search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை"

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மழை காரணமாக டெங்கு பாதிப்பு மெல்ல தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது. இதனால் நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தாலுகா அளவில் டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநில எல்லையில் கேரளா மாநிலத்தில் இருந்து வருவோர் உடல் நலம் பரிசோதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல் வருமாறு:-

    அவ்வப்போது மழை பெய்வதால் வரும் நாட்களில் டெங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஓழிப்பு பணியை வேகப்படுத்த வேண்டும். கொசு இனப்பெருக்கம் அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து காலை, மாலை இருவேளையும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.

    டெங்கு வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளியின் உடல்நிலையை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறப்பு என்பது கூடவே கூடாது. மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை ஏற்று கடந்த, 15-ந்தேதி டெங்கு சிறப்பு வார்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.தற்போதைய நிலவரப்படி, 9பேர் டெங்கு வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.

    அனைவரும் ஆரோக்கியமுடன் மருந்து, மாத்திரை எடுத்து வருகின்றனர். ஓரிரு நாளில் உடல் நலம் தேறி வீடு திரும்புவர் என அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவை யொட்டியுள்ள 5 சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளா பதிவு எண் கொண்டு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 3 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ஏராளமான கட்டுமான தொழிலாளர்களும், மீனவர்களும் சேர்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.

    ஆசாரிப்பள்ளம், பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 9 அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு தனிவார்டு திறக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 2 முதல் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 1 வாரத்தில் மட்டும் 21 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.
    • நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்.

    உடுமலை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்குகிறது. தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில், சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வேண்டும். மழைநீர், கழிவுநீர் கட்டமைப்பு சீராக இருப்பதை ஆய்வு நடத்தி உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவமனை வளாகம், காத்திருப்பு அறை, ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வினியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறதா என்பதையும் கட்டாயம் ஆராய வேண்டும்.

    சுகாதார மாவட்டம், வட்டாரங்கள் வாரியாக விரைவு சிகிச்சை குழு, கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்.

    பருவமழைக்கு பின் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய் தொற்று குறித்த விபரங்களை முன்கூட்டியே அறிந்து, காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

    நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டுமென பல்வேறு வழிகாட்டுதல் சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    • பாதிப்பு ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
    • கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது.

    திருவனந்தபுரம்:

    கொரோனா பரவத்தொடங்கியபோது இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவ தொடங்கியது.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவியது. காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகிய ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சில மாவட்டங்களில் உயிர் பலியும் ஏற்பட்டது.

    பின்பு கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு நிபா வைரஸ் தொற்று பரவுவதாகவும், அந்த தொற்று பாதித்து 2 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத் தக்க ஒரு நபர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்தவித காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது என்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்துள்ளது.

    இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக காதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    4 மற்றும் 9 வயதுடைய 2குழந்தைகள், 25 மதிக்கத்தக்க ஒருவர் என 3பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.

    அதேபோல் வடகரை அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்த 40வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காய்ச்சல் பாதித்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் சிகச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இறந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டவர்களிடம் சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருககிறது. அந்த பரிசோதனை முடிவு வந்தபிறகே, இறந்தவர்கள் 2 பேரும் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தார்களா? என்பது தெரியவரும்.

    கோழிக்கோடு பகுதியில் 2 பேர் காய்ச்சல் பாதித்து இறந்திருக்கும் சம்பவம் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அவரச உயர்மட்ட கூட்டத்தை கூட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    கோழிக்கோட்டில் இறந்த 2பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம்.
    • பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    அதிகரிக்கும் வெப்பத்தால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள, உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம். நீர் சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க அதிக தண்ணீரை அடிக்கடி அருந்த வேண்டும்.பொதுமக்களும் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், உப்பு, சர்க்கரை நீர் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்த வேண்டும். இது உடலில் நீர் சத்தை தக்க வைக்க உதவும். பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    காற்றோட்டமான இடங்களில் வசித்தல் அவசியம். வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்தல் நல்லது. குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் வெளியே செல்லாமல் இருக்கலாம். காலில் செருப்பு அணியாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாநகரிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிந்து வருகிறது.
    • டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பொழிவு இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழையளவு பதிவாகி வருகிறது. மாநகரிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிந்து வருகிறது.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து மழைநீர் தேங்காத வகையில் பொதுமக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

    குறிப்பாக வீட்டில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தொட்டிகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை மூடி போட்டு பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுகாதார துறை ஊழியர்கள் தொடர்ந்துகொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் குடியிருப்புகள், நிறுவனங்களில் ஆய்வு செய்து அங்கு நீர் தேங்க வழிவகை செய்யும் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், கொசு மருந்து தெளித்தல், புகையடித்தல் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.வீடுகளில் கொசு உற்பத்தியாவதை தடுக்க அதற்கான வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். கொசு உற்பத்தியாக வழிவகை செய்யும் வீடு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    • பொது இடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது.
    • கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    மடத்துக்குளம் :

    தற்போது பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் கவனமுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சளி, காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் குணமடைந்தாலும், சளி, தொண்டை வலி குணமாக ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. வீட்டில் ஒருவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவுகிறது.

    பொதுஇடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது. இதனால், கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- காய்ச்சல், சளி பரவுவது அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ச்சியான பானங்கள், குடிநீரை பருக வேண்டாம்.காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் தன்னிச்சையாக மாத்திரை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பொதுஇடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றனர்.  

    • சுகாதாரத்துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க தொடர்ந்து மத்தியஅரசு முயற்சி செய்து வருகிறது.
    • ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறும் வகையில் 12 தலைப்புகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில் இன்று உடல்நலம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசினார்.

    கொரோனா தொற்று போன்ற நெருக்கடியான சூழல் ஏற்படும் போதெல்லாம் வளமான நாடுகள் கூட வீழ்ச்சி அடைவதை நாம் பார்க்கிறோம். இதனால் உலகமே இப்போது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறது.

    இந்தியாவில் சுகாதார பாதுகாப்புடன் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தின்போது மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் போன்றவை உயிர் காக்கும் ஆயுதங்களாக இருந்தது. சுகாதாரத்துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க தொடர்ந்து மத்தியஅரசு முயற்சி செய்து வருகிறது.

    இந்தியாவில் மலிவு விலையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது தான் அரசின் முதன்மையான நோக்கமாகும். அரசு சுகாதார பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. குடிமக்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தயாராகி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்ப டும் சுமார் 80 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா எந்த ஒரு தொழில் நுட்பத்தையும் இறக்குமதி செய்ய வேண்டியது இல்லை. இதில் தன்னிறைவு பெறுவதை நமது தொழில்முனைவோர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தொழில் முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது.
    • தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 169 ஆக இருந்தது. நேற்று 240 ஆக உயர்ந்த நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று 164 பேர் அடங்குவர்.

    தொற்று மீட்பு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 104 அதிகமாகும். அதாவது தற்போது 2,439 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,772 ஆக நீடிக்கிறது.

    • தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
    • செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்காலிக பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

    சென்னை:

    கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 6,282 நர்சுகள் தற்காலிக முறையில் ஒப்பந்த நர்சுகளாக நியமிக்கப்பட்டனர். அதில், 3000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது.

    இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி 810 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீதமிருந்த 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீட்டிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி பாதுகாப்பு, நிரந்தர பணி கோரி தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 காலிப் பணியிடங்களை மாவட்ட கலெக்டர்கள் நேர் முகத்தேர்வு மூலம் நிரப்ப உள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் முன்னுரிமை கொடுக்கப்படும். தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே பணிகிடைத்து விடும். 20 மாதம் கொரோனா காலத்தில் பணியாற்றி இருந்தால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப் பெண்கள் கொடுக்கப்படும்.

    ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த தேர்வில் பங்கேற்கலாம். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுவதால் 2,600 செவிலியர்களுக்கு எளிதாக பணி கிடைத்துவிடும்.

    இதற்கு முன்பு செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும். இது தற்காலிக ஒப்பந்த பணியாகும். இந்த வாய்ப்பை செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கொரோனா கால செவிலியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால், வேறு புதிய செவிலியர்கள் பணியில் சேர்ந்துவிடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் செவிலியர்களில் சுமார் 500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.ஆர்.பி. கொரோனா செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.ராஜேஷிடம் கேட்ட போது, "கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்த பணி தேவையில்லை. பணி பாதுகாப்பு, நிரந்தர பணிதான் வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக நாளை (12-ந்தேதி) கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம்" என்றார்.

    • புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
    • மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரைகடக்க உள்ளதால், வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் கரைகடக்கும் பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், மின் துண்டிப்பு ஏற்பட்டால், மாற்றாக ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கவேணடும், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மருத்துவமனைகளில் ஐசியூ, வெண்டிலேட்டர், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×