search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவக்குமார்"

    • மத்திய அரசு, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது.
    • காங்கிரசில் குழப்பம் இருப்பதாக முன்னாள் மந்திரி ஆர்.அசோக் சொல்கிறார்.

    பெங்களூரு :

    துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்திற்கு மத்திய அரசு அரிசி ஒதுக்க மறுப்பதன் பின்னணியில் பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து எல்லாவற்றையும் விரைவில் அம்பலப்படுத்துவோம். மத்திய அரசு, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவேன்.

    கர்நாடக அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் எண்ணத்தில் ஏழைகளுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. அரிசியை இலவசமாக வழங்குங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. இந்திய உணவு ஆணையம் விவசாயிகளிடம் இருந்து அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தற்போது அந்த ஆணைய கிடங்குகளில் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    அரிசி வழங்குவதாக முதலில் கூறவிட்டு, பிறகு அரிசி வழங்க முடியாது என்று கூறினர். மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் நாளை(இன்று) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பெங்களூருவில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.

    காங்கிரசில் குழப்பம் இருப்பதாக முன்னாள் மந்திரி ஆர்.அசோக் சொல்கிறார். முதலில் பா.ஜனதா எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கட்டும். மக்கள் எங்களுக்கு 5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். மக்களின் இந்த நம்பிக்கையை காப்பாற்றி கொள்வோம். எனது சகோதரர் டி.கே.சுரேஷ் அறிவார்ந்த அரசியல்வாதி, அனுபவம் வாய்ந்த தலைவர். புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருக்கிறது. அவருக்கு எந்த வைராக்கியமும் இல்லை.

    நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது, கட்சியின் தேர்தல் அறிக்கையை அமல்படுத்துவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள மந்திரிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்து கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க மந்திரிகள் அனைவரும் நாளை(இன்று) டெல்லி செல்கிறோம். இந்த சந்திப்பின்போது நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.

    மேல்-சபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(இன்று) கடைசி நாள் ஆகும். மனு தாக்கல் செய்யும்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • தமிழக மக்கள் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல.. கடுந்தன்மை.

    மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாக அம்மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கு தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்துக்கான நீர்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் விளக்கம் அளித்து இருந்துள்ளார். அதில், வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா நீதிமன்றம் செல்வதை நிறுத்திவிட்டு, மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    டிகே சிவக்குமாரின் இந்த கருத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பதில் அளித்துள்ளார். அதில், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை; டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது!" என்றார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,

    "தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. தமிழக மக்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அவர்களும் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகமும் வீணாக அடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும்" என்று கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கூறியிருக்கிறார். கர்நாடக துணை முதலமைச்சரின் ஒவ்வொரு சொல்லிலும் பெரும் இனிப்பு கலந்திருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதற்கும் பொருந்தும்.

    "பகையாடி கெடுக்க முடியாவிட்டால், உறவாடிக் கெடு என்றொரு பழமொழி உண்டு. அதைத் தான் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதிக்காது. தமிழகத்தை பகைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது எந்த காலத்திலும் நடக்காது. அதனால் தான் தமிழகத்தை புகழ்ந்து, ஏமாற்றி அனுமதி பெற்று அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த வஞ்சக வலையில் தமிழ்நாடு ஒருபோதும் விழுந்து விடக்க்கூடாது."

    "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறார். கடந்த காலங்களில் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் என்றாவது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறதா? என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். 1991-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் சொத்துகளும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு பலநூறு கோடி. பெங்களூருவில் மட்டும் 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்களை அப்போதிருந்த காங்கிரஸ் முதலமைச்சர் பங்காரப்பா ஊக்குவித்தார். இது தமிழர்கள் மீதான பெருந்தன்மையா?"

    "2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாடிய பயிர்களைக் காக்க வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போதும் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான 50 ஆம்னி பேருந்துகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன."

    "பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினார்கள். இப்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தான் அப்போதும் உள்துறை அமைச்சர். இப்போதைய துணை முதலமைச்சர் சிவக்குமார் தான் அப்போதும் செல்வாக்கு மிக்க அமைச்சர். ஆனால், அவர்கள் அப்போது தமிழர்கள் மீது பெருந்தன்மை காட்டவில்லை. ஆனால், இப்போது தமிழர்கள் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?"

    "மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை. கர்நாடக துணை முதலமைச்சரின் நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கி, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையை இழந்து விடக் கூடாது. மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட வல்லுனர்களைக் கொண்டு நடத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும். அதற்கு மாறாக, கர்நாடகத்துடன் எந்தவிதமான பேச்சுக்களிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    • கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த மே மாதம் 30-ம் தேதி, அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற மத்திய மந்திரியை நேரில் சந்திப்பேன் என கூறினார்.

    இதற்கு தமிழ்நாடு அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தது.

    இந்நிலையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் டி.கே.சிவக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    எங்களுக்கு தமிழ்நாடு மீது விரோதம் இல்லை. போரிடும் நோக்கமும் இல்லை. அங்கு இருப்பவர்கள் நமது அண்ணன்-தம்பிகள். யார் மீதும் எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. மேகதாது எங்களுடைய திட்டம். இதனால் தமிழகத்திற்கு பயன் ஏற்படும்.

    கடலுக்குச் செல்லும் நீரை தடுத்து நிறுத்தி அதை காவிரி படுகையில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவோம். காவிரியில் உள்ள அணைகளின் சாவி மத்திய அரசின் கையில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு எப்போது எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். சண்டை போட்டது போதும்.

    கர்நாடகத்தில் மின் உற்பத்தி திட்டத்தை தொடங்குவதால் தமிழக அரசுக்கு என்ன தொந்தரவு ஏற்படுகிறது? நீரை சேகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தினர் ஆதங்கப்பட தேவை இல்லை. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த தொந்தரவும் கிடையாது.

    நாம் சண்டை போட்டு கோர்ட்டுக்கு அலைந்து திரிந்தது போதும். நல்லிணக்கத்துடன் குடிநீர் மற்றும் தமிழக விவசாயிகளுக்கு பயன் ஏற்படும் இந்த மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
    • வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது என டிகே சிவக்குமார் பேச்சு

    கர்நாடக அரசு மேகதாது என்னுமிடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிப்படி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை தொடங்கி உள்ளது.

    தற்போதைய துணை முதல்வரான டி.கே.சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் இந்த எதிர்ப்பு தொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

    'தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது. தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையால் தமிழகத்திற்கு அதிக பயன் உள்ளது. உரிய நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்கீடு நீர் கிடைக்கும்' என்று டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

    ஆனால் தமிழகம் தரப்பில் இந்த விளக்கத்தை ஏற்க தயாராக இல்லை. அணை கட்டும் முயற்சியை தடுப்பதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. இந்த விஷயத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு மோதலுக்கு தயாராகிவிட்டது. இதன் காரணமாக மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

    • கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
    • காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதற்கு, தமிழ் நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

    "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துனை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

    "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177,25 டிஎம்.சி. நீரை மாதாந்திர அட்டவணை படி கர்நாடகம் அளிக்காத நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மான்புமிகு கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."

    "தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர்ப் பங்கீடு என்பது 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகானாத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 262-ன்கீழ் 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டத்தின்படி, பன்மாநில நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது."

    "காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம்."

    "ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும். மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும்."

    "கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிங்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். இதன்மூலம் காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீர் நின்று விடும் சூழ்நிலை ஏற்படுவதோடு, வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

    • சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம்.
    • அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-மந்திரியான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை.
    • கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது மேகதாது அணை திட்டம்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பேன்."

    "விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.

    • பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை, 11:45 மணிக்கு பதவி ஏற்பு விழா.
    • காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் நேற்று காலை சந்தித்து, அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு

    கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது.

    முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

    இதுவரை அமைச்சர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் அமைச்சர் ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.

    இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் நேற்று காலை சந்தித்து, அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

    அதன் பின், அவர்கள் பெங்களூரு திரும்பினர். இதனிடையே டெல்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை, 11:45 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

    • ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி.
    • கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

    இதுவரை மந்திரிகளுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் மந்திரிசபையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களான தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்டோரும் மந்திரி பதவி கேட்டு அடம் பிடித்து வருகின்றனர்.

    இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரியான டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியே டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    மாநிலத்தில் அரசியல் ரீதியாக மிக முக்கியமான சமூகமான லிங்காயத்துகள், காங்கிரஸ் வெற்றிக்கு தங்கள் பெரும் பங்களிப்பைக் காரணம் காட்டி, முதல்-மந்திரி பதவிக்கு உரிமை கோரினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்-மந்திரி ஆக்கியதை தொடர்ந்து லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கே அதிக மந்திரி பதவிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.

    முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மந்திரிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், டெல்லியில் 2 நாட்களாக முகாமிட்டுள்ளனர். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து, தங்கள் ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி தரும்படி கேட்டனர்.

    அவரோ, தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்து, ஆலோசிக்கும்படி தெரிவித்து விட்டார். இதையடுத்து, வேணுகோபால் வீட்டில் நேற்று 3 கட்டமாக கூடி ஆலோசனை நடத்தினர். இருவருமே, தங்கள் ஆதரவாளர்கள் பட்டியலை தனித்தனியாக தயாரித்து எடுத்து வந்திருந்தனர். இதை வழங்கி, இவர்களால் கட்சி வளர்ச்சிக்கு லாபம் என விளக்கினர்.

    மற்றொரு பக்கம் டெல்லியில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களுடன், நேற்று 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.,க்களும் இணைந்தனர். மொத்தம் இருப்பதே, 24 பதவிகள். ஆனால், 50-க்கும் அதிகமானோர் மந்திரி பதவி கேட்டு, தங்கள் ஆதரவு தலைவர்களை சந்தித்து பேசினர். யாரை மந்திரி ஆக்குவது, எதன் அடிப்படையில் வழங்குவது, அவர்களால் கட்சிக்கு என்ன லாபம், எந்தெந்த சமுதாயத்துக்கு முக்கியத்துவம் தருவது என, பல்வேறு கோணங்களில் ஆலோசிக்கப்பட்டது.

    அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மேலிட தலைவர்கள், கார்கேவுக்கு பட்டியல் தயாரித்து அனுப்பினர். அவர் சிலரை மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளார். பின், பட்டியலை திருத்தி மீண்டும் அனுப்பி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் இன்று காலை சந்தித்து, மந்திரிகள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதன் பின், அவர்கள் பெங்களூரு திரும்பினர்.

    இதனிடையே டெல்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், நாளை காலை, 11:45 மணிக்கு புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா நடக்கும் என தெரிகிறது.

    இதில் தேஷ்பாண்டே, லட்சுமண் சவதி, ஹெச்.கே.பாட்டீல், லட்சுமி ஹெப்பால்கர், தினேஷ் குண்டுராவ், விஜயானந்த் காஷப்பனவர், அசோக் பட்டண், பசவராஜ் ராயரெட்டி, சிவராஜ் தங்கடகி, கிருஷ்ண பைரேகவுடா.'ஹரிபிரசாத், சரண பிரகாஷ் பாட்டீல், மஹாதேவப்பா, ஈஸ்வர் கன்ரே, புட்டரங்கஷெட்டி, நரேந்திர ஸ்வாமி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன, சுதாகர், செலுவராயஸ்வாமி, வெங்கடேஷ் உட்பட மூத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும், 24 மந்திரி பதவிகளும் நிரப்பப்படும்' எனவும், காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் சரத்பாபு இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.


    கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    இந்நிலையில், சரத்பாபுவிற்கு இரங்கல் தெரிவித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அமிர்தவர்ஷினி படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர்.
    • சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    பதவியேற்பு விழாவில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டு அன்பு வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் 5 உத்தரவாதங்களை கொடுத்திருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். சொல்வதைச் செய்கிறோம். நாங்கள் அறிவித்த 5 உத்தரவாதங்கள் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப்போகிறது. சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.

    ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின்கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும். இந்த உத்தரவாதம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் குறித்த அறிவிப்பு, இன்று நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
    • புதிய மந்திரிகளுக்கு இன்று இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலாமக நடைபெற்றது.

    முதலில் முதல்-மந்திரியாக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றார்கள்.

    அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற சித்தராமையா கர்நாடகாவின் 24-வது முதல்-மந்திரி ஆவார்.

    விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,

     தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க.ஸ்டாலின்(தமிழ்நாடு), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல்(சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு(இமாச்சல பிரதேசம்), ஹேமந்த் சோரன்(ஜார்கண்ட்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     பதவி ஏற்பு விழா மேடையில் 30 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் மேடை முன் நிற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    மைதானத்தின் நடுவில் சுமார் 40 ஆயிரம் இருக்கைகளும், மைதானத்தின் கேலரியில் பொதுமக்களுக்கான இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் மைதானத்திற்குள்ளும், வெளியேயும் பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. 

    மந்திரி சபை பதவி ஏற்றதை தொடர்ந்து இன்று புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி, உளவுத்துறை, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட ஒதுக்கப்படாத அனைத்து துறைகளையும் முதல்-மந்திரி சித்தராமையா வைத்துக் கொள்வார். டிசிஎம் டி.கே. சிவக்குமார், நீர்வளத்துறையுடன் மற்றொரு முக்கிய துறையையும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித்தராமையா, பெங்களூரு விதானசவுதாவில் (சட்டசபை) உள்ள முதல்-மந்திரி அறைக்கு செல்கிறார்.

    பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. விழா மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ×