என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
- தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
- மழைப்பொழிவு குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றால பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவும் பெய்த தொடர் மழையால் மற்ற அருவிகளான புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என தற்போது அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் மழை நீடித்து வருவதால் மழைப்பொழிவு குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 28-ந்தேதி ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள வெண்ண மடை படகு குழாமில் படகு போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது.






