search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்க்கை"

    • துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்று பொருள்.
    • ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.

    உலகுக்கே சக்தியாகத் திகழ்பவள் ஸ்ரீபார்வதி தேவி. சக்தி தெய்வங்களுக்கெல்லாம் தலைவி என்று உமையவளைப் புகழ்கிறது புராணம். மற்ற எல்லாப் பெண் தெய்வங்களும் பார்வதி தேவியின் அம்சம், வடிவம், அவதாரம் என்றே புராணங்கள் விவரிக்கின்றன.

    பார்வதிதேவியின் முக்கியமான வடிவங்களில் துர்காதேவியும் ஒருத்தி என்றும் பார்வதி தேவிக்கு இணையான சக்தியைக் கொண்டவள் என்றும் தேவி மகாத்மியம் விவரிக்கிறது. துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்றும் 'எவராலும் வெல்லமுடியாதவள்' என்றும் பல அர்த்தங்கள் உள்ளன.

    சக்தி மிக்க தேவியரில் துர்கா தேவியும் துர்காதேவி வழிபாடும் மிக மிக உன்னதமானவை. எல்லா நாளிலும் எந்த நேரத்திலும் துர்கையை வணங்கலாம். எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில் துர்கைக்கு சிலை வடிக்கப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம் என்றாலும் ராகுகால வேளையில் துர்கையை வழிபடுவது இன்னும் பலமும் பலனும் தரும்.

    துர்கை உக்கிர தெய்வம்தான். தீமைகளை அழிக்கவும் துர்குணங்களை நாசம் செய்யவும் துர்குணம் கொண்டவர்களை அழித்தொழிக்கவும் பிறப்பெடுத்தவள் துர்கை. அதனால்தான் ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.

    செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் துர்கை விரத வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த நாட்களில் அம்மன் விரத வழிபாடும் அம்பிகை விரத வழிபாடுமே முக்கியத்துவம் கொண்டவைதான் என்றபோதும் விரதம் இருந்து துர்கையை இந்தநாட்களில் அவசியம் வழிபட்டு வந்தால், கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதிகூட இணைந்துவிடுவார்கள் என்பது ஐதீகம்.

    செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை. அதேபோல, வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் என்பது காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. இந்த நேரங்களில், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று துர்காதேவிக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வழிபடலாம். எலுமிச்சையில் தீபமேற்றி நம் பிரார்த்தனைகளைத் தெரிவிக்கலாம். துர்கையின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, நம்முடைய கோரிக்கைகளை அவளிடம் சமர்ப்பிக்கலாம்.

    துர்கை காயத்ரி மந்திரம் :

    ஓம் காத்யாயனய வித்மஹே

    கன்யாகுமரி தீமஹி

    தந்நோ துர்கிப் ப்ரசோதயாத்

    எனும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வரலாம். அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவசியம் சொல்லி, துர்கையை தரிசிக்கலாம்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில், துர்கை சந்நிதிக்கு முன்னே அமர்ந்துகொண்டு, இந்த மந்திரத்தைச் சொல்லி, எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், நம் வாழ்வில் இதுவரை இருந்த துன்பங்கள் அனைத்தும் காணாமல் போகும். தடைகளையெல்லாம் தகர்த்தருளுவாள் தேவி. விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.

    • ஆடி துவங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் துவங்கிவிடும்.
    • ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள்தான் ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாதம் தக்ஷியாயனம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். ஆடி முதல் மார்கழி வரையிலான தியாயனமும், தை முதல் ஆடி வரை உத்ரானமும் ஆகும்.

    ஒன்று மழைக்காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக்காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

    ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது. ஆடி துவங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் துவங்கிவிடும்.

    பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம்தான். அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள்தான் ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது.

    மேலும் ஆடிப்பதினெட்டு அல்லது ஆடிப்பெருக்கு என்றும் நாம் கொண்டாடுகிறோம். அந்த நாளில் முன்பெல்லாம் காவிரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும். அதுவே ஆடிப்பெருக்காக கொண்டாடப்பட்டது.

    இந்த மாதத்தில் கிராமத்தில் காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    இந்த ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் அம்மன் அருள்கிட்டும் என்பது நம்பிக்கை.

    • செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு.
    • முருகப்பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு.

    ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை உள்ள காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி ராகுவாக அவதாரம் செய்தார் என்பர்.

    செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு. ஆடிச்செவ்வாயில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு.

    • துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும்.
    • பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

    பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.

    ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும். ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது (ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பௌர்ணமியில் தேவி 'ஸ்ரீசந்திரிகா' என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும்.

    ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.

    திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஆரஞ்சு நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோசங்கள், பில்லி, சூனியம் தீரும்.

    புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும்.

    வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களிற்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களிற்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

    வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.

    சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும். நவக்கிரக தோசம் நீங்கும். கடன் தீரும். நோயில்லா வாழ்வு கிட்டும்.

    பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோசங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

    விதியென்ற நமது வாழ்க்கை அமைப்பை மதி என்ற சந்திரனின் துணை கொண்டு நாம் மாற்றலாம். அதாவது 'விதியை மதியால் வெல்லாம்'.

    • ஆனி மாதம் ஆண்டாளுக்கும் உரிய அற்புத மாதம்.
    • நடராஜ பெருமானை வணங்குவதற்கு உரிய அருமையான மாதம்.

    ஆனி மாதம் பிறந்துவிட்டது. ஆனி மாதம் என்பது சைவ, வைணவ பாகுபாடுகள் இல்லாமல், எல்லாப் பெண் தெய்வங்களையும் கொண்டாடுகிற அற்புதமான மாதம். பெண் தெய்வங்கள் அனைத்துமே சக்தியின் அம்சம். சக்தி என்பவள் பராசக்தி. அவளே அத்தனை தெய்வங்களுக்கும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் வழங்கக் கூடியவள்.

    அவளை வணங்க வணங்க, நம்மைச் சுற்றியுள்ள துர்தேவதைகள் விலகிவிடுவார்கள். நல்ல சக்திகள் நம்மைச் சூழ்ந்து அரணெனக் காத்தருளும் என்பது ஐதீகம்.

    ஆனி மாதம் ஆண்டாளுக்கும் உரிய அற்புத மாதம். நடராஜ பெருமானை வணங்குவதற்கு உரிய அருமையான மாதம். இந்த மாதத்தில், விரதம் இருந்து நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி, வீட்டில் விளக்கேற்றி பாராயணம் செய்வது சத்விஷயங்களை நமக்குத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    ஆனி மாத செவ்வாய், சாந்தமான தெய்வங்களையும் உக்கிரமான தெய்வங்களையும் விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய நன்னாள். இன்றைய ஆனிச் செவ்வாயில், விரதம் இருந்து துர்கையை வழிபடுவது ரொம்பவே விசேஷம்.

    செவ்வாய்க்கிழமை கிழமையில் விரதம் இருந்து ராகுகால வேளையில், துர்கையை மனதார நினைத்து, எலுமிச்சை தீபம் ஏற்றுவோம். துஷ்ட சக்திகளில் இருந்து விடுபடுவோம். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து அருள்புரிவாள் துர்காதேவி.

    ஆனிச்செவ்வாயில், விரதம் இருந்து துர்காதேவி, பிரத்தியங்கிரா தேவி உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி வழிபடுவோம். வாராஹி, காளிகாம்பாள், முப்பிடாதி, செல்லியம்மன் உள்ளிட்ட கிராம தெய்வங்களை மனதார வேண்டுவோம். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்.

    கிராம தெய்வங்களையும் எல்லை தெய்வங்களையும் வீட்டில் இருந்தபடியே வழிபடுவோம். எலுமிச்சை தீபமேற்றி வேண்டிக்கொள்வோம். இன்னல்கள் அனைத்தும் விலகும்.

    உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான்.சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான். பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள்.

    இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டுதான் 10ம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்காரம் செய்யும்போது கீழேவிழும் அசுரனின் தலையை துர்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துகிறாள்.

    அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழியாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறுஞ்சு கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும்போது காளியம்மனாக உருவெடுத்தாள்.

    இங்கு 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

    1) கருங்காளி, 2) பத்ரகாளி, 3) சந்தியம்மன், 4) அங்காளம்மன், 5) தட்டத்தி அம்மன், 6) பரமேஸ்வரி, 7) வீராகாளி, 8) அறம் வளர்த்த நாயகி அம்மன்

    இதில் வீராகாளியம்மன் மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்துள்ளது.

    இப்படி பல வகையிலும் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் தசரா திருவிழாவை கான மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.

    • கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதி பராசக்தியை ஆவாகணம் செய்து வழிபடுவது வழக்கம்.
    • வீடுகளிலும் பாடசாலைகளிலும் 9 நாட்கள் மட்டுமே இவ்விழா கொண்டாடப்பெறுகின்றது. சில இடங்களில் 10 நாளும் பூஜைகள் செய்வார்கள்.

    தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா

    மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

    அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம நூல்கள் கூறுகின்றன.

    முக்குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகி தமோ குண சஞ்சாரியாநன ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாகவும், ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாகவும், சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியாகவும், மூன்று அம்சமாக எமக்கு தோற்றமளிப்பதுடன் அந்த மூன்று அம்சங்களும் மேலும் பல அம்சங்களாக தோற்றமளிக்கின்றன.

    துர்க்கையின் அம்சங்களாக (நவதுர்க்கை): வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை ஆகியனவும்;

    சரஸ்வதி அம்சங்களாகளாக (அஷ்ட சரஸ்வதி): வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியனவும்;

    இலக்குமியின் அமசங்களாக (அஷ்ட இலட்சுமி): ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி ஆகிய சக்தி அம்சங்களாக எமக்கு தோற்றமளிக்கின்றன.

    நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.

    உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக்கொள்ளுகின்றோம்.

    நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

    ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் திகதி சனிக்கிழமை (இலங்கை) தெற்காசிய நாடுகளிலும்; வெள்ளிக்கிழமை (கனடா) வட-அமெரிக்க நாடுகளிலும் ஆரம்பமாகின்றது.

    முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

    இப் புண்ணியகாலமானது ஒன்பது தினங்களைக் கொண்டது. அதனாலேயே நவராத்திரி என்னும் நாமம் பெற்று விளங்குகின்றது, அந்த ஒன்பது நாட்களிலும் லோகமாதாவாகிய பராசக்தியை (அம்பிகையை) ஒன்பது வடிவங்களில் பூஜிக்கப்பெறுகின்றாள்.

    அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபட்டு. இவ்வுலக வாழ்கை சிறப்பாக அமைய முக்கியமான கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) எம்பவற்றை இறைவியிடம் வேண்டி இந்துக்கள் இப் புனித நவராத்திரி விழாவை விரதம் அனுஷ்டித்து கொண்டாடுகின்றனர். ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளுக்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும்.

    அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டுமாயின். அவற்றை அருளும் நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம், பொருள் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற பணத்தை பாதுகாக்க மன வலிமை வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களிற்கு பயன்படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரசுவதித் தாயை வணங்குகிறோம்.

    இந்நவராத்திரி விழாவின்போது ஆலயங்களிலும், பாடசாலைகளிலும், பணிபுரியும் அலுவகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இல்லங்களிலும் கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதி பராசக்தியை ஆவாகணம் செய்து வழிபடுவது வழக்கம். அத்துடன் கும்பத்தை மையப்படுத்தி கொலுவைத்தும் வழிபடுவார்கள். கொலு வைக்கும் வழக்கம் இந்தியாவில் பிரபலமானது. இவ் வழக்கம் தற்பொழுது இலங்கையிலும் பின்பற்றப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய, முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியாகிய அம்பிகையை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக வெற்றியையும் (வீரத்தையும், தைரியத்தையும் ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாக சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதிதேவியாக கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

    வீடுகளிலும் பாடசாலைகளிலும் 9 நாட்கள் மட்டுமே இவ்விழா கொண்டாடப்பெறுகின்றது. சில இடங்களில் 10 நாளும் பூஜைகள் செய்வார்கள். ஒன்பது நாட்களும் வண்ணக் கோலங்கள் போட வேண்டும். இந்த ஒன்பது நாளும் அம்பாள் ஒன்பது வகையான கோலத்துடன் காட்சியளிக்கிறாள் என்பது ஐதிகம்.

    முதல் தினத்தில் தேவி மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாவது தினத்தில் ஒன்பது வயதுள்ள குமாரிகை என்ற நவாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், மூன்றாவது தினத்தில் பஞ்சதசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், நான்காவது தினத்தில் பதினாறு வயதுள்ள ஸ்திரீயாக ஷோடசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், ஐந்தாவது தினத்தில் சதாக்ஷீ என்ற பெயருடன் மாத்ருகா வர்ணஸ்வரூபிணியாகவும், ஆறாவது தினத்தில் சாகம்பரீ என்ற பெயருடன் ஸ்ரீவித்யாபீஜாக்ஷர ரூபிணியாகவும், ஏழாவது தினத்தில் துர்க்கமாஸ§ரனைக் கொன்ற மஹாதுர்க்கையாகவும், எட்டாவது தினத்தில் மஹிஷாசுரனைக் கொன்ற மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணியாகவும், ஒன்பதாவது தினத்தில் சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்களைக் கொன்று ஜகத்தை காத்த மகாசரஸ்வதியாகவும் அம்பாள் விளங்கி வருகிறாள் என்பது ஐதீகம்.

    கொலுவைத்து ஒன்பது நாள் பூஜை செய்து வீட்டுக்கு வரும் அனைவருக்கும் தாம்பூலம், தட்சணை, நைவேதியப் பொருள் கொடுக்க வேண்டும். ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களான சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களில் பூஜை செய்யலாம். இதுவும் செய்ய முடியாதவர்கள் அஷ்டமி நவமியில் பூஜை செய்து விஜய தசமியில் முடிக்கலாம்.

    ஒன்பதாவது நாள் ஆயுத பூசை என அழைக்கப்பெறும் சிறப்புப் பூசை நிகழ்த்தப்பெறும். கல்விக்கான சரஸ்வதி பூஜையன்று புத்தகங்கள், இசை கருவிகள், தொழில் செய்யும் கருவிகள் எல்லாம் பூஜையில் வைக்க வேண்டும். மறுநாள் விஜய தசமியன்று பூஜை செய்து படிக்கவேண்டும். அவரவர் சங்கீதம் தொழில் குருவைக் கண்டு தொழுது குருதட்சணை கொடுத்து வணங்க வேண்டும்.

    புதிய தொழில் தொடங்க உகந்த நாள் விஜயதசமி நன்னாளாகும். இரவு பால் நிவேதனம் செய்து பொம்மைகளைப் படுக்க வைக்க வேண்டும். மறுநாள் பூஜையிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து அடுத்த வருடத்துக்காக அம்பாளை வரவேற்க தயாராக வேண்டும். அன்றைய தினம் பாடசாலைகளில் பாலகர்களுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பெறும்.

    10வது தினமான திகதி விஜயதசமி ஆலயங்களில் வெற்றித்தினமாக கொண்டாடப்பெறுகின்றது. விஜயதசமி தினம் என்பது அம்பிகை; தவ வலிமையினால் பிரமதேவனிடம் பெற்ற வரத்தினால் அகங்காரம் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரனை "சண்டிகா தேவியாக" (துர்க்கா தேவி, காளிதேவி எனக் கூறுவாரும் உளர்) அவதாரம் எடுத்து சங்காரம் செய்த வெற்றித் திருநாளாக கொண்டாடப்பெறுகின்றது. துன்பத்தை - அசுரர்களை துர்க்கையானவள் வீழ்த்தி வெற்றிபெறும் நாளே விஜயதசமி (விஜயம்-வெற்றி+தசம்- 10) என்று அழைக்கப்படுகிறது.

    வேறு விதமாக கூறுவதாயின் அம்பிகை உயிர்களிடத்தே காணப்படும் அசுரத்தன்மைகளை அழிக்க சண்டிகாதேவியாக, துர்க்காதேவியாக அல்லது காளி தேவியாகத் தோன்றி அவற்றை சங்காரம் செய்கின்றாள் எனலாம். இவ் வெற்றித் திருநாள் சைவ பெருமக்ககளால் அம்பிகை ஆலயங்களில் (தற்போது எல்லா ஆல்யங்களிலும்) "மானம்பூ விழா" அல்லது "வன்னிவாழை வெட்டு" விழாவாக கொண்டாடப் பெற்றுவருகின்றது. வன்னிமரக் கிளைகள் குத்தப் பெற்ற கன்னிவாழையை மகிஷாசுரன் ஆக ஆவாகணம் செய்து அதனை வெட்டி விழுத்துவதன் மூலம் மகிஷாசுரனைச் சங்கரித்தல் நிகழ்வு நடைபெற்று அதன் வெற்றியை வெற்றித் திருநாளாக கொண்டாடுதலே மானம்பு அல்லது கன்னிவாழை வெட்டுவிழாவாகும். பணிப்புலம் முத்துமாரி அம்பிகை, காலையடி ஞான வேலாயுதர் ஆலயம் சென்று அங்கு வன்னிவாழை வெட்டு விழா நடைபெறுகின்றது.

    இலங்கையிலும், தமிழகத்திலும் சரஸ்வதி பூஜை எனவும், இந்தியாவில் வட மாநிலங்களில் துர்கா பூஜை எனவும், கர்நாடகத்தில் தசரா பண்டிகையாகவும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.

    இந்தியாவில் கொல்கத்தா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் சாந்தரூபியாக தவம் மேற்கொண்டு வீற்றிருக்கும் தேவியானவள், 10ஆம் நாளின் (தசரா) விசுவரூபியாக அசுர பலத்துடன் ஆக்ரோஷமாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சி நல்கும் ஆனந்த ரூபியாக காட்சியளிப்பதையே இந்த 10 நாட்கள் விழா குறிக்கிறது.

    வீடுகளில் பெண்கள் கொலுவைத்து தங்களின் விரதத்தைத் தொடங்குகின்றனர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் செய்து, பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வழங்கி இவ் விரதத்தை கொண்டாடுவது வழக்கமாகும்.

    தங்கள் வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைக்க வேண்டியும், கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் நலம் போற்றியும் கொலு வைக்கும் பெண்கள், மற்றவர்களுக்கு தாம்பூலம், பிரசாதங்களை வழங்குகிறார்கள். நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம் என்பதால், ஒருவருகொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருவதே இவ் விரதத்தின் சிறப்பம்சமாகும்.

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.

    ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது சைவமக்களின் நம்பிக்கை.

    • பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கிறாள்.
    • கல்வி, இசை, புகழ்செல்வம்தானியம், வெற்றி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

    நவராத்திரி விரதம் பிறந்த கதைநவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள். மகிஷம் என்றால் எருமை.

    இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் விலக அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம்.இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம்.

    ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.பகலும் இரவும் இல்லாவிட்டால் நாள் என்பது கிடையாது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கிறாள்.

    இரவெல்லாம் விழித்திருந்து உலகை காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர். இதன் பின்னணியில் உள்ள கதை வருமாறு:-

    சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர்.

    அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.

    பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும் மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும் கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மநர வாகனத்தில் வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும் சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள்.

    இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரிஎனப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே.

    பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள் பவள் அவளே. முத்தொழில் புரியும் மும் மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே. தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும். புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும்.

    அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும் போது, முதல் மூன்று நாள்கள் துர்கா பரமேஸ்வரியையும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமியையுஞம், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும் வணங்கவேண்டும். வணங்குவதால் எதையும் பெறலாம். கல்வி, இசை, புகழ்செல்வம்தானியம், வெற்றி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

    ஆதிபராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவே தான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப்பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    இதற்கு காரணம், தேவியால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி,லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மனி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர். எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.

    • மகிஷனை வதம் செய்ததால் “மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள்.
    • சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும்.

    விஜயதசமி கொண்டாடுவது ஏன்:

    பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் "மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

    சக்தியின் நான்கு வடிவங்கள்:

    படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை "ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது "பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும்போது "மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது "காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது "துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.

    அம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்..: முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் "தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு "சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.

    விஜயதசமி மரம்:

    சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.

    முக்குண தேவியர்:

    ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.

    ஒழுக்கத்திருநாள்:

    சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

    எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை "அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

    • நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.

    சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பௌர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

    சாரதா நவராத்திரி

    ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு . சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா. நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு தசராவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.

    கன்னியர்கள் வழிபாடு

    நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி. நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

    கொலுவைத்து கொண்டாட்டம்

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே. ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.

    நவசக்திகளுக்கான வழிபாடு

    புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. துர்க்கை: 1. மகேசுவரி, 2. கௌமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி. நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

    வீரம் தரும் துர்க்கை

    துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. கொற்றவைஎன்றும் காளி என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

    செல்வம் தரும் லட்சுமி

    இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

    சகல வித்தை தரும் சரஸ்வதி

    சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர். சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான், இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. சரஸ்வதி தேவியும் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி என அஷ்ட சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.

    விஜயதசமி

    நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை. வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐயதசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

    • மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
    • செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!

    நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

    துர்க்கா தேவி

    ஓம் துர்க்காயை நம

    ஓம் மகா காள்யை நம

    ஓம் மங்களாயை நம

    ஓம் அம்பிகாயை நம

    ஓம் ஈஸ்வர்யை நம

    ஓம் சிவாயை நம

    ஓம் க்ஷமாயை நம

    ஓம் கௌமார்யை நம

    ஓம் உமாயை நம

    ஓம் மகாகௌர்யை நம

    ஓம் வைஷ்ணவ்யை நம

    ஓம் தயாயை நம

    ஓம் ஸ்கந்த மாத்ரே நம

    ஓம் ஜகன் மாத்ரே நம

    ஓம் மகிஷ மர்தின்யை நம

    ஓம் சிம்ஹ வாஹின்யை நம

    ஓம் மாகேஸ்வர்யை நம

    ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

    லெட்சுமி ஸ்ரீதேவி

    ஓம் மகாலக்ஷ்ம்யை நம

    ஓம் வரலெக்ஷ்ம்யை நம

    ஓம் இந்த்ராயை நம

    ஓம் சந்த்ரவதனாயை நம

    ஓம் சுந்தர்யை நம

    ஓம் சுபாயை நம

    ஓம் ரமாயை நம

    ஓம் ப்ரபாயை நம

    ஓம் பத்மாயை நம

    ஓம் பத்மப்ரியாயை நம

    ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம

    ஓம் சர்வ மங்களாயை நம

    ஓம் பீதாம்பரதாரிண்யை நம

    ஓம் அம்ருதாயை நம

    ஓம் ஹரிண்யை நம

    ஓம் ஹேமமாலின்யை நம

    ஓம் சுபப்ரதாயை நம

    ஓம் நாராயணப் பிரியாயை நம

    சரஸ்வதி தேவி

    ஓம் சரஸ்வத்யை நம

    ஓம் சாவித்ர்யை நம

    ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம

    ஓம் ஸ்வேதா நநாயை நம

    ஓம் ஸ§ரவந்திதாயை நம

    ஓம் வரப்ரதாயை நம

    ஓம் வாக்தேவ்யை நம

    ஓம் விமலாயை நம

    ஓம் வித்யாயை நம

    ஓம் ஹம்ஸ வாகனாயை நம

    ஓம் மகா பலாயை நம

    ஓம் புஸ்தகப்ருதே நம

    ஓம் பாஷா ரூபிண்யை நம

    ஓம் அக்ஷர ரூபிண்யை நம

    ஓம் கலாதராயை நம

    ஓம் சித்ரகந்தாயை நம

    ஓம் பாரத்யை நம

    ஓம் ஞானமுத்ராயை நம

    நவராத்திரி ஸ்லோகம்

    கிராவஹர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ

    ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!

    துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா

    மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

    பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும்,

    லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து

    உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு

    அம்பாள் (துர்க்கை)

    காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

    காசி விசாலாட்சி கருணாம்பிகையே!

    தருணம் இதுவே தயை புரிவாயம்மா!

    பொன் பொருள் எல்லாம்

    வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!

    ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்

    என் அன்னை நீயே அம்மா!

    மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!

    மங்கலத் தாயே நீ வருவாயே!

    என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!

    எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!

    பயிர்களில் உள்ள பசுமையில்

    கண்டேன் பரமேஸ்வரி உனையே!

    சரண் உனை அடைந்தேன்

    சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!

    அரண் எனக் காப்பாய்

    அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!

    லட்சுமி

    செல்வத் திருமகளே! மோகனவல்லியே!

    எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!

    எண் கரங்களில் சங்கு சக்கரம்

    வில்லும் அம்பும் தாமரை

    மின்னும் கரங்களில் நிறைகுடம்

    தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!

    வரத முத்திரை காட்டியே

    பொருள் வழங்கும் அன்னையே!

    சிரத்தினில் மணி மகுடம்

    தாங்கிடும் சிந்தாமணியே!

    பல வரம் வழங்கிடும் ரமாமணியே!

    வரதராஜ சிகாமணியே!

    தாயே! தனலட்சுமியே!

    சகல வளமும் தந்திடுவாய்

    சரஸ்வதி

    கலைவாணி நின் கருணை தேன்மழையே

    விளையாடும் என் நாவில் செந்தமிழே

    அலங்கார தேவதையே வனிதாமணி

    இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

    மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்

    அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்

    ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்

    சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!

    வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்

    வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்

    வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

    நவராத்திரி பாடல்

    மங்கள ரூபிணி மதியளி சூலினி மன்மத பாணியளே

    சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே

    கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

    கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

    தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்

    மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே

    பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

    எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்

    கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்

    பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

    கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே

    சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே

    பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

    கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்

    சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்

    படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

    • படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.
    • உயிர்களின் பாவத்தைப் போக்கி பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர்.

    அசையாப் பொருள் பரம்பொருள் என்றும், அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்ற விழாக்கள் ஒருநாள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருவதுண்டு. ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மகா நவராத்திரி. தைமாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மாக நவராத்திரி. பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வருவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதமும் பங்குனி மாதமும் காலதேவனுடைய கோரைப் பற்கள் என்று புராணங்கள் கூறும். ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ இவ்விரு மாதங்களில் வருகின்ற நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்வார்கள். நவம் என்றால் புதியது என்றும், ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாகும். பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம். புரட்டாசி அமாவாசை நாளுக்குப்பின் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் ஒன்பது வகையில் மலர் வழிபாடு செய்வார்கள். கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.

    துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்தல் பரம்பரையாகச் செயல்பட்டுவரும் பக்தி நிகழ்ச்சியாகும். நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது.

    பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியையும்; சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியையும்; சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வது வழக்கம். மகேஸ்வரி, கவுமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி, பூஜை செய்வது நலமாகும். ஒன்பது நாளும் விரதமிருந்து அன்னையை வழிபடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும். இளம் பெண்கள் கல்வி, இசை போன்றவற்றில் சிறப்படைவார்கள். இல்லத்தில் செல்வம் சேரும்.

    காசியின் கருணைத்தாய்: சக்திபீடங்களில் மணிகர்ணிகா பீடமாகத் திகழ்வது காசி. தட்ச யாகத்தின் போது, கோபமடைந்த சிவன் அம்பாளின் உடலைத் தூக்கி ஆடும் போது, மணிகர்ணிகை என்னும் அம்பிகையின் குண்டலம் விழுந்த தலம் இது. கங்கைக்கு நிகரான நதியும் இல்லை. காசிக்கு நிகரான பதியும்(ஊர்) இல்லை என்பது சொல்வழக்கு. வாழ்வில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் நீராடவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. மோட்சத் தலங்கள் ஏழில் காசியே முதன்மையானது. உயிர்களின் பாவத்தைப் போக்கி பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர்.

    காசியில் மரணம் அடையும் உயிர்களை விசாலாட்சியே தன் மடியில் கிடத்தி முந்தானையால் வீசி விடுவதாகவும், விஸ்வநாதர் அவர்களின் காதில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிப்பதாகவும் ஐதீகம். விசாலாட்சி என்பதற்கு விசாலமான கண்களைக் கொண்டவள் என்பது பொருள். தன் அகன்ற கண்களால் பக்தர்களின் மீது அருள்மழையை விசாலாட்சி பொழிகிறாள். பாசபந்தங்களைப் போக்கி முக்திவாசலைத் திறந்து விடுகிறாள். காசியில் வாரணம், அசி என்னும் ஆறுகள் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடுவதால் வாரணாசி என்ற பெயரும் உண்டு. கிரகங்களில் ஒருவரான புதன், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு கிரகபதவி அடைந்தார். இதனால் இங்கு வழிபட்டவர்களுக்கு கல்வி வளர்ச்சி, ஞானம் கிடைக்கும். இங்கு விமரிசையாக நடக்கும் விழாக்களில் நவராத்திரி முக்கியமானது.

    ×