search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்ப பக்தர்கள்"

    • பரசுராமரின் கரங்களால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெறப்பெற்றது.
    • 18 என்ற கணக்கு வந்த விதம் பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது.

    சத்தியம் காக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகள் என்ற அடைமொழிகள் சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கும் உண்டு. ஐயப்பன் சபரிமலையில் எழுந்தருளும் சமயம் ஐயப்பனாய் அவதரித்த மணிகண்டனுக்கு, கோவில் எழுப்பிய போது கோவிலின் ஞான பீடத்தில் அமர ஐயப்பன் எழுந்தருளினார். அப்போது தான் 18 படிகள் உருவானது.

    அதாவது ஐயப்ப அவதாரத்தில் 12 வயது பாலகனாக ஐயப்பன் உள்ளதால் சிறு வயதினராக நடந்து வரும் ஐயப்பன் உயரமாக அமைந்திருக்கும் ஞான பீடத்தில் ஏறி அமர சிரமப்படக் கூடாது என்ற தெய்வீக எண்ணத்தில் அங்கு கூடியிருந்த தேவர் கூட்டத்தில் உள்ள 18 தேவதைகள் தரையில் இருந்து கோவில் பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசையாகப் படுத்துக் கொண்டனர். ஐயப்பன் பதினெட்டுப் படிகளாகப் படுத்துள்ள தேவதைகள் மீது பாதம் வைத்து ஏறி வந்து ஞான பீடத்தில் அமர்ந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக் கொண்டார்.

    இப்படி, எண்ணிக்கை முறையில் பதிக்கப்பட்ட 18 படிகளானது மகாவிஷ்ணுவின் மறு அவதாரமான பரசுராமரின் கரங்களால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெறப்பெற்று, இந்த 18 படிகளும் சத்தியமான பொன்னுகளால் பதினெட்டாம் படிகளாக இன்று கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

    18 என்ற கணக்கு வந்த விதம் பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. இந்திரியங்கள் - 5, புலன்கள் - 5, கோஷங்கள் - 5, குணங்கள் - 3, மொத்தம் - 18 என்பர்.

    இந்திரியங்கள் : கண், காது, மூக்கு, நாக்கு, கை - கால்கள், ஐந்து புலன்கள் : பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல், கோஷங்கள் ஐந்து: அன்மைய கோஷம், பிராமணய கோஷம், மனோமய கோஷம், ஞானமய கோஷம், ஆனந்த மய கோஷம், மூன்று குணங்கள் : சத்வகுணம், ரஜோகுணம், தமோ குணம்.

    மேற்கூறிய பதினெட்டையும் கட்டுப்படுத்தி ஜெயித்து இந்த பதினெட்டுப் படிகளையும் கடப்பவர்கள் மட்டுமே அய்யப்பனின் முழு அருளைப் பெற முடியும்.

    பகவத்கீதை 18 பாகங்கள், புராணங்கள் 18, குருஷேத்திரப் போர் நடந்த நாட்கள் 18 எனக் கூறுவர். போர் வீரனாகிய அய்யப்பன் 18 வகை போர்க்கருவிகளை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். சபரிமலைக் கோவில் பிரதிஷ்டைக்கு வந்த ஐயப்பன் 18 ஆயுதங்களையும் 18 படிகளாகத் தியாகம் செய்தான் என்றும் கூறுவர்.

    சரீர சாஸ்திர அமைப்பின்படி உடல் அமைப்பு முதுகுத் தண்டில் ஆரம்பித்து 1. மூலாதாரம், 2. ஸ்வாதிஸ்டானம், 3. மணிபூரகம், 4. அனாகதம், 5. வம்பி, 6. விசுத்தி, 7. ஆங்கத, 8. பிந்து, 9. அர்த்தசக்கரம், 10. ரோகினி, 11. நாகம், 12. சாந்தாரம், 13. சக்தி, 14. வியனிக, 15. சமன, 16. உன்மன, 17. மஹாபிந்து, 18. சகஸ்ராரம் என்கிற யோக சாஸ்திர ரகசியம் 18 படிகள் மூலம் அறிவிக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

    இப்பேற்பட்ட மகிமை வாய்ந்த படிகளின் தெய்வீகத் தன்மையைக் காப்பாற்றவும் முறையாக விரதம் இருந்து படியேறுவோர் நல்ல பயன்களைப் பெறவும், சரியான விரதம் இல்லாமல் இந்த படிகளைக் கடப்பவர்களால் ஏற்படும் அபசாரத்திற்குப் பரிகாரமாகவும் தான் படி பூஜை நடக்கிறது. இந்தப் படிகளில் வீற்றிருக்கும் ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியாக `ஆவாகனம்' என்ற கோட சோப சார பூஜையையும் செய்து 18 படிகளின் புனிதத் தன்மையை இன்றளவும் காத்து வருகின்றனர்.

    • உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும்.
    • மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும்.

    சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்ம வினையில் இருந்து மீள வேண்டுமானால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்ம சிந்தனை, செயல்பாடுகள் வேண்டும். இவை இருந்தால் முக்தி கிடைக்கும். அது கிடைக்க ஒரே இறை வழிபாடு ஐயப்பனே!

    ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லறத் துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும். மாலை போட்ட பிறகு எல்லா ஐயப்பமார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே. வேறுபாடு கிடையாது. விருப்பு, வெறுப்பு கிடையாது.

    ஐயப்பனுக்காக மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். நான், எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது. ஐயப்பனுக்கு விரதம் முக்கியம் 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்குப்போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று சென்று வணங்கி வரலாம்.

    ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்தபோது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். அனைத்து தோஷங்களுக்கும், ராகு தோஷத்திற்கும் அய்யப்பன் தரிசனம் தான் பரிகாரமாகும்.

    இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள். மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் ஐயப்பன். பிறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ இறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ அப்படியே ஐயப்ப பக்தர்களிடம் உடையில் வேறுபாடு இல்லை. பாவத்தில், ரூபத்தில் வேறுபாடு இல்லாமல் வணங்கக்கூடிய ஒரே கடவுள் ஐயப்பன் தான்.

    • பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கடந்த 3 நாட்களாக மழை மேகமூட்டத்தினால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் இன்று மழை மேகம் நீங்கியதைத்தொடர்ந்து கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத்தெரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், பாரதமாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சபரிமலை சீசன் களைகட்டி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • பக்தர்களுக்கு குற்றாலநாதர் கோவில் குருக்கள் மற்றும் குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்தனர்.
    • ஐயப்ப பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா முழக்கம் எழுப்பியபடி மாலை அணிந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் மற்றும் புனித தீர்த்தமாக கருதப்படும் குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அதிகாலை முதலே புனித நீராடி குற்றாலநாதர் கோவிலின் முன்பு மாலை அணிந்து 42 நாட்கள் விரதம் தொடங்குவது வழக்கம்.

    இன்று காலையில் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

    முன்னதாக குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடிய பக்தர்கள் புதிய கருப்பு, ஊதா நிறங்களில் ஆன உடைகளை அணிந்து வந்தனர். அவர்களுக்கு குற்றாலநாதர் கோவில் குருக்கள் மற்றும் குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்தனர்.

    ஐயப்ப பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா முழக்கம் எழுப்பியபடி மாலை அணிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 42 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நீராடி பஜனை செய்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்ல உள்ளனர். இன்று ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்ததால் காலை முதல் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடுவதற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    • குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.
    • ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும்.

    1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ந்தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருக்கும்படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

    2. துளசி மணி அல்லது உருத்திராட்ச மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.

    3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த மூத்த ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில் களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்தில் இருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

    4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போதும் முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.

    5. மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமும் இல்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழுப்பொறுப்பினையும் வைத்து, முக மலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களை மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

    7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ் பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.

    8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தான் அணியும் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்கவேண்டும்.

    9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    10. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    11. மற்றவர்களிடம் பேசும் போது, `சாமி சரணம்' எனத் தொடங்கி, பின் விடை பெறும் பொழுதும் `சாமி சரணம்' என சொல்ல வேண்டும்.

    12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாக தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை அணிந்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணம் கொண்டும் உணவு அருந்தக்கூடாது.

    13. பக்தர்கள் மாலை அணிந்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை `ஐயப்பா' என்றும், பெண்களை `மாளிகைப்புரம்' என்றும், சிறுவர்களை `மணிகண்டன்', சிறுமிகளை `கொச்சி' என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

    14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் `நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்' என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது, `போய் வருகிறேன்' என்று யாரிடமும் சொல்லிக்கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.

    15. மாலை அணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும்.

    16. மாலை அணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

    17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்ப பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக்காவது அன்னமிடுதல் மிக்க அருள்பாலிக்கும்.

    18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார்களும், அவர்கள் குடும்பத்தினரும் கலந்து கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டியதிருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்து கொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறு வருடம் சென்று வரவேண்டும்.

    19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமானதாகும். எனவே எந்தப்பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக்கூடாது.

    20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டில், இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும்.

    21. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்தில் இருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையில் இருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற மூத்த ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

    22. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும், ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

    23. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டுயானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். சரணம் கூறுதல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

    24. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.

    25. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்பம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    26. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

    27. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

    28. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களில் எல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.

    • ஸ்ரீஐயப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும்.
    • ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும்.

    நாளை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் தினமாகும். நாளை காலை குரு மூலம் துளசி அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து முறையாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருப்பார்கள். மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சில அடிப்படையான பழக்க வழக்கங்களை யும் கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு ஜந்துவையும் உடலாலோ மனத்தாலோ துன்புறுத்தக்கூடாது. பேச்சு, எண்ணம், செயல் ஆகியவற்றில் உண்மையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குச் சேர வேண்டிய பொருளை தான் எடுத்துக் கொள்ளுதல் அல்லது அனுபவிக்கக் கூடாது.

    தினசரி அதிகாலை நேரத்தில் குளித்து தூய ஆடை அணிந்து அவரவர்களுக்கு உண்டான நித்ய கர்மாக்களை செய்து ஸ்ரீஐய்யப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும். கண்ட காட்சிகளை கண்களால் காணாதிருத்தல், கெட்ட சத்தங்களையே காதால் கேட்காது இருக்க வேண்டும். இவ்வாறு தவம் இருந்து ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை.

    • புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர்.
    • மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபமாக பலமாக எழுந்துள்ளது.

    அரசியல் கட்சிகளிடையே இதுதொடர்பாக நாள்தோறும் விவாதமும் நடந்து வருகிறது. சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில், மாநில அந்தஸ்து வேண்டும் என்ற குரலை உயர்த்தியுள்ளனர்.

    இந்நிலையில் புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அந்த பக்தர்கள் கோவிலின் 18-ம் படிக்கு கீழே புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு பேனரை பிடித்துள்ளனர்.

    இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த பேனரில், புதுவை மக்கள் சுயமரியாதையை காக்க மாநில அந்தஸ்து வேண்டும். இது புதுவை மக்களின் குரல் என குறிப்பிட்டுள்ளனர்.

    மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பாராளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அதை விடுத்து கோவில் முன்பு பேனர் பிடிப்பதால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடுமா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது.
    • குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

    • அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பதற்கு மாவு ஆலை அமைக்கப்படுகிறது.
    • பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டவும் முடிவு.

    சபரிமலை:

    மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட நிலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வரை 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நடப்பாண்டில் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

    முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் ரூ.15 கோடி மதிப்பில் அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பதற்கு தேவையான மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது.

    மேலும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குன்னூர் அணையில் இருந்து சபரிமலைக்கு குழாய் பதிக்கும் திட்டம், பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது, நிலக்கல் அடிவாரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது உள்பட 5 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

    • வண்டிப்பெரியாறு, புல்மேடு வழியாக 30 கி.மீ. தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.
    • பாதயாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் புல்மேடு பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக தரிசனத்துக்கு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

    தேனி மாவட்டம் குமுளியில் இருந்து வண்டிபெரியாறு, முண்டக்கயம், எரிமேலி, பம்பை வழியாக 160 கி.மீ. சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் வந்தவண்ணம் உள்ளனர். இதேபோல் வண்டிப்பெரியாறு, புல்மேடு வழியாக 30 கி.மீ. தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.

    புல்மேடு, சத்திரம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு ஜீப், பஸ் வசதி உள்ளது. சத்திரம் வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து 12 கி.மீ. தூரம் வனப்பகுதியில் பாதயாத்திரையாக சென்றால் சன்னிதானத்தை அடைந்து விடலாம்.

    பாதயாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வருடம் மண்டல பூஜைக்காக கடந்த 16ந் தேதி நடை திறக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்பதிவு செய்த பக்தர்களும் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

    மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகுதான் புல்மேடு பாதை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நடைதிறக்கும்போதே புல்மேடு பாதையும் திறக்கப்பட்டது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்கள் இந்த பாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புல்மேடு பாதையை பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வனத்துறை, சுகாதாரத்துறை, போலீசார் முகாம் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.

    பவானி:

    பவானி கூடுதுறையில் இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு பின்னால் உள்ள இரட்டை விநாயகர் படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் உள்ளூர், வெளியூர் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் பலரும் அதிகாலை முதலே பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வார்கள்.

    அதேபோல், தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது இங்கு உள்ள சங்கமேஸ்வரர் சாமியை தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படி கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.

    ×