search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrogance"

    • பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன்.
    • உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

    கிருஷ்ணர் கூட அதிகநேரம் இருப்பவரான அர்ஜுனனுக்கு தான் தான் மிகச்சிறந்த பக்திமான் என்கிற அகந்தை இருந்தது. கிருஷ்ணர் அந்த ஆணவத்தை அர்ஜுனனிடம் இருந்து எப்படி அகற்றினார் என்பதை தான் இந்த கதையில் பார்க்கப்போகிறோம்.

    பாரத போர் நடந்து முடிந்தது. அதில் வெற்றி பஞ்சபாண்டவர்களுக்கு கிடைத்தது. பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன். நான் வெற்றிபெற்ற பிறகும், இப்போது வரைக்கும் கிருஷ்ணர் என்னுடன் தான் இருக்கிறார். என்னைவிட யாரும் கிருஷ்ணரிடம் அதிக அன்புடனும், பக்தியுடன் யாரும் இருக்கவில்லை என்று நினைத்தார் அர்ஜுனர்.

    இதைபார்த்த கிருஷ்ணர், அர்ஜுனனிடம் அப்படி நீயாகவே முடிவு செய்துவிடக்கூடாது. உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதிலும் அர்ஜுனனின் இந்த கர்வத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று எண்ணிய கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து என்னை அதிக பக்தியுடன் வணங்கி வருபவள் பிங்கலை. அவள் அஸ்தினாபுரத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறாள். அவளை நாம் சென்று பார்த்து வரலாம் என்று கூறினார்.

    உடனே கிருஷ்ணர் இப்போது தான் பாரதபோர் முடிந்துள்ளது. இதே தோற்றத்தில் நாம் வெளியில் செல்ல வேண்டாம். அதனால் நான் ஒரு பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறி செல்லலாம் என்றார்.

    சற்று நேரத்தில் அரண்மணையில் இருந்து கிருஷ்ணரும், அர்ஜுனரும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டு வந்தனர். அஸ்தினாபுரம் வழியாக சென்று பிங்கலை வீட்டிற்கு சென்றனர்.

    அர்ஜுனரும், கிருஷ்ணரும் பிங்கலையின் வீட்டின் கதவை தட்டினர். அங்கு தெய்வீக ஒளியோட ஒரு மூதாட்டி கதவை திறந்தார். உடனே பெண்களாக உருமாரி கிருஷ்ணரும், அர்ஜுனரும் தாயே... நாங்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டும். மிகவும் களைப்பாக உள்ளது. சற்று நேரம் இங்கு இளைப்பாறிவிட்டு செல்லலாமா? என்று கேட்டனர்.

    அதற்கு அந்த மூதாட்டி உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டு இருக்கிறேன். பூஜை முடிந்தபிறகு நீங்களும் உணவு அருந்திவிட்டு செல்லுங்கள் என்றார். வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது. அந்த கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் சிறியதாக ஒரு கத்தியும், நடுத்தரமாக ஒரு கத்தியும், மூன்றாவதாக பெரியதாக ஒரு கத்தியும் இருந்தது. மொத்தம் 3 கத்திகள் அந்த கிருஷ்ணர் விக்கிரகத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்தை பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர் தாயே... ஏன் கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் 3 கத்திகள் வைக்கப்பட்டுள்ளது. ஏன் கிருஷ்ணர் விக்கிரகத்துடன் 3 கத்துகளையும் வைத்து பூஜைசெய்கிறீர்கள். இந்த கத்திகள் யாருடையது என்று கேட்டார். அதற்கு பிங்கலை இந்த கத்திகள் என்னுடையது தான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணருக்கு கொடுமைசெய்த எனது விரோதிகள் மூவரையும் கொல்ல வேண்டும். அதன்பொருட்டுத்தான் இந்த பூஜை.

    உடனே கிருஷ்ணர் விரோதியா? யார் அந்த விரோதிகள் என்று கேட்டார். குசேலன், பாஞ்சாலி, அர்ஜுனன். இந்த மூவரும் தான் அந்த விரோதிகள். இந்த குசேலனை கொல்லை சின்ன கத்தியும், பாஞ்சாலிக்கு நடுத்தர கத்தி, மாவீரன் என்று தன்னைப்பற்றி பிதற்றிக்கொண்டு திரியும் அர்ஜுனனை கொல்லத்தான் இந்த பெரிய கத்தி என்று சொன்னாள் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் உருவில் வந்த அர்ஜுனனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. உடனே பெண் உருவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அந்த மூவரும் கிருஷ்ணருக்கு அப்படி என்ன தீங்கு செய்தனர் என்று கேட்டார். பிங்கலை அந்த குசேலன் தவிட்டு அவலை என்னுடைய கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பி உண்பவன். அந்த அவல் என்னுடைய கிருஷ்ணரின் தாமரை போன்ற இதழை பாதிக்காதா. இந்த புத்தி கூட இல்லாமல் அவலை கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? என்று கேட்டாள் பிங்கலை.

    அது சரி... பாஞ்சாலி ஒரு பெண் அவள் எப்படி உங்களுக்கு விரோதியானாள்? என்று கேட்டார் கிருஷ்ணர். ஓ அதுவா.... என்னுடைய கிருஷ்ணரிடம் இருந்து புடவைகளை பெற்றாள். துவாரகையில் இருக்கும் என்னுடைய கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் உள்ள பாஞ்சாலிக்கு புடவைகளை வாரிவாரி கொடுத்தார். அந்த புடவையை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலித்து மயக்கமே போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே அப்படி என்றால், அதை வாரி வாரி வழங்கிய என்னுடைய கிருஷ்ணருக்கு எப்படி கைவலித்திருக்கும். என்னுடைய கிருஷ்ணரின் கைகளை வலிக்கச்செய்த பாஞ்சாலையை நான் சும்மாவிடுவேனா நான் என்று கோபமாக கூறினாள்.

    இதைக்கேட்ட பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர். அந்த மூன்றாவது கத்தி அர்ஜுனனுக்கு என்று சொன்னீர்களே, கிருஷ்ணரின் பக்தியிலேயே சிறந்தவன் அர்ஜுனன். அர்ஜுனன் மேல் ஏன் இந்த விரோதம்? உடனே பிங்கலை அர்ஜுனனின் பக்தியை நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.

    என் கிருஷ்ணனை தேரோட்ட சொல்வானா? தேரோட்டுவது அவ்வளது சாதாரணமானதல்ல. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம். ஊரில் என்றாவது ஒரு நால் என் கண்ணில் அகப்படுவான். அப்போது அன்றைக்கு அவனை பார்த்துக்கொள்கிறேன் என்றாள் பிங்கலை கோபமாக.

    இவ்வாறு பிங்கலை சொன்னவுடன், பெண் வேடமிட்டு வந்த அர்ஜுனனுக்கு பதட்டத்தில் வியர்த்து கொட்டியது. இதைப்பார்த்து கிருஷ்ணர் சிரித்துக்கொண்டு பிங்கலையை பார்த்து தாயே குசேலன் அறியாமையில் செய்தான். குசேலனிடம் அவலை தவிர வேறு எந்த ஒரு பொருளும் இல்லை. அவன் கிருஷ்ணரிடம் எந்த ஒரு பொருளையும் எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்காமலேயே கிருஷ்ணர் தான் அவனுக்கு அளவற்ற செல்வத்தை வழங்கினார். குசேலன் சுயநலமற்றவன் எனவே குசேலனை மன்னித்துவிடுமாறு பிங்கலையிடம் கூறினார் கிருஷ்ணர். இதைக்கேட்டதும் பிங்கலை கிருஷ்ணர் பீடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியை எடுத்து வீசினார்.

    பெண்வேடமிட்டு வந்திருந்த கிருஷ்ணர் மீண்டும் பாஞ்சாலிக்கு புடவையை வாரி வாரி கொடுத்து கிருஷ்ணரின் கைகள் வலித்தது உண்மைதான். ஆனாலும் ஒரு பெண்ணிற்கு மானம் பெரிதல்லவா, எனவே மானம் காக்க உதவியதால் பாஞ்சாலியையும் மன்னித்துவிடுங்கள் என்று கிருஷ்ணர் கூறினார். இதைக்கேட்டதும் பிங்கலை இரண்டாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    ஆனால் போரில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற உலகியல் சுயநலத்திற்காக என்னுடைய கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜுனனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன். இந்த பெரிய கத்தி அந்த பீடத்திலேயே இருக்கட்டும் என்று சொன்னார் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் சுயநலம் பிடித்த அர்ஜுனனை நீங்கள் கொல்வதும் நியாயம் தான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் அர்ஜுனனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அர்ஜுனனுக்கு பயத்தில் வியர்த்து கொட்டியது.

    இதைப்பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அர்ஜுனன், கிருஷ்ணரின் மனதை கவர்ந்ததால் தான் கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினார். நீங்க அர்ஜுனனை கொன்றுவிட்டால் நண்பனை இழந்து கிருஷ்ணர் வாடிவிடுவார் அல்லவா. கிருஷ்ணர் வருத்தப்பட்டால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா என்று சொன்னார் கிருஷ்ணர்.

    அடடா நீங்கள் சொன்ன கோலத்தில் நான் யோசிச்சு பார்க்கவில்லையே. நீ சொன்னதும் நியாயம் தான் என்னுடைய கிருஷ்ணர், உடல் வருத்தமோ, மன வருத்தமோ இல்லாமல் இருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மனவருத்தம் தரக்கூடிய செயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே பிங்கலை மூன்றாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    உடனே பெண் வேடத்தில் இருக்கும் அர்ஜுனன், பிங்கலையின் காலில் விழுந்து வணங்கினான். அப்போது அர்ஜுனனின் ஆணவம் அழிந்துபோனது.

    இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம் என்றால், நம்மில் பலருக்கும் நான் என்ற ஒரு ஆணவமும், என்னால் மட்டும் தான் முடியும் என்கிற கர்வமும் என்னைக்குமே தலைதூக்கிக்கொண்டே இருக்கும். இந்த கர்வமும், ஆணவமும் நம்மிடம் இருந்து நீங்கினால் வாழ்க்கையில் வெற்றி தானாக தேடிவரும். அதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

    ×