search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காய்ச்சல் அறிகுறியுடன் வந்த  3 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்- சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
    X

    காய்ச்சல் அறிகுறியுடன் வந்த 3 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்- சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

    • காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவை யொட்டியுள்ள 5 சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளா பதிவு எண் கொண்டு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 3 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ஏராளமான கட்டுமான தொழிலாளர்களும், மீனவர்களும் சேர்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.

    ஆசாரிப்பள்ளம், பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 9 அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு தனிவார்டு திறக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 2 முதல் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 1 வாரத்தில் மட்டும் 21 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×