search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kutralam"

    • நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி சேரன்மகாதேவியில் 8.4 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்ததது.
    • அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாகவே பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போய்விட்டது.

    இந்நிலையில் நேற்று இந்த மாவட்டங்களில் திடீரென மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மதியத்திற்கு பிறகு லேசான சாரல் பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, கன்னடியன், அம்பை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பகுதிகளில் ஏராளமான ஏக்கர் நிலங்களில் நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழையை நம்பி அவர்கள் பயிரிட்ட நிலையில், மழை குறைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் தற்போது பெய்த சாரல் மழையால் அவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி சேரன்மகாதேவியில் 8.4 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்ததது. அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 10.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே அணை பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக காக்காச்சியில் 48 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதுதவிர நாலுமுக்கில் 41 மில்லிமீட்டரும், ஊத்து, மாஞ்சோலையில் தலா 32 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர பகுதியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாநகரில் பேட்டை முதல் தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலை, எஸ்.என். ஹைரோடு வரையிலும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதுதவிர திருவனந்தபுரம் சாலை உள்ளிட்ட சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டி வந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையினால் மெயினருவிக்கு தண்ணீர் அதிகரித்தது.

    இன்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பழைய குற்றாலம், ஐந்தருவியில் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடி பகுதியில் 30 மில்லிமீட்டரும், தென்காசியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இதுதவிர ராமநதி, குண்டாறு, சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது. ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. வைப்பரில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், எட்டையபுரம், விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. தூத்துக்குடி மாநகர பகுதியில் 8.2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது.
    • குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

    ×