்று பெயர் வைத்ததை எதிர்த்து அவர் மீது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

      'நூரி' என்ற வார்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடர்புடையது, குரானில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது என்று வழக்குத் தொடுத்துள்ள மஜ்லிஸ் கட்சித் தலைவர் முகமது பர்கான் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

      இது தொடர்பாக முகமது பர்கானின் வக்கீல் முகமது அலி கூறுகையில், 'ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்துதல்) பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

      ராகுல் காந்தி தனது முகநூல் பக்கம், யூடியூப் பக்கத்தில் நாயின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், செய்தித்தாள்களிலும் இது தொடர்பான செய்திகள் வந்துள்ளன. அவற்றை ஆதாரமாக காட்டியுள்ளோம்' என்றார்.

      உலக விலங்குகள் தினத்தையொட்டி கடந்த 4-ந்தேதி தனது தாயார் சோனியாவுக்கு 'நூரி' என்று பெயரிடப்பட்ட நாய்க்குட்டியை ராகுல் காந்தி பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

      • தீயணைக்கும் படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை
      • அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

      கன்னியாகுமரி :

      கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாஸ். கூலி தொழிலாளி. இவரது வீட்டு நாய் தெற்கு குண்டல் மெயின் ரோட்டின் அருகில் உள்ள 40 அடி ஆழ பஞ்சாயத்து கிணற்றில் தவறி விழுந்தது. அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

      இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த நாயை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த நாயை தீயணைக்கும் படை வீரர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

      • சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது
      • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர்

      திருச்செங்கோடு:

      நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலறைக்கேட் அருகே பண்ணக்காடு பகுதியில் அதிக ஆழமுள்ள சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது. பின்னர் சாக்கடையில் இருந்து வெளியே வரமுடியாததால் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற கணேஷ் புவன் என்பவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமார், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

      • தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழமுள்ள குழியில் நேற்று நாய் ஒன்று தவறி விழுந்தது.
      • லேசான காயம் அடைந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

      பல்லடம்:

      பல்லடம் பஸ் நிலைய வளாகத்திற்குள் இரு சக்கர வாகன நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழமுள்ள குழியில் நேற்று நாய் ஒன்று தவறி விழுந்தது. குழியில் விழுந்த நாய் வெளியேற முடியாமல் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்துள்ளது.

      நாயின் சத்தம் கேட்டு பஸ் நிலைய நேரக்காப்பாளர் ராஜா அங்கு வந்து குழியில் விழுந்த நாயை பார்த்து விட்டு பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். குழியில் விழுந்ததால் லேசான காயம் அடைந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

      • அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள அரசு மேல்நிலை, பெண்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களை நாய்கள் விரட்டி சென்று அச்சுறுத்தும் அவலம் நிலவகிறது
      • பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன்பாக 50க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

      அரியலூர்,

      அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள அரசு மேல்நிலை, பெண்கள் உயர்நிலை, ஊராட்சி ஒன்றிய (கிழக்கு) தொடக்க பள்ளிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வித்துறையின் அனைத்து அலுவலகங்களும் இந்த வளாகத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த வளாகத்திலும், விளையாட்டு மைதானத்திலும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. Also Read - இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசியதாக வழக்கு:ஈரோடு கோர்ட்டு சீமானுக்கு சம்மன் இதில் ஊராட்சி ஒன்றிய (கிழக்கு) தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் முதல் காலை உணவு 7 மணிக்கு தயார் செய்யப்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 160 மாணவ, மாணவிகள் காலை 8 மணிக்கு வர தொடங்குகின்றனர். மேலும் உணவு வாசத்தை மோப்பம் பிடிக்கும் நாய்கள், பள்ளி வளாகத்தின் முன்பு சுற்றுச்சுற்றி வருகின்றன. பெற்றோர்கள் சிலர் பள்ளியின் வாசல் வரை குழந்தைகளை கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். ஒரு சிலர் மார்க்கெட் தெருவில் உள்ள பள்ளியின் வாசலில் மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

      இதையடுத்து மாணவ, மாணவிகள் தனியாக பள்ளிக்கு சுமார் 50 மீட்ட தூரம் செல்லும்போது, அவர்களை நாய்கள் விரட்டுகின்றன. இதனால் அச்சமடையும் ஓடும் மாணவ, மாணவிகள் கீழே விழும் நிலை உள்ளது. மேலும் அரியலூர் நகரிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. நாய்களை பிடித்து கருத்தடை செய்து வருவதாக நகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இத்தகைய நிலையில் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களையாவது உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும்.

      • ஜெயங்கொண்டத்தில் நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது
      • இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதால் கீழே விழும் அவலம்

      ஜெயங்கொண்டம்,

      அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு குமரன் நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக பள்ளி செல்லும் குழந்தைகளையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடிக்க முயற்சிக்கின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். ேமலும் நாய்கள் துரத்தியதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் முதியவர்கள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

      மேலும் தனியாக செல்வதை தவிர்த்து சிலர் ஒன்று சேர்ந்து கையில் தடியுடன் சென்று வருகின்றனர். இதேபோல் நகரில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றில் சில நாய்கள் கழுத்து, கால், உடல் உள்ளிட்ட இடங்களில் ஆறாத புண்ணுடன் மிகவும் மோசமாக நோய் தொற்று பரவும் அபாயத்தில் அலைந்து திரிகின்றன. எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

      ×