search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "d k shivakumar"

    • மத்திய அரசு, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது.
    • காங்கிரசில் குழப்பம் இருப்பதாக முன்னாள் மந்திரி ஆர்.அசோக் சொல்கிறார்.

    பெங்களூரு :

    துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்திற்கு மத்திய அரசு அரிசி ஒதுக்க மறுப்பதன் பின்னணியில் பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து எல்லாவற்றையும் விரைவில் அம்பலப்படுத்துவோம். மத்திய அரசு, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவேன்.

    கர்நாடக அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் எண்ணத்தில் ஏழைகளுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. அரிசியை இலவசமாக வழங்குங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. இந்திய உணவு ஆணையம் விவசாயிகளிடம் இருந்து அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தற்போது அந்த ஆணைய கிடங்குகளில் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    அரிசி வழங்குவதாக முதலில் கூறவிட்டு, பிறகு அரிசி வழங்க முடியாது என்று கூறினர். மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் நாளை(இன்று) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பெங்களூருவில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.

    காங்கிரசில் குழப்பம் இருப்பதாக முன்னாள் மந்திரி ஆர்.அசோக் சொல்கிறார். முதலில் பா.ஜனதா எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கட்டும். மக்கள் எங்களுக்கு 5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். மக்களின் இந்த நம்பிக்கையை காப்பாற்றி கொள்வோம். எனது சகோதரர் டி.கே.சுரேஷ் அறிவார்ந்த அரசியல்வாதி, அனுபவம் வாய்ந்த தலைவர். புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருக்கிறது. அவருக்கு எந்த வைராக்கியமும் இல்லை.

    நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது, கட்சியின் தேர்தல் அறிக்கையை அமல்படுத்துவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள மந்திரிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்து கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க மந்திரிகள் அனைவரும் நாளை(இன்று) டெல்லி செல்கிறோம். இந்த சந்திப்பின்போது நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.

    மேல்-சபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(இன்று) கடைசி நாள் ஆகும். மனு தாக்கல் செய்யும்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும், தற்போது அதிருப்தியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ளனர் என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். #DKShivakumar
    பெங்களூரு :

    பெங்களூருவில் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். எல்லாருக்கும் பதவி மீது ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி, அதிகாரத்திற்காக பா.ஜனதா செய்யும் தந்திரங்கள் பற்றி நன்கு தெரியும்.

    எத்தனை எம்.எல்.ஏ.க்களுடன் அவர்கள் பேரம் பேசி உள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த விதமான பதவிகள், பணம் தருவதாக கூறியுள்ளனர் என்ற தகவல்கள் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பேரம் பேசியது உள்ளிட்ட எல்லா ஆதாரங்களையும் காங்கிரஸ் தலைவர்களிடம் எம்.எல்.ஏ.க்களே கொடுத்துள்ளனர்.



    எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது பற்றி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். அதனை அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் பொறுமையாக உள்ளனர். நானாக இருந்தால் 24 மணிநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருப்பேன். கூடிய விரைவில் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம்.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து ஆட்சியை கவிழ்க்க சதி நடந்து வருகிறது. தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் யார்? என்று தற்போது சொல்ல முடியாது. அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களா? பா.ஜனதாவை சேர்ந்தவர்களா? என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

    இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். #DKShivakumar
    ×