search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mythology"

    • வாள் வச்ச கோஷ்டம் என்றால் வாளை வைத்த கோவில் என்று பொருள்.
    • மகிஷாசுர மர்த்தினி தேவி திருவிதாங்கூர் மன்னர்களின் குடும்ப தேவதை.

    இன்றைய குமரி நிலம் தொன்மையும், புராதன பாரம்பரியங்களும் மிக்க நிலம் என்றால் மிகையாகாது. இந்த நிலத்தில் வாழும் மக்களெல்லாம் நீண்ட பாரம்பரியம் கொண்ட வரலாற்றின் குழந்தைகள் என்று கூறலாம்.

    நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைகள் செய்த செயல்கள் ஆகியவற்றை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பளிக்கின்றன. அறம் போதித்தவர்கள், ஆன்மிகம் வளர்த்தவர்கள் இந்த மண்ணில் ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். தெய்வங்கள் எழுந்தருளியதாக நம்பிக்கைக் கொள்ளும் இடங்களில் பெரும் கோவில்கள் கட்டிய மன்னர்களும், கோட்டைக் கொத்தளங்களுடன் ஆட்சியை தக்கவைக்க போர்களுடனேயே வாழ்ந்த மன்னர்கள் விட்டுச் சென்றுள்ள அடையாளங்கள் பல. அது பற்றிய பல்வேறு சம்பவங்கள் இப்போதும் பேசப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் குமரி நிலத்தின் ஒவ்வொரு ஊரின் பெயரின் பின்னாலும் ஒரு கதையுடன் கூடிய வரலாறு இருக்கின்றது.

    குமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த ஊர் தான் வாள் வச்ச கோஷ்டம். வாள் வச்ச கோஷ்டம் என்றால் வாளை வைத்த கோவில் என்று பொருள் கொள்ளலாம். அதாவது போருக்கு பயன்படுத்தப்படும் வாளை வைத்த கோவில் என்றும் பொருள் கொள்ளலாம்.

    இந்த ஊர் நாகர்கோவிலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அழகான குளங்கள், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள், பச்சையாய் பரவி நிற்கும் வாழை மரங்கள், ரப்பர் மரங்கள் என இந்த ஊர் இயற்கை எழில் நிறைந்து காட்சி தருகிறது.

    வாள் வச்ச கோஷ்டம் என்னும் இந்த அழகான ஊரின் பெயருக்கான காரணத்தை நாம் கண்டடைய வேண்டுமெனில் அதற்காக நாம் மன்னராட்சிக் காலத்திற்கும், அதற்கு முந்தைய புராண காலத்திற்கும் செல்ல வேண்டும். இந்த ஊரின் தனித்துவ அடையாளமாக அமைந்துள்ளது இங்குள்ள மகிஷாசுர மர்த்தினி கோவில் ஆகும்.

    இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் மகிஷாசுர மர்த்தினி தேவி திருவிதாங்கூர் மன்னர்களின் குடும்ப தேவதையாக இருந்துள்ளார். மகிஷாசுர மர்த்தினி தேவியின் பாதத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன்பு தங்களது வாளை வைத்து வணங்கி முதற்குருதி தொட்டு கிளம்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இது போன்று மன்னர் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் நாட்டை விரிவாக்கம் செய்து பத்மநாப சுவாமிக்கு சமர்ப்பணம் செய்த பின்னர் தனது பெயரை பத்மநாபதாசன் என்று மாற்றியபிறகு மகிஷாசுரமர்த்தினி கோவிலுக்கு வந்து தேவியின் முன்பு தனது வாளை சமர்ப்பித்து வழிபட்டதால் இந்த கோவிலுக்கு வாள் வச்ச கோஷ்டம் என்று பெயர் வந்ததாகவும், இதுவே பின்னர் ஊரின் பெயராக நிலை பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில் தமிழ், கிரந்தம், வட்டெழுத்து மொழி வடிவங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. கோவிலின் தெற்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு, வேணாடு மன்னரின் உதவியுடன் அரங்க நாயகம் என்பவரால் கி.பி. 1234-ல் கட்டப்பட்டதாகக் கூறுகிறது. வீர ரவி கேரள வர்மன். கருவறை முன்புறம் உள்ள முகமண்டபம் முள்ளமங்கலம் திருவிக்கிரமன் நம்பூதிரியால் கி.பி.1620-ல் கட்டப்பட்டதாக கூறுகிறது.

    இக்கோவிலின் உள்பகுதியிலிருந்து ஒரு சுரங்கப்பாதை செல்கிறது. இது பத்மநாபபுரம் அல்லது சாரோடு அரண்மனைக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது இந்தச் சுரங்கப்பாதை மூடிய நிலையில் உள்ளது.

    இந்த கோவிலை மகாபாரத கதையுடன் இணைத்து கூறப்படுவதும் உண்டு. பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வன வாசத்திற்கு செல்லும் முன்பு தங்களது ஆயுதங்களை மகிஷாசுரமர்த்தினி குடி கொண்ட இந்த இடத்தில் வைத்து பூஜை செய்ததாகவும், பரசுராமர் ரத்தம் சிந்துவதை நிறுத்தும் வகையில், இங்கு வந்து தனது வாளைக் கழுவி தேவியின் முன்பு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த கோவிலை ஒரு சிற்பக் கலையின் பொக்கிஷம் என்று கூறினால் அதில் மிகையில்லை. அந்த அளவுக்கு இக்கோவிலின் வாசலில் காட்சி தரும் துவார பாலகிகள் முதல் உள் மண்டபங்களின் தூண்களில் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ள தெய்வங்களின் சிலைகள் வரை ஒவ்வொன்றும் காண்போரை வியப்படைய செய்கின்கின்றன. இவையெல்லாம் அன்றைய சிற்பக் கலைக்கு கட்டியம் கூறுவதாகவும் உள்ளன.

    இந்த கோவிலில் மகிஷாசுர மர்த்தினி தேவி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த கோவிலாக மகிஷாசுர மர்த்தினி எழுந்தருளியுள்ள இக்கோவில் பார்க்கப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள மகிஷாசுர மர்த்தினி கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினரும் மாதம் தோறும் இங்கு வந்து வழிபட்டும், சிறப்பு பூஜைகளும் செய்கின்றனர்.

    இப்போது மகிஷாசுர மர்த்தினி கோவிலும் வாள் வச்ச கோஷ்டம் ஊரும் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. வாள் வச்ச கோஷ்டம் ஊரில், குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற 12 சிவாலயத் திருத்தலங்களில் 11 -வது சிவாலயமான திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயம், மும்மத வழிப்பாட்டுத் தலமான பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. வாள் வச்ச கோஷ்டம் தற்போது பேரூராட்சியாக உள்ளது.

    • இறைவனுக்கு அனைவரும் ஒருவர் தான்.
    • இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான பக்தியை தான்.

    நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்

    போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்

    மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்

    மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

    -என்று பாடிய நந்தனாரை திருநாளைப்போவார் நாயனார் என்று அழைக்கின்றனர்.

    இறைவனுக்கு அனைவரும் ஒருவர் தான். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான பக்தியை. இறைவன் சாதியையோ, மதத்தையோ பார்ப்பதில்லை.

    அந்த காலத்தில் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற நிலைமை இருந்தது. சோழநாட்டில் ஆதனூர் என்ற ஊரில் நந்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் புலையர் குலத்தில் பிறந்தவர். ஆயினும் அவர் இறைவன் மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.

    சிவபெருமானை தன் உயிரினும் மேலாக கருதி, சிவபெருமான் மீது அளவிகடந்த பக்தியுடன் வாழ்ந்து வந்தார். கோவில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது, யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது தான் இவருடைய வேலை. அவ்வாறு கிடைக்கும் பணத்தை தனக்காகவும், தன் குடும்பத்துக்காக செலவு செய்யாமல் ஈசனுக்கும், ஈசனின் திருப்பணிகளுக்காகவே அனைத்து பணத்தையும் செலவு செய்வார்.

    அந்த காலக்கட்டத்தில் தீண்டத்தகாதவன் என்ற கொடுமையால் அவரால் கோவிலுக்குள் செல்லமுடியாத நிலைமை இருந்தது. அதனால் சிவன் கோவிலின் வாசலில் நின்றபடிதான் சிவபெருமானை நினைத்து வணங்கி உருகுவார். எப்படியாவது கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கிவிட வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசை அவருக்கு இருந்தது. ஆனால் சாதியின் கொடுமை அவரை தடுத்தது.

    மனிதன் சுயலாபத்திற்காக சாதியை உருவாக்கினான். அந்த சாதி தான் பக்திக்கு தடையாக இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் ஆதனூரை அடுத்துள்ள திருப்பங்கூரில் உள்ள சிவலோகநாதர் திருக்கோவிலில் உள்ள சிவபெருமானை சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.

    ஆனாலும் அங்கேயும் தீண்டாமை தடுத்தது. ஆனாலும் அங்கு சென்று வணங்கிவிட்டு வரலாம் என்று நேராக அந்த ஊருக்கு சென்றார். நந்தனார். அங்கு சென்று இறைவனை வணங்கினார் நந்தனார். ஆனால் வாசலில் நின்று சிவபெருமானை அவரால் தரிசிக்க முடியவில்லை. காரணம் லிங்கத்தின் முன்பாக இருந்த நந்தி லிங்கத்தை மறைத்து நின்றது.

    அதனைப்பார்த்த நந்தன் சிவபெருமானை பார்க்கமுடியாத ஆதங்கத்தில் அழுதுபுலம்பினார். அப்போது நந்தனின் உன்னதமான பக்தியின் காரணமாக சிவபெருமான் நந்தியை சற்று விலகி இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

    உடனே நந்தி வலதுபக்கமாக நகர்ந்தது. உடனே கருவறையில் உள்ள ஆனந்த சுடராய் அருள்வடிவாய் இருந்த சிவபெருமானை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து இறைவனைக் கண்டு ஆனந்தம் கொண்டார் நந்தனார்.

    இன்றும் இக்கோவிலில் நந்தி பகவான் சற்று விலகியே இருக்கிறார். அதாவது நந்தனாருக்கு தரிசனம் தரவேண்டும் என்பதற்காகவே ஈசன் சொற்படி நந்தி பகவான் வலது பக்கமாக நகர்ந்துள்ளார்.

    இந்த நிகழ்வுக்கு பிறகு சைவ சமயத்தின் மேன்மையான திருக்கோவிலாக கருதப்படும் சிதம்பரம் நடராஜனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் நந்தனாருக்கு ஏற்பட்டது. ஆனால் இங்கேயும் சாதி குறுக்கே நின்றது. இருந்தாலும் எப்படியாவது தில்லை அம்பலவானனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவரால் தில்லைக்கு செல்லமுடியாமல் போனது. இப்படி பல நாட்கள் சிதம்பரம் நடராஜரின் தரிசனம் நந்தனாருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

    சிதம்பரம் சென்று என் ஈசனை தரிசிக்க முடியாதென்றால் இந்த பூலோகத்தில் இருந்து என்ன பயன் என்று உறுகி நின்றார். இப்படி நந்தனாரின் ஆசை நிறைவேறாமல் தடைபட்டுக்கொண்டே இருந்தது. இப்படி நாளைக்கு சென்றுவிடுவோம் என்று எண்ணி எண்ணி நாட்கள் கடந்துகொண்டே வந்தது. இதுநாளேயே நந்தனார், திருநாளைப்போவார் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த நிலை ஒருநாள் தில்லையில் நடனம் பிரியும் நடராஜரை தரிசிக்க சென்றார் நந்தன். தில்லையில் ஊருக்குள் செல்லத்தயங்கிய நந்தன், ஊருக்கு வெளியே நின்று கோபுரத்தை தரிசனம் செய்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றால் என்ன சிதம்பரமே சிவன் தானே என்று உணர்ந்து பூமியில் உள்ள மண்ணை கையில் எடுத்து நெற்றியில் திருநீராக பூசிக்கொண்டார்.

    மேலும் ஊருக்கு வெளியிலேயே தங்கி இருந்தார் நந்தனார். அன்று இரவு கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் தில்லைவாழ் அந்தணரின் கனவில் தோன்றிய ஈசன், `என் அடியவன், என் பக்தன் நந்தன் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கிறான். அவனை உரிய மரியாதையுடன் என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றார் ஈசன்.

    மறுநாள் அந்தனர்கள், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி பூரண கும்ப மரியாதையுடன் நந்தனை கோவிலுக்குள் அழைத்து வந்தனர். அந்த நிலையில் கோவிலுக்குள் நுழையும் போது கூட்டத்தில் இருந்த அந்தணர் ஒருவர், நந்தனர் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தார்.

    தாழ்த்தப்பட்டவன் கோவிலுக்குள் நுழைவதை என்னால் ஏற்கமுடியாது. இறைவன் கனவில் சொன்னது உண்மையாகவே இருக்குமானால் இங்கு ஒரு அக்னிபரீட்சை வைத்து தான் நந்தனை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். நந்தன் அக்னியில் இறங்கி திரும்பிவரட்டும். அதன்பிறகு அவரை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்றார் அந்த அந்தணர்.

    அதனை கேட்ட நந்தன் எந்த பதட்டமும், பயமும், அதிர்ச்சியும் அடையவில்லை. என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை செய்த இறைவன் நான் சிதம்பரம் வருவதற்கும் ஒரு அற்புதம் செய்து அனுப்பி இருக்கிறான். இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க இயலாது. இறைவன் சித்தம் இதுவென்றால் நான் எதையும் செய்ய தயார் என்றார் நந்தனார்.

    அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அந்த அக்னிகுண்டத்தில் இறங்கினார் நந்தனார். தீயில் இறங்கி எந்த தீங்கும் இன்றி பட்டாடை உடுத்தி அழகிய தெய்வீகத்தோற்றத்துடன் வெளிப்பட்டார். பின்னர் கோவிலுக்குள் சென்று ஈசனை கண்குளிர கண்டு ரசித்தார். மேலும் கருவறையில் நுழைந்து அங்கு ஒரு தீப்பிழம்பு போல தோன்றி அங்கு ஒரு ஜோதியாய் இறைவனோடு ஐக்கியமானார் நந்தனார்.

    திருநாளைப்போவார் நாயனாரின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருநாளைப்போவார் நாயனாரின் குருபூஜை இன்று.

    • வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது.
    • முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன்

    முதலில் வனங்களில் சுற்றித்திரிந்த மனிதன், பின்னாளில் குழுக்களாக வாழத்தொடங்கினான். அந்த குழுக்களுக்கு ஒருவரை தலைவனாக நியமித்தான். இப்படி தொடங்கியதுதான் மன்னராட்சி முறை.

    சமவெளிகளுக்கு வந்த மனிதர்களை கட்டிக்காக்கும் பொறுப்பு அன்றைய காலகட்டத்தில் மன்னர்களுக்கு இருந்தது. அவர்கள் ஆட்சி பொறுப்பை பார்த்ததோடு, எதிரி நாட்டு மன்னர்களிடம் இருந்து தங்களது மக்களை பாதுகாக்க பல்வேறு படைபிரிவுகளோடு வசித்து வந்தனர்.

    அதுமட்டுமின்றி அரசர்கள் தாங்கள் குடும்பத்துடன் வசிக்க பிரமாண்ட அரண்மனைகளை கட்டினர். அப்படி கட்டப்பட்ட அற்புதமான ஒரு அரண்மனை குமரி மாவட்டத்தில் இன்றைய மணக்குடி கடற்கரை பகுதியில் இருந்தது என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். அது வெங்கல கோட்டை என்று அழைக்கப்பட்டது. அந்த கோட்டையில் இருந்து ஆட்சி செய்து வந்த அரசன்தான் வெங்கலராஜன்.

    தற்போது வெங்கலராஜபுரம் என்று அழைக்கப்படும் முறம்பில் அரண்மனை அமைத்து ஆண்ட குறுநில மன்னன் வெங்கலராஜன். இலங்கையில் உள்ள குறுங்கடல் சூழ்ந்த புத்தளம் என்கிற குறுநாட்டில் வீரசேகர சோழனுக்கும் தங்கப்பொன்னம்மை என்னும் காயத்ரி தேவிக்கும் மகனாக பிறந்தவர். 1525-ம் ஆண்டு (ஆங்கில ஆண்டு) பிறந்துள்ளார். அதாவது ஆவணி மாதம் 1-ந் தேதி பிறந்துள்ளார்.

    கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கிய வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது. அதாவது இரும்பின் மேல் பச்சிலை மூலிகையை தடவி அதை தங்கமாக்கும் வித்தை அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

    இலங்கையின் கண்டி மன்னனின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட புத்தளம் என்னும் குறுநிலப்பகுதியை வெங்கலராஜன் ஆட்சி செய்தான். முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன் இவர் தான். இலங்கை மண்ணில் மணமுடித்த வெங்கலராஜனுக்கு துறைமுகத்தழகி, சங்குமுகத்தழகி என்று 2 மகள்கள் பிறந்தனர். இருவரும் கல்வியிலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர்.

    அழகிலும் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பொலிவுடன் காணப்பட்டனர். தந்தை வீரசேகரசோழன் காலமான பின்பு வெங்கல ராஜனுக்கு பல்வேறு வழிகளில் தொல்லைகள் வந்து சேர்ந்தன. குறிப்பாக வட இந்தியாவில் இருக்கும் இன்றைய ஒடிசா கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாலும், ஆந்திர மன்னர்களாலும் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    அந்த காலக்கட்டத்தில் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் வட இலங்கையின் செல்வ வளங்களை கவர்ந்து செல்ல முனைந்தது. புத்தளம் என்னும் குறுநிலத்தை ஆண்டு வந்த வெங்கலராஜனிடம் தங்கப் பாளங்களும், நகைகளும் இருப்பதை அறிந்த போர்ச்சுக்கீசியர்கள், வெங்கலராஜனுக்கு தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினர்.

    வெங்கல ராஜனிடம் இருந்த செல்வமே அவனுக்கு எமனாக வந்தது. இதனால் தன் வம்சத்தை தன்னோடு அழிந்து போக விடாமல் தடுக்கவும், தலைமுறையை காத்திடவும் நினைத்தான். இதனால் குமரி நாட்டுக்கு வர பெரிய தோணி ஒன்றில் பொன்னையும், பொருட்களையும் ஏற்றினான். இன்னொரு தோணியில் வித்தகர்களையும், கலைஞர்களையும், வைத்தியர்களையும், அண்ணாவிகளையும், கொல்லர், பொற்கொல்லர்களையும், நிர்வாக அமைச்சர்களையும் ஏற்றினான். மூன்றாம் தோணியில் குடும்பத்தார்களையும் ஆவணங்களையும் ஏற்றினான்.

    அந்த தோணிகள் இலங்கை புத்தளத்தில் இருந்து புறப்பட்டு தென்குமரியை வந்தடைந்தன. இப்போதைய மணக்குடிக்கு வந்த அவர்கள் பாசறையையும், காயலுக்கு கிழக்கே கன்னியாகுமரி சாலையில் உள்ள முறம்பில் அரண்மனையையும், குடியிருப்பையும் அமைத்தனர்.

    முகிலன் தலைமையில் உள்ள ஆட்சியாளர்கள் தங்குவதற்கு ஒரு குடியிருப்பை நிறுவி அவர்களை அங்கே தங்க வைத்தான். இன்றும் அந்த இடம் முகிலன்குடியிருப்பு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. வெங்கலக் கதவுடன் அரண்மனை கட்டி ஆண்டதால் இன்றும் அந்த இடம் வெங்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது. பத்திரப் பதிவுகளிலும் வெண்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது.

    இப்போது இருக்கும் தலக்குளத்திற்கு அன்றைய பெயர் வாட்டக்களி பெரியகுளம் ஆகும். இன்றும் அரசு ஆவணங்களில் இந்த பெயரே உள்ளது.

    வெங்கலராஜனின் 2 மகள்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தனர். தன் மகள்கள் வளர வளர வெங்கலராஜன் மனதில் பயமும் வளர தொடங்கியது. அழகே ஆபத்தாகி விடுமோ? என்று அஞ்சினான். ஆகவே தன் மகள்கள் இருவரிடமும் தன்னுடைய அனுமதி இன்றி புதிய இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும், குறிப்பாக கோட்டையை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் கட்டளையிட்டான்.

    இதற்கிடையேல் வெங்கலராஜன் அரண்மனை, அதைச் சுற்றிலும் குடியிருப்புகள், அகன்ற வீதிகள் கட்டி முடித்தான். தொடர்ந்து கோட்டை ஒன்றை கட்ட விரும்பினான். இதற்கு நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டனர். அவனது முன்னோர்கள் ஆண்ட குரும்பூர் பகுதியில் அறிமுகமான பலர் வாழ்ந்து வந்தனர். எனவே அங்கு சென்று கோட்டை கட்ட தேவையான ஆட்களை கொண்டு வர வேண்டும் என்று தன் பரிவாரங்களோடு குரும்பூருக்கு சென்றார்.

    இன்றைய பறக்கையில் அப்போது பட்சி ராஜா கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவில் திருவிழா மிகவும் பிரபலமானதாக இருந்தது. அந்த விழாவுக்கு தந்தையின் கட்டளையை மீறி துறைமுகத்தழகியும், சங்கு முகத்தழகியும் சென்றனர். அதுவே பின்னால் சோதனை காலமாக அமையும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

    விழாவுக்கு வந்திருந்த வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன், இருவரின் அழகைக் கண்டு மனம் மயங்கினான். இதில் அழகுக்கு அழகு சேர்க்கும் பதுமைபோல ஜொலித்த துறைமுகத்தழகியை எப்படியும் அடைய வேண்டும் என்று மனதுக்குள் மன்மத கோட்டையையே கட்டினான். திருவிழா முடிந்து சகோதரிகள் 2 பேரும் அரண்மனை திரும்பினர்.

    அதே சமயத்தில் கோட்டை கட்டும் பணியாளர்களை அழைத்து வருவதற்காக குரும்பூர் சென்ற வெங்கலராஜனும் அரண்மனை திரும்பினான். அப்போது ஓலையோடு வஞ்சி நாட்டு ஒற்றன் ஒருவன் வந்தான். அவனிடம் இருந்த ஓலையை வாங்கி வெங்கலராஜன் படித்து பார்த்த போது, அந்த சொற்கள் அவனை சுட்டு சாம்பலாக்கின.

    தான் குரும்பூர் சென்றபோது தன் மகள்கள் இருவரும் கோட்டைக்குள்தான் இருந்தார்களா? என்பதை தன் மனைவியிடம் கேட்டுத் தெரிந்தான். மகள்கள் இருவரையும் அழைத்து 'நான் இல்லாத போது என் அனுமதி பெறாமல் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்' என்று கேட்டான். அதற்கு அவர்கள் இருவரும், 'பறக்கை பட்சிராஜா கோவிலில் நடைபெற்ற ஆராட்டு விழாவுக்கு சென்றோம், தங்களை மன்னியுங்கள்' என்றனர்.

    வஞ்சி நாட்டு ஒற்றன் கொண்டு வந்த ஓலையில் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று எண்ணி தந்தையை பார்த்தனர் மகள்கள். வெங்கல ராஜன் ஓலையை தன் மகள்களிடம் கொடுத்து, படித்துப் பாருங்கள் என்றான்.

    ஓலையின் வாசகம் இதுதான், 'வெங்கல ராஜனுக்கு வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன் எழுதிக் கொள்வது. உன் மகள்கள் இருவரின் அழகிலும் நான் பெரிதும் மயங்கி நிற்கின்றேன். அதிலும் குறிப்பாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை அடைய வேண்டும் என்ற ஆசை என்னை வெகு தூரத்துக்கு கொண்டு வந்து விட்டது. ஆகவே உடனடியாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை என் அந்தப்புரத்திற்கு அனுப்பி வை' என்று எழுதப்பட்டு இருந்தது.

    மடலை படித்து முடித்த துறைமுகத்தழகியின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. ஆராட்டு விழா சென்று அகப்பட்டோம் என்று நினைத்து மனம் வருந்தினாள். தந்தை தன் மகளின் கண்ணீரை பார்த்து மனம் வருந்தினார்.

    ஓலையை கொண்டு வந்த ஒற்றனை அழைத்த வெங்கல ராஜன், 'என் மகளை வஞ்சி நாட்டு இளவரசனின் அந்தப்புர அழகியாக அனுப்பி வைக்க முடியாது என்று சொல் போ' என்று கூறி அனுப்பி வைத்தான்.

    காலம் மெல்ல மெல்ல நகர்ந்தது. குரும்பூர் நகரில் இருந்து கூட்டி வந்த பணியாட்கள் கடற்கரையில் இருந்து பொற்றையடி வரை உள்ள நிலப்பரப்பை வரையறை செய்து கோட்டை கட்டத் தொடங்கினர். இருபுறமும் இருந்து மணலை எடுத்து முதலில் கோட்டை அமைப்பை உருவாக்கினர்.

    கடற்கரையில் கற்களை கொண்டும், சுண்ணாம்பு சுதை கொண்டும் கோட்டை கட்டும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    ஒரு நாள் காலையில் ரவிவர்மன் தன் படைகளோடு கோட்டையை சூழ்ந்து முற்றுகையிடத் தொடங்கினான். அப்போது வெங்கல ராஜன் அஞ்சி ஓட மனமின்றி கோட்டைக்குள் இருந்தபடியே தன் குடிகளையும் உள்ளே அமர வைத்து வெண்கல கதவினை உள்ளிருந்தபடியே பூட்டிக் கொண்டான்.

    வெங்கலராஜன் உள்ளிருந்தபடியே, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த வஞ்சி நாட்டு வீரர்களை கவனித்துக் கொண்டிருந்தான். கோட்டை கதவும் திறக்கவில்லை, வஞ்சிநாட்டு வீரர்களும் அகன்று போகவில்லை. போரும் நடக்கவில்லை. ஏன் என்றால் துறைமுகத்தழகியை உயிரோடு அழைத்துப் போக வேண்டும் என்பதே படைக்கு இடப்பட்ட கட்டளை. இதனை காப்பாற்ற வீரர்கள் பலநாட்களாக கோட்டையை சுற்றிலும் நின்றனர்.

    திடீரென்று ஒரு நாள் போர்பறை ஒலித்தது. பொறுத்தது போதும் எழுந்து போருக்கு புறப்படுங்கள் என்பது இதன் பொருளாகும். இதனை அறிந்த வெங்கலராஜனும், ஆசை மகள்களும் மிகவும் துயரப்பட்டனர். தன் தந்தையின் கலக்கத்தை உணர்ந்து கொண்ட துறைமுகத்தழகி மனம் வருந்தினாள்.

    வெங்கல ராஜனோ தன் மகளை வஞ்சி மன்னன் விரும்பும் படியாக அனுப்புவதற்கு தயாராக இல்லை. துறைமுகத்தழகி தனது தந்தையிடம் வந்து, 'ஒரு மாபெரும் வீரன் நீங்கள். வீரனுக்கு அழகு விவேகம். தாங்கள் என் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே தூக்கி எறியுங்கள். அதனை பார்த்து வஞ்சி மன்னன் அஞ்சி ஓடுவான்' என்று தைரியமாக தந்தையிடம் கூறினாள்.

    எண்ணற்ற கேள்விகளுக்கு இடையே ஒரு முடிவோடு வாளை எடுத்த வெங்கல ராஜன் தன் மகளை வெட்டி தலையை தூக்கி கோட்டைக்கு வெளியே எறிந்தான். வருவாள் என்று எண்ணி மகிழ்ந்து நின்ற வஞ்சி நாட்டு மன்னன் கைகளில் தலை ஒன்று விழுவதைக் கண்டு தலைதெறிக்க ஓடினான். கண்ணியத்தையும், தான் விரும்பும் கற்பையும் காத்து நிற்க வேண்டும் என்கிற உணர்வு உடைய பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன் என்று புலம்பிக்கொண்டே தன் படைகளோடு அஞ்சி விடைபெற்றான் வஞ்சி மன்னன்.

    பின்னர் வெங்கலக்கோட்டை கதவு திறந்து மக்களும், மன்னனும் தன் இளவரசியின் தலையை தூக்கி வைத்து அழுது புலம்பினர். பின்னர் வெங்கலராஜன், மகளின் உடலையும், தலையையும் கொண்டு சென்று சந்தனக் கட்டைகளை அடுக்கி அதன் மேல் வைத்து எரியூட்டி காடாற்றி முடித்தான். இன்றும் இந்த பகுதிக்கு காடேற்றி என்னும் பெயரே நிலைத்திருக்கிறது.

    பின்னர் மகள் இறந்த துக்கம் தாளாமல் வெங்கலராஜனும் தனது மார்பில் வாளை பாய்ச்சி உயிர் துறந்தான் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு நாள் இரவு 60 அடி உயரத்துக்கு அரபிக்கடல் ஆர்ப்பரித்து எழுந்து உலகையே விழுங்க வந்தது. இன்று சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் சீற்றத்தால் அரண்மனையும், கோட்டையும் குடிகள் வாழ்ந்த வீடுகளும் அழிந்து முடிந்தது.

    மன்னன் வெங்கலராஜன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் நீலம் மதுமயன், இந்த மன்னன் வெங்கல ராஜன் அறக்கட்டளையை சுமார் 10 ஆண்டுகளாக வெங்கல ராஜபுரம் (கோவில்விளை) என்னும் முகவரியில் நடத்தி வருகிறோம். இந்த அறக்கட்டளையின் நோக்கம் மன்னன் வெங்கல ராஜனின் புகழைப் பரப்புவது ஆகும். அவரைப்பற்றி அறியாதவர்கள் மத்தியில் அவரது பெருமைகளையும், வரலாற்றையும் தெரியப்படுத்துவதை பணியாக செய்து வருகிறோம்.

    • ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளன.
    • சதுரகிரியில் உள்ள சிவலிங்கம் மட்டும் சாய்ந்த கோணத்தில் இருக்கும்.

    நான்குபுறமும் மலை சூழ்ந்து இருப்பதாலும், இது சதுரமாக இருப்பதாலும் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் இருப்பதை தெரிந்துகொண்ட பல சித்தர்கள் இந்த இடத்தை தேர்வு செய்து தவம் செய்து வந்துள்ளனர்.

    அதோடு தங்களை தேடி வரும் பக்தர்களுக்கு தீராத நோய்களை இங்கு கிடைக்கக்கூடிய மூலிகைகளை வைத்து வைத்தியம் செய்து வந்துள்ளனர். பழனி நவபாஷான முருகன் சிலையை போகர் சித்தர் தான் செய்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இந்த சதுரகிரியில் தங்கி இருந்து தான் அதிக சக்திவாய்ந்த நவபாஷான முருகர் சிலையை செய்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

    எல்லா சிவன் கோவில்களிலும் சிவன் சிலை நேராக இருக்கும். ஆனால் சதுரகிரியில் உள்ள சிவலிங்கம் மட்டும் சாய்ந்த கோணத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். அதற்கு இரண்டுவிதமான கதைகள் சொல்லப்படுகிறது.

    கயிலாயத்தில் சிவபெருமானின் பூதகணங்களில் ஒருவர் யாழ்வல்லதேவன். இவர் யாழ் இசைத்து சிவனை மகிழ்வித்து வந்துள்ளார். அவர் அப்சரஸ் கன்னிகை மீது காதல் வயப்பட்டார். இவர்கள் இருவருக்கும் சிற்றின்ப ஆசை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்துகொண்ட சிவபெருமான் கோபம் கொண்டு இரண்டுபேரும் பூமியில் மனிதர்களாக பிறந்து உங்களோட விருப்பு வெறுப்பு எல்லாம் தீர்ந்து எப்போது முக்தி அடைகிறீர்களோ அப்போது என் இடத்திற்கு திரும்பி வருவீர்கள் என்று சாபம் அளித்தார்.

    சதுரகிரி மலைக்கு அடியில் கோட்டையூரில் யாழ்வல்ல தேவன், பச்சைமாலாகவும், அப்சரஸ் கன்னிகை சடைமங்கையாக பிறந்து இரண்டுபேரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் பசுக்களை மேய்த்து பால் கறந்து விற்று வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

    சடை மங்கை குறிப்பிட்ட அளவு பால் கறந்து வியாபாரியிடம் கொடுத்த வாணிபம் செய்து வந்தாள். ஒருமுறை பால் எடுத்துக்கொண்டு செல்லும்போது ஒரு துறவி அவளிடம் பசிக்கிறது எனக்கு பால் தருமாறு கேட்டாள். அவளும் அந்த துறவிக்கு பருகுவதற்கு பால் கொடுத்தாள்.

    உடனே அந்த துறவி நான் தினமும் இங்கு வருவேன் எனக்கு பால் அருந்துவதற்கு கொடுத்து எனது பசியை போக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு மறுத்து பேசாமல் சடைமங்கை கணவருக்கு தெரியாமல் துறவியின் பசியை ஆற்றுவதற்கு பால் அருந்த கொடுத்து வந்தாள்.

    பால் அளவு நாட்கள் செல்ல செல்ல குறைந்து கொண்டுவருகிறது என்று வணிகர்கள் பச்சைமாலிடம் சொல்லி வந்துள்ளனர்.

    தன்னோட மனைவி தினமும் என்ன செய்கிறாள் என்று பச்சைமால் மறைந்திருந்து பார்த்தான். சடைமங்கை வழக்கம்போல் அந்த துறவிக்கு குடிப்பதற்கு பால் கொடுத்தாள். இதைபார்த்ததும் கோபம் கொண்ட பச்சைமால் மனைவியை சரமாரியாக தாக்கினான்.

    உடனே துறவி, தனக்கு இரக்கப்பட்டு குடிப்பதற்கு பால் கொடுத்த சடைமங்கை இப்படி அடிவாங்கிவிட்டாளே என்று அவளை சடைதாரி என்ற பெயரில் காவல் காக்கும் தெய்வமாக சிலையாக மாற்றிவிட்டு அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டார் துறவி.

    மனைவியை பிரிந்த பச்சைமால் தன்னோட தவறை உணர்ந்து திருந்தி சதுரகிரியில் உள்ள சுத்தநாத சித்தர், சட்டைமுனி சித்தர் ஆகியோருக்கு பசியாற பால் கொடுத்து வந்தான் பச்சைமால்.

    சதுரகிரிக்கு துறவி ஒருவர் புதிதாக வந்தார். அவரை எல்லோரும் நன்றாக உபசரித்து வந்துள்ளனர். அவருக்கு பச்சைமால் பசியாறுவதற்கு பால் கொடுத்து வந்துள்ளான். ஒருநாள் புதிதாக வந்த சித்தர் மாட்டின் மடியில் இருந்து பால் குடித்துள்ளார். சிவ பூஜைக்கு உள்ள பாலை யாரோ திருடன் குடித்துள்ளான் என்று கோபப்பட்டு ஒரு கம்பால் தலையில் அடித்தான். அதில் அந்த துறவியின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.

    சட்டைமுனி பச்சைமாலுக்கு சாபம் கொடுப்பதற்காக வந்தார். உடனே துறவி உருவத்தில் வந்த சிவபெருமான்  புலித்தோல் அணிந்து அவரோட சுயரூபத்தை காட்டினார். அப்போது அந்த துறவியிடம் அவனது முன்ஜென்ம கதையையும், பெற்ற சாபத்தையும் பற்றி கூறி சாபவிமோச்சனம் அளிக்க வந்தேன் என்று சிவபெருமான் கூறினார்.

    முனிவர்கள் கேட்டுக்கொண்டதால் சுயம்புவாக சுந்தர மகாலிங்கம் என்ற பெயரில் சாய்ந்த கோணத்தில் தலையில் அடிபட்ட தழும்புடன் இன்றளவும் சதுரகிரி மலையில் ஆசி வழங்கி வருகிறார்.

    ஒரு கதையில் சிவபெருமானின் பக்தன் யாழ்வல்லதேவன் என்று சொல்லப்படுகிற மாதிரி மற்றொரு கதையில் காவல் தெய்வமான கருப்பசாமியின் காவலை சோதித்து பார்க்க நினைத்த சிவபெருமான் கருப்பசாமியின் காவலில் இருந்த ஒரு மாட்டின் பாலை திருட்டுத்தனமாக குடித்து வந்துள்ளார். இதை பார்த்த கருப்பசாமி பிரம்பால் சிவபெருமானை அடித்துள்ளார். அதனால் தான் சுந்தரமகாலிங்கத்திற்கு அடிபட்டது.

    கடமை தவறாத கருப்பசாமியை காவல் தெய்வமாக நியமித்தார் சிவபெருமான் என்றும், காவல் தெய்வமான கருப்பசாமியை வழிப்பட்ட பிறகுதான் சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க முடியும்.

    எந்த இடத்திலேயும் இல்லாத அளவுக்கு சதுரகிரி மலையில் மட்டும் தான் இரட்டை லிங்கங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது.

    • பாஞ்சாலியுடன் பாண்டவர்கள் வனவாசம் சென்றனர்.
    • அரணிக்கட்டையை மீட்டுத்தர அந்தணர் பாண்டவர்களின் உதவியை நாடினார்.

    பார்ப்போர் கண்களை கவர்ந்திழுக்கும் கொள்ளை அழகு கொண்டது குமரி மண். இங்குள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு என்பது மண் சார்ந்தது மட்டுமல்ல, நமது பாரம்பரியம் சார்ந்தது என்பது அனைவரும் பெருமை கொள்ளும் விஷயம்.

    அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையை கொண்ட ஊராக சொத்தவிளை விளங்கி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் அழகை காண விடுமுறை காலங்களில் உள்மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்ல தவறுவதில்லை.

    இந்த சிறிய ஊருக்கு மகாபாரதத்துடன் தொடர்பு உள்ளது என்பது ஒரு அரிய தகவல் தான். மகாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனிடம் நாட்டை இழந்தவர்கள் பஞ்ச பாண்டவர்கள். இதனால் 12 ஆண்டுகள் வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கையும்) செய்ய வேண்டிய நிலை பாண்டவர்களுக்கு ஏற்பட்டது.

    பாஞ்சாலியுடன் பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். 12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறவேண்டிய நிலையில் அந்தணர் ஒருவர், பஞ்ச பாண்டவர்களிடம் உதவி கேட்டு வந்தார். அவர் நடத்த இருந்த வேள்விக்கு தீ மூட்ட பயன்படும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக் கொண்டது. அந்த மானை கண்டுபிடித்து அரணிக்கட்டையை மீட்டுத்தர அந்தணர் பாண்டவர்களின் உதவியை நாடினார். அந்த மானைபிடிக்க ஓடினர் பாண்டவர்கள். இதனால் தளர்ந்துபோன அவர்கள் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.

    காடு, மேடு பாராமல் ஓடிய அவர்களுக்கு கடும் தாகம் ஏற்பட்டது. எனவே எங்கேயாவது தண்ணீர் இருக்கிறதா? என்று பார்த்து தண்ணீர் கொண்டுவரும்படி நகுலனிடம், தருமர் கூறினார். தண்ணீரை தேடிச்சென்ற நகுலன் வனத்தின் ஒரு பகுதியில் தூய்மையான தண்ணீருடன்கூடிய தடாகத்தை பார்த்தான். உடனே அந்த பொய்கையில் இறங்கி தண்ணீரை பருக நகுலன் முயன்றபோது ஒரு அசரீரி ஒலித்தது. இந்த தடாகம் எனக்கு சொந்தமானது, அதனால் முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன்பிறகு நீ நீர் பருகலாம் என்றது அந்த அசரீரி.

    அதை கண்டுகொள்ளாத நகுலன், குளத்துக்குள் இருந்த தண்ணீரை பருகினான். உடனேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான். 2-வதாக சகாதேவன், 3-வதாக அர்ஜூனன், 4-வதாக பீமன் ஆகியோரும் வந்து பொய்கையில் இறங்கி தண்ணீர் குடிக்க முயலும் போதும் நகுலனுக்கு ஒலித்த அசரீரி ஒலித்தது. ஆனால் அவர்கள் யாரும் அசரீரியை பொருட்படுத்தவில்லை. அந்த குரலை மீறி தண்ணீர் பருகியதால் நகுலனுக்கு பிறகு வந்த 3 பேரும் மாண்டனர்.

    தண்ணீர் கொண்டுவர சென்ற தம்பிகள் 4 பேரும் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீரைத் தேடி தருமனும் நடக்கலானார். தடாகம் அருகே வந்தவர். தனது நான்கு சகோதரர்களும் மாண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார். இங்கு போர் எதுவும் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே என எண்ணியவர், உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகத்தை தணித்துக் கொள்வோம் என பொய்கையில் இறங்கி தண்ணீர் குடிக்க முயன்றார்.

    அப்போதும் அசரீரி ஒலித்தது. என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால்தான் உன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேரும் மாண்டு போனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகள் நிலைதான் உனக்கும் ஏற்படும் என்று குரல் ஒலித்தது.

    அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் பருகாமல் கரையேறிய தர்மர், "இந்த பொய்கை உனக்கு சொந்தம் என கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. நீ கேள்விகளைக் கேள் முடிந்த அளவு பதில் கூறுகிறேன் என்றார். உடனே அசரீரி எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற கேள்விக்கு, தர்மர் உடனே சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார். இதுபோன்று அசரீரியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, சளைக்காமல் தர்மர் பதில் சொன்னார்.

    தர்மரின் பதில்களால் அசரீரி மகிழ்ந்து தண்ணீர் பருக அனுமதித்தது. இறுதியில் அந்த அசரீரி இறந்த நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன், யாருக்கு உயிர் கொடுக்க வேண்டும் எனக்கேட்டது. நகுலனை எனக்கு திருப்பிக் கொடுங்கள் என்று தருமர் வேண்டினார். இதனால் ஆச்சரியமடைந்த அசரீரி யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான அர்ஜுனன், பீமன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்கு தேர்ந்தெடுக்கிறாய் என அசரீரி கேட்டது.

    அதற்கு தருமன், எனது தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என 2 மனைவிகள் உண்டு. நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மற்றொரு தாயான மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாயாருக்கு பக்திபூர்வமாக சேவை செய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்து விட்டாள். அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால் நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன். போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல என்றான் தருமன்.

    இந்த பதிலைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த தர்மதேவன் (எமதர்மன்) அங்கு தோன்றினார். தர்மா நான் உனக்கு தெய்வீகத் தந்தையாவேன்.அந்தணரின் அரணிக்கட்டையை மான் உருவில் எடுத்து வந்தது நான்தான். உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனது 4 சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள் என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார்

    தர்மதேவன். அதைத்தொடர்ந்து 4 சகோதரர்களும் தூங்கி எழுவதுபோன்று கண்விழித்தார்கள். அரணிக்கட்டையும் கிடைத்தது. அந்தணருக்கு அந்த அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருட அஞ்ஞாதவாசத்துக்கு தயாரானார்கள்.

    மகாபாரத காவியத்தில் நகுலன், சகாதேவன், அர்ஜூனன், பீமன் ஆகிய 4 பேரும் நீர் பருகி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான் சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகாவிஷ்ணு கோவிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள். இப்பகுதி மக்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு நஞ்சுப் பொய்கையில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள்.

    எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்த பொய்கை வறண்டு போகாது. சொத்தவிளை கடற்கரையை ஒட்டி பஞ்ச பாண்டவர்களில் 4 பேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும், மகாவிஷ்ணு கோவிலும் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் 4 பேர் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. நாளடைவில் அது மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது. இதுதான் சொத்தவிளை ஊரின் வரலாறு.

    • மேலப்புதுக்குடியில் தான் அருஞ்சுனைகாத்த அய்யனார் கோவில் உள்ளது.
    • நான் இந்த இடத்தில் சுனையாக இருக்க விரும்புகிறேன்.

     திருச்செந்தூர் அருகில் உள்ள ஊர் தான் மேலப்புதுக்குடி. இந்த பகுதியில் தான் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தை தலைமையிடமாகக்கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்தார்.

    இந்த பகுதியில் ஒரு தடாகம் ஒன்று இருந்தது. இந்த தடாகத்தில் இருக்கக்கூடிய நீர் பன்னீர்போல் சுவைகொண்டதாக இருக்கும்.

    ஒருதடவை கனகமணி என்ற பெண் இந்த தடாகத்துக்கு வந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தார். அவ்வாறு போகும்போது கல்தடுக்கி கீழே விழுந்தார். இப்படி கல் தட்டி கால் இடறி கீழே விழுந்ததால் இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த நீர் கீழே விழுந்தது.

    கீழே விழுந்ததும் அங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவரை நனைத்துவிட்டது. தண்ணீர் பட்டு முனிவரை நனைத்துவிட்டதால் அவர் கோபம் அடைந்து அந்த பெண்ணை பார்த்து உன் கையால் நீர் வாங்கி அருந்தினால் அவர்கள் உயிரிழந்துவிடுவார்கள். இந்த உண்மையை நீ வெளியே தெரிவித்தால் மறுகணமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்காக மறிப்பாய் என்று சாபமிட்டார் முனிவர்.

    உடனே கனகமணி முனிவரை பார்த்து அய்யனே அறியாமல் செய்த இந்த பிழைக்கு மாபெரும் தண்டனையா? என்று கேட்டாள்.

    உடனே முனிவர் பெண்ணே நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்கு பிறகு நீ சொர்க்கத்திற்கு செல்வாய் என்று கூறினார்.

    இப்படி பல நாட்கள் கடந்தது.  அந்த தடாகத்துக்கு அருகில் கனி தரக்கூடிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் இருந்து வரக்கூடிய கனியை அந்த இடத்தை ஆட்சி புரிந்து வந்த சிங்கராஜன் என்பவர் சாப்பிட்டு வந்தார். மரத்தில் இருக்கும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் இருக்கும். கனியை யாரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக சிங்கராஜனின் காவல்காரர்கள் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து நின்றனர்.

    வழக்கம்போல் கனகமணியும் தண்ணீர் எடுத்து வருவதற்காக தடாகத்திற்கு வந்தார். கனகமணி தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கும் போது மரத்தில் இருக்கும் கனி அவருடைய குடத்திற்குள் விழுந்துவிட்டது. அதை காவலாளிகள் கவனிக்கவில்லை.

    கனகமணி அந்த குடத்துடன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும்போது 21 தேவாதி தேவதைகள் கனகமணிக்கு முன்னால் வந்து நாங்கள் அனைவரும் தாகத்துடன் இருக்கிறோம். பெண்ணே... தண்ணீர் கொடு என்று கேட்டார்கள். இதைக்கேட்டதும் கனகமணி அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

    உடனே அந்த முனிவர் கொடுத்த சாபம் தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் யாருக்காவது தண்ணீர் கொடுத்தால் அவர்கள் மரணம் அடைவார்கள். அந்த விஷயத்தை வெளியே சொன்னால் கனகமணியும் மறித்துவிடுவாள் என்று முனிவர் கொடுத்த சாபம் அவள் கண்முன் தோன்றியது.

    அந்த சாபத்தை எண்ணி 21 தேவாதி தேவதைகளுக்கும் தண்ணீர் கொடுக்க மறுத்தாள் கனகமணி. உடனே அந்த 21 தேவாதி தேவதைகளும், கனகமணியிடம் ரொம்ப தாகமாக இருக்கிறது. தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் இறந்துவிடுவோம் என்று கெஞ்சி கேட்டனர். ஆனாலும் கனகமணி மனதை கல்லாக்கிக் கொண்டு தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டாள்.

    அதன்பிறகு கனகமணி அந்த 21 தேவாதி தேவர்களை பார்த்து ரொம்ப கோபத்துடன் நான் அனுதினம் வழிபடும் ஹரிஹர புத்திரன் மீது ஆணை எனக்கு வழிவிடுங்கள் என்று சொன்னாள். உடனே தேவாதி தேவதைகளும் அவளுக்கு வழிவிட்டனர். உடனே கனகமணியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

    அந்த சமயத்தில் சிங்கராஜ மன்னன் அந்த கனியை தேடி தடாகத்திற்கு வந்தார். தடாகத்திற்கு பக்கத்தில் இருக்கும் மரம் அருகே வந்ததும் காவலில் இருந்தவர்கள் மன்னா கனி இன்னும் விழவே இல்லை என்று கூறினர். இதை கேட்டதும் கோபம் கொண்ட மன்னன் நேரம் தவறிவிட்டது. கனி இன்னும் விழாமல் இருக்காது. கனி விழுந்துவிட்டது. கனியை உண்டது உங்களில் யார்? என்று  கேட்டார்.

    காவலாளிகள் அனைவரும் அரசனிடம் நாங்கள் யாரும் உண்ணவில்லை மன்னா... என்று கூறினார்கள் பயத்துடன். காவலாளிகளை பார்த்து அரசன் சரி எப்படியானாலும் இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் அந்த கனியை நான் உட்கொள்ள வேண்டும். ஊருக்குள் செல்லுஙள் ஒரு வீடு விடாமல் தேடுங்கள் பழத்தோடு வாருங்கள். இல்லையென்றால் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது என்று கூறி எச்சரித்தார்.

    தலைவனின் கட்டளைக்கிணங்க காவலாளிகள் அனைவரும் ஊருக்குள் சென்று அனைவரது வீடுகளிலும் தேடினார்கள்.

    கடைசியாக கனகமணி வீட்டுக்கு முன் வந்தனர். குடத்திற்குள் நீரோடு மன்னன் சாப்பிடும் கனியும் இருந்தது. அந்த பழத்தை எடுத்துவந்த காவலாளிகள், அந்த பெண்ணையும் இழுத்துவந்து மன்னரது முன்னால் நிறுத்தி மன்னா... நீங்கள் சாப்பிடக்கூடிய கனி இவளுடைய குடத்து நீருக்குள் இருக்கிறது என்று கூறினார்கள்.

    அப்போது அங்கு வந்த தேவாதி தேவதைகள் அரசனிடம், அரசரே நாங்கள் கூறுவதையும் ஒரு தடவை கேளுங்க. குடத்தினுள் கனியினை இவள்தான் திருடி சென்றிருக்க வேண்டும். நாங்கள் ஒரு தடவை மிகுந்த தாகத்துடன் இவளிடம் சென்று எங்களுக்கு சிறிதளவு தண்ணீர் கொடு என்று கேட்டோம். ஆனால் அவள் எங்களுக்கு தரவே இல்லை.

    அதனால் எங்களுக்கு இப்போதுதான் புரிகிறது. எதற்காக தரவில்லை என்று. நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய அதிசய பழத்தை இவள் தான் திருடி இருக்கிறாள். அதனால் தான் இவள் எங்களுக்கு தண்ணீர் தரவில்லை என்று 21 தேவாதி தேவதைகளும் சொன்னார்கள்.

    அப்போது பேச்சியம்மன் முதுமை பெண் வடிவத்தில் அங்கு வந்து அரசன் முன்னால் சென்று மன்னா... அந்த கனியை இந்த பெண் களவாடவில்லை. அந்த மரத்தின் பழம் தானாகவே இவளது குடத்து நீருக்குள் விழுந்துவிட்டது என்று கூறினாள். அந்த வயதான பெண் கூறுவதை கேட்காமல் மன்னன் உடனே கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று உத்தரவிட்டார்.

    மன்னனின் கட்டளையை ஏற்ற காவலாளிகள் கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். கனகமணி இறக்கும் தருவாயில் தான் வணங்கும் அய்யனே என்று ஹரிஹர புத்திரனை அழைத்தாள். கனகமணியின் பக்திக்கு மனமிறங்கி வந்தார் ஹரிஹரபுத்திரன். பெண்ணே கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன் என்று சொன்னார்.

    இதைக்கேட்டதும் கனகமணி வேண்டாம். நான் இந்த பிறவியில் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை நான் விரும்பவில்லை. நான் இறக்கும் தருவாயில் நான் எண்ணியது நிறைவேறும் என்றார் முனிவர். எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ அதுபோல் இனி தண்ணீருக்காக அலைந்து திரிந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக நான் இந்த இடத்தில் சுனையாக இருக்க விரும்புகிறேன்.

    இந்த சுனையை யாரும் அபகரிக்காமல், வேலியிட்டு தடுக்காமலும் இருக்க அய்யனே நீங்களே சுனையை காத்தருள வேண்டும் என்று கனகவல்லி ஹரிஹரபுத்திரனிடம் கேட்டார். உடனே ஹரிஹர புத்திரனும் அருமையான சுனையாக மாறும் உன்னை நான் காத்தருள்வேன் என்று உறுதியளித்தார். அதனால் தான் அருஞ்சுனைகாத்த அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை கண்ட மன்னன் தன்னுடைய தவறுக்கு வருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார். உடனே 21 தேவாதி தேவதைகளும் ஹரிஹரனிடம் வந்து மன்னிப்பு கேட்டனர். அதன்பிறகு அவர்களுக்கும் தன்னுடைய இருப்பிடத்தில் இடம் கொடுத்து தன் அருகில் வைத்துக்கொண்டார் அய்யனார்.

    இங்குள்ள அய்யனார் பூரணபுஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன், தளவாய் மாடன், வன்னியடி ராஜன் கருப்பசாமி, சுடலைமாடசுவாமி, இசக்கி அம்மன், பட்டானி சாமி, முன்னோடி முருகன் ஆகியோருடன் அருள்பாலித்து வருகிறார்கள்.

    இங்குள்ள சுனைநீரில் குளித்தால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடம் உள்ளது. இங்குள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபட்டால் கடன் தீர்ந்து துன்பம் அனைத்தும் மாறிவிடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. துன்பங்களை நீக்கி அருமையான வாழ்க்கையை தரும் அருஞ்சுனைகாத்த அய்யனாரை நாம் ஒவ்வொருவரும் வணங்குவோம். அவர் அருள் பெறுவோம்.

    • வத்திராயிருப்பு பக்கத்தில் அர்ஜுனாபுரம் என்ற அழகான கிராமம் இருந்தது.
    • பார்ப்பதற்கே செழிப்பாக பச்சைபசேல் என்று பசுமையாக இருக்கும்.

    கொடுமையான வறுமையால் தன்னையும் தன் மக்களையும் பறிகொடுத்து தெய்வமாக இருக்கும் நல்லதங்காள் வரலாற்றை பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.

    விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு பக்கத்தில் அர்ஜுனாபுரம் என்ற அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் எந்த பக்கம் பார்த்தாலும், மா மரங்களும், தென்னை மரங்களும், வாழைமரங்களும், தேக்கு மரங்களும் பார்ப்பதற்கே செழிப்பாக பச்சைபசேல் என்று பசுமையாக இருக்கும்.

    இந்த அர்ஜுனாபுரத்தை தலைமை இடமாக கொண்டு மதுராபுரி நகரத்தில் பிறந்த ராமலிங்க மகாராஜா. இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்தார். இவருக்கும், இந்திராணிக்கும் திருமணம் முடிந்து பலவருடங்களுக்கு பிறகு தான் குழந்தைப்பேறு கிடைத்தது. மொத்தம் அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர். மூத்த குழந்தை பெயர் நல்லதம்பி, இளைய குழந்தை நல்லதங்காள். இந்த இரண்டு குழந்தைகளுமே நல்ல செல்வசெழிப்புடன் வளர்ந்து வந்தனர்.

    சிலநாட்களுக்கு பிறகு ராமலிங்க மகாராஜாவுக்கு முதுமை காலம் வந்தது. தான் உயிரோடு இருக்கும்போதே நல்லதம்பிக்கு முடிசூட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே குந்தல தேசத்தை ஆட்சிபுரிந்து வந்த கோமகனின் மகள் மூழி அலங்காரியை திருமணம் செய்து வைத்தார்.

    திருமணம் முடிந்த 10-வது நாள் நல்லதங்காளின் தாய் இந்திராணி இறந்துவிட்டார். மனைவி இறந்த துயரத்தாலும், தன்னுடைய மகளுக்கு இன்னும் திருமணம் முடித்து வைக்கவில்லையே என்ற துக்கத்தில் ராமலிங்க மகாராஜா சிலநாட்கள் கழித்து இறந்துவிட்டார்.

    தாயும், தந்தையும் இறந்த பின்னர் நல்லதங்காளின் அண்ணன் நலல்தம்பி அவளை அதிக பாசத்துடன் வளர்த்து வந்தார். இனி தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க எண்ணிய நல்லதம்பி நிறைய நல்ல வரன்களை எல்லாம் பார்த்தார். மானாமதுரையில் உள்ள காசிராஜனுக்கு தனது தங்கையான நல்லதங்காளை திருமணம் முடித்துவைக்க எண்ணினார் நல்லதம்பி.

    சித்திரை திங்கள் புதன்கிழமை அன்று அர்ஜுனாபுரத்தில் கோலாகலமாக திருமணம் நடந்தது. நல்லதம்பி தனது தங்கையான நல்லதங்காளுக்கு நிறைய சீதனம் கொடுத்தார். தங்கத்தினாலும் நகைகளும், வெள்ளியினால் ஆன பூஜை பொருட்களும், வெள்ளாடுகளும், பசுமாடுகளும், பொன்னாலான முக்காலி போன்ற நிறைய பொருட்களுடன், ௯ பணிபெண்களையும் கொடுத்து கலங்கிய கண்களுடன் பிரியமனம் இல்லாமல் மானாமதுரைக்கு நல்லதங்காளை வழிஅனுப்பி வைத்தார் நல்லதம்பி.

    8 ஆண்டுகள் ரொம்ப சந்தோசமாக இருந்தார்கள். காசிராஜனுக்கும், நல்லதங்காளுக்கும் 7 குழந்தைகள் பிறந்தனர். இதில் ௪ ஆண்குழந்தைகள், 3 பெண்குழந்தைகளும் இருந்தனர்.

    இப்படி சந்தோசமாக வாழ்ந்து வந்த இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய சோதனை வந்தது. ஒருநாள் மானாமதுரையில் தண்ணீர் பஞ்சம் வந்தது. விளைச்சலும் குறைந்தது. ஆடு, மாடுகள் எல்லாம் செத்துப்போயின. மக்கள் பலர் பசியினால் இறந்து போனார்கள்.

    காசிராஜனுக்கு தன்னுடைய மக்கள் கஷ்டப்படுவதை பார்க்கமுடியவில்லை. உடனே தன்னுடைய நாட்டு மக்கள் அண்டை நாடு செல்வதற்கு ஏற்பாடு செய்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மாளிகையில் இருக்கக்கூடிய பொன்னையும், பொருளையும் கொடுத்து உதவியும் செய்தார்.

    தினமும் தன்னுடைய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைச்சுதா என்பதை தெரிந்த பிறகுதான் காசிராஜன் சாப்பிட்டு வந்தார். கொஞ்சநாட்களிலேயே தானியக்கிடங்கில் இருக்கும் பொருட்கள் எல்லாம் தீர்ந்துபோயின. உடனே காசிராஜன் தன்னுடைய மந்திரி முதற்கொண்டு எல்லா மக்களையும் அடுத்த நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    காசிராஜனுடைய மனைவி நல்லதங்காளும், அவனுடைய 7 குழந்தைகளும் பசியால் அழுது துடைத்தனர். தன்னுடைய குழந்தைகள் பசியால் துடிப்பதை கண்ட நல்லதங்காள் தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு சென்றால் குழந்தைகளுக்கு உணவாவது கிடைக்கும். இப்படி பசியால் துடிக்கமாட்டாங்க என்று நினைத்தாள். இதை எப்படி காசிராஜனிடம் கூறுவது என்று நினைத்து, காசிராஜனையும் தன்னுடன் கூட்டி சென்றுவிடலாம். அப்போது வறுமையில் இருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்து தன்னுடைய விருப்பத்தை காசிராஜனிடம் சொன்னாள் நல்லதங்காள்.

    காசிராஜனிடம், நல்லதங்காள் என்னுடைய அண்ணன் வீட்டிற்கு செல்லலாமா? என்று கேட்டாள். இதை கேட்டதும் காசிராஜனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அதற்கு காசிராஜன் நான் இந்த நாட்டிற்கு அரசன். எந்த நிலை வந்தாலும் நான் வரக்கூடாது. நீ வேண்டுமென்றால் நம்முடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு உன்னுடை அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டு வா என்று நல்லதங்காளை அனுப்பிவைத்தார்.

    நல்லதங்காளும் குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைக்கும் என்று சந்தோசத்தில் அவர்களை அழைத்துக்கொண்டு தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு நடந்து சென்றார். காடு மேடு கடந்து, நல்லதங்காளும் அவர்களுய 7 குழந்தைகளும் மானாமதுரையில் இருந்து காட்டு வழியில் சென்றார். அப்போது நல்லதங்காளுக்கு வழிதெரியவில்லை. பக்கத்தில் இருந்த மரத்தின் அடியில் இளைப்பாறினார் நல்லதங்காள் குழந்தைகளுடன். பசி பசி என்று குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தன. அதைக்கண்டு நல்லதங்காளும் கதறி அழுதாள்.

    நல்லதங்காளின் அழு குரலை கேட்டதும், வேடர்கள் எல்லோரும் ஓடி வந்து நல்லதங்காளிடம் விசாரித்தனர். தலைவிரி கோலமாக பசியால் மெலிந்துபோய் யார் என்றே அடையாளம் தெரியாமல் இருந்த நல்லதங்காளை பார்த்தவுடன் வேடர்குல தலைவன் வாய்விட்டு அழுதார்.

    ஏனென்றால் அந்த வேடர்குல தலைவன் யார் என்றால் நல்லதம்பி தான். நல்லதங்காளின் உடன் பிறந்த அண்ணன். ஏன் வேடர் கோலத்தில் வந்தார் என்றால் ஒரு புலி ஒன்று ஊர் மக்களை துன்பப்படுத்திக்கொண்டே இருந்தது. அந்த புலியை வேட்டையாடவே வேடர் உருவத்தில் இருந்தார்.

    நல்லதம்பி, நல்லதங்காளை பார்த்து கதறி அழுதார். அதன்பிறகு நடந்ததை எல்லாவற்றையும் நல்லதங்காள் தன்னுடைய அண்ணனிடம் சொன்னாள். இதைகேட்டதும் நல்லதம்பி, நல்லதங்காளிடம் தங்கையே நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. வேலை முடிவதற்கு இன்னும் 2 நாட்கள் ஆகும்.

    முதலில் பசியால் உன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு அரண்மணைக்கு போ... அங்க அண்ணி உனக்கு வேணுங்றதை எல்லாம் தருவாள் என்று சொன்னார் நல்லதம்பி.

    அதன்பிறகு தன்னுடைய பரிவாரங்களை அழைத்து என்னுடைய தங்கை நல்லதங்காளை அரண்மணைக்கு அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டான். அந்த நேரத்தில் அர்ஜுனாபுரம் அரண்மணை மாடத்தில் பெண்கள் எல்லோரும் தனக்கு சேவகம் செய்ய ரொம்ப சந்தோசமாக உட்காந்து இருந்தார் நல்லதம்பியின் மனைவியான மூழி அலங்காரி.

    மூழிஅலங்காரிக்கு, செந்திலபதி என்ற தம்பி இருந்தார். இவர் நல்லதங்காளும் அவளுடைய 7 குழந்தைகளும் வறுமையால் தன்னுடைய நாட்டைவிட்டு அண்ணனை தேடி வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை நல்லதங்காளும், அவளுடைய குழந்தைகளும் அரண்மனைக்கு வருவதற்கு முன்னாடியே காட்டில் நடந்த நிகழ்ச்சியை தன்னுடைய சகோதரி மூழி அலங்காரியிடம் அவசர அவசரமாக சொன்னார்.

    இதை கேட்டதும் மூழிஅலங்காரிக்கு பயங்கரமாக கோபம் வந்தது. அடடா? நல்லதங்காள் மறுபடியும் அரண்மனைக்கு வந்துவிட்டாளா? இனி இங்கு இருக்கும் சொத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவாள் என்று நினைத்து அங்கிருந்த பணிப்பெண்கள் அனைவரையும் போகச்சொல்லிவிட்டாள்.

    அரண்மனையில் உள்ள உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் பாதாளத்தில் உள்ள அறையில் கொண்டுபோய் மறைத்து வைத்தாள். அதன்பிறகு தானும் ஒரு மூலையில் சென்று படுத்துக்கொண்டாள். கொஞ்சநேரத்தில் அரண்மனை வாயிலை நுழைந்தவுடன் வாசல் கதை அடைத்து இருந்தது.

    உடனே நல்லதங்காள் இங்கே ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்துகொண்டாள். கதவிற்கு அருகில் சென்றதும் நல்லதங்காள் அண்ணி கால், கைகள் எல்லாம் வலிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் பசியால் அழுகிறார்கள். கதவை திறங்க அண்ணி என்று கதவை தட்டினாள்.

    ஆனால் மூழிஅலங்காரி கதவை திறக்கவில்லை. அதன்பிறகு அழுதுகொண்டே இறைவனாகிய சிவபெருமானை நினைத்து ஈஸ்வரனே என்னுடைய பிள்ளைகள் பசியாற கதவை திறங்க என்று கதறி அழுதாள். கொஞ்ச நேரத்தில் அரண்மனையின் கதவுகள் தானாகவே திறந்தது.

    உடனே நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு மூழு அலங்காரி இருக்கும் இடத்திற்கு சென்றாள். அண்ணி என்னுடைய பிள்ளைகள் பசியால் துடிக்கின்றனர். ஏதாவது சாப்பிடுவதற்கு கொடுங்கள் என்றாள் நல்லதங்காள். உடனே மூழி அலங்காரி நானே உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கிறேன். காட்டிற்கு சென்ற உனது அண்ணன் அவர்கள் நல்லபடியா படைகளோடு திரும்பி வர வேண்டும் என்று அனைவரும் விரதம் இருக்கிறோம். அதனால் எதுவுமே சமைக்க வில்லை என்று பதில் சொன்னார்.

    இதைக்கேட்டதும் நல்லதங்காள் சரி அண்ணி. அண்ணன் வரும் வரை நான் பசியை பொறுத்துக்கொள்வேன். ஆனால் எனது குழந்தைகள் பசியாற ஏதாவது கொடுங்க என்று கூறினாள். நான் அந்த அரிசியை வைத்து நான் எனது குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுக்கிறேன் என்று பணிவுடன் கேட்டாள் நல்லதங்காள்.

    மூழிஅலங்காரி, நல்லதங்காளை பார்த்து, உனக்கு தெரியாதா எங்களுடைய நாட்டிலும் பயங்கர பஞ்சம். விளைச்சளே இல்லை. அரிசிக்கு நான் எங்கபோறது. இரு கொஞ்சம் கேழ்வரகு வேண்டுமென்றால் தருகிறேன் என்று கூறிக்கொண்டு அதை உன்னுடைய பிள்ளைகளுக்கு கொடு என்று சொல்லி தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி வைத்தாள்.

    அதன்பிறகு மூழி அலங்காரி இன்னொரு பணிப்பெண்ணை அழைத்து நல்லதங்காளுக்கு ஒரு பச்சை மட்டையும், ஓட்டை பானையும் கொடு அதைக்கொண்டு சமைக்கட்டும் என்று கூறினாள். அந்த பணிப்பெண்ணும் நல்லதங்காளுக்கு ஒரு பச்சை மட்டையும், ஓட்டை பானையும் கொடுத்தாள்.

    எப்படியோ கேழ்வரகை அரைத்து கஞ்சு காய்ச்சுவதற்காக அடுப்பை பற்ற வைத்தாள் நல்லதங்காள். அடுப்பு எரியவே இல்லை. உடனே நல்லதங்காள் அழுதுகொண்டே தாயே அன்னபூரணி நான் பத்தினி என்றால் இந்த அடுப்பு எரியவேண்டும் என்று சொன்னாள். உடனே அடுப்பு கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதைப்பார்த்த பணிப்பெண்கள் பயந்துபொய் மூழிஅலங்காரியிடம் ஓடிபோய் இந்த விஷயத்தை கூறினர். இதை கேட்டதும் மூழி அலங்காரிக்கு கோபம் வந்து நல்லதங்காள் இருக்கும் இடத்துக்கு வந்தாள். மூழிஅலங்காரி, நல்லதங்காளை பார்த்து உன்னுடைய திருமணத்தின்போது நீ எடுத்துக்கொண்டு சென்ற செல்வம் எல்லாம் பத்தாது என்றா இந்த அரண்மனையை கொளுத்தப்பார்க்கிறாய் என்று சொல்லிவிட்டு கேழ்வரகு கஞ்சி கொதித்துக்கொண்டிருக்கும் பானையை தனது காலால் எட்டி உதைத்தாள்.

    பானையில் உள்ள கஞ்சி எல்லாம் தரையில் சிதறிக்கிடந்தன. இதை பார்த்ததும் பசியால் இருந்த நல்லதங்காளின் குழந்தைகள் தரையில் சிதறிய கஞ்சியை வழித்து குடித்தனர். நல்லதங்காளுக்கு இந்த காட்சியை பார்க்கமுடியவில்லை. இனியும் இங்கு இருந்து அவமானப்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய 7 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்.

    பாழடைந்த கிணற்றை தேடி சென்றாள் நல்லதங்காள். தன்னுடையை அண்ணன் வந்தால் தன்னுடைய வழியை தெரிந்துகொள்வதற்காக போகிற வழிகள் எல்லாம் ஆவாரம் பூ செடிகளை உடைத்து போட்டுக்கொண்டே சென்றாள் நல்லதங்காள். கொஞ்ச தூரம் சென்ற பிறகும் எந்த ஒரு கிணற்றையும் காணவில்லை. அந்த காட்டில் 3 பேர் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு இருந்தனர்.

    அவர்களிடம் சென்று நல்லதங்காள் எங்களுக்கு ரொம்ம தண்ணீர் தாகமாக உள்ளது. எனவே பக்கத்தில் ஏதாவது கிணறு இருக்கிறதா என்று கேட்டாள். உடனே ஆடு மேய்ப்பவர்களான மூவரி ஒருவர் ரொம்ப தூரத்துல் கருப்பராயன் என்று ஒரு கோவில் உள்ளது. அதைத்தாண்டி போனால் ஒரு கிணறு இருக்கிறது என்று கூறினான்.

    உடனே நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிணறு இருக்கும் இடத்திற்கு சென்றால். அங்கு சென்றதும் நல்லதங்காளின் குழந்தைகள் அனைவரும் பசிமயக்கத்தில் உறங்கிவிட்டனர். நல்லதங்காளும் தன்னுடைய குழந்தைகளுக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தாள். அந்த சமயத்தில் தான் நல்லதங்காளின் மனதில் ஒன்று தோன்றியது. எந்த சமயத்திலும் அழையா விருந்தாளியாக யாருடைய வீட்டிற்கு போகக்கூடாது என்று கணவன் காசிராஜன் சொன்னது நினைவிற்கு வந்தது. தன்னுடைய தவறை எண்ணி அழுதுகொண்டே இருந்தாள்.

    தன்னுடைய கணவனின் பேச்சை கேட்காமல் வந்தது எவ்வளவு தவறு என்று எண்ணி அழுதாள். நல்லதங்காளின் குழந்தைகள் கிணற்றாங்கரையில் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். தன்னுடைய குழந்தைகள் தூங்கி முழித்துவிட்டால் அவர்களை கிணற்றில் தூக்கிபோடுவதற்கு மனதே வராது. எனவே இதுதான் சரியான சமயம் என்று நினைத்த நல்லதங்காள் தன்னிடைய தாலியை கழற்றி தன்னுடைய கணவனோ, அல்லது அண்ணனோ தன்னை தேடிக்கொண்டு வந்தார் அவர்களுடை கண்ணில் படுமாறு நினைத்து அந்த கிணற்றின் மேட்டில் வைத்தாள் நல்லதங்காள்.

    உடனே கிணற்றை 3முறை சுற்றி வந்து ஒவ்வொரு குழந்தைகளாக தூக்கி கிணற்றில் போட்டாள். இந்த சத்தம் கேட்டு நல்லதங்காளின் மூத்த மகன் முழித்துக்கொண்டான். அம்மாவிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தான். அவன் அம்மாவிடம், என்னை மட்டுமாவது தப்பித்துபோக விடுங்கம்மா. நம்முடைய வம்சத்தின் பேர் சொல்ல நான் மட்டுமாவது இருக்கிறேன் என்று கூறி கதறி அழுதான்.

    நல்லதங்காளும் தன்னுடைய மகனின் பேச்சைக்கேட்டு அழுதுகொண்டே தன்னுடைய மூத்த மகனை பிடித்து கிணற்றில் தூக்கி போட்டு விட்டு கடைசியில் தானும் கிணற்றில் குதித்தாள். இப்போது நல்லதங்காளும், அவளின் 7 குழந்தைகளும் கிணற்றில் இறந்து மிதந்தனர்.

    இந்த நேரத்தில் நல்லதங்காளின் அண்ணன் நல்லதம்பி வேட்டையை முடித்துக்கொண்டு அரண்மனைக்கு வந்தான். தன்னுடைய தங்கையையும், 7 குழந்தைகளையும் அரண்மனை முழுவதும் தேடினான். அவர்கள் அங்கு இல்லை. உடனே தன்னுடைய மனைவி மூழிஅலங்காரியிடம் வந்து கேட்டான் நல்லதம்பி.

    உடனே மூழிஅலங்காரி தன்னுடைய கணவனிடம் நானே உடம்பு முடியாமல் படுத்துக்கொண்டு இருந்தேன். அப்படி இருந்தும் உங்க தங்கைக்கு சுவையான உணவுகளை சமைத்து சாப்பிட கூப்பிட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அண்ணன் வந்து சாப்பாடு போட்டால் தான் சாப்பிடுவோம். இல்லை என்றால் சாப்பிடமாட்டோம் என்று கோபப்பட்டு இங்கிருந்து சென்றுவிட்டனர் என்று பொய் சொன்னாள் மூழிஅலங்காரி.

    நல்லதம்பிக்கு தன்னுடைய மனைவி சொன்னது சரியாகப்படவில்லை. உடனே நல்லதம்பி அங்குள்ள பணிப்பெண்களுடம் விசாரித்தான். உடனே நல்லதம்பி தன்னுடைய தங்கையை தேடி காட்டிற்குள் சென்றான். வழி எங்கும் ஆவாரம் பூவை பின் தொடர்ந்து சென்றான் நல்லதம்பி.

    ஆனால் மறுபுறம் மானாமதுரையில் நல்லா மழைபெய்து நாடே செழிப்பாக இருந்தது. காசிராஜனும், தன்னுடைய மனைவி நல்லதங்காளையும், 7 குழந்தைகளையும் நல்லதம்பி வீட்டில் இருந்து அழைத்துக்கொண்டு வரலாம் என்று சொல்லி காட்டில் வந்துகொண்டிருந்தார்.

    அந்த காட்டின் வழியாக தான் நல்லதம்பியும் தன்னுடைய தங்கை நல்லதங்காளை தேடிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். நல்லதம்பியும், காசிராஜனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். நல்லதம்பி நடந்த உண்மைகளை காசிராஜனிடம் சொன்னார். அந்த ஆவாரம் பூவை பின் தொடர்ந்தே காசிராஜனும், நல்லதம்பியும் சென்றனர். அது ஒரு கிணற்றுப்பகுதியை வந்தடைந்தது.

    கிணற்றுக்குள் நல்லதங்காளும், அவளுடைய 7 குழந்தைகளும் இறந்து மிதந்துகொண்டிருந்தனர். இதை பார்த்ததும் காசிராஜனும், நல்லதம்பியும் கதறி அழுதனர். அதன்பிறகு நல்லதங்காளையும், அவளுடைய 7 குழந்தைகளையும் வெளியே எடுத்து ஈமக்காரியங்களை செய்தனர்.

    உடனே காசிராஜன், தன்னுடைய மனைவி நல்லதங்காளும், 7 குழந்தைகளும் இறந்த துக்கம் தாங்காமல் இறந்துவிட்டார். நல்லதம்பிக்கு ரொம்ப கோபம் வந்தது. தன்னுடைய தங்கையும், அவளுடைய குழந்தைகளும் இறந்ததற்கு மூழ் அலங்காரி தான் முக்கிய காரணம் என்று நினைத்துக்கொண்டு மூழி அலங்காரியையும், அவளுடைய வம்சத்தையே அழிக்க வேண்டும் என்று ஒரு சபதம் எடுத்தார்.

    உடனே அரண்மனைக்கு சென்று தன்னுடைய மனைவி மூழிஅலங்காரியிடம் ஒரு துக்கம் நடந்த வீட்டில் நல்ல காரியம் உடனே நடத்த வேண்டும். இதனால் உன்னுடைய தம்பி செந்திலபதிக்கு திருமணத்தை நடத்தி வைக்கலாம். உன்னுடைய சொந்தபந்தங்களை எல்லாம் வரச்சொல்லு என்றான் நல்லதம்பி.

    இதனால் மூழ் அலங்காரிக்கு ரொம்ப சந்தோசம். திருமண ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்தது. நல்லதம்பி தன்னுடைய அரண்மனையில் உள்ள சிற்பியை அழைத்து ஒரு பொய்யான மண்டபத்தை தயார் செய்யும்படி கூறினான். மூழுஅலங்காரியின் சொந்த பந்தங்களை பொய்யாக உள்ள மண்டபத்திலும், நல்லதம்பியின் சொந்தங்களை அவனுடைய அரண்மனையிலும் தங்க வைத்தான்.

    திருமணம் நடப்பதற்கு கொஞ்சநேரத்திற்கு முன்னால் நல்லதம்பி திட்டம் போட்டது மாதிரி போலியாக கட்டப்பட்ட மண்டபம் இடிந்து விழுந்தது. மூழிஅலங்காரியின் வம்சமே அடியோடு அழிந்துவிட்டது. உடனே தன்னுடைய கடமையை நல்லபடியாக முடித்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு நல்லதம்பி ஈட்டி மீது பாய்ந்து உயிரையே விட்டார்.

    பச்சை ஆடை போர்த்திய வயல்களுக்கு மத்தியில் தான் அர்ஜுனாபுரத்தில் கோவில் கொண்டுள்ளார் நல்லதங்காள். இங்குள்ள கோவில் அமைப்பை பார்த்தால் மற்ற கோவில்களை போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக இருக்கும். 7 குழந்தைகளின் சிலையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியாக இருக்கும்.

    இங்கு நல்லதங்காளுக்கும், நல்லதம்பிக்கும் 2 கோவில்கள் கட்டப்பட்டு மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த கோவிலுக்கு சற்று தொலைவில் தான் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்துபோய் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதமும் பொங்கல் விழாவின் போது நல்லதங்காளின் உறவினர் வழித்தோன்றலில் வந்தவர்கள் மானாமதுரையில் இருந்து வந்து விழாவில் கலந்துகொள்கிறார்கள். இந்த திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.

    அதன்பிறகு மாதம் தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. அவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்துகொண்ட கிணறு போன்றவை இன்றும் வத்திராயிருப்பில் இன்றும் உள்ளது. நல்லோர் தெய்வமாவர் என்ற ஆன்மிக தத்துவத்தின் அடிப்படையில் தான் நல்லதங்காளும், நல்லதம்பியும் வாழ்ந்த அரண்மனை கோவிலாக போற்றப்படுகிறது.

    • பிரம்மதேவன் அளித்த வரத்தின் பயனாக தானாவதிக்கு மகிஷாசுரன் என்ற மகன் பிறந்தான்.
    • பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டார்.

    ஒருசமயம் அரசர் குலத்தை சேர்ந்த தானாவதி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று சொல்லி பிரம்மதேவனை நோக்கி தவம் மேற்கொண்டார். அந்த கடும் தவத்தினை பார்த்த பிரம்மதேவர் தானாவதிக்கு முன் தோன்றி அவள் கேட்ட வரத்தினை அளித்தார்.

    பிரம்மதேவன் அளித்த வரத்தின் பயனாக தானாவதிக்கு மகிஷாசுரன் என்ற மகன் பிறந்தான். அனைத்து கலைகளையும், வேதங்களையும் கற்ற மகிஷாசுரன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். மகிஷாசுரனின் தவத்தை கண்டு அவன் முன் தோன்றிய சிவபெருமான் அவன் கேட்ட வரங்களை எல்லாம் அளித்தார்.

    மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணமே வரக்கூடாது. அதுமட்டுமில்லாமல் பெண் வயிற்றில் பிறக்காத பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டார். அதற்கு சிவபெருமானும் தந்தோம் என்று அருளினார்.

    சிவபெருமானிடம் வரத்தை வாங்கிய மகிஷாசுரன் இனி தனக்கு மரணம் நேர வாய்ப்பில்லை என்று ஆணவத்தில் மகேந்திரிகிரி பர்வதம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தான். சுயநலத்துடன் மகிஷாசுரன் பல கொடுமையான செயல்களை எல்லாம் செய்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை தாங்கமுடியாத தேவர்கள் அனைவரும் இறைவனாகிய சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    இந்த சமயத்தில் கயிலாயத்தில் பார்வதி தேவி, விநாயகர், முருகன் இருக்கும்போது சிவபெருமான் ஒரு நாள் திறந்த கண்களுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். சிவபெருமானின் ஆழ்ந்த தியானத்தை கண்ட விநாயகர் தனது அன்னையான பார்வதிதேவியிடம் தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்கிறார். தியானம் என்றால் கண்களை மூடிக்கொண்டு தானே செய்வார்கள்.

    இதைக்கேட்ட பார்வதி தேவி, விநாயகரிடம் உனது தந்தையின் கண்ணொளியில் தான் அண்டசராசரங்கள் இயங்குகிறது. உன்னுடைய தந்தை கண்களை மூடினால் இந்த அண்டமும் இருண்டுபோகும் என்று கூறினாள். அப்போது குறுக்கிட்ட முருகப்பெருமான் தாயிடம் அப்படியானால் தந்தை ஒருமுறை கண்களை மூடி காட்ட சொல்லுங்கள் என்றார். உலகம் எப்படி இருட்டாகும் என்பதை நானும் பார்க்கிறேன் என்றார் முருகன்.

    இதை எப்படி தந்தையிடம் சொல்வது என்று சொல்கிறார் விநாயகர். உடனே பார்வதிதேவி அதை நீங்கள் அவரிடம் கேட்க வேண்டாம். நானே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு பார்வதிதேவி, சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூடினார். உடனே இந்த அகில உலகமும் இருளில் மூழ்கியது. சிவபெருமான் சக்தியின் கைகளை விலக்கிக்கொண்டு கண்களை கோபத்துடன் திறந்தார். என்ன விளையாட்டு இது, என்று கோபத்துடன் கேட்டார் சிவபெருமான்.

    சிவபெருமானின் கோபத்தை கண்ட பார்வதிதேவி அப்படியே குனிந்து நின்றார். பிள்ளைகள் கேட்டதனால் தான் நான் இவ்வாறு செய்தேன். என்னை மன்னியுங்கள் என்று வேண்டினார் பார்வதிதேவி. சிவபெருமான் மிகுந்து கோபத்துடன் பார்வதிதேவியை பார்த்து நீ செய்த செயலுக்கு கண்டிப்பாக வருந்தியே ஆக வேண்டும். நீ இனி நாககன்னியின் வயிற்றில் அஷ்டகாளியாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமான், பார்வதிதேவிக்கு சாபம் கொடுத்துவிட்டார்.

    இதைகேட்டதும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து இந்த சிறிய தவறுக்கு மானிடப்பிறப்பா? அதுவும் நாகத்தின் வழியாகவா... என்று கூறி மிகவும் வருத்தப்பட்டார். அதன்பிறகு அந்த இடத்தைவிட்டு எழுந்து நகரமுற்பட்டார் பார்வதிதேவி. உடனே சிவபெருமான் கடுமையான கோபம் கொண்டு நெற்றிக்கண்களை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியை எரித்து 8 பிண்டங்களாக்கியது.

    உடனே அந்த 8 பிண்டங்களையும் சிவபெருமான் தனது கையில் எடுத்து பாதாள உலகத்தில் நாககன்னி என்பவர் பிள்ளைவரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அவர் முன் தோன்றிய சிவபெருமான் தன்னிடம் இருந்த ௮ பிண்டங்களையும் சாப்பிடுமாறு நாகக்கன்னியிடம் கொடுத்தார். அதை சாப்பிட்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது 8 முட்டைகளாக உருமாறி வெளிவந்தது.

    உடனே அந்த 8 முட்டைகளையும் அடைகாத்து வந்தார். நான்காவது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் 8 முட்டையில் இருந்து 8 பெண்குழந்தைகள் பிறந்தது. முதலாவது பெண் குழந்தை முத்துமாரி என்ற முத்தாரம்மன் என்று பக்தர்கள் பெருமையாக அழைப்பார்கள்.

    இரண்டாவதாக பிறந்தவர் தான் மாகாளி என்ற பத்ரகாளி. மூன்றாவதாக மூன்று முகங்களுடன் பிறந்த முப்பிடாதி. மூன்று தலைகள் இருந்ததால் இவரை முப்பிடறி என்று அழைக்கப்பட்டார். இதுவே காலப்போக்கில் மறுவி முப்பிடாதி என்று அழைக்கப்படார்.

    நான்காவதாக பிறந்தவர் தான் உலகளந்தாள் என்ற உலகம்மன். உலகநாயகி என்று அழைப்பார்கள். ஐந்தாவதாக பிறந்தவர் அரியநாச்சி என்ற அங்கயர்கன்னி. இவர் நாகாத்தம்மனாகவும், நாகக்கன்னி என்றும் அழைக்கப்படுகிறார். ஆறாவதாக பிறந்தவர் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி. இவர்களை செல்லியம்மன் என்று அழைக்கின்றனர். ஏழாவதாக பிறந்தவர் சந்தனமாரி. இவர் சடைமாரி, ஆகாசமாரி என்றும் அழைக்கின்றனர். கடைசியாக பிறந்தவர் காந்தாரி.

    இந்த பிள்ளைகள் 8 பேரையும் நாகக்கன்னி மிகுந்த அன்போடும், அரவணைப்புடனும் வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆனார்கள். வளர்ந்து வந்த பிள்ளைகள் அனைவரும் அவர்களுடைய அம்மா நாகக்கன்னியை பார்த்து அம்மா என்னுடைய முகமும், உங்களுடைய முகமும் வேறுபட்டு இருக்கிறதே? ஏன் அம்மா என்று கேட்டனர்.

    உடனே நாகக்கன்னி அந்த 8 பிள்ளைகளையும் பார்த்து எல்லாம் அந்த சிவபெருமானின் செயல் என்று கூறினார். உடனே அந்த பெண்களும் நம்மை ஏன் தாயை போல் நாகக்கன்னியாக படைக்காமல் மனிதகுல பெண்களாக படைத்தார் இந்த சிவபெருமான். இந்த நாககுலத்தில் மனிதபிறப்பு எடுத்து என்ன பயன்பெறப்போகிறோம். அதை அந்த சிவபெருமானிடமே கேட்போம் என்று அக்காள், தங்கை 8 பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் புரியத்தொடங்கினர்.

    அஷ்டகாளிகளின் தவத்தை பார்த்த சிவபெருமான் அவர்கள் முன்னால் தோன்றினார். அஷ்டகாளிகள் சிவபெருமானிடம் தங்களுடைய பிறப்பு குறித்து கேட்டனர். அதற்கு சிவபெருமான் மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டுவரக்கூடிய மகிஷாசுரனை வதம் செய்வதற்காக தான் நீங்கள் படைக்கப்பட்டீர்கள் என்று கூறினார்.

    உடனே அந்த அஷ்டாகாளிகள் அனைவரும் சிவபெருமானிடம் நாங்கள் உங்களுடைய வேண்டுகோளை ஏற்று அந்த மகிஷாசுரனை வதம் செய்த பிறகு எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணம்முடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு சிவபெருமானும் ஒப்புக்கொண்டார்.

    அதன்பிறகு மகிஷாசுரனை அழிக்கக்கூடிய வகையில் அந்த 8 பேருக்கும் அனைத்து வரங்களையும் வழங்கினார் சிவபெருமான். சிவபெருமானின் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வதமலைக்கு வந்த அஷ்டகாளிகளுக்கும், மகிஷாசுரனுக்கும் கடுமையாக சண்டை நடந்தது. தனித்தனியாக நின்று போரிடுவதைவிட ஒன்றுசேர்ந்து நின்றால் தான் பலம் அதிகம் என்று அஷ்டகாளிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சாமூண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர்.

    மகிஷாசுரன் இறக்கும்போது சாமூண்டீஸ்வரியை பார்த்து தாயே என்னை மன்னித்துவிடுங்கள். வாழும் வரை மனிதகுலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிர்களுக்கு ராஜாவான சிங்கமாக மாறி தாயே உம்மை சுமக்கும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என்று பணிவுடன் கேட்டார்.

    இதைகேட்டதும் ஆங்கார ரூபினியான சாமூண்டீஸ்வரி அதன்பிறகு சாந்த சொரூபினியாக மாறினார். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக மாற்றி தன்னுடைய வாகனமாக்கிக்கொண்டார். அன்றில் இருந்து அஷ்டகாளிகள் 8 பேரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டார்.

    அதன்பிறகு ஒருநாள் அஷ்டகாளிகள் 8 பேரும் கயிலாயம் சென்றனர். கயிலாயம் விட்டு வந்த அஷ்டகாளியர் பொதிகைமலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்துகொண்டு தான் வந்ததை அப்பகுதி மக்களுக்கு உணர்த்தி கோவில் கொண்டு அப்பகுதி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    • உவரி சுயம்புலிங்க சுவாமியை பெரியசாமி என்றே அழைத்து வந்தனர்.
    • கடல் அலைகள் சாமரம் வீச அழகாக காட்சி தருகிறார் உவரி சுயம்புலிங்க சுவாமி.

    கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணிய தலம் தான் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.

    அந்த காலத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமியை பெரியசாமி என்றே அழைத்து வந்தனர். தற்போது உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. வேப்பமரக்காற்று மணமணக்க, பனைமரக்காற்று சலசலக்க வெண்மணல்கள் கம்பளம் விரிக்க, கடல் அலைகள் சாமரம் வீச அழகாக காட்சி தருகிறார் உவரி சுயம்புலிங்க சுவாமி.

    பொதுவாக சிவலிங்கத்தின் மேற்பாகம் தான் சிவபெருமான். லிங்கம் பொருந்தி இருக்கக்கூடிய ஆவுடை பாகம் அம்பாளுடையது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வீற்றிருக்ககூடிய உவரி சுயம்புலிங்க சுவாமிக்கு ஆவுடை பாகம் இல்லை. ஆவுடை பாகம் இல்லாத இந்த சிவபெருமானை ஆதிபரம்பொருள் என்ற பொருளில் பெரியசாமி என்று அழைத்தனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் உலகையே காக்கும் பரமேஸ்வரராகிய சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக வந்தார். தொடக்க காலத்தில் உவரி மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக்கொடிகள் அதிகமாக படர்ந்து இருந்ததால் இந்த பகுதியை கடம்பவனம் என்று அழைத்தனர்.

    ஒரு சமயம் கோட்டபனை என்ற ஊரில் இருந்து பால் விற்பதற்காக தினமும் உவரி வழியாக செல்வது வழக்கம். தற்போது சுவாமி இருக்கக்கூடிய இடத்தின் அருகே வரும்போது கால் இடறிவிழுந்துகொண்டே இருந்தாராம். எனவே கால் இடற காரணமாக இருந்த கடம்பவேரை வெட்டி வீழ்த்தும் போது ரத்தம் பீரிட்டு வந்தது. அங்கிருந்த அனைவரும் பார்த்து பயந்து போனார்கள்.

    உடனே அசரிரீயாக தான் இங்கு வீற்றிருப்பதாகவும், இங்கு தனக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் சொன்னார். உடனே அங்கு இருக்கக்கூடிய பக்தர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அந்த இடத்தை தோண்டினார்கள். அப்போது அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவலிங்கத்தின் தலையில் வெட்டுபட்டு ரத்தம், வழிந்துகொண்டு இருந்தது.

    அப்போது மீண்டும் ஒரு அசரிரீ ஒலித்தது. அன்பர்களே... ரத்தம் வழியும் இடத்தில் சந்தனக்கட்டையால் சந்தனம் அரைத்து அந்த சந்தனத்தை வெட்டுபட்ட இடத்தில் பூசுங்கள். அப்போது ரத்தம் வழிவது நின்றுவிடும். உங்கள் பல தலைமுறைகளும், நம்மை அண்டியவர்களும் நோய்நொடிகள் அண்டாது வாழ்வார்கள் என்று சொன்னது.

    அதன்பிறகு அடியவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதேஇடத்தில் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினர். முதலில் பனை ஓலையில் கோவில் எழுப்பினார்கள். அதன்பிறகு மிகப்பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு முன்பு முதலில் காவல் தெய்வமாக இருக்கக்கூடிய சிரட்டை பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று வீற்றிருக்கக்கூடிய சுடலைமாடன் சுவாமிக்கு சிதறுதேங்காய் உடைத்த பிறகு உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    உவரி சுயம்புலிங்க சுவாமியின் கோவிலின் தென்மேற்கில் கன்னிவிநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் முதலில் கடலில் நீராடிவிட்டு பின்பு ஆலயத்தின் பின்புறத்தில் இருக்கக்கூடிய தெப்பத்தில் நீராடிய பின்னர் கன்னி விநாயகரை வழிபட்ட பின்னர் தான் மூலவரான உவரி சுயம்புலிங்க சுவாமியை வழிபட வேண்டும்.

    இங்கு வரக்கூடிய ஆண் பக்தர்கள் மேல்சட்டை அணிய தடைசெய்யப்பட்டுள்ளது. கன்னிவிநாயகருக்கு கண்டிப்பாக சிதறுதேங்காய் உடைக்க வேண்டும். உவரி சுயம்புலிங்க சுவாமியின் சன்னதியில் சந்தனம் தான் பிரசாதமாக வழங்கப்படும். அதுவும் உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சாற்றிய சந்தனம் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் 48 நாட்கள் தங்கி இருந்து கடலில் நீராடி ஈசனாகிய சிவபெருமானை வழிபட்டு கருவறை தீபத்திற்கு நெய் சேர்த்து அங்கு பிரசாதமாக தரக்கூடிய சந்தனத்தை வாங்கி உண்டுவந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீரும். அடுத்ததாக உவரி சுயம்புலிங்க சுவாமியின் கோவிலின் வெளிப்புறத்தில் தனி சன்னதியில் முன்னோடி சுவாமி இருக்கிறார்.

    இவர் பைரவரின் சொரூபமாக அருள்பாலிக்கிறார். முன்னோடி சுவாமி கோவிலை அடுத்து தனி கோவிலில் பிரம்மசக்தி அம்மன் அருள்பாலிக்கிறார். பிரம்மசக்தி அம்மனை பஞ்சமி, புதன்கிழமை, மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, விசாகம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களில் கருவறை தீபத்திற்கு நல்லெண்ணெய் ஊற்றி வெண் தாமரை மலர்கொண்டு பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    பிரம்மசக்தி சன்னதியை தொடர்ந்து சிவனணைந்தபெருமாள் சன்னதியும் உள்ளது. சிவபெருமானுடன் பெருமாள் பெண் உருவம் கொண்டு அணைந்ததால் சிவனணைந்த பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிவனணைந்தபெருமாள் சன்னதியில் உள்ள மரத்தின் கிளையில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

    அதன்பிறகு பேச்சியம்மன், மாடசாமி, இசக்கியம்மன் போன்ற சன்னதிகளும் இந்த கோவிலில் இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய இசக்கி அம்மனுக்கு எண்ணெய் மஞ்சனம் கலவையை சாற்றி வேண்டுதல் வழிபாடு செய்கிறார்கள். எண்ணெய் மஞ்சனம் என்பது இசக்கியம்மனுக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி சாற்றி வழிபடுவது ஆகும்.

    ஆலயத்தின் மேற்கு திசையில் ஆலயடி சாஸ்தா கோவில் உள்ளது. இங்கேயும் கண்டிப்பாக சென்று வழிபட வேண்டும். இங்கே வன்னிமரத்தின் அடியில் பூரணபுஸ்கலையுடன் சாஸ்தா அருள்பாலிக்கிறார். இங்கு சித்ராபவுர்ணமி, பங்குனி உத்திரம், ஆடி அமாசாசை, விசாக நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் எல்லோரும் பொங்கலிட்டு தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் மாதாந்திர விழா என்ற சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று இரவு வாகனபவனி நடக்கும். தைப்பூச நாளில் இங்கு தேரோட்டம் நடைபெறும். தேரோட்டம் முடிந்து மறுநாள் பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவு தெப்பத்திருவிழாவு சிறப்பாக நடைபெறும்.

    அதுமட்டுமில்லாமல் பிரதோசம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளிலும், வாராந்திர திங்கட்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் உண்டு. பொதுவாக சிவன் கோவில்களில் சூரியபூஜை ஓரிரு நாட்கள் இருக்கும். ஆனால் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் காலையில் இங்கு சூரியபூஜை நடக்கிறது.

    அதாவது மார்கழி மாதம் முழுவதும் இந்த தலத்தில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை சூரிய பகவான் வழிபடுகிறார். சூரிய திசை நடக்கக்கூடியவர்கள் மார்கழி மாதம் காலையில் சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு துன்பங்கள் எல்லாம் நீங்கி வாழ்வில் வளம் வீச வளமும், நலமும் பெறுகின்றனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் காலை 6 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    • பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன்.
    • உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

    கிருஷ்ணர் கூட அதிகநேரம் இருப்பவரான அர்ஜுனனுக்கு தான் தான் மிகச்சிறந்த பக்திமான் என்கிற அகந்தை இருந்தது. கிருஷ்ணர் அந்த ஆணவத்தை அர்ஜுனனிடம் இருந்து எப்படி அகற்றினார் என்பதை தான் இந்த கதையில் பார்க்கப்போகிறோம்.

    பாரத போர் நடந்து முடிந்தது. அதில் வெற்றி பஞ்சபாண்டவர்களுக்கு கிடைத்தது. பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன். நான் வெற்றிபெற்ற பிறகும், இப்போது வரைக்கும் கிருஷ்ணர் என்னுடன் தான் இருக்கிறார். என்னைவிட யாரும் கிருஷ்ணரிடம் அதிக அன்புடனும், பக்தியுடன் யாரும் இருக்கவில்லை என்று நினைத்தார் அர்ஜுனர்.

    இதைபார்த்த கிருஷ்ணர், அர்ஜுனனிடம் அப்படி நீயாகவே முடிவு செய்துவிடக்கூடாது. உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதிலும் அர்ஜுனனின் இந்த கர்வத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று எண்ணிய கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து என்னை அதிக பக்தியுடன் வணங்கி வருபவள் பிங்கலை. அவள் அஸ்தினாபுரத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறாள். அவளை நாம் சென்று பார்த்து வரலாம் என்று கூறினார்.

    உடனே கிருஷ்ணர் இப்போது தான் பாரதபோர் முடிந்துள்ளது. இதே தோற்றத்தில் நாம் வெளியில் செல்ல வேண்டாம். அதனால் நான் ஒரு பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறி செல்லலாம் என்றார்.

    சற்று நேரத்தில் அரண்மணையில் இருந்து கிருஷ்ணரும், அர்ஜுனரும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டு வந்தனர். அஸ்தினாபுரம் வழியாக சென்று பிங்கலை வீட்டிற்கு சென்றனர்.

    அர்ஜுனரும், கிருஷ்ணரும் பிங்கலையின் வீட்டின் கதவை தட்டினர். அங்கு தெய்வீக ஒளியோட ஒரு மூதாட்டி கதவை திறந்தார். உடனே பெண்களாக உருமாரி கிருஷ்ணரும், அர்ஜுனரும் தாயே... நாங்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டும். மிகவும் களைப்பாக உள்ளது. சற்று நேரம் இங்கு இளைப்பாறிவிட்டு செல்லலாமா? என்று கேட்டனர்.

    அதற்கு அந்த மூதாட்டி உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டு இருக்கிறேன். பூஜை முடிந்தபிறகு நீங்களும் உணவு அருந்திவிட்டு செல்லுங்கள் என்றார். வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது. அந்த கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் சிறியதாக ஒரு கத்தியும், நடுத்தரமாக ஒரு கத்தியும், மூன்றாவதாக பெரியதாக ஒரு கத்தியும் இருந்தது. மொத்தம் 3 கத்திகள் அந்த கிருஷ்ணர் விக்கிரகத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்தை பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர் தாயே... ஏன் கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் 3 கத்திகள் வைக்கப்பட்டுள்ளது. ஏன் கிருஷ்ணர் விக்கிரகத்துடன் 3 கத்துகளையும் வைத்து பூஜைசெய்கிறீர்கள். இந்த கத்திகள் யாருடையது என்று கேட்டார். அதற்கு பிங்கலை இந்த கத்திகள் என்னுடையது தான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணருக்கு கொடுமைசெய்த எனது விரோதிகள் மூவரையும் கொல்ல வேண்டும். அதன்பொருட்டுத்தான் இந்த பூஜை.

    உடனே கிருஷ்ணர் விரோதியா? யார் அந்த விரோதிகள் என்று கேட்டார். குசேலன், பாஞ்சாலி, அர்ஜுனன். இந்த மூவரும் தான் அந்த விரோதிகள். இந்த குசேலனை கொல்லை சின்ன கத்தியும், பாஞ்சாலிக்கு நடுத்தர கத்தி, மாவீரன் என்று தன்னைப்பற்றி பிதற்றிக்கொண்டு திரியும் அர்ஜுனனை கொல்லத்தான் இந்த பெரிய கத்தி என்று சொன்னாள் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் உருவில் வந்த அர்ஜுனனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. உடனே பெண் உருவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அந்த மூவரும் கிருஷ்ணருக்கு அப்படி என்ன தீங்கு செய்தனர் என்று கேட்டார். பிங்கலை அந்த குசேலன் தவிட்டு அவலை என்னுடைய கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பி உண்பவன். அந்த அவல் என்னுடைய கிருஷ்ணரின் தாமரை போன்ற இதழை பாதிக்காதா. இந்த புத்தி கூட இல்லாமல் அவலை கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? என்று கேட்டாள் பிங்கலை.

    அது சரி... பாஞ்சாலி ஒரு பெண் அவள் எப்படி உங்களுக்கு விரோதியானாள்? என்று கேட்டார் கிருஷ்ணர். ஓ அதுவா.... என்னுடைய கிருஷ்ணரிடம் இருந்து புடவைகளை பெற்றாள். துவாரகையில் இருக்கும் என்னுடைய கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் உள்ள பாஞ்சாலிக்கு புடவைகளை வாரிவாரி கொடுத்தார். அந்த புடவையை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலித்து மயக்கமே போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே அப்படி என்றால், அதை வாரி வாரி வழங்கிய என்னுடைய கிருஷ்ணருக்கு எப்படி கைவலித்திருக்கும். என்னுடைய கிருஷ்ணரின் கைகளை வலிக்கச்செய்த பாஞ்சாலையை நான் சும்மாவிடுவேனா நான் என்று கோபமாக கூறினாள்.

    இதைக்கேட்ட பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர். அந்த மூன்றாவது கத்தி அர்ஜுனனுக்கு என்று சொன்னீர்களே, கிருஷ்ணரின் பக்தியிலேயே சிறந்தவன் அர்ஜுனன். அர்ஜுனன் மேல் ஏன் இந்த விரோதம்? உடனே பிங்கலை அர்ஜுனனின் பக்தியை நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.

    என் கிருஷ்ணனை தேரோட்ட சொல்வானா? தேரோட்டுவது அவ்வளது சாதாரணமானதல்ல. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம். ஊரில் என்றாவது ஒரு நால் என் கண்ணில் அகப்படுவான். அப்போது அன்றைக்கு அவனை பார்த்துக்கொள்கிறேன் என்றாள் பிங்கலை கோபமாக.

    இவ்வாறு பிங்கலை சொன்னவுடன், பெண் வேடமிட்டு வந்த அர்ஜுனனுக்கு பதட்டத்தில் வியர்த்து கொட்டியது. இதைப்பார்த்து கிருஷ்ணர் சிரித்துக்கொண்டு பிங்கலையை பார்த்து தாயே குசேலன் அறியாமையில் செய்தான். குசேலனிடம் அவலை தவிர வேறு எந்த ஒரு பொருளும் இல்லை. அவன் கிருஷ்ணரிடம் எந்த ஒரு பொருளையும் எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்காமலேயே கிருஷ்ணர் தான் அவனுக்கு அளவற்ற செல்வத்தை வழங்கினார். குசேலன் சுயநலமற்றவன் எனவே குசேலனை மன்னித்துவிடுமாறு பிங்கலையிடம் கூறினார் கிருஷ்ணர். இதைக்கேட்டதும் பிங்கலை கிருஷ்ணர் பீடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியை எடுத்து வீசினார்.

    பெண்வேடமிட்டு வந்திருந்த கிருஷ்ணர் மீண்டும் பாஞ்சாலிக்கு புடவையை வாரி வாரி கொடுத்து கிருஷ்ணரின் கைகள் வலித்தது உண்மைதான். ஆனாலும் ஒரு பெண்ணிற்கு மானம் பெரிதல்லவா, எனவே மானம் காக்க உதவியதால் பாஞ்சாலியையும் மன்னித்துவிடுங்கள் என்று கிருஷ்ணர் கூறினார். இதைக்கேட்டதும் பிங்கலை இரண்டாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    ஆனால் போரில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற உலகியல் சுயநலத்திற்காக என்னுடைய கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜுனனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன். இந்த பெரிய கத்தி அந்த பீடத்திலேயே இருக்கட்டும் என்று சொன்னார் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் சுயநலம் பிடித்த அர்ஜுனனை நீங்கள் கொல்வதும் நியாயம் தான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் அர்ஜுனனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அர்ஜுனனுக்கு பயத்தில் வியர்த்து கொட்டியது.

    இதைப்பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அர்ஜுனன், கிருஷ்ணரின் மனதை கவர்ந்ததால் தான் கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினார். நீங்க அர்ஜுனனை கொன்றுவிட்டால் நண்பனை இழந்து கிருஷ்ணர் வாடிவிடுவார் அல்லவா. கிருஷ்ணர் வருத்தப்பட்டால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா என்று சொன்னார் கிருஷ்ணர்.

    அடடா நீங்கள் சொன்ன கோலத்தில் நான் யோசிச்சு பார்க்கவில்லையே. நீ சொன்னதும் நியாயம் தான் என்னுடைய கிருஷ்ணர், உடல் வருத்தமோ, மன வருத்தமோ இல்லாமல் இருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மனவருத்தம் தரக்கூடிய செயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே பிங்கலை மூன்றாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    உடனே பெண் வேடத்தில் இருக்கும் அர்ஜுனன், பிங்கலையின் காலில் விழுந்து வணங்கினான். அப்போது அர்ஜுனனின் ஆணவம் அழிந்துபோனது.

    இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம் என்றால், நம்மில் பலருக்கும் நான் என்ற ஒரு ஆணவமும், என்னால் மட்டும் தான் முடியும் என்கிற கர்வமும் என்னைக்குமே தலைதூக்கிக்கொண்டே இருக்கும். இந்த கர்வமும், ஆணவமும் நம்மிடம் இருந்து நீங்கினால் வாழ்க்கையில் வெற்றி தானாக தேடிவரும். அதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

    • அசுபபதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான்.
    • சாவித்ரி சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் கேள்விகளில் சிறந்துவிளங்கினாள்.

    பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது மார்க்கண்டேய முனிவர் திரவுபதிக்கு இந்த கதையை எடுத்துக்கூறுகிறார். அந்த கதையை நாம் இன்று தெரிந்துகொள்ளலாம்.

    ஒரு ஊரில் மத்திரநாடு என்ற ஊர் இருந்தது. அந்த ஊரில் அசுபபதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லை. எனவே சாவித்ரி என்ற பெண் தெய்வத்தை வழிபட்டார். அந்த சாவித்திரி என்ற பெண் தெய்வத்தின் ஆசியாலும், சூரியபகவானின் அருளாளும், அசுபபதி மன்னனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது.

    இந்த குழந்தைக்கு சாவித்ரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சாவித்ரி சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் கேள்விகளில் சிறந்துவிளங்கினாள். அதேநேரத்தில் சாய்பு நாட்டை துய்மத்சேனன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னனுக்கு ஒரு மனைவியும், சத்தியவான் என்ற மகனும் இருந்தனர்.

    சத்தியவான் சிறுவதில் இருந்தே மிகுந்த பேரழகுடனும், வீரமுடனும் இருந்தார். ஒரு நாள் சாய்பு நாட்டு மன்னன் துய்மத்சேனனை எதிரிநாட்டு மன்னர்கள் போர்தொடுத்து வந்தனர். அந்த போரில் தோல்வி அடைந்த துய்மத்சேனன் எதிரிகளிடம் தன்னுடைய நாட்டை பறிகொடுத்ததோடு வாழவே வழி இல்லாமல் தன்னுடைய மனைவியையும், மகன் சத்தியாவானையும் அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்றனர்.

    சத்தியாவனும், அவருடைய அப்பா, அம்மாவும் காட்டில் வாழ்ந்து வந்தனர். நாளடைவில் சத்தியவானின் அப்பாவிற்கும், அம்மாவிற்கு கண்பார்வை பறிபோனது. தினமும் சத்தியவான் காட்டில் கிடைக்கக்கூடிய விறகுகளை எடுத்து அதனை விற்று பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து வந்தார்.

    இப்போது சத்தியவானும், சாவித்திரியும் பருவ வயதை அடைந்து இருந்தனர். ஒரு நாள் சாவித்ரி காட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தனது தந்தையிடம் அனுமதி கேட்க அவரும் சம்மதிக்கவே உடனே தனது தோழிகளுடன் சாவித்ரி காட்டை சுற்றிப்பார்க்க சென்றார்.

    தோழிகளுடன் காட்டை சுற்றிவரும்போது காட்டில் விறகுவெட்டிக்கொண்டிருந்த சத்தியவானை பார்த்தார். அதுமட்டுமல்லாமல் சத்தியவான் தனது தாய்-தந்தைக்கு ஆற்றிய தொண்டை கண்டு அவருடைய மனதை பறிகொடுத்தார். சாவித்ரிக்கு, சத்தியவான் மீது காதல் வந்தது.

    உடனே சாவித்ரி அரண்மணைக்கு சென்றதும் காட்டில் நடந்ததை தனது தந்தையிடம் கூறினார். அதுமட்டுமல்லாமல் சத்தியவானை எனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் கூறினார். அப்போது அங்கு நாரதமகரிஷி வந்தார். நாரதர் நடந்தவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு சாவித்ரியின் தந்தையிடம், அரசே சத்தியவான் அர்ப்ப ஆயுள் உள்ளவன் என்று சொன்னதோட மட்டுமில்லாமல் இன்றில் இருந்து 12 மாதங்களில் அவன் இறந்துவிடுவான் என்றும் கூறினார் நாரதர்.

    இதைகேட்டதும் மன்னன் மிகுந்த அதிர்ச்சியுடன் சாவித்திரியை பார்த்தார். ஆனால் சாவித்ரி மனதால் நினைத்தவனையே கணவனாக அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சாவித்ரி அப்பாவை பார்த்து அப்பா... நான் சத்தியவானை பார்த்ததுமே எனது மனதில் கணவனாக நினைத்துவிட்டேன். மணந்தால் சத்தியவானை தான் மணப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

    மகளின் உறுதியை கண்ட அசுபபதி அரசனும் திருமணத்திற்கு சம்மதித்தார். சத்தியவானுக்கும், சாவித்ரிக்கும் திருமணம் நடந்தது. அப்போது நாரத மகரிஷி சாவித்ரியிடம் சில நோன்பு முறைகளை சொல்லிக்கொடுத்தார். சாவித்ரி நீ உள் அன்புடன் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் உனக்கு நல்லது நடக்கும் என்று கூறினார் நாரதர்.

    இப்போது திருமணம் முடிந்ததும் அரண்மணையை விட்டுவிட்டு சாவித்ரி, சத்யவான் கூட காட்டில் சென்று வாழ கிளம்பினாங்க. சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று தெரிந்தும் சாவித்ரி அதனை தனது கணவனிடம் தெரிவிக்கவே இல்லை. இப்படி நாட்கள் சென்றுகொண்டிருந்தன. இன்னும் சத்தியவான் இறப்பதற்கு 3 நாட்களே இருந்தன.

    3 நாட்களும் சாவித்ரி உணவும், உறக்கமும் இன்றி கடுமையாக விரதம் இருந்தார். 3-வது தனது கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி கண்ணீர்மல்க பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். சத்தியவான் இறக்கும் நாளும் வந்தது. சத்தியவான் இறக்கும் நாள் அன்று விறகு வெட்ட காட்டிற்கு சென்றுகொண்டிருந்த சத்தியவானிடம், சாவித்ரி இன்றைக்கு நானும் உங்களுடன் விறகு வெட்ட வருகிறேன் என்று கூறினார்.

    சத்தியவானும், சாவித்ரியை தன்னுடன் காட்டிற்கு அழைத்துச்சென்றார். சாவித்ரியை ஒரு மரத்தின் நிழலில் உட்கார வைத்துவிட்டு சத்தியவான் மட்டும் விறகுவெட்ட கிளம்பினார். கொஞ்சநேரத்திலேயே விறகுவெட்டிக் கொண்டிருந்த சத்தியவானுக்கு பயங்கரமான தலைவழி வந்தது. உடனே சத்தியவான், சாவித்ரி அருகில் வந்து அவரது மடியில் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் சத்தியவானின் உயிர் பிரிந்தது.

    அங்குவந்த எமதர்மராஜா அவரை கவர்ந்து செல்ல வந்தார். பதிவிரதையான சாவித்ரியின் கண்களுக்கு எமதர்மன் கண்ணுக்கு தெரிந்தார். எமதர்மனை வணங்கிய சாவித்ரி தாங்கள் யார்? என்று கேட்டார். நான் எமதர்மராஜா என்று கூறினார். உடனே எமன் பெண்ணே உயிரிழந்த உன் கணவனின் உடலை விட்டுவிடு. மரணம் மனிதனின் விதி என்று கூறினார் எமன். உடனே சாவித்ரி அங்கிருந்து விலகி நின்றார்.

    சாவித்ரி, எமதர்மராஜாவை பார்த்து ஒரு அன்பு கணவனையும், அவனுடைய அன்பு மனைவியையும் உங்களின் மாறாத விதி பிரிக்கவே கூடாது என்று எமதர்மராஜாவிடம் வேண்டினார். உடனே எமதர்மராஜாவும் சாவித்ரியை பார்த்து உத்தமியே உனது கணவன் சத்தியவானின் உயிரை தவிர்த்து 3 வரங்களை கேள் தருகிறேன் என்று கூறினார் எமதர்மன்.

    அதற்கு சாவித்ரி எமர்தர்மனிடம் தனது மாமனார்-அத்தைக்கு இழந்த நாடும், கண்பார்வையும் கிடைக்க வேண்டும் என்றும், தனது தந்தைக்கு பிறகு அரசாள்வதற்கு ஆண்வாரிசு இல்லாததால் அவருக்கு ஆண் வாரிசு வேண்டும் என்றும், போரில் பின்வாங்காத வீரமுடைய புதல்வர்கள் எனக்கு மகனாக வரவேண்டும் என்றும் கேட்டார்.

    சாவித்ரியின் சாமர்த்தியமான பேச்சைக்கேட்ட எமதர்மன் சிறிது யொசிக்காமல் அப்படியே ஆகட்டும். தந்தேன்.... என்று கூறிவிட்டு சத்தியவானின் உடலை எடுத்துக்கொண்டு எமலோகத்திற்கு சென்றார். சாவித்ரியும், எமதர்மராஜாவை தொடர்ந்து பின்னாடியே போனார்.

    எமதர்மராஜா, சாவித்ரியின் பொறுமையை கண்டு மீண்டும் மனம், இழகி சாவித்ரியை பார்த்து இன்னும் உனக்கு வரம் வேண்டுமா என்று கேட்டார். அதற்கு சாவித்ரி, எமதர்மராஜா... ஏற்கனவே நீங்கள் தந்த வரத்தில் புத்திரபாக்கியம் எனக்கு என் கணவன் இல்லாமல் எப்படி கிடைக்கும் என்று கேட்டார். அதற்கு எமதர்மராஜா தந்தேன்... என்று கூறிவிட்டு மறைந்தார்.

    அதன்பிறகு சத்தியவான் உறக்கத்தில் இருந்து எழுந்தவன்போல எழுந்தார். சாவித்ரி பெற்ற வரத்தின்படி சாவித்ரிக்கும் அவரது மாமா-அத்தைக்கு இழந்த நாடும், கண்பார்வையும் கிடைத்தது. சாவித்ரியின் தந்தைக்கு ஆண் வாரிசும் கிடைத்தது. சத்தியவானும், சாவித்ரியும் வீரமிக்க புதல்வர்களை பெற்று பல்லாண்டுகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

    இந்த கதையில் நாம் புரிந்து கொண்டது என்ன என்றால் சத்தியவான், சாவித்ரியின் அன்பு மரணத்தை வென்றுவிட்டது. உண்மையான அன்பிற்கு முன்னால் எமதர்மன் கூட ஆற்றல் அற்றவனாக மாறிவிடுவான் என்பதற்கு சத்தியவான், சாவித்ரி கதை சான்றாக உள்ளது.

    • சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
    • அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள்.

    இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.

    விரிதிரைசூழ் கடற்நாகை அதிபதற்கடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து சொல்லப்படுகிற அதிபத்த நாயனார் பற்றி இந்த நாயனார் வரலாற்றில் தெரிந்து கொள்ளலாம்.

    சோழநாட்டில் நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் திருநுழைப்பாடி என்ற இடத்தில் மீன்பிடித்து வியாபாரம் செய்யக்கூடிய மீனவ சமுதாயமான பரதவ இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபத்த நாயனார் இருந்தார்.

    அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள். தன்னுடைய சிறு வயதில் இருந்தே சிறந்த சிவ பக்தராக இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன்பிடிக்கப்போகும் போதும் தன்னுடைய வலையில் சிக்கக்கூடிய முதல் மீனை எடுத்து இந்த மீன் இறைவனாகிய சிவபெருமானுக்கு உரியது என்று சொல்லி கடலில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அதிபத்த நாயனாரில் உயர்ந்த பக்தியை உலகிற்கு உணர்த்த சிவபெருமான், தன்னுடைய திருவிளையாடலை அதிபத்த நாயனாரிடம் நடத்த ஆரம்பித்தார்.

    அதிபத்த நாயனார் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது மீன்கள் சிக்குவது குறைந்துகொண்டே வந்தது. இதனால் அதிபத்த நாயனாரின் குடும்பத்தில் வறுமை ஏற்படத்தொடங்கியது. ஆனாலும் அதிபத்த நாயனார் தன்னுடைய வலைகளில் சிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அளிப்பதை நிறுத்தவே இல்லை.

    இப்படியே நாட்கள் நகர்ந்தது. அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிபத்த நாயனாரின் வலையில் ஒரேஒரு மீன் மட்டும் சிக்குமாறு விளையாடினார் சிவபெருமான். அதிபத்த நாயனாரும் வழக்கம்போல இந்த மீன் என்னை படைத்த சிவபெருமானுக்கு உரியது. சிவார்ப்பணம் என்று கூறி கடலில் விட்டார்.

    காலப்போக்கில் அதிபத்த நாயனாரின் குடும்பமே கடுமையான வறுமையில் வாடியது. அதிபத்த நாயனாரின் உடலும் நாளுக்கு நாள் தளர்ந்துகொண்டே வந்தது. இதைபார்த்து மிகுந்த கவலையுடன் அதிபத்த நாயனாரின் மனைவி கணவனிடம் நம் பசியை தீர்க்க வீட்டில் எந்த பொருளுமே இல்லை. நம் குழந்தைகள் எல்லோரும் பசியுடன் பலவீனமாக இருக்கிறார்கள். நீங்கள் பொருள் ஏதாவது சம்பாதித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

    அதிபத்த நாயனாரும் தனது மனைவி சொல்வதை கேட்டு தனது குழந்தைகளுக்காக கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அதிபத்த நாயனார் வீசிய வலையில் நவரத்தினங்களும், நவமணிகளும் பதித்த ஒரு தங்க மீன் ஒன்று வலையில் மாட்டியது.

    இதைக்கண்டதும் அருகில் இருந்தவர்கள் அதிபத்த நாயனாரே இன்று உமக்கு ராசியான நாள். அதனால் தான் நீங்க வீசிய வலையில் தங்க மீன் கிடைத்துள்ளது. இந்த மீனை கொண்டுபோய் உங்க மனைவியிடம் கொடுங்க. உங்களது வம்சமே செல்வச்செழிப்பாக வாழலாம் என்று சொன்னார்கள்.

    தங்க மீனை கண்டதும் அதிபத்த நாயனாரின் மனதில் எந்த சலனமும் இல்லாமல் வழக்கம் போல் வலையில் சிக்கிய முதல் மீனை இறைவனுக்கு கொடுப்பது போலவே இந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கு உரியது என்று கூறி கடலில் விட்டு விட்டார்.

    அதிபத்த நாயனாரின் இந்த செயலைக்கண்டு அருகில் இருந்தவர்கள் எல்லாரும் திகைத்து நின்றனர். அப்போதுதான் சிவபெருமானும், பார்வதிதேவியும் அதிபத்த நாயனாருக்கு காட்சி அளித்தனார். அதுமட்டுமில்லாமல் கையில் தன்னுடன் இருக்கக்கூடிய பேரின்ப வரத்தையும் அதிபத்த நாயனாருக்கு அளித்தனர்.

    இன்றைக்கும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தங்க மீனை சிவபெருமானுக்கு கொடுக்கும் திருவிழா நாகப்பட்டினத்தில் உள்ள காயரோகன சுவாமி கோவில் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை ஒரு கட்டுமரத்தில் வைத்து மீன்பிடிக்க கடலுக்கு போவார்கள். அப்போது கடலில் வலைவீசுவது போலவும், அந்த வலையில் தங்க மீன் சிக்குவது போலவும் அதை அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது போலவும் பாவணை செய்வார்கள்.

    அந்தநேரத்தில் கோவிலில் இருக்கக்கூடிய சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு முக்தி அளிக்க கடற்கரைக்கு வருகிறார். கடற்கரைக்கு வரும் சிவபெருமானுக்கு அந்த தங்க மீனை படைத்து பூஜையும் செய்வார்கள். அப்போது அந்த கடற்கரைக்கு வரக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் சிவபெருமான் அருளாசி புரிவார்.

    அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அருள் கிடைக்க பணமோ, பொருளோ கல்வியோ தேவையில்லை. தூய்மையான மனமும்ம் இறை அர்ப்பணிப்பு மட்டும் இருந்தால் போதுமானது. சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்பதை தான் இந்த அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கிறது.

    ×