என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர்"

    • இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.
    • மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார்.

    ஒரு முறை திதிகளான அஷ்டமியும், நவமியும் திருமாலை தரிசிக்க வைகுண்டம் சென்றன. பெருமாளின் தரிசனத்தைப் பெற்ற அவை தங்களின் மனவருத்தத்தை அவரிடம் கூறத் தொடங்கின. "மக்கள் எந்த ஒரு விசேஷத்தையும் அஷ்டமி, நவமி ஆகிய இரு நாள்களில் செய்வதில்லை என்றும், எங்கள் இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.

    அவைகளின் மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார். அஷ்டமி, நவமியை மக்கள் கொண்டாடும் வகையில் அந்த இரு நாள்களில், தான் அவதாரம் எடுப்பதாகக் கூறினார். தனது வாக்குறுதியை நிறைவேற்றவே அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும், நவமி திதியில் ராமனாகவும் அவதரித்தார். அந்த இரு தினங்களையே நாம் கோகுலாஷ்டமியாகவும், ராமநவமியாகவும் கொண்டாடி வருகிறோம்.

    • சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார் என்று வைரமுத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • வைரமுத்து யார் ஒரு மீடூ குற்றவாளி என்று எச். ராஜா விமர்சனம்

    மயிலாப்பூரில் கடந்த 8-ந்தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடவுள் ராமரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது.

    வைரமுத்து பேசியதாவது:- சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் குற்றம், குற்றம் கிடையாது என்று IPC கூறுகிறது. IPC-யில் கூறப்பட்டதை அன்றே கூறினார் கம்பர். ராமர் குற்றம் செய்திருந்தாலும் குற்றவாளி அல்ல என்று கம்பர் கூறுகிறார் என்றார்.

    வைரமுத்துவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவருக்கு எதிராக புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூத்த பாஜக தலைவர் எச். ராஜா, "அரசியலமைப்பின் முதல் பக்கத்தில் ராமரின் படம் தான் உள்ளது. ஆனால் வைரமுத்து ராமரை மனநோயாளி என்று பேசியுள்ளார். வைரமுத்து யார் ஒரு மீடூ குற்றவாளி. சின்மயி அவர் மீது புகார் கூறியுள்ளார். மேலும் பல பேர் அவர் மீது புகார் கூறியுள்ளார். இந்து விரோதி வைரமுத்துவுக்கு பெண்களை கண்டால் மனநோய். காமவெறி கொண்ட வைரமுத்துவை ஏன் இன்னும் திமுக அரசு கைது செய்யவில்லை. 2026 இல் வைரமுத்து செய்யப்படுவார்" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

    • ராமர் மட்டுமல்ல, சிவன் மற்றும் விஸ்வாமித்திரரும் தனது நாட்டில் பிறந்ததாக ஒலி கூறினார்.
    • சித்வான் மாவட்டத்தின் தோரி பகுதிதான் உண்மையான அயோத்தி என்றும், ராமர் அங்கு பிறந்தார் என்றும் கூறினார்.

    ராமர் இந்தியாவில் உள்ள அயோத்தியில் பிறந்தவர் அல்ல, மாறாக நேபாளத்தில் பிறந்தார் என்று அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்தார்.

    காத்மாண்டுவில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்தக் கூற்றை தெரிவித்தார்.

    இந்த வார்த்தைகளை தான் சொந்தமாகச் சொல்லவில்லை என்றும், வால்மீகி எழுதிய அசல் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இதைச் சொல்கிறேன் என்றும் சர்மா ஒலி கூறினார்.

    ராமரின் உண்மையான பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது என்ற உண்மையை மக்கள் பரப்ப தயங்க வேண்டாம் என்று அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு இதே போன்ற கருத்துக்களை ஒலி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் தனது நாட்டில் உள்ளசித்வான் மாவட்டத்தின் தோரி பகுதிதான் உண்மையான அயோத்தி என்றும், ராமர் அங்கு பிறந்தார் என்றும் கூறினார்.

    ராமர் மட்டுமல்ல, சிவன் மற்றும் விஸ்வாமித்திரரும் தனது நாட்டில் பிறந்ததாக ஒலி சமீபத்தில் கூறினார். புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்கள் இப்போது நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் உள்ளன என்று அவர் கூறினார். 

    • வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன.
    • அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.

    சுக்ரீவரின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். இவர் வானரப் படையில் சிறந்த போர் வீரராகவும் திகழ்ந்தார். வனவாசத்தின்போது சீதையை ராவணன் கவர்ந்து சென்று இலங்கையில் உள்ள அசோக வனத்தில் வைத்தான். இதனை அனுமன் மூலமாக அறிந்த ராமர், உடனே ராமேஸ்வரம் கடல் முனையை அடைந்து இலங்கைக்கு எப்படி செல்வது என்று யோசித்தார். கடல் மீது ஒரு பாலம் கட்டினால் மட்டுமே சீதை இருக்கும் இடத்துக்கு செல்ல முடியும் என்பதை உணர்ந்த ராமர், பாலம் கட்ட திட்டமிட்டார். சுக்ரீவனின் வானர படையின் உதவியுடன் பாலம் கட்டும் பணியை தொடங்கினார்.

    வானர படைகள், பாறைகளை எடுத்து வந்து அனுமனிடன் கொடுக்க அனுமன் அதை கடலில் போட்டார். அந்த பாறைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஆனால் வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன. இதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.

    இதைப் பார்த்து கொண்டிருந்த லட்சுமணன் ராமரிடம், ''அண்ணா, அனுமன் உள்பட மற்ற வானரப் படைகள் போடும் எல்லா பாறைகளும் நீரில் மூழ்குகின்றன. ஆனால் நளன் போடும் பாறைகள் மட்டும் எப்படி மிதக்கின்றன. இதற்கு என்ன காரணம்'' எனக்கேட்டார்.

    அதற்கு ராமர், ''ஒரு சமயம் வனத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவர் தண்ணீரில் மூழ்கி இறைவனை தியானித்தால் இறை அருள் அதிக பலன் தரும் என்பதால் தண்ணீரில் மூழ்கியபடி தவம் மேற்கொண்டார். அப்போது சிறுவயதில் இருந்த வானரமான நளன், அவர் மீது விளையாட்டுத்தனமாக கற்களை வீசி எறிந்தார். இதனால் கோபம் கொண்ட முனிவர், ''நீ எறியும் கற்கள் நீரில் மூழ்காமல் மிதக்கும்'' எனக் கூறி மீண்டும் தவத்தை தொடர்ந்தார். அப்போது அந்த மகரிஷி சாபமாக அளித்த வார்த்தை இன்று நமக்கு பாலம் கட்ட உதவியாக மாறி இருக்கிறது'' என்றார்.

    நளனின் உதவியுடன் பாலம் சீக்கிரமாகவே கட்டப்பட்டது. பின்பு ராமர், ராவணனிடம் போர்புரிந்து சீதையை மீட்டார்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையஆட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

    முதல் நாள் மங்கள இசையும் அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு அபிஷேக மும், 7.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராம நாம ஜெபமும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பல்சுவை பட்டிமன்றமும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடந்தது.

    2-வதுநாள் மங்கள இசையும் அதைத் தொடர்ந்து கலச பூஜையும், நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு சிறப்பு பஜனையும், கலை 9.30 மணிக்கு அபிஷே கமும், 11.15மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் 5.15 மணிக்கு ஸ்ரீராமஜெயம் எழுத்து போட்டியும் நடந்தது. 11.30 மணிக்கு மகா அன்னதான மும் நடந்தது. மாலையில் சமயசொற்பொழிவும், தீபா ராதனையும் நடந்தது.அதன் பிறகு ஸ்ரீ ராமநாம சங்கீர்த்த னமும் சாயராட்சை தீபாராதனையும், இரவு ராமபெருமானுக்கு பிச்சி, முல்லை, மல்லிகை, மரிக்கொழுந்து, ரோஜா, துளசி, பச்சை, கொழுந்து, அரளி, தெற்றிபூ போன்ற பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் ஸ்ரீராம ருக்கு ஊஞ்சலில்தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனை மற்றும் பக்தர் களுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடு களை கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் செய்து இருந்தனர்.

    • நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர்.
    • பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

    கோயம்பேடு தலத்தில் லவனும் குசனும் சிவ வழிபாடு செய்துவந்தபோது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார். அவரின் திருவருளால் லவ-குசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது ஸ்தலபுராணம்.

    ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும்; மனச் சஞ்சலம் நீங்கும்; பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளில், குச-லவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

    • பத்ராசல ராமர் ஆலயம் மலைமேல் அமைந்துள்ளது.
    • மலை அடிவாரத்தில் கோதாவரி நதி தவழ்கிறது.

    தெலுங்கானாவில் கொத்தகூடம் மாவட்டம் பத்ராத்ரியில் பத்ராசலம் அமைந்துள்ளது. நம்மம் சாலையிலிருந்து பத்ராசலம் செல்ல ரயில்வசதி உண்டு. பத்ராசலம் சாலையிலிருந்து 15 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ் செல்கிறது. பத்ராசலம் மலைமீது ஸ்ரீ சீதா ராமசந்திரமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் கோதாவரி நதி தவழ்கிறது. ராமாயணத்தில் நடந்த சம்பவங்கள் இத்தலத்தை ஒட்டி அமைந்ததால் உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.

    மேரு-மேனகாவின் புதல்வரான பத்ரா, ராமபிரான் அருளைப் பெற தண்டகாரண்யக் காட்டில் கோதாவரி நதிக்கரையில் கடுந்தவம் செய்தார். பின் ராமனை பத்ரகிரி மலைமேல் அமரக் கேட்டபோது, ஸ்ரீராமன், தான் சீதையைத் தேடிச் செல்வதால், சீதையைக் கண்டுபிடித்து இராவணனை வதம் செய்தபிறகு உன் விருப்பம் நிறைவேறும் என்றார். ஆனால், ராமனால் வாக்குத் தந்தபடி ராமாவதாரத்தில் அதனை நிறைவேற்ற இயலாததால், பத்ரமுனி யாகத்தைக் மிகத் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தார். அதன்பின் மஹாவிஷ்ணு வைகுந்த இராமனாக, வலது கையில், சங்கு, இடது கையில் சக்ரம் ஏந்தி, சீதை, லட்சுமணருடன் விரைந்து வந்து காட்சி தந்தார். ராமர் தனது வனவாசத்தின்போது சீதை, லட்சுமணனுடன் இங்கு தங்கியதாகவும், பத்ரமுனியின் வேண்டுகோளுக்கிணங்கி பத்ரமலையின் உச்சியில் அமர்ந்து காட்சி தந்ததால் இத்தலம் 'பத்ராசலம்' எனப்பட்டது.

    17ம் நூற்றாண்டில் வாழ்ந்த போகலா தம்மக்கா என்ற ராமர் பக்தை, பத்ரரெட்டி பாலம் என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தாள். ராமர், லட்சுமணர், சீதை உருவச் சிலைகளைக் கண்டாள். ஒருநாள் ராமர், அவள் கனவில் தோன்றி, "முனிவர்களும், யோகிகளும் பத்ரகிரியில் எனது உருவச் சிலையை பூஜித்தார்கள். அதைத் தேடியெடுத்துப் பூஜை செய்" எனச் சொல்ல, அதன்படி மறுநாள் அவள் சிலையைத் தேடிச் செல்லும்போது எறும்புமலை என்னுமிடத்தில் உருவச் சிலைகள் மறைந்து இருந்ததைக் கண்டு, கோதாவரி நீரை, குடங்களில் எடுத்து, அதன் மேல் ஊற்றியதும் சிலைகள் கண்ணுக்குத் தெரிந்தன. தினசரி இப்படிச் செய்து பக்கத்தில் இருந்த மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து நைவேத்யம் செய்துவந்து, பின்னர் உள்ளூர் கிராமத்தினர் உதவியோடு மண்டபம் கட்டி வழிபட ஆரம்பித்தனர். ஸ்ரீராமர் சிறிதுகாலத்திற்குப் பின் "எனது பக்தன் இவ்விடத்தில் கோவிலைக் கட்டுவான்" என தம்மக்கா தேவியிடம் தெரிவித்தார். அந்த பக்தர்தான் பக்த ராமதாசர்.

    17வது நூற்றாண்டில் காஞ்சல்லா கோபண்ணா என்ற தாசில்தாரால் கோவில் கட்டப்பட்டது. கிராமத்து மக்கள் கோவில் கட்டப் பணம் வழங்கினார்கள். பணம் போதவில்லை. அதனால் நிஜாமின் அனுமதியின்றி கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து அவர் உபயோகித்தார். செய்தி அறிந்த நிஜாம் சினமுற்று அவரைச் சிறையில் அடைத்துவிட்டார். கோபண்ணா மனந்தளராமல் ராமபிரானைப் பிரார்த்தித்தார். நிஜாம் ஆலயப் பொறுப்பை ஏற்றார். தனது பக்தனுக்காக ராம, லட்சுமணர், ராமோஜி, லட்சுமணாஜி எனக் கூறிக் கொண்டு கோபண்ணாவின் விடுதலைக்காக 6 லட்சம் மோகராக்களை நிஜாமிடம் கட்டினார்கள். கட்டியதற்காக வாங்கிய ரசீதை, கோபண்ணா அறியாமல், அவரது தலையணைக்குக் கீழே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

    காலையில் எழுந்த நிஜாம் தானிஷா, இரவில் வந்து பணம் செலுத்தியது ராம, லட்சுமணர்கள் தான் என்பதை இறையருளால் உணர்ந்து கொண்டார். கோபண்ணாவை விடுதலை செய்தார். ராம, லட்சுமணர் அளித்த பணத்தில் இரண்டு மோகராக்களை மட்டும் அடையாளமாக எடுத்துக்கொண்டார். அந்தக் காசுகள் இன்றும் ஸ்ரீசீதா ராமச்சந்திர ஸ்வாமி தேவஸ்தானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோபண்ணா தனது சிறைத் தண்டனையின்போது இடைவிடாமல் ராமனைத் துதித்துப் பாடிய 'தாசரதி சதகம்' என்னும் கீர்த்தனைகள் இன்றளவும் இசைக்கப்பட்டு வருகின்றன. பக்த ராமதாஸ் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் நேரில் பத்ராசல ராமரைத் தரிசித்துச் சில பாடல்களை இயற்றியுள்ளார்.

    பத்ராசல ராமர் ஆலயம் மலைமேல் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ சீதாராமசுவாமி. ராமரின் இடதுபக்கம் மடியில் சீதை அமர்ந்த வண்ணம் ராமனுடனும் லட்சுமணனுடன் தெய்வீக அழகுடன் காட்சி அளிப்பதை பக்தர்கள் நேரில் தரிசிக்கும்போது உணரமுடியும். மண்டபத்தின் நான்கு தூண்களிலும் அஷ்டலக்ஷ்மி, 18 விதத் தோற்றங்களில் சிவன், தசாவதாரம் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் சிலா வடிவங்களைக் காணலாம். கர்ப்பக்கிரகத்தின் மேல் மூன்றடுக்கு விமானம், அதன் மறுபக்கம் மஹாவிஷ்ணுவின் 48 விதத் தோற்றங்கள், கருடன், சிம்மம், ஸோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி அழகிய சிலைகளைக் காணலாம். விமானத்தின் சிகரம் ஒரே சலவைக்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் சம்க்ஷிப்த ராமாயணம், தாசரதி சதகம் அதை எழுதிய ராமதாசர் சிலையின் எதிரில் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சீதாராம கல்யாண தினத்தன்று உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்கின்றனர். பக்த ராமதாசர் சிறந்த பாடகர் ஆனதால் 'வாக்கேயக்காரர் உற்சவம்' மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, தெப்போத்ஸவம், தசாவதார உற்சவம், அத்யயன உற்சவம் எனப் பல உற்சவங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    செல்லும் வழி

    பத்ராச்சலம் நகரமானது ஐதராபாத்தில் இருந்து கிழக்கே 325 கிலோ மீட்டர் தூரத்திலும் கம்பம் நகரத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

    முகவரி:

    பத்ராச்சலம் கோவில் சாலை,

    பத்ராசலம்,

    தெலுங்கானா - 507111.

    • கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது.
    • அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

    தமிழ்நாட்டில் உள்ள ராமர் கோவில்களில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் பிரசித்திப்பெற்றது. தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

    'மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியானை கண்டோம்' என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம் தருகிறார். ஸ்ரீ ராமநவமி விழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை பார்ப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு : இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.

    முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.

    அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் 'மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா' என பாடியுள்ளார்.

    ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.

    பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.

    அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார்.

    இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால், தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.

    சரயுபுஷ்கரணி :

    தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறவைகள் சரணாலயமான வடுவூர் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது. கிழக்கு பார்த்த கோவிலின் முகப்பில் 61 அடி உயரமுள்ளதும், 5 அடுக்குகளும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

    கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். இந்த மண்டபத்தின் தெற்கில் உள்ள சன்னிதியில் லட்சுமி, ஹயக்கிரீவர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். பிரபையில் காளிங்கநர்த்தன கண்ணபிரான் உபய நாச்சியாருடன் விளங்குகிறார். பெருமாள் சன்னிதிக்கு நேர் எதிரில் கண்ணாடி அறையும் பெரிய திருவடி (கருட) சன்னிதியும் மேற்கு நோக்கி உள்ளன.

    மகாமண்டபத்தின் வடக்குப்பக்கம் சுவரையொட்டி வரிசையாக மூலவர்களாக விக்னேசுவரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் முதலியன ஆழ்வார்கள் உள்ளனர். இதையொட்டியுள்ள தெற்கு நோக்கிய சன்னிதிக்குள் வாசுதேவன், ஸ்ரீதேவி, பூதேவி, செங்கமலத்தாயாருடன் மூலவராகவும், ஸ்ரீ கோபாலன் ருக்மணி சத்யபாமாவுடன், உற்சவராகவும் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

    அந்த கண்ணாடியினுள்ளே கோதண்டராமரின் பிரதிபிம்ப சேவை கிடைக்கும். ஆலய தல விருட்சம் வகுள மரம் ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் அட்சயதிரிதியை, ஆடிமாதம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி, புரட்டாசியில் தேசிகன் உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசை தீர்த்தவாரி, மாசிமகம், பங்குனி மாதம் ஸ்ரீ ராமநவமியையொட்டி புனர்பூச நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அமைவிடம் : வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம்.

    • ராம நாமத்தை ஒருபோதும் விற்காதே.
    • ஆத்மாா்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்.

    அந்த வீதியில் ராம நாமத்தை சங்கீர்த்தனமான பாடியபடி, பஜனைக் குழு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஈடுபாடில்லாத ஒரு இளைஞனைக் கண்ட ஒரு ஞானி, அவருக்கு ராம நாமத்தை உபதேசித்து, "இந்த நாமத்தை ஒருபோதும் விற்காதே. அதை ஆத்மாா்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்" என்று கூறினார்.

    அவனும் ஒரே ஒரு முறை ஆத்மார்த்தமாக ராம நாமத்தை உச்சரித்தான். அதன் பிறகு அவன் அதை உச்சரிக்கவில்லை. கால ஓட்டத்தில் அவன் இறந்து போனான். எமலோகத்தில் இருந்து வந்த தூதர்கள், அவனது ஆத்மாவை கொண்டு போய், எமதர்மனின் முன்பாக நிறுத்தினர்.

    எமதர்மன், அவனுடைய பாவ- புண்ணிய கணக்கை பரிசீலித்துப் பார்த்தார். பின்னர் "நீ உன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் ராம நாமத்தை உச்சரித்திருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ, அதைக் கேள்" என்றார்.

    அப்போது 'இந்த நாமத்தை ஒரு போதும் விற்காதே' என்று ஞானி சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. உடனே அவன், இன்னது வேண்டும் என்று கேட்காமல் "ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்" என்றான்.

    திகைத்துப்போன எமதர்மன், 'ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது' என்று நினைத்து, "இந்த விஷயத்தை இந்திரனிடம் கொண்டு போகலாம், என்னோடு வா" என்றார்.

    அதற்கு அவன், "நான் வருவதென்றால் பல்லக்கில்தான் வருவேன். அத்துடன் பல்லக்குத் தூக்குபவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும்" என்றான்.

    ராம நாமத்திற்கு மதிப்பிட்டு சொல்லும் வரை அவன் சொன்னதை செய்துதான் ஆக வேண்டும் என்பதால், எமதர்மன் அதற்கு ஒப்புக்கொண்டார். அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

    இந்திரனோ, "ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது. பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்" என்றார்.

    'எமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.

    அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.

    அவரும் "ராம நாம மகிமை சொல்ல என்னால் ஆகாது. வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம், வாருங்கள்" என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படி ஆயிற்று.

    அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை' என்றனர்.

    "இந்த ஆன்மாவைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே.. இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா?" என்று கூறி, பல்லக்கில் இருந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டாா், மகாவிஷ்ணு.

    • வெண்ணைத்தாழி வைபவம் இங்கு மிகவும் சிறப்பு
    • திருபவித்ரோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும்

    ஸ்ரீயப் பதியான ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சகை வடிவில் கோலங்கொண்டிருக்கும் திருத்தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முப்பெருமைகளால் அமையப் பெற்ற திருத்தலம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருத்தலம் ஒன்றே என்றால் அது மிகையல்ல.

    மூலவர் பரவாசுதேவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் கதையுடன் தங்க கவசம் பூண்டு கம்பீரமாய்க் காட்சி தருகின்றார். ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் அருள் வழங்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

    செண்பகவனத்து முனிவர்களின் வேண்டுகோளின் படி பிருந்தாவனத்தில் அன்று கண்ணன் செய்து காட்டிய லீலைகளை முனிவர்களுக்கும் காட்டி அருளினான். பரவாசு தேவனாக முதல் சேவை தொடங்கி 323-வது சேவையாக ஸ்ரீவித்யாராஜ கோபாலனாக சேவை சாதித்தருளினான். இதனைக் கண்ட முனிவர்கள் இத்திருக்கோலத்துடனே என்றும் காட்சி தந்தருளப் பிரார்த்தித்தனர்.

    உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால் நும்இச்சை சொல்லி நும்தோள் குலைக்கப்படும் அன்னை

    மன்னப்படு மறைவாணனை வண்துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே என்று நம்மாழ்வாரால் போற்றப்பட்ட ஸ்ரீராஜகோபாலனை மன்னையம்பதிக்கு எழுந்தருளச் செய்த கோபில, கோப்பிரளய மகரிஷிகளைப் போற்றி ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் அழகை இனிக் காண்போம்.

    மாடு மேய்க்கும் கண்ணனாக தான் மேய்க்கும் பசுவிடம் சிறிது சாய்ந்து கொண்டு ஒற்றை ஆடையுடன், ஒரு காதில் ஓலையும், ஒரு காதில் குண்டலமும் விளங்க ஒரு கையின் நுனியில் மும்மடிப்புள்ள செண்டாயுதமும் ஏந்தி இடது திருக்கரத்தை சத்யபாமாவில் தோளில் பதியச்செய்த வண்ணம், திருமுடியில் சுற்றிய திருப்பரி வட்டமும் இடையில் ஒற்றை ஆடையுடன் அழகுக்காட்சி நல்கும் நம் கோபாலன் மந்தகாசம் தவழும் செம்பவளச் செவ்வாயுடன், அருள் வெள்ளம் பாய்கின்ற திருமார்பின் அழகும், அடியவர்களை தன் அழகுப் புருவங்களால் ஈர்க்கும் ஆற்றலும் மிக்க இறைவனாக விளங்கக் காண்கிறோம்.

    ஆலயத்தின் தென்பகுதியில் ஹேமாப்ஜ நாயகி என்றும், செண்பகலெஷ்மி என்றும் செங்கமலத்தாயார் என்றும் போற்றப்படும் எழில் கொஞ்சும் தாயார் சன்னதி அமைந்துள்ளது.

    தாமரை மலரில் வீற்றிருக்கும் தாயார் தன் இரு பக்கங்களிலும் யானைகளுடன் கெஜலெட்சுமியாக அருட்காட்சி நல்குகிறாள்.

    இவை தவிர ஸ்ரீ ராமர் சன்னதியும், ஆழ்வாராதிகளுக்கென தனித்தனி சன்னதிகளும், ஆச்சார்யார்களைப் போற்றும் வண்ணம் அவர்களுக்கென தனி சன்னதிகளும் கொண்டு அழகுற விளங்குகிறது இவ்வாலயம்.

    இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் 18 நாள் பிரமோற்சவமும், தொடர்ந்து 12 நாள் நடை பெறும் விடையாற்றி விழாவும் பிரசித்தி பெற்றது. கோகுலத்தில் குழந்தை கண்ணன் ஆயர் வீடுகளில் புகுந்து வெண்ணை திருடி தின்னும் வைபவத்தை சித்தரிக்கும் வகையில் வெண்ணைத்தாழி வைபவம் நடை பெறுகிறது.

    திருவிழா அன்று ராஜகோபாலசாமி தவழும் கண்ணன் வடிவு அலங்காரத்தில் கையில் வெள்ளி குடத்துடன் பல்லக்கில் கோவிலில் இருந்து வீதி உலா காட்சியாக புறப்படுவார். வீதிகள் தோறும் பெண்களும், பக்தர்களும் கண்ணனுக்கு பிரியமான வெண்ணை மற்றும் விசிறி கொடுத்து வணங்குவார்கள்.

    மதியம் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங் காரத்திலும், குதிரை வாகனத் திலும் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். காலையில் தொடங்கிய விழா இரவு வரை நடைபெறும் இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பகவான் கண்ணன் கோப்பிரளயம் முனிவர்களுக்கு 32 திருக்கோலங்களில் தரிசனம் கொடுத்துள்ளார். ஆனால் மூலக் கிரந்தத்தில் 30 அவதாரங்களை மட்டுமே குறிப்புகள் உள்ளது. ஒருவேளை விரிவுக்கு அன்றி 30 மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

    30 திருக்கோலங்கள்-

    1. அவதார வைபவம்

    2. பூதனா சம்ஹாரம்

    3. யசோதனையின் மடியில் இருந்து பால் பருகியது.

    4. சாயக் கொண்டையுடன் மாயன் தவழ்ந்து வந்தது.

    5. நவநீத நாட்டியம்

    6. ஆநிரை மைத்தல்

    7. வெண்ணைக் களவு

    8. புன்னை மரக்கண்ணன்

    9. புல்லாங்குழல் இசைத்ததும் பசுக்கள் பால் சுரந்ததும்.

    10. உரலிடை யாப்புண்டது.

    11. மாடு மேய்க்கையில் கோலை ககீழே ஊன்றி அதன் மேல் திருமுடி வைத்து கட்டியது.

    12. கலமும் கயிறும் கொண்டு பால் கறந்த அழகு.

    13. கபித்த& வத்ஸாஸ-ரர்களின் வதம்.

    14. காளிங்கநர்த்தனம்

    15. பெண்களின் மஞ்சள் பூச்சை தம் திருமேனியில் காட்டி அருளின பெண்ணாளன் பெருமை.

    16. பொன்னாழியும், புரிசங்கமும் தண்டும் வில்லும் சார்த்தி சேவை தந்தருளியது.

    17. குறவை கூத்து

    18. இடையருக்கு தம் அவதாரங்களை அப்படியேகாட்டி ஆட்கொண்டது.

    19. இடையர்களுடன் அமுதுண்ட காட்சி.

    20. கோமர்த்தனம் எடுத்து கல்மாரி காத்தது.

    21. பிரம்மனால் அபகரிக்கப்பட்ட நிலை.

    22. கோபிநாதனின் கோபிகா லீலை காட்சி.

    23. பாரிஜாதா பஹரணம்.

    24. ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்.

    25. குவலயா பீட வதம்.

    26. முஷ்டிக காணுர வதம்.

    27. ருக்மணி சத்யபாமாவுடன் பள்ளியறை காட்சி.

    28. வாதுதீர்க்க தூது சென்ற சேவை.

    29. பார்த்தசாரதியாக கீதை உபதேசம் செய்தது.

    30. ருக்மணி சத்யபாமாவுடன் ஒரு வண்டு போல் எழுந்தருளி 3 வளைவு கொண்ட சாட்டை கயிறுடன் கூடிய பொற்கோலை ஏந்தியும், விக்கிரக வடிவத்தில் சேவை தந்து அருளுவது.

    இக்கோவிலில் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் திருத்தேருடன் தாயார் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உயர் அரங்கர்க்கு கன்னி உகந்தளித்த ஆண்டாளாகவே செங்கமலத் தாயார் அருள்பாலிப்பதாக ஐதீகம். 10 தினங்கள் வெவ்வேறு வாகனங்களில் தாயார் புறப்பட்டு ஆலயத்தினுள் உள்ள தாயார் பிரகாரத்தில் உலாவரும் காட்சி மிக உன்னதமாக இருக்கும்.

    நிறைவு நாளில் திருத்தேரில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாயாருக்கென தனித்தேர் வேறு எங்கும் கிடையாது என்பது இதன் தனிச்சிறப்பு. ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு நாளன்று கோபாலன் பாமணி ஆற்றுக்குச் சென்று தீர்த்தவாரி கண்டருளி பின்னர் திருப்பாற்கடலின் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலெட்சுமி நாராயணப் பெருமாள் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

    ஆவணி மாதத்தில் `திருபவித்ரோத்ஸவம்' என்று போற்றப்படும் விசேஷமான உற்சவம் 10 தினங்கள் நடைபெறும். இந்நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் பூஜைகளில் குறைபாடுகள் இ ருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக 365 வகையிலான பூஜைகள் நடைபெறும். இவ்விழா நாட்களில் யாகசாலையில் பல்வேறு ஹோமங்களைச் செய்து பெருமாளுக்கு பூஜைகள் செய்வது மிகச்சிறப்பான ஒன்றாகும்.

    இந்நாட்களில் பெருமாள் திருப்பவித்ரமாலைகளை அணிந்து காட்சி தருவார். இவ்விழாவின் இறுதி நாளில் தீர்த்தவாரி ஹரித்ராநதியில் நடைபெற்று விழா நிறைவுறும். மேலும் இம்மாதத்தில் ஸ்ரீஜெயந்தி எனப்படும் கண்ணன் பிறப்பு வைபவம் சிறப்பாக உரியடித்திருவிழாவுடன் நடைபெறுவது மிகச்சிறப்பு அம்சமாகும்.

    • `வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
    • கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அழகாய் காட்சி தருகிறார்.

    வடசென்னை, முத்தியால் பேட்டையில் இத்திருக்கோயில் பவளக்காரத் தெருவில் உள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். திருமழிசையாழ்வாரின் அபிமான தலம் என்று சொல்லப்படுகிறது.

    மூலவர் - ருக்மிணி பாமா சமேத ஸ்ரீவேணுகோபாலன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, மிக அழகாய் காட்சி தருகிறார்.

    தனி சன்னிதியில் ராமர், ஸ்ரீனிவாசர், ஆண்டாள், சுதர்சனர், ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்கின்றனர். உற்சவ மூர்த்திகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு.

    திருமழிசையாழ்வார், இங்கு சில காலம் தங்கி, பெருமாளை மங்களாசனம் செய்திருக்கிறாராம். திருமழிசையாழ்வாரின் திருவுருவம், சில பாதுகாப்பு காரணங்களுக்காக சில காலம் இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் திருமழிசையாழ்வாரின் `வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

    ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள்

    "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. அலங்காரங்கள் மிக நேர்த்தியாய் செய்யப்பட்டு, உற்சவங்கள் கண்டருளும் பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும். ராப்பத்து உற்சவத்தில் ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் மிகவும் அழகு.

    • தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள்.
    • அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.

    இலங்கை யுத்தம் முடிந்து ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வழியில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷி வரவேற்று ஆசி கூற ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டி லட்சுமணன் ஆஞ்சநேயர் ஆகியோர் தங்கினர். அப்போது அங்கு திரிகால ஞானியான நாரதர் வந்து சேர்ந்தார். நாரதரை வணங்கி ஸ்ரீராமருக்கு ஆசி கூறிய நாரதர் ராமா முக்கியமான விஷயமாகவே உன்னை சந்திக்க வந்தேன். இலங்கை யுத்தம் முடிந்தாலும் அது இன்னமும் முற்றுப் பெறவில்லை. உனது வில்லுக்கு இன்னமும் வேலை உள்ளது என்று கூற திகைத்த ஸ்ரீராமர் 'நாரத மகரிஷியே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? விளக்கமாக கூறுங்கள் என்று வேண்டினார்.

    ராமா! ராவணன் அழிந்தாலும் அரக்கர்கள் வாரிசுகள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இலங்கை யுத்தத்துக்கு பழிக்கு பழி வாங்க சபதம் செய்துள்ளார்கள். இரக்த பிந்து இரக்த ராட்சகன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கு அடியில் அமர்ந்து தவம் செய்கிறார்கள். இவர்கள் தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள். பிறகு அவர்களால் உலகுக்கு பெரும் அழிவு ஏற்படும். எனவே இவர்களை நீ உடனே சம்ஹாரம் செய்ய வேண்டும்' என நாரதர் கூறினார்.

    மகரிஷியே நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் இப்போது நான் அயோத்தி செல்வதில் தாமதிக்க இயலாது. குறிப்பிட்ட நாளில் நான் அயோத்தி செல்லாவிடில் தம்பி பரதன் தீக்குண்டம் இறங்கி உயிரை விட்டுவிடுவான் என ராமர் கூற 'அப்படியானால் சரி உனக்கு பதில் தம்பி லட்சுமணனை அனுப்பு என நாரதர் கூற அவன் என் நிழல் ஆயிற்றே என்னை விட்டு பிரியமாட்டான் என்று சபதம் செய்துள்ளானே என்ற ராமர் கண்களில் அனுமார் பட அனுமாரை அழைத்தார் 'அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.

    அரக்கர்களின் ஆணிவேரை அழிக்கும் யுத்தமல்லவா? தேவர்கள் வாழ்த்தினர். திருமால் சங்கு சக்கரத்வீயும தனது அவதாரமான ஸ்ரீஹயக்கிரீவா ஸ்ரீநரசிம்மா ஸ்ரீவராஹர் ஸ்ரீகருடன் ஆகிய அவதாரத்தையும் வழங்க பிரம்மா பிரம்மா கபாலத்தை வழங்க தேவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தந்திட ஆஞ்சநேயர் 10 கரங்களுடன் காட்சி தந்தார். விரைவாக செல்ல கருடன் தனது சிறகுகளை தந்தான். அனுமார் புறப்படும் நேரம் சிவபெருமான் வந்து சேர்ந்தார். 10 கரங்கள் 10 கரத்திலும் ஆயுதங்கள். எதை தருவது? பார்த்தார் சிவன் தன் நெற்றிக்கண்ணையே தந்துவிட்டார். மூன்று கண்கள் 10 கரங்களுடன் புறப்பட்ட வீர தீரம் நிறைந்த ஸ்ரீதிரிநேத்திர தசபுஜ ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் வாழ்வில் வளங்கள் பல பெற்று வாழலாம்.

    1. ஹயக்ரீவர் - எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர். அவருடைய அம்சமாக சகல விதமான ஞானத்தையும் பெற்ற அறிவாளி ஹனுமான். அவருடைய சிறந்த ஞானத்தை ராமனே வியந்து பாராட்டுகிறான். இவன் ருக்வேதம். யஜுர் வேதம்; சாம வேதம் இவற்றைப் பரிபூரணமாக அறிந்தவன். இலக்கணங்களை நன்றாகக் கற்றவன். இவன் பேச்சில் குறைபாடு ஒன்றுமே இல்லை. மிக விஸ்தாரமாகவும் மிகவும் சுருக்கமாகப் பேசி அளவோடு நிதானமாக மதுரமான குரலில் வார்த்தைகளை பேசும் ஆற்றல் அனுமானிடம் உள்ளது.

    2. வராஹர் - மஹாவிஷ்ணுவின் வாராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று பூமி தேவியைக் கண்டுபிடித்து இரண்யாஷணியிடமிருந்து தேவியை மீட்டார். ஹனுமானும் யாரும் செல்ல முடியாத இலங்கைக்குச் சென்று சீதையை கண்டுபிடித்து ராவணனிடமிருந்து மீட்பதற்கு உதவினார்.

    3. நரசிம்மர் - தம்முடைய பக்தனான பிரகலாதனுக்கு தீங்கு விளைவித்த இரண்யனை ஆக்ரோஷத்துடன் சம்ஹாரம் செய்தார். இங்கே தம்முடைய தெய்வமான சீதாதேவிக்கு தீங்கு விளைந்ததற்காக மாருதி ராவணனுடைய சேனை சேனாதிபதிகளை மந்திரிக்குமாரர்கள் முதலானோரை வதம் செய்து இலங்கையையும் எரியச் செய்தார்.

    4. கருடன் - பஷிகளுக்கெல்லாம் தலைவனாக கருடன் போற்றப்படுகிறார். பஷிராஜன் என்றே அவருக்குப் பெயர். ஆகாயத்தில் எல்லா உலகங்களாலும் எங்கும் பறக்கும்; வல்லமை படைத்தவர். அவருடைய அம்சமாக அவருடைய சக்தியால்தான் அனுமான் பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்தார். மீண்டும் கருடனைப் போலவே ஆகாய மார்க்கமாக கடலைக் கடந்து ராமனிடம் வந்து சேர்ந்தார்.

    இப்படி நால்வருடைய அம்சமும் சக்தியும் கொண்டவர் ஹனுமான். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த நால்வரோடு ஹனுமானையும் சேர்த்து பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று விசேசமாக கொண்டாடுகிறோம.; ஈரேழுலோகங்கள் தோன்றி அழிந்து போனாலும் நீ மட்டும் இன்று போல் என்றும் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று பன்முறை வாக்கு சாதுர்யம் பெற்றவர்.

    ×