search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலாறு"

    • சூரியனார்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது.
    • சூரியனுடைய கதிர் சூரியமூர்த்தியின் பாதத்தில் விழுகிறது.

    ஆதி காலத்தில் கும்பகோணம் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தபோது திருமங்கலக்குடி, சூரியனார் கோவில்கள் தோன்றின. முதலில் அருகருகே இரண்டு கோவில்களும் ஒரே அமைப்பாக இருந்தன. இந்த இரண்டு தலங்களையும் இணைத்து ஒரே ஆலயமாகத்தான் மூதாததையர்கள் வழிபட்டு வந்தனர்.

    நாகரிக மாற்றம் காரணமாகவும், மக்கள்தொகை பெருக்கம் காரணமாகவும் இரண்டு ஆலயங்களும் இரண்டு தனித்தனி வழிபாட்டுத் தலங்களாக மாறிவிட்டன. என்றாலும் சூரியனார் கோவில் இதோடு இணைந்த ஆலயம் தான். அந்த ஆலயம் பற்றியும் தெரிந்து கொண்டால்தான் திருமங்கலக்குடி ஆலயத்தின் சிறப்பு தெரிய வரும்.

    இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் சூரிய வழிபாடு இருந்ததை தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் குறிப்பிட்டுள்ளன. சூரியனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்ட சமயம் சவுரம் என்று அழைக்கப்படுகிறது. கணித வகையில் சூரியனைத் தலைமையாக வைத்துக் கணிக்கும் முறைக்குச் சூரிய சித்தாந்தம் என்ற பெயரும், அவ்வகை அளவுக்குச் சவுரமானம் என்ற பெயரும் வழங்குகின்றன.

    ரிக்வேதம் மூன்று வித அக்கினிகளில் ஒருவனாகக் கதிரவனை வருணிக்கிறது. சூரியனுடைய சஞ்சாரம் உத்தராணயம் (வடக்கு நோக்கிச் செல்லுதல்), தட்சணாயணம் (தெற்கு நோக்கிச் செல்லுதல்) என வழங்கப்படும்.

    தை மாதம் முதல்தேதி சூரியன் வடக்கு நோக்கிச் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் நாள். இந்நாள் மகர சங்கராந்தி என்ற பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகிறது. அந்நாளில் தைப்பொங்கல் பெருவிழா உலக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

    வயல்களில் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிரம்பி வழியும் போது தமிழக மக்கள் உள்ளமும் உவகையினால் பொங்குகிறது. கதிரவன் ஒளியில் புதுப்பானையில் பொங்கலிட்டு கதிரவன் வழிபாடு செய்வது மரபு இருந்தும், சூரியனுக்கு ஆலயங்கள் அபூர்வமாகவே காணப்படுகின்றன.

    வடநாட்டில் கொனார்க் என்ற கோவில் பிரசித்தமானது. தென்னகத்தில், இந்தியாவிலேயே வேறெங்கும் காணப்படாத பல அரிய தனிச்சிறப்புகள் நிரம்பியுள்ள சூரியனார்கோவில் இருக்கிறது.

    இக்கோவில் கி.பி. 1114-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் சூரிய மண்டலத்தை மையமாக வைத்து, வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. அக்காலத்தில் இது `குலோத்துங்க சோழமார்த்தாண்டாலயம்' என வழங்கிற்று.

    கொனார்க் கோவில் இதற்குப்பின் இரு நூற்றாண்டுகள் கழித்தே கட்டப்பட்டது. அதை முதலாம் நரசிம்ம சோடகங்கன் (அரசு: கி.பி. 1238-63) கட்டினான். இவனும் தென்னாட்டுச் சோழர் மரபைச் சார்ந்தவனே என்பது வரலாற்றாசிரியர் கருத்து.

    ஒரு பெரிய ரதம் போலத் தோன்றும் கொனார்க் ஆலயம் சதுரமான வடிவில் பத்து அடி விட்டங்கள் கொண்ட 24 சக்கரங்களை இணைத்து, ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்று அநேக சித்திர வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறது. ஆறடி உயரமுள்ள சூரியநாராயணர் சிலை நிற்கும் வடிவமாக, பக்கத்தில் மேலும் கீழுமாக நாலு தேவிகளும் தரிசனம் கொடுப்பதுபோல அமைந்துள்ளது.

    உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் தற்சமயம் வழிபாடுகள் இன்றி ஒரு அருங்காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. சூரியனார்கோவில் சூரியனுக்குரிய தலம், அதோடு கூட, 9 கிரகங்களுமே இங்கு தனித்தனியாகக் கோவில் கொண்டிருப்பதால் இது 'நவக்கிரக தலம்' என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் மூலவர் சூரியபகவானே. இங்கு நடக்கும் வழிபாடுகள், விழாக்கள் எல்லாம் அவருக்கே. பிரதான மூர்த்தியைச்சுற்றி மற்ற கிரகங்கள் பரிவார தேவதைகளாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

    சூரியனார்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது. கட்டிட அமைப்பும். சந்நிதிகளின் வகுப்பு முறையும், தமிழகத்துச் சிற்பிகளின் கட்டிடக் கலையாற்றலை மட்டுமல்லாமல். அவர்களுடைய வான மண்டல அறிவாற்றலையும் எடுத்துக் காட்டுகிறது. வானமண்ட லத்தின் 360 டிகிரி வட்டத்தைக் கணக்கிட்டு, மையத்தில் சூரியனையும், சுற்றுவட்டத்தில் அந்தக் கணக்கின்படியே மற்றக் கிரகங்களையும் அமைத்துள்ளார்கள்.

    ஆண்டுக்கு இரண்டு முறை மும்மூன்று நாட்களுக்குச் சூரியனுடைய கதிர் ஒரு நுழைவாயில் வழியாக உள்ளே வந்து சூரியமூர்த்தியின் பாதத்தில் விழுகிறது. இங்குள்ள உற்சவ விக்கிரகங்கள் மிக அழகானவை. சூரியமூர்த்தி தம் இரு கரங்களிலும் தாமரையை ஏந்தி வட்ட வடிவமான பிரபையுடன் அழகுச் சுடராக நிற்கிறார். கோவிலிலுள்ள அஸ்த்திர தேவர் பிம்பத்தில் சூரிய பகவானே காணப்படுகிறார்.

    சிற்பச் சிறப்பும், வான மண்டல கோள்களின் நுட்ப கணித இயல்பும், வழிபாட்டு நெறி முறைகளும் ஒருங்கி ணைந்த இக்கோவிலில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுக்கள் உள்ளன.

    ஏழரையாண்டுச் சனி, அட்டமத்துச் சனி, ஜென்மச்சனி உள்ளவர்களும், நவக்கிரக தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து தங்கி, உபவாசம் இருந்து, தீர்த்தங்களில் நீராடி, திருமங்கலக்குடி பிராணநாதரையும், மங்களாம்பி கையையும், நவகோள் களையும் முறைப்படி வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கப் பெறுவர் என்று நம்பப்படுகிறது. நவக்கிரக சாந்தி செய்வதற்கும், கிரகப் பெயர்ச்சிகளின் போது வழிபாடு செய்யவும் மக்கள் திரளாக இங்கு வருகின்றனர்.

    • நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.
    • பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

    மூன்றாம் நாளான நேற்று எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் கடந்த காங்கிரஸ் மாநில மகளிர் மாநாட்டை ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:-

    நமது கட்சியில் இன்று ஒரு பெண் முதல்-மந்திரி கூட இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரிகளாகும் நற்பண்புகள் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் தனது கட்டமைப்புக்குள் பெண்களை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.

    பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்று காங்கிரஸ் அடிப்படையில் நம்புகிறது.ஆண்களை விட பெண்கள் பல வழிகளில் உயர்ந்த வர்கள். ஆண்களை விட அவர்களுககு பொறுமை அதிகம். அதிக உணர்திறன் மற்றும் இரக்கமுள்ளவர்கள். அதிகார கட்டமைப்பின் ஒரு பகுதியாக பெண்கள் இருக்க வேண்டும்.

    பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற போதிலும், அதை அமல்படுத்தாமல் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அதன் முழு வரவலாற்றிலும் பெண்களை அதன் அணிகளில் அனுமதிக்கவில்லை. இதற்கு முன் இதை நான் இருமுறை கூறியபோது, தங்களிடம் பெண்கள் அமைப்புகள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது. ஆனால் அவர்களிடம் பெண்கள் அமைப்புகள் இருக்கிறதா இல்லையா? என்பது கேள்வி அல்ல.

    ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்களா? என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கு முழுமையாக இல்லை என்பதே பதில். இந்திய அரசியலை ஆழமாக பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசுக்கு இடையேயான உண்மையான சண்டை, அரசியலில் பெண்களின் பங்கை பற்றியது என்பதை நீங்கள் காணலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விருதுநகரில் பண்பாட்டின் அடையாளங்கள் பரவிக்கிடக்கின்றன.
    • இந்த இடங்களுக்கு சென்று நமது பண்பாட்டின் தொன்மை அடையாளங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.



    விருதுநகர்

    நமது மரபு சின்னங்கள் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து, அவற்றை பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் கொண்ட கோவில்கள் உள்ளிட்ட பண்பாட்டின் அடையாளங்கள் விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் பரவிக்கிடக்கின்றன. இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:-

    சிவகாசி அருகிலுள்ள பிரபலமான கிராமம் எதிர்கோட்டை. இங்குள்ள கல்வெட்டுகளில் வெண்பைக்குடி நாட்டுக்கூத்தன்குடி என குறிக்கப்பட்டுள்ளது. இங்கு பாற்சுனைக்குடிப் படாரர் என்ற சிவன் கோவிலும், நாராயண விண்ணகரம் என்ற பெருமாள் கோவிலும் உள்ளன. சிவன் கோவிலுக்கு எதிரில் பாறையில் இரு வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன.

    இதில் கி.பி.10-ம் நூற்றாண்டு சடையமாறன் கல்வெட்டு, இவ்வூரில் பூசலில் இறந்த கூலிச்சேவகன் மாறம்பட்டனுக்காக, மாகாணக்குடி சேவகன் ஒருவன் இந்த கோவில் இறைவனுக்கு பொன் அளித்துள்ளதையும், கி.பி.965-ம் ஆண்டு சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் கல்வெட்டு, சுனைக்குடி படாரருக்கு, அவ்வூர் அறுவை வாணியச்சேரி ஆச்சன் என்பவர், திருநந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்காக 55 ஆடுகள் அளித்ததையும் கூறுகிறது.

    பெருமாள் கோவிலில், முதலாம் ராஜராஜசோழனின் கி.பி.1006-ம் ஆண்டு கல்வெட்டில் கூத்தன்குடி நகரத்தார் இறையிலியாகக் கொடுத்த நிலம் பற்றியும், மற்றொரு கல்வெட்டில் சாலியன் கன்றாடைக்காவிதி என்பவர் பெயரும் காணப்படுகிறது. சாலியர் துணி வணிகர்கள் ஆவர். கோவில் உவச்சுப் பணியாளர்களுக்கு தானம் கொடுத்த ராஜராஜனின் இன்னொரு கல்வெட்டில், திசையாயிரத்து என்ற சொல் காணப்படுவதன் மூலம் இவ்வூரில் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிகக்குழு தங்கி வணிகம் செய்திருப்பதை அறிய முடிகிறது.

    அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி செல்லும் வழியில் உள்ள தொப்பலாக்கரை. 1000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்பு கொண்ட சிவன் கோவில், பெருமாள் கோவில், விற்பொறி வீரப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி ஆகிய தொல்லியல் சின்னங்கள் இங்கு உள்ளன.இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் இவ்வூர் அளற்றுநாட்டு குளத்துார் எனப்படுகிறது. பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோவில் இறைவனை திருமேற்கோயில் உய்யவந்த விண்ணகர எம்பெருமான் என்கின்றன. முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில் இங்கு விற்பொறி வீரப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி இருந்ததையும், அதற்கு பள்ளிச்சந்தமாக நிலம் இருந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    இதற்கு ஆதாரமாக இவ்வூரில் உள்ள இரு சமண தீர்த்தங்கரர் சிற்பங்களை கொள்ளலாம். தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ள இடத்தில் பழமையான ஒரு லிங்கமும் உள்ளது. பெருமாள் கோவில் முன்பு உள்ள பலிபீடத்தில் குலசேகர பாண்டியன் கல்வெட்டும், சிம்மவாகனத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் பாடல் கல்வெட்டும் உள்ளன.

    சமூகத்தில் உயர் நிலையில் இருந்து இறந்த அரசர்களுக்கு அமைக்கப்படும் கோவில்கள் பள்ளிப்படை கோவில்கள் என அழைக்கப்படுகி ன்றன. இதன் கருவறையில் லிங்க அமைப்பு காணப்படும். அத்தகைய பள்ளிப்படைக் கோவில்கள் சோழநாட்டில் பல உள்ளன. எனினும் பாண்டிய நாட்டில் திருச்சுழி அருகிலுள்ள பள்ளிமடத்தில் மட்டுமே பள்ளிப்படை கோவில் காணவப்படுகிறது.

    குண்டாற்றின் கரையில் உள்ள பள்ளிமடத்தில் இறந்த தன் அண்ணன் சுந்தரபாண்டியனுக்கு ஒரு பள்ளிப்படை கோவிலை சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் உருவாக்கியதை அறிய முடிகிறது. இவர்கள் இருவரும் 3ம் ராஜசிம்ம பாண்டியனின் மகன்கள். கி.பி.10-ம் நூற்றாண்டில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் இடையில் பல போர்கள் நடந்தன. அந்த சமயம் இந்த ஊரில் சுந்தரபாண்டியன் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    கல்வெட்டுகளில் பருத்திக்குடி நாட்டு திருச்சுழியல் பள்ளிபடை சுந்தரபாண்டீஸ்வரம் என இந்த கோவில் குறிப்பிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்றைய இளைய தலைமுறையினர் இந்த இடங்களுக்கு சென்று நமது பண்பாட்டின் தொன்மை அடையாளங்கள் குறித்தும், அவற்றின் பின்புல வரலாறு குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.

    • உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும்.
    • தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.

    சூரியபகவானை வழிபடும் நாளும், அஸ்வினி நட்சத்திரமும் இணைந்து வரும் இந்நாளில், சூரிய புத்திரர்களான அஸ்வினி குமாரர்களை வழிபடலாம். அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டால், உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.

    தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அமிர்தகலசத்தோடு வெளிப்பட்டவர் தன்வந்திரி பகவான், தன்வந்திரி பகவானிடம் அமிர்தம் பெற்று அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை காத்து வருபவர்கள் அஸ்வினி தேவர்களாவர். எனவே, அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் தன்வந்திரி பகவானையும் வழிபடலாம். தன்வந்திரி பகவான் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் தனி சன்னிதியில் இருந்து அருள் பாலிக்கிறர்.

    உலகுக்கே வெளிச்சம் தருபவர் சூரிய பகவான். அப்பேற்பட்ட சூரிய பகவானே வெளிச்சத்தை இழந்து உடல் வலிமையற்று இருந்த போது சூரிய புத்திரர்களான அஸ்வினி குமாரர்கள் தங்களுடைய சக்தியை கொடுத்து காப்பாற்றினர். 27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். இந்த நட்சத்திரத்தின் தேவதைகள் குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள். தேவ மருத்துவர்களாக கருதப்படும் அஸ்வினி தேவர்கள் மனிதர்களின் உடல் ஆரோக்கியக் குறைபாடு மற்றும் திடீர் ஆபத்துகளை நீக்க வல்லவர்கள்.

    அஸ்வினி குமாரர்கள் சூரியனுக்கும்-சரண்யு தம்பதிக்கும் பிறந்தவர்கள் என்று வேதம் சொல்கிறது. குதிரை முகம் கொண்ட இவர்கள் இரட்டையர்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள். இவர்களில் ஒருவர் பெயர் நாசத்ய, மற்றொருவர் பெயர் தஸ்ரா, சிவபெருமானிடமும், விஷ்ணுபகவானிடமும் இருந்து பிரம்ம தேவர் ஆயுர்வேத மருத்துவ முறைகளை அறிந்து அதற்கான விளக்கமுறைகளை எழுதி தட்சபிரஜாபதிக்கு உபதேசித்தார். அவரிடம் இருந்து அஸ்வினி குமாரர்கள் ஆயுர்வேத மருத்துவ கலையை கற்றுக்கொண்டனர்.

    வேதலோக மருத்துவ பதவியை அடைய சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து அந்த பதவியை அடைந்தார்கள். இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். மகரிஷி ததீட்சர் பிரம்மவித்யாவை இந்திரனிடம் இருந்து கற்றுக்கொண்டார். பிரம்மவித்யா என்பது நோயுற்றவர்களை இறக்கவிடாமல் காக்கும் மந்திரம்.

    இந்திரன், ததீட்சருக்கு பிரம்மவித்யாவை யாருக்கும் கற்றுக்கொடுக்க கூடாது என ஆணையிட்டார். ஆனால் அஸ்வினிகுமாரர்கள் பிரம்மவித்யாவை தங்களுக்கு கற்றுக்கொடுக்குமாறு வேண்டினார்கள். அதற்கு கற்றுக்கொண்ட வித்தையை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பாவம் என்று ததீட்சர் கருதினார். இந்திரனுடை ஆணையை அறிந்த அஸ்வினிகுமாரர்கள் ததீட்சரின் தலையை எடுத்து குதிரை தலையை பொருத்தினார்கள். அதன்பிறகு ததீட்சர் பிரம்மவித்யாவை அஸ்வினிகுமாரர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

    இதை அறிந்த இந்திரன் ததீட்சரின் குதிரை தலையை வெட்டி எறிந்தார். உடனே அஸ்வினி குமாரர்கள் மீண்டும் அவருடைய தலையையே பொருத்தினார்கள். அஸ்வினி குமாரர்கள் பற்றிய குறிப்புகள் ரிக்வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்திலும் காணப்படுகிறது. மனிதர்களுக்கு முதலில் மருத்துவம் பார்த்தவர்கள் இவர்கள். நோய்களை குணப்படுத்துவது அஸ்வினிகுமாரர்கள் என்னும் இரட்டையர் என்று நம்பப்படுகிறது.

    ஆபத்தில் சிக்கொக்கொண்டவர்களை விரைந்து சென்று காப்பாற்றுவது அஸ்வினிகுமாரர்கள் என்னும் இரட்டையர். அஸ்வினி தேவர்கள் தங்களுடைய தேரில் சூரியனையும், சந்திரனையும் ஏற்றிச்செல்வார்கள். கூடவே தேனையும் கொண்டு செல்வார்கள். அவர்களுடைய தேரில் குதிரை, கழுதைகள், கழுகு, அன்னங்கள் ஆகியவைகள் இருக்கும். அவர்கள் இருக்கும் இடம் ஆகாயம், மலை உச்சி, தாவரம், அந்தர வானம், வீடுகள் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

    மகாபாரதத்தில் பாண்டுவின் 2-வது மனைவி மாதுரி பிள்ளைவரம் வேண்டி இவர்களை வணங்கி பின்னர் பிறந்தவர்கள் தான் நகுலனும், சகாதேவனும். இருவரில் சகாதேவன் ஜோதிடத்திலும், நகுலன் குதிரைகளை பழக்குவதிலும் வல்லவர்கள். அஸ்வினி புத்திரர்களால் தான் இவர்களுக்கு இந்த கலைகள் கைவந்தன என்கிறது இதிகாசமும், புராணமும்.

    இன்றைக்கும் கூட மேற்குவங்கத்தில் மருத்துவர்களை அஸ்வினி குமாரர்கள் என்று அழைக்கின்றனர். அஸ்வினி தேவர்கள் தம்முடை தந்தை சூரியபகவானின் இரண்டு குதிரைகள் பூட்டிய தேரின் சாரதிகளாகவும் இருப்பார்கள். இவர்களது பெயரால் ஐப்பசி மாதம் சமஸ்கிருத மொழியில் குறிக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் அஸ்தினா என்றால் தமிழில் ஐப்பசி என்கிறோம். யாகங்கள் வளர்க்கும் போது அஸ்வினி தேவர்களும் வணங்கப்படுவதாக வேதங்கள் குறிப்பிடுகிறது.

    இந்த அஸ்வினிகுமாரர்கள் எந்தநேரமும் உலகை சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அப்படி அவர்கள் சுற்றிக்கொண்டு இருக்கும் போது யாருக்காவது அருகில் வரும் போது நாம் என்ன நினைக்கிறோமோ, அது அப்படியே பலிக்கட்டும் என்று ஆசீர்வதித்து செல்வார்கள். அதாவது நீங்கள் நல்லது நினைத்தாலும், கெட்டது நினைத்தாலும் அது உங்களுக்கு நடக்கும்.

    • வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது.
    • முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன்

    முதலில் வனங்களில் சுற்றித்திரிந்த மனிதன், பின்னாளில் குழுக்களாக வாழத்தொடங்கினான். அந்த குழுக்களுக்கு ஒருவரை தலைவனாக நியமித்தான். இப்படி தொடங்கியதுதான் மன்னராட்சி முறை.

    சமவெளிகளுக்கு வந்த மனிதர்களை கட்டிக்காக்கும் பொறுப்பு அன்றைய காலகட்டத்தில் மன்னர்களுக்கு இருந்தது. அவர்கள் ஆட்சி பொறுப்பை பார்த்ததோடு, எதிரி நாட்டு மன்னர்களிடம் இருந்து தங்களது மக்களை பாதுகாக்க பல்வேறு படைபிரிவுகளோடு வசித்து வந்தனர்.

    அதுமட்டுமின்றி அரசர்கள் தாங்கள் குடும்பத்துடன் வசிக்க பிரமாண்ட அரண்மனைகளை கட்டினர். அப்படி கட்டப்பட்ட அற்புதமான ஒரு அரண்மனை குமரி மாவட்டத்தில் இன்றைய மணக்குடி கடற்கரை பகுதியில் இருந்தது என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். அது வெங்கல கோட்டை என்று அழைக்கப்பட்டது. அந்த கோட்டையில் இருந்து ஆட்சி செய்து வந்த அரசன்தான் வெங்கலராஜன்.

    தற்போது வெங்கலராஜபுரம் என்று அழைக்கப்படும் முறம்பில் அரண்மனை அமைத்து ஆண்ட குறுநில மன்னன் வெங்கலராஜன். இலங்கையில் உள்ள குறுங்கடல் சூழ்ந்த புத்தளம் என்கிற குறுநாட்டில் வீரசேகர சோழனுக்கும் தங்கப்பொன்னம்மை என்னும் காயத்ரி தேவிக்கும் மகனாக பிறந்தவர். 1525-ம் ஆண்டு (ஆங்கில ஆண்டு) பிறந்துள்ளார். அதாவது ஆவணி மாதம் 1-ந் தேதி பிறந்துள்ளார்.

    கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கிய வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது. அதாவது இரும்பின் மேல் பச்சிலை மூலிகையை தடவி அதை தங்கமாக்கும் வித்தை அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

    இலங்கையின் கண்டி மன்னனின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட புத்தளம் என்னும் குறுநிலப்பகுதியை வெங்கலராஜன் ஆட்சி செய்தான். முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன் இவர் தான். இலங்கை மண்ணில் மணமுடித்த வெங்கலராஜனுக்கு துறைமுகத்தழகி, சங்குமுகத்தழகி என்று 2 மகள்கள் பிறந்தனர். இருவரும் கல்வியிலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர்.

    அழகிலும் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பொலிவுடன் காணப்பட்டனர். தந்தை வீரசேகரசோழன் காலமான பின்பு வெங்கல ராஜனுக்கு பல்வேறு வழிகளில் தொல்லைகள் வந்து சேர்ந்தன. குறிப்பாக வட இந்தியாவில் இருக்கும் இன்றைய ஒடிசா கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாலும், ஆந்திர மன்னர்களாலும் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    அந்த காலக்கட்டத்தில் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் வட இலங்கையின் செல்வ வளங்களை கவர்ந்து செல்ல முனைந்தது. புத்தளம் என்னும் குறுநிலத்தை ஆண்டு வந்த வெங்கலராஜனிடம் தங்கப் பாளங்களும், நகைகளும் இருப்பதை அறிந்த போர்ச்சுக்கீசியர்கள், வெங்கலராஜனுக்கு தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினர்.

    வெங்கல ராஜனிடம் இருந்த செல்வமே அவனுக்கு எமனாக வந்தது. இதனால் தன் வம்சத்தை தன்னோடு அழிந்து போக விடாமல் தடுக்கவும், தலைமுறையை காத்திடவும் நினைத்தான். இதனால் குமரி நாட்டுக்கு வர பெரிய தோணி ஒன்றில் பொன்னையும், பொருட்களையும் ஏற்றினான். இன்னொரு தோணியில் வித்தகர்களையும், கலைஞர்களையும், வைத்தியர்களையும், அண்ணாவிகளையும், கொல்லர், பொற்கொல்லர்களையும், நிர்வாக அமைச்சர்களையும் ஏற்றினான். மூன்றாம் தோணியில் குடும்பத்தார்களையும் ஆவணங்களையும் ஏற்றினான்.

    அந்த தோணிகள் இலங்கை புத்தளத்தில் இருந்து புறப்பட்டு தென்குமரியை வந்தடைந்தன. இப்போதைய மணக்குடிக்கு வந்த அவர்கள் பாசறையையும், காயலுக்கு கிழக்கே கன்னியாகுமரி சாலையில் உள்ள முறம்பில் அரண்மனையையும், குடியிருப்பையும் அமைத்தனர்.

    முகிலன் தலைமையில் உள்ள ஆட்சியாளர்கள் தங்குவதற்கு ஒரு குடியிருப்பை நிறுவி அவர்களை அங்கே தங்க வைத்தான். இன்றும் அந்த இடம் முகிலன்குடியிருப்பு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. வெங்கலக் கதவுடன் அரண்மனை கட்டி ஆண்டதால் இன்றும் அந்த இடம் வெங்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது. பத்திரப் பதிவுகளிலும் வெண்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது.

    இப்போது இருக்கும் தலக்குளத்திற்கு அன்றைய பெயர் வாட்டக்களி பெரியகுளம் ஆகும். இன்றும் அரசு ஆவணங்களில் இந்த பெயரே உள்ளது.

    வெங்கலராஜனின் 2 மகள்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தனர். தன் மகள்கள் வளர வளர வெங்கலராஜன் மனதில் பயமும் வளர தொடங்கியது. அழகே ஆபத்தாகி விடுமோ? என்று அஞ்சினான். ஆகவே தன் மகள்கள் இருவரிடமும் தன்னுடைய அனுமதி இன்றி புதிய இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும், குறிப்பாக கோட்டையை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் கட்டளையிட்டான்.

    இதற்கிடையேல் வெங்கலராஜன் அரண்மனை, அதைச் சுற்றிலும் குடியிருப்புகள், அகன்ற வீதிகள் கட்டி முடித்தான். தொடர்ந்து கோட்டை ஒன்றை கட்ட விரும்பினான். இதற்கு நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டனர். அவனது முன்னோர்கள் ஆண்ட குரும்பூர் பகுதியில் அறிமுகமான பலர் வாழ்ந்து வந்தனர். எனவே அங்கு சென்று கோட்டை கட்ட தேவையான ஆட்களை கொண்டு வர வேண்டும் என்று தன் பரிவாரங்களோடு குரும்பூருக்கு சென்றார்.

    இன்றைய பறக்கையில் அப்போது பட்சி ராஜா கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவில் திருவிழா மிகவும் பிரபலமானதாக இருந்தது. அந்த விழாவுக்கு தந்தையின் கட்டளையை மீறி துறைமுகத்தழகியும், சங்கு முகத்தழகியும் சென்றனர். அதுவே பின்னால் சோதனை காலமாக அமையும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

    விழாவுக்கு வந்திருந்த வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன், இருவரின் அழகைக் கண்டு மனம் மயங்கினான். இதில் அழகுக்கு அழகு சேர்க்கும் பதுமைபோல ஜொலித்த துறைமுகத்தழகியை எப்படியும் அடைய வேண்டும் என்று மனதுக்குள் மன்மத கோட்டையையே கட்டினான். திருவிழா முடிந்து சகோதரிகள் 2 பேரும் அரண்மனை திரும்பினர்.

    அதே சமயத்தில் கோட்டை கட்டும் பணியாளர்களை அழைத்து வருவதற்காக குரும்பூர் சென்ற வெங்கலராஜனும் அரண்மனை திரும்பினான். அப்போது ஓலையோடு வஞ்சி நாட்டு ஒற்றன் ஒருவன் வந்தான். அவனிடம் இருந்த ஓலையை வாங்கி வெங்கலராஜன் படித்து பார்த்த போது, அந்த சொற்கள் அவனை சுட்டு சாம்பலாக்கின.

    தான் குரும்பூர் சென்றபோது தன் மகள்கள் இருவரும் கோட்டைக்குள்தான் இருந்தார்களா? என்பதை தன் மனைவியிடம் கேட்டுத் தெரிந்தான். மகள்கள் இருவரையும் அழைத்து 'நான் இல்லாத போது என் அனுமதி பெறாமல் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்' என்று கேட்டான். அதற்கு அவர்கள் இருவரும், 'பறக்கை பட்சிராஜா கோவிலில் நடைபெற்ற ஆராட்டு விழாவுக்கு சென்றோம், தங்களை மன்னியுங்கள்' என்றனர்.

    வஞ்சி நாட்டு ஒற்றன் கொண்டு வந்த ஓலையில் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று எண்ணி தந்தையை பார்த்தனர் மகள்கள். வெங்கல ராஜன் ஓலையை தன் மகள்களிடம் கொடுத்து, படித்துப் பாருங்கள் என்றான்.

    ஓலையின் வாசகம் இதுதான், 'வெங்கல ராஜனுக்கு வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன் எழுதிக் கொள்வது. உன் மகள்கள் இருவரின் அழகிலும் நான் பெரிதும் மயங்கி நிற்கின்றேன். அதிலும் குறிப்பாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை அடைய வேண்டும் என்ற ஆசை என்னை வெகு தூரத்துக்கு கொண்டு வந்து விட்டது. ஆகவே உடனடியாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை என் அந்தப்புரத்திற்கு அனுப்பி வை' என்று எழுதப்பட்டு இருந்தது.

    மடலை படித்து முடித்த துறைமுகத்தழகியின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. ஆராட்டு விழா சென்று அகப்பட்டோம் என்று நினைத்து மனம் வருந்தினாள். தந்தை தன் மகளின் கண்ணீரை பார்த்து மனம் வருந்தினார்.

    ஓலையை கொண்டு வந்த ஒற்றனை அழைத்த வெங்கல ராஜன், 'என் மகளை வஞ்சி நாட்டு இளவரசனின் அந்தப்புர அழகியாக அனுப்பி வைக்க முடியாது என்று சொல் போ' என்று கூறி அனுப்பி வைத்தான்.

    காலம் மெல்ல மெல்ல நகர்ந்தது. குரும்பூர் நகரில் இருந்து கூட்டி வந்த பணியாட்கள் கடற்கரையில் இருந்து பொற்றையடி வரை உள்ள நிலப்பரப்பை வரையறை செய்து கோட்டை கட்டத் தொடங்கினர். இருபுறமும் இருந்து மணலை எடுத்து முதலில் கோட்டை அமைப்பை உருவாக்கினர்.

    கடற்கரையில் கற்களை கொண்டும், சுண்ணாம்பு சுதை கொண்டும் கோட்டை கட்டும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    ஒரு நாள் காலையில் ரவிவர்மன் தன் படைகளோடு கோட்டையை சூழ்ந்து முற்றுகையிடத் தொடங்கினான். அப்போது வெங்கல ராஜன் அஞ்சி ஓட மனமின்றி கோட்டைக்குள் இருந்தபடியே தன் குடிகளையும் உள்ளே அமர வைத்து வெண்கல கதவினை உள்ளிருந்தபடியே பூட்டிக் கொண்டான்.

    வெங்கலராஜன் உள்ளிருந்தபடியே, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த வஞ்சி நாட்டு வீரர்களை கவனித்துக் கொண்டிருந்தான். கோட்டை கதவும் திறக்கவில்லை, வஞ்சிநாட்டு வீரர்களும் அகன்று போகவில்லை. போரும் நடக்கவில்லை. ஏன் என்றால் துறைமுகத்தழகியை உயிரோடு அழைத்துப் போக வேண்டும் என்பதே படைக்கு இடப்பட்ட கட்டளை. இதனை காப்பாற்ற வீரர்கள் பலநாட்களாக கோட்டையை சுற்றிலும் நின்றனர்.

    திடீரென்று ஒரு நாள் போர்பறை ஒலித்தது. பொறுத்தது போதும் எழுந்து போருக்கு புறப்படுங்கள் என்பது இதன் பொருளாகும். இதனை அறிந்த வெங்கலராஜனும், ஆசை மகள்களும் மிகவும் துயரப்பட்டனர். தன் தந்தையின் கலக்கத்தை உணர்ந்து கொண்ட துறைமுகத்தழகி மனம் வருந்தினாள்.

    வெங்கல ராஜனோ தன் மகளை வஞ்சி மன்னன் விரும்பும் படியாக அனுப்புவதற்கு தயாராக இல்லை. துறைமுகத்தழகி தனது தந்தையிடம் வந்து, 'ஒரு மாபெரும் வீரன் நீங்கள். வீரனுக்கு அழகு விவேகம். தாங்கள் என் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே தூக்கி எறியுங்கள். அதனை பார்த்து வஞ்சி மன்னன் அஞ்சி ஓடுவான்' என்று தைரியமாக தந்தையிடம் கூறினாள்.

    எண்ணற்ற கேள்விகளுக்கு இடையே ஒரு முடிவோடு வாளை எடுத்த வெங்கல ராஜன் தன் மகளை வெட்டி தலையை தூக்கி கோட்டைக்கு வெளியே எறிந்தான். வருவாள் என்று எண்ணி மகிழ்ந்து நின்ற வஞ்சி நாட்டு மன்னன் கைகளில் தலை ஒன்று விழுவதைக் கண்டு தலைதெறிக்க ஓடினான். கண்ணியத்தையும், தான் விரும்பும் கற்பையும் காத்து நிற்க வேண்டும் என்கிற உணர்வு உடைய பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன் என்று புலம்பிக்கொண்டே தன் படைகளோடு அஞ்சி விடைபெற்றான் வஞ்சி மன்னன்.

    பின்னர் வெங்கலக்கோட்டை கதவு திறந்து மக்களும், மன்னனும் தன் இளவரசியின் தலையை தூக்கி வைத்து அழுது புலம்பினர். பின்னர் வெங்கலராஜன், மகளின் உடலையும், தலையையும் கொண்டு சென்று சந்தனக் கட்டைகளை அடுக்கி அதன் மேல் வைத்து எரியூட்டி காடாற்றி முடித்தான். இன்றும் இந்த பகுதிக்கு காடேற்றி என்னும் பெயரே நிலைத்திருக்கிறது.

    பின்னர் மகள் இறந்த துக்கம் தாளாமல் வெங்கலராஜனும் தனது மார்பில் வாளை பாய்ச்சி உயிர் துறந்தான் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு நாள் இரவு 60 அடி உயரத்துக்கு அரபிக்கடல் ஆர்ப்பரித்து எழுந்து உலகையே விழுங்க வந்தது. இன்று சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் சீற்றத்தால் அரண்மனையும், கோட்டையும் குடிகள் வாழ்ந்த வீடுகளும் அழிந்து முடிந்தது.

    மன்னன் வெங்கலராஜன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் நீலம் மதுமயன், இந்த மன்னன் வெங்கல ராஜன் அறக்கட்டளையை சுமார் 10 ஆண்டுகளாக வெங்கல ராஜபுரம் (கோவில்விளை) என்னும் முகவரியில் நடத்தி வருகிறோம். இந்த அறக்கட்டளையின் நோக்கம் மன்னன் வெங்கல ராஜனின் புகழைப் பரப்புவது ஆகும். அவரைப்பற்றி அறியாதவர்கள் மத்தியில் அவரது பெருமைகளையும், வரலாற்றையும் தெரியப்படுத்துவதை பணியாக செய்து வருகிறோம்.

    • கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.
    • பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

    பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.

    பத்துவித பெயர்களை உடையவன் அவன்.

    கூர்மையான பார்வையை உடையவன்.

    நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.

    அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான்.

    கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தார்.

    கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.

    எனவே அர்ஜுனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சிறப்பு பலன்கள்

    1. பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

    2. பங்குனி உத்திரத்தன்று வேண்டுதல்களின் பேரில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோரை பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

    3. பங்குனி உத்திரத்தன்று சுவாமி கடல், ஏரி, கடாகம் போன்ற இடங்களில் தீர்த்தம் கொடுப்பார்.

    அப்போது அதில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

    • அப்படியானால் குலதெய்வமும் இறை நிலையும் வேறு வேறா?
    • வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபட்டனர்.

    குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது,

    தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது,

    வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

    அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது.

    அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது.

    ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.

    அப்படியானால் குலதெய்வமும் இறை நிலையும் வேறு வேறா? இல்லை.

    இதற்கு அருமையான விளக்கத்தை பகவான் கீதையில் சொல்கிறார்.

    யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன்.

    செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள்.

    அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.

    உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார்.

    வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபட்டனர்.

    இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள்.

    எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறைநிலை அடையும் வாய்ப்பு உள்ளது.

    • உவரி சுயம்புலிங்க சுவாமியை பெரியசாமி என்றே அழைத்து வந்தனர்.
    • கடல் அலைகள் சாமரம் வீச அழகாக காட்சி தருகிறார் உவரி சுயம்புலிங்க சுவாமி.

    கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணிய தலம் தான் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.

    அந்த காலத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமியை பெரியசாமி என்றே அழைத்து வந்தனர். தற்போது உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. வேப்பமரக்காற்று மணமணக்க, பனைமரக்காற்று சலசலக்க வெண்மணல்கள் கம்பளம் விரிக்க, கடல் அலைகள் சாமரம் வீச அழகாக காட்சி தருகிறார் உவரி சுயம்புலிங்க சுவாமி.

    பொதுவாக சிவலிங்கத்தின் மேற்பாகம் தான் சிவபெருமான். லிங்கம் பொருந்தி இருக்கக்கூடிய ஆவுடை பாகம் அம்பாளுடையது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வீற்றிருக்ககூடிய உவரி சுயம்புலிங்க சுவாமிக்கு ஆவுடை பாகம் இல்லை. ஆவுடை பாகம் இல்லாத இந்த சிவபெருமானை ஆதிபரம்பொருள் என்ற பொருளில் பெரியசாமி என்று அழைத்தனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் உலகையே காக்கும் பரமேஸ்வரராகிய சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக வந்தார். தொடக்க காலத்தில் உவரி மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக்கொடிகள் அதிகமாக படர்ந்து இருந்ததால் இந்த பகுதியை கடம்பவனம் என்று அழைத்தனர்.

    ஒரு சமயம் கோட்டபனை என்ற ஊரில் இருந்து பால் விற்பதற்காக தினமும் உவரி வழியாக செல்வது வழக்கம். தற்போது சுவாமி இருக்கக்கூடிய இடத்தின் அருகே வரும்போது கால் இடறிவிழுந்துகொண்டே இருந்தாராம். எனவே கால் இடற காரணமாக இருந்த கடம்பவேரை வெட்டி வீழ்த்தும் போது ரத்தம் பீரிட்டு வந்தது. அங்கிருந்த அனைவரும் பார்த்து பயந்து போனார்கள்.

    உடனே அசரிரீயாக தான் இங்கு வீற்றிருப்பதாகவும், இங்கு தனக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் சொன்னார். உடனே அங்கு இருக்கக்கூடிய பக்தர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அந்த இடத்தை தோண்டினார்கள். அப்போது அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவலிங்கத்தின் தலையில் வெட்டுபட்டு ரத்தம், வழிந்துகொண்டு இருந்தது.

    அப்போது மீண்டும் ஒரு அசரிரீ ஒலித்தது. அன்பர்களே... ரத்தம் வழியும் இடத்தில் சந்தனக்கட்டையால் சந்தனம் அரைத்து அந்த சந்தனத்தை வெட்டுபட்ட இடத்தில் பூசுங்கள். அப்போது ரத்தம் வழிவது நின்றுவிடும். உங்கள் பல தலைமுறைகளும், நம்மை அண்டியவர்களும் நோய்நொடிகள் அண்டாது வாழ்வார்கள் என்று சொன்னது.

    அதன்பிறகு அடியவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதேஇடத்தில் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினர். முதலில் பனை ஓலையில் கோவில் எழுப்பினார்கள். அதன்பிறகு மிகப்பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு முன்பு முதலில் காவல் தெய்வமாக இருக்கக்கூடிய சிரட்டை பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று வீற்றிருக்கக்கூடிய சுடலைமாடன் சுவாமிக்கு சிதறுதேங்காய் உடைத்த பிறகு உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    உவரி சுயம்புலிங்க சுவாமியின் கோவிலின் தென்மேற்கில் கன்னிவிநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் முதலில் கடலில் நீராடிவிட்டு பின்பு ஆலயத்தின் பின்புறத்தில் இருக்கக்கூடிய தெப்பத்தில் நீராடிய பின்னர் கன்னி விநாயகரை வழிபட்ட பின்னர் தான் மூலவரான உவரி சுயம்புலிங்க சுவாமியை வழிபட வேண்டும்.

    இங்கு வரக்கூடிய ஆண் பக்தர்கள் மேல்சட்டை அணிய தடைசெய்யப்பட்டுள்ளது. கன்னிவிநாயகருக்கு கண்டிப்பாக சிதறுதேங்காய் உடைக்க வேண்டும். உவரி சுயம்புலிங்க சுவாமியின் சன்னதியில் சந்தனம் தான் பிரசாதமாக வழங்கப்படும். அதுவும் உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சாற்றிய சந்தனம் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் 48 நாட்கள் தங்கி இருந்து கடலில் நீராடி ஈசனாகிய சிவபெருமானை வழிபட்டு கருவறை தீபத்திற்கு நெய் சேர்த்து அங்கு பிரசாதமாக தரக்கூடிய சந்தனத்தை வாங்கி உண்டுவந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீரும். அடுத்ததாக உவரி சுயம்புலிங்க சுவாமியின் கோவிலின் வெளிப்புறத்தில் தனி சன்னதியில் முன்னோடி சுவாமி இருக்கிறார்.

    இவர் பைரவரின் சொரூபமாக அருள்பாலிக்கிறார். முன்னோடி சுவாமி கோவிலை அடுத்து தனி கோவிலில் பிரம்மசக்தி அம்மன் அருள்பாலிக்கிறார். பிரம்மசக்தி அம்மனை பஞ்சமி, புதன்கிழமை, மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, விசாகம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களில் கருவறை தீபத்திற்கு நல்லெண்ணெய் ஊற்றி வெண் தாமரை மலர்கொண்டு பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    பிரம்மசக்தி சன்னதியை தொடர்ந்து சிவனணைந்தபெருமாள் சன்னதியும் உள்ளது. சிவபெருமானுடன் பெருமாள் பெண் உருவம் கொண்டு அணைந்ததால் சிவனணைந்த பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிவனணைந்தபெருமாள் சன்னதியில் உள்ள மரத்தின் கிளையில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

    அதன்பிறகு பேச்சியம்மன், மாடசாமி, இசக்கியம்மன் போன்ற சன்னதிகளும் இந்த கோவிலில் இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய இசக்கி அம்மனுக்கு எண்ணெய் மஞ்சனம் கலவையை சாற்றி வேண்டுதல் வழிபாடு செய்கிறார்கள். எண்ணெய் மஞ்சனம் என்பது இசக்கியம்மனுக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி சாற்றி வழிபடுவது ஆகும்.

    ஆலயத்தின் மேற்கு திசையில் ஆலயடி சாஸ்தா கோவில் உள்ளது. இங்கேயும் கண்டிப்பாக சென்று வழிபட வேண்டும். இங்கே வன்னிமரத்தின் அடியில் பூரணபுஸ்கலையுடன் சாஸ்தா அருள்பாலிக்கிறார். இங்கு சித்ராபவுர்ணமி, பங்குனி உத்திரம், ஆடி அமாசாசை, விசாக நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் எல்லோரும் பொங்கலிட்டு தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் மாதாந்திர விழா என்ற சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று இரவு வாகனபவனி நடக்கும். தைப்பூச நாளில் இங்கு தேரோட்டம் நடைபெறும். தேரோட்டம் முடிந்து மறுநாள் பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவு தெப்பத்திருவிழாவு சிறப்பாக நடைபெறும்.

    அதுமட்டுமில்லாமல் பிரதோசம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளிலும், வாராந்திர திங்கட்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் உண்டு. பொதுவாக சிவன் கோவில்களில் சூரியபூஜை ஓரிரு நாட்கள் இருக்கும். ஆனால் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் காலையில் இங்கு சூரியபூஜை நடக்கிறது.

    அதாவது மார்கழி மாதம் முழுவதும் இந்த தலத்தில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை சூரிய பகவான் வழிபடுகிறார். சூரிய திசை நடக்கக்கூடியவர்கள் மார்கழி மாதம் காலையில் சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு துன்பங்கள் எல்லாம் நீங்கி வாழ்வில் வளம் வீச வளமும், நலமும் பெறுகின்றனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் காலை 6 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    • நன்றி காணிக்கையாக மாதாவிற்க்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பினார்கள்.
    • செப்டம்பர் 8-ந்தேதி கன்னி மரியின் பிறந்தநாள்.

    உலகளவில் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான மக்கள் திரண்டு வந்து அன்னையின் அன்பை பெற்று செல்கிறார்கள்.

    ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்பு நாகபட்டினத்தில் இருந்த ஒரு செல்வந்தருக்கு வேளாங்கண்ணியில் வாழ்ந்த ஒரு இடையர் குல சிறுவன் ஒருவன், ஒவ்வொரு நாளும் பால் கொண்டு போய் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் அதேபோல் பால் கொண்டு போகும்போது, வழியில் உடல் சோர்வுற்றதால் அந்த சிறுவன் சற்று ஓய்வெடுக்க ஒரு ஆல மரத்தின் நிழலில் குளத்துக்கு அருகே அமர்ந்தான்.

    அப்போது சூரியனை விட அதிக ஒளி ஒன்று அவன் முகத்தில் பட்டது. உடனே கண் விழித்தான் அந்த சிறுவன். விண்ணக அழகு நிறைந்த அன்னை தெய்வீக குழந்தையை கையில் ஏந்திய காட்சியை கண்டான். அந்த அன்னை புன்னகை தவழ தனது குழந்தைக்கு கொஞ்சம் பால் தருமாறு அந்த சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் பால் கொடுத்தான். அந்த குழந்தையும் பருகியது.

    சில வினாடிகளில் அந்த தேவ அன்னையும், குழந்தையும் அந்த இடத்தில் இருந்து மறைந்தனர். செல்வந்தரின் வீட்டுக்கு நேரம் தவறி வந்த சிறுவனிடம் ஏன் பாலின் அளவு குறைந்திருக்கிறது என்று விசாரித்தார் முதலாளி. சிறுதுநேரத்தில் சிறுவன் சுமந்து வந்த பால் குடம் நிறைந்து வழிந்தோடியது.

    இதை பார்த்த செல்வந்தர் என்ன இது அதிசயம் என்று மலைத்துபோய் நிற்க அந்த சிறுவன் நடந்ததை கூற ஆரம்பித்தான். அச்சிறுவனும் தான் வரும் வழியில் ஒருதாய் கையில் குழந்தையுடன் தோன்றி தன் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு வேண்டினாள். நானும் அக்குழந்தைக்கு பால் கொடுத்தேன் என்று சொல்லி முடித்தும் அவன் கையில் உள்ள பால் பாத்திரம் நிரம்பி வழிவது நிற்கவில்லை.

    சிறுவன் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று அன்னை காட்சி தந்த இடத்தை கண்டார் முதலாளி. அந்த இடத்தில் இருந்த ஆலமரமும், அந்த குளமும் சற்று வித்தியாசமாக அவருக்கு தெரிந்தது. உடனே அவர் அப்புனித தலத்தில் தாழ் பணிந்து வணங்கினார். சிறிது காலத்திற்கு பிறகு தெய்வீக தாய் காட்சி அளித்த அத்திருவிடத்தில் சிற்றாலயம் எழுப்பப்பட்டது. அது தான் இன்று நம் முன் சாட்சியாய் நிமிர்ந்து நிற்கும் பழைய வேளாங்கண்ணி-மாதா குளம்.

    மோர் கார சிறுவனுக்கு காட்சி கொடுத்தது

    சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதாவின் இரண்டாவது காட்சி வேளாங்கண்ணி சிற்றுரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு" என்ற இடத்தில் நடைபெற்றது. அங்கே கால் ஊனமுற்ற ஒரு சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். அப்போது ஒரு நாள் வேளாங்கண்ணி மாதா தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டாள். சிறுவனும் குழந்தைக்கு மோர் வழங்கினான்.

    மகனே உடனே நாகபட்டினம் சென்று அங்கே வாழும் கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக "என்றார்.

    அதற்கு அந்த சிறுவன் நானோ கால் ஊனமுற்றவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்று கூற, "மகனே எழுந்து நட' என்று அந்த தேவத்தாயின் மறுமொழி கூற சிறுவன் எழுந்து நிற்க ஆரம்பித்தான். தன்னால் நிற்க முடிகிறது, நடக்க முடிகிறது என்று உணர்ந்த சிறுவனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சிறுவனின் ஓட்டம் நாகபட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது.

    அங்கு வீட்டிற்க்கு சென்று நடந்ததை விளக்கினான். அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்த கிறிஸ்தவருக்கு நேற்று இரவு வேளாங்கன்னி மாதா ஒரு ஆலயம் கட்ட சொல்லிய கனவும் நினைவுக்கு வந்தது. அந்த சிறுவனோடு அந்த இடத்திற்கு சென்று ஆலயம் கட்ட ஆரம்பித்தார்கள். அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி மாதா வீற்றிருக்கும் பேராலயம்.

    கி.பி 17-ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி மாதாவின் மூன்றாவது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்கொவில் இருந்து போர்ச்சுக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது. வழியில் கடுமையான புயலால் அந்த கப்பல் தாக்கப்பட்டது.

    அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் கடலில் மூழ்கப்போகிறோமே என்று பயந்து அஞ்சி நடுங்கினார்கள். புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள்.

    அம்மா மரியே எங்களை இந்த கடும் புயலில் இருந்து காப்பாற்றும். நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில் கன்னி மரியே உனக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என நினைத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோசம் குறையத் தொடங்கியது. அவர்கள் புயலில் சிக்கிய கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது.

    அன்றைய தேதி செப்டம்பர் 8. அன்று கன்னி மரியின் பிறந்தநாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை. மாலுமிகள் தாங்கள் நலமுடன் வந்து சேர்ந்ததற்காக இறைவனுக்கும், கன்னி மரியாவிற்க்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக மாதாவிற்க்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பினார்கள். போர்ச்சுக்கீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் தாங்கள் கட்டிய சிற்றாலயம் வந்து வணங்கி செல்வது வழக்கம்.

    • ராஜகோபுரத்துக்கு முன்னதாக தல தீர்த்தமான சூலகங்கை உள்ளது.
    • தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று காமன் பண்டிகை.

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று காமன் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படும் இப்பண்டிகை சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். காமனை சிவன் எரிப்பதும், பின்னர் ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவனை உயிர்ப்பிப்பதுமான புராண வரலாறே காமன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. காமனை எரித்ததும், சிவனின் நெற்றிக்கண் நெருப்பை வாயு பகவான் சுமந்து சென்று, சரவணப்பொய்கையில் விட்டு முருகப்பெருமான் பிறப்புக்கு வித்திட்டதுமான புராண வரலாறு நிகழ்ந்த திருத்தலமே, திருக்குறுக்கை திருத்தலம்.

    தல வரலாறு

    தீர்க்கவாகு என்ற முனிவா், சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு கங்கை நீரை ஆகாயத்தின் வழியே பெற்று அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆலயத்தின் முன்னே நின்று நீண்ட தன் இரு கரங்களை உயரே தூக்குவார். குடத்தில் கங்கை நீர் வரும். அதைக் கொண்டு அபிஷேகம் செய்வார்.

    அதன் அடிப்படையில் இவ்வாலயத்திற்கு வந்த அவர், ஆலயத்தின் முன்புறமுள்ள திரிசூல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டார். சூலதீர்த்தம் கங்கையை விட புனிதமானது என்பதை அறியாது வழக்கம்போல, கங்கைநீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய முடிவுசெய்து தன் இரு கரங்களையும் ஆகாயத்தை நோக்கி தூக்கினார்.

    கங்கை நீர் வருவதற்கு பதிலாக அவரது நீண்ட கைகள் குறுகிப்போயின. இதை எதிர்பாராத முனிவர் இறைவனை சரணடைந்தார். முதலில் விநாயகரை வழிபட விநாயகரும் தன் கையை குறுக்கிக் கொண்டு காட்சியருளி அவர் கவலையைப் போக்கினார். இதனால் இத்தலத்தின் பெயர் 'குறுங்கைத்தலம்' என்றானது. குறுங்கை விநாயகர், ஆலய பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் ஆவுடையார் மீது இருப்பதும், அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் இருப்பதும் இந்த ஆலயத்தின் சிறப்பாகும்.

    புராண வரலாறு

    பிரம்மனின் பேத்தியும், தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். அது பிடிக்காத தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தினான். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி, தட்சனின் வேள்வித்தீயில் விழுந்து உயிர் துறந்ததுடன், வேள்விக்கான பலன் கிடைக்காதபடி செய்தாள். தாட்சாயிணியின் முடிவு கேட்டு கோபம் கொண்டு சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி தட்சனின் வேள்விச் சாலையையும், தட்சனையும் அழித்தார். பின்னர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் ஈசன்.

    இந்த நிலையில் சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபதுமன் மற்றும் தாரகாசுரன் ஆகியோர், தேவர்களை துன்புறுத்தி வந்தனர். அசுரா்களால் பாதிக்கப்பட்ட தேவர்கள், அவர்களை அழிக்க ஒரு குமாரனைத் தோன்றச் செய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டுகோள் வைப்பதென முடிவு செய்தனர். ஆனால் அவர் யோக நிலையில் இருந்ததால், பல முயற்சிகளை செய்தும், தவத்தை கலைக்க இயலவில்லை. இறுதியாக காமக் கடவுளான மன்மதன் மூலம், சிவன் மீது அம்பு விடச் செய்து அவரது தவத்தை கலைத்தனர்.

    இதனால் கோபமுற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணைத் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். இதுவே 'காம தகனம்' எனப்படுகிறது. மன்மதனின் மனைவியான ரதிதேவி, தன் கணவனை உயிர்ப்பித்து தரும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சிவபெருமான் அவளிடம், "நான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரியும்போது, மன்மதனுக்கு சாப விமோசனம் கிடைக்கும். அதுவரை அவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்" என்று அருளினார்.

    காமன் தகனத்தின் போது சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியை வாயு பகவான் சுமந்துச் சென்று சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளில் விழச்செய்தார். இது ஆறு குழந்தைகளாக உருப்பெற, கார்த்திகைப் பெண்கள் அறுவர், அந்தக் குழந்தைகளை வளர்த்தனர். பார்வதிதேவி ஆறு குழந்தைகளையும் தனது இரு கரத்தால் ஒன்றாக அணைக்க, அந்த ஆறுபேரும் ஒருவராக மாறினர். இப்படி காமனை தகனம் செய்து ஆறுமுகனை உருவாக்கி, அசுரனை அழிக்க சிவன் அருள் புரிந்த திருத்தலமே திருக்குறுக்கை திருத்தலம்.

    ஆலய அமைப்பு

    ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்கு முன்னதாக தல தீர்த்தமான சூலகங்கை உள்ளது. வாசலில் உள்புறமாகத் துவார கணபதியும், சுப்பிரமணியரும் இருக்கின்றனர். வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே உள்ளது. சன்னிதிகள் எதுவும் கிடையாது. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உள்ளது. பஞ்சமூர்த்தி மண்டபத்தின் இடதுபக்கம் உள்ள சன்னிதியில், ஞானாம்பிகை அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். அம்மன் சன்னிதிக்கு எதிரில், நந்தி, பலிபீடம், இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். அம்பாள் சன்னிதியின் வலதுபுறம் சுக்ர வார அம்மனைக் காணலாம்.

    உள் கோபுரம் தாண்டி உள்ளே செல்ல நடராஜர் மண்டபம் உள்ளது. இதன் வடக்குப்புறத்தில் முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், தெற்கில் சோஹரேசுவரர், சோமாஸ்கந்தர், நிருதிகணபதி சன்னிதிகளும் உள்ளன. அடுத்துள்ள சம்ஹார மண்டபத்தில் சிவபெருமான், யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். மகாமண்டபத்தில் பலிபீடமும் நந்தியம் பெருமானும் இடம்பெற்றிருக்க, கருவறையில் மூலவர் வீரட்டேசுவரர் சதுரமான ஆவுடையார் மீது லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் சிவபெருமான் மீது மன்மதன் எய்த தாமரை மலர் பீடத்தின் முன்புறம் நடுவில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். மூலவர் வீரட்டேசுவரரை வணங்குபவர்களுக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். சுவாமி சன்னிதிக்கு நேர் எதிரில் ரதிமன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன.

    திருச்சுற்றில் கிணறு, தலவிருட்சமான கடுக்காய் மரம், செவிசாய்த்த நந்தி, நவக்கிரகங்கள், சூரியர், பைரவர், மடப்பள்ளி குறுங்கை விநாயகர் சன்னிதி, அதற்கடுத்து ஞானசம்பந்தர், சேரமான், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் ஆகியோர் உள்ளனர். கருவறை கோட்டத்தில் துர்க்கை, பிரம்மா, பைரவர், அண்ணாமலையார், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, மகாகணபதி வீற்றிருக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு ௮ மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அமைவிடம்

    இவ்வாலயம் அமைந்துள்ள திருக்குறுக்கை செல்வதற்கு மயிலாடுதுறையிலிருந்து நேரடி பேருந்து மற்றும் ஆட்டோ வசதி இருக்கிறது. மணல்மேடு மற்றும் குத்தாலத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது. அருகாமையில் உள்ள ரெயில் நிலையம் மயிலாடுதுறை.

    • நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.
    • 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

    300 டன் எடையுடன் அசைந்தாடி வரும் ஆழித்தேர்

    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம்.

    'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

    அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு.

    இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம்.

    மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.

    தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும்.

    இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர்.

    'ஆழி' என்பது சக்கரமாகும்.

    மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது.

    1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர்.

    பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது.

    இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது.

    1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும்.

    விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.

    இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும்.

    இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர்.

    10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.

    நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.

    வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும்.

    இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகர்ந்து விடுகிறது.

    • ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது.
    • தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர்

    இக்கோவிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

    இக்கோவிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது.

    17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார்.

    அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம்.

    இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோவிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது.

    அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோவில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.

    'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

    ×