என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "yeddyurappa"
காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரித்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, நளின் குமார் கட்டீல் எம்.பி. ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர்கள் 2 பேரையும் கண்டித்து இன்று(சனிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரித்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் ஆகியோர் கருத்து தெரிவித்து இருப்பது கட்சியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு விளக்கம் கேட்டு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நோட்டீசு அனுப்பியுள்ளார். 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் மகாத்மா காந்தி.
ஒருவரை பற்றி பேசும்போது என்ன பேசுகிறோம் என்ற அறிவு இருக்க வேண்டும். இத்தகைய ெபாறுப்பற்ற கருத்துகளை கூறக்கூடாது. காந்தியை பற்றி கீழ்த்தரமாக பேசுவது நல்லதல்ல. அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் கூறிய கருத்து, மன்னிக்க முடியாத குற்றம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி களின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் 104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பா.ஜனதா கட்சி, ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு முன்பு பா.ஜனதா நடத்திய ஆபரேஷன் தாமரை திட்டம் தோல்வியில் முடிந்தது.
அதே நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை ஒதுக்கியது தொடர்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதுபோல் மந்திரி பதவி கிடைக்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக எடியூரப்பா மீண்டும் தெரிவித்திருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
குந்துகோல் மற்றும் சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலை பா.ஜனதா தீவிரமாக எடுத்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறது. அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா வசம் தற்போது 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் பட்சத்தில், எம்.எல்.ஏ.க்களின் பலம் 108 ஆக உயரும்.
கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும். அதன்மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது உறுதி.
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெறுவது போல, பாராளுமன்ற தோ்தலில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். மண்டியா, துமகூரு, கலபுரகி, சிக்பள்ளாப்பூர் தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைவது உறுதி. மண்டியா, துமகூரு பாராளுமன்ற தொகுதிகளில் தோல்வி அடைந்து விடுவோம் என்பதால் தான் முதல்-மந்திரி குமாரசாமியும், தேவேகவுடாவும் ரெசார்ட் ஓட்டல்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முதல்-மந்திரி குமாரசாமியோ, மந்திரிகளோ ஆர்வம் காட்டவில்லை. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, தேசிய அமைப்பு துணை செயலாளர் பி.எல்.சந்தோஷ், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பாராளுமன்ற தேர்தல் நிலவரம், பா.ஜனதாவுக்கு சாதகமாக உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் எடியூரப்பா பேசியதாவது:-
துமகூரு, கலபுரகி, கோலார் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அங்குள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் இதை சொல்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தன்று இது உண்மை என்று தெரியவரும்.
சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த (மே) மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நீங்கள் அனைவரும் அந்த தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும். இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மிக முக்கியம்.
அதனால் யாரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம். அவ்வாறு திட்டமிட்டிருந்தால் அதை தவிர்க்க வேண்டும். தேர்தல் முடிவு வெளியான பிறகு நீங்கள் எங்கு வேண்மென்றாலும் செல்லுங்கள்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
சிஞ்சோலி தொகுதியில் பா.ஜனதா சார்பில் ராமச்சந்திர ஜாதவ் வேட்பாளராக நிறுத்தும்படி கர்நாடக தலைவர்கள், மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனால் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சுனில் வல்யாபுரே கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடியூரப்பா இறங்கியுள்ளார்.
எம்.எல்.சி. பதவி வழங்குவதாகவும், அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகவும் கூறியதாக தெரிகிறது. அதற்கு சுனில் வல்யாபுரே, தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறி இருக்கிறார். #BJP #Yeddyurappa
கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, பிரகலாத்ஜோஷி, ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்தும், சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயருக்கு கட்சி மேலிடத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தோம். தலைவா்கள் தங்களின் தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவு குறித்து எடுத்துக் கூறினர். அவர்கள் அளித்த தகவலின்படி, கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இந்த எண்ணிக்கையில் இருந்து ஒரு தொகுதி கூடுமே தவிர அதில் குறைய வாய்ப்பு இல்லை.
சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் 2 தொகுதிகளுக்கு 2 பெயர்களை தேர்வு செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். கட்சி மேலிட தலைவர்கள், வேட்பாளர்களின் பெயா்களை நாளை (அதாவது இன்று) அறிவிப்பார்கள்.
அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பியவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம். கட்சியின் நலன் கருதி, தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிர முயற்சி செய்வோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
பா.ஜனதா சார்பில் சிஞ்சோலி தொகுதியில் டாக்டர் உமேஷ்ஜாதவ்வின் சகோதரர் ராமச்சந்திர ஜாதவ் மற்றும் குந்துகோல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஐ.சிக்கனகவுடர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றால், சட்டசபையில் அக்கட்சியின் பலம் உயரும். தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலம் 104-ல் இருந்து 106 ஆக உயரும்.#LokSabhaElections2019 #Yeddyurappa
பாராளுமன்ற தேர்தலையொட்டி கொப்பல் தொகுதிக்கு உட்பட்ட கங்காவதியில் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக கூட்டத்தில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேசியதாவது:-
கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இது நடைபெறும். 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வெறும் 37 தொகுதிகளில் வென்ற ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சி செய்கிறது.
மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஊடகங்கள் அதை வெளிப்படுத்துகின்றன. ஆனால் ஊடகங்களை மிரட்டும் வகையில் குமாரசாமி பேசியுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். இதற்காக குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த தேர்தலில் குமாரசாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன். ஆனால் இந்த கூட்டணி அரசு அந்த திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டது.
கூட்டணி கட்சிகள் பண பலம், சாதி பலம், அதிகார பலத்தை கொண்டு தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. இது சாத்தியமில்லை. அந்த கட்சிகளுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் வளர்ச்சியில் கர்நாடகம் 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.
ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரை மோடி ஜனாதிபதி ஆக்கியுள்ளார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த அப்துல் கலாமை பா.ஜனதா ஜனாதிபதி ஆக்கியது. நாங்கள் சாதி, மத அரசியலை செய்வது இல்லை.
நாங்கள் அனைத்து சாதி, மதத்தினரையும் முன்னேற்ற பாடுபடுகிறோம். ஆனால் நாங்கள் சாதி அரசியல் செய்வதாக முத்திரை குத்துகிறார்கள்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார். #Yeddyurappa #BJP
பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் ஆங்கில உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கன்னட மொழிப்பாடத் தேர்வுக்காக தயாரித்த வினாத்தாளில், ‘சரியான விடையை தேர்வு செய்க’ எனும் தலைப்பில், அரசியல் தலைவர்களை கேலி செய்யும் வகையில் ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.
‘விவசாயிகளின் நண்பன் யார்?
அ) மண்புழு, ஆ) முதல்வர் குமாரசாமி, இ) பாஜக தலைவர் எட்டியூரப்பா’ என அந்த கேள்வி இருந்தது.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகவேந்திரா கூறுகையில், ‘இந்த கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியரை உடனடியாக பணியில் இருந்து நீக்கி விட்டோம். பள்ளியின் தலைமைக்கு தெரியாமலேயே இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கட்சியினரையும், அரசியலையும் ஊக்குவிக்கும் எண்ணத்தோடு பள்ளி நிர்வாகம் செயல்படவில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன்’ என்றார். #BangloreTeacherDismissed
வரும் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா, ஜே.டி.எஸ். வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
அவரை ஆதரித்து அந்த கட்சியின் அரிசிக்கெரே தொகுதி எம்.எல்.ஏ. சிவலிங்க கவுடா ஹாசனில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரத்தின்போது சிவலிங்க கவுடா பேசிய வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேமாக பரவி வருகிறது.
பிரதமர் நரேந்திரமோடி, கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பரபரப்பாக பேசி இருக்கிறார். நான் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்பேன். நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன். விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை உருவாக்கி, அவர்களை காப்பாற்றுவேன் என்று சரமாரியாக வாக்குறுதிகளை அளித்தார். அதில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.
500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். விவசாயிகளும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வங்கிகளில் வாசலில் நின்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் பா.ஜனதாவினர் மோடி வாழ்க என்று முழக்கம் எழுப்பிக் கொண்டு வலம் வருகின்றனர்.
மோடிக்கு வாங்கு கேட்டு வரும் பா.ஜனதாவினரின் கன்னத்தில் நாலு அறைவிட்டு, மோடி வங்கியில் போடுவதாக சொன்ன 15 லட்ச ரூபாய் எங்கே? என்று தைரியமாக கேளுங்கள்.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இந்த தேர்தலில் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேளுங்கள். மக்கள் அமைதியாக இருப்பதால் தான் அவர்கள் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில் சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. ஆவேசமாக பேசி உள்ளார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பா.ஜனதாவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவரை கடுமையாக விமர்சித்து பா.ஜனதாவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சிவலிங்க கவுடாவின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோடி வாக்கு கேட்டு வந்தால் கல்லெறியுங்கள் என்று மக்களை தூண்டிவிடும் வகையில் பேசினார். தற்போது கன்னத்தில் அறையுங்கள் என்று பேசி வருகிறார்.
முதல் மந்திரி குமாரசாமியின் ஆட்சியில் எம்.எல்.ஏக்கள் குண்டர்களை போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதாவினருக்கும், மோடிக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பேசியுள்ள சிவலிங்க கவுடா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார். #Yeddyurappa #ShivalingeGowda
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா பலமான கட்சியாக உள்ளது. குறிப்பாக மும்பை-கர்நாடக பகுதியில் பா.ஜனதா நல்ல பலத்துடன் உள்ளது. ஐதராபாத்-கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி செல்வாக்குடன் திகழ்கிறது.
கர்நாடகத்தில் 20 முதல் 22 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், மோதல் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி கவிழும். நாடு முழுவதும் பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. மோடி அலை, கடந்த பாராளுமன்ற தேர்தலை விட இந்த முறை கட்சியின் பலத்தை அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு புதிய பலம் கிடைக்கும். கடந்த முறை அந்த தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி மிக குறைவாக இருந்தது. இதன் மூலம் பாஜக பாராளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் எங்கள் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும். கேரளாவிலும் எங்கள் கட்சி வெற்றி கணக்கை தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது.
ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த மாநிலங்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே நல்ல வெற்றி கிடைக்கும். பா.ஜனதாவின் நிலை கர்நாடகத்தில் நன்றாகவே உள்ளது. துமகூரு, மைசூரு ஆகிய தொகுதிகளில் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்.
ஹாசனில் கடும் போட்டியை கொடுப்போம். ஐதராபாத்-கர்நாடக பகுதியில் எங்கள் கட்சி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. காங்கிரசில் இருந்து மாலிகையா குத்தேதார், பாபுராவ் சின்சனசூர், மாலகரெட்டி ஆகியோரின் வருகையால், கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைவார். மத்திய கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.
கர்நாடகத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பிரசாரம் மூலம், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். கர்நாடகத்தில் 4 தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுமாறு மோடியிடம் கூறி இருக்கிறோம். இடம், தேதி இன்னும் முடிவு செய்யவில்லை.
அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி வெற்றி பெறுவது கடினம். அதனால் அவரை கர்நாடகத்தில் போட்டியிடுமாறு இங்குள்ள தலைவர்கள் கேட்கிறார்கள். கர்நாடகத்தில் ராகுல் காந்தி போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது கடினம். இந்த அபாயமான முடிவை அவர் எடுக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.
சிவமொக்கா தொகுதியில் எனது மகன் பி.ஒய்.ராகவேந்திரா, ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கடந்த 6 மாதமாக அவர் ஓய்வே எடுக்காமல் அந்த தொகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் நான் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசியலுக்கு வயது ஒரு பாரம் இல்லை. மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். மக்களின் ஆதரவு கிடைத்தால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்.
வயது 77 ஆக இருந்தாலும், அந்த வயதால் கிடைத்த அனுபவம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும். கவர்னர் பதவி கிடைத்தால் அதை நான் ஏற்கமாட்டேன். கர்நாடகத்தின் வளர்ச்சியே எனக்கு முக்கியம். இங்கேயே இருந்து விவசாயிகளின் நலனுக்காக போராடுவேன்.
பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் பாஜக போட்டியிடும். குறைந்தது 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். பாஜக, இரண்டு இலக்க எண்ணில் வெற்றி பெறாது என்று தேவேகவுடா சொல்கிறார். காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி தான் இரண்டு இலக்க எண்களில் வெற்றி பெறாது.
நாட்டின் எல்லைகளை சிறப்பான முறையில் காத்து வருகிறோம். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை மோடி நடத்தியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள்.
அக்கட்சியின் தலைவர்கள் வேண்டுமானால் ஒற்றுமையாக செயல்படலாம். ஆனால் அடிமட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள். 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளோம். 38 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.
பாஜகவில் இருந்து விலகி நான் தனி கட்சி தொடங்கி தவறு செய்தேன். அதன் பிறகு நான் செய்தது தவறு என்று உணர்ந்தேன். அதற்காக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டேன். கர்நாடகத்தில் மாநில கட்சிக்கு இடம் இல்லை.
முன்பு பாஜக-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினோம். ஆளுக்கு 20 மாதங்கள் என்ற ஒப்பந்தப்படி ஆட்சி நடத்தப்பட்டது. முதல் 20 மாதங்கள் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார்.
அடுத்த 20 மாதங்கள் ஆட்சி நடத்த பாஜகவுக்கு தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் வாய்ப்பு வழங்கவில்லை. தேவேகவுடா, குமாரசாமி நம்பிக்கை துரோகிகள். அதனால் மீண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. அக்கட்சியுடன் எப்போதும் கூட்டணி அமைக்கமாட்டோம்.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதில் குமாரசாமி நிபுணர். அது அவரது திறமை. இந்த பாராளுமன்ற தேர்தலில் 3 பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். இந்த தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் பிரச்சினை ஏற்படும். அதன் மூலம் இந்த கூட்டணி அரசு கவிழும்.
மக்கள் ஆதரவுடன் குடும்பத்தில் 2, 3 பேர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. இது எல்லா கட்சிகளிலும் உள்ளது. ஆனால் தேவேகவுடா குடும்பத்தில் மகன்கள், மருமகள்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர். இது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப அரசியலுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். தேவேகவுடா குடும்பத்தினர் அந்த கட்டுப்பாட்டை மீறுகிறார்கள். அனைத்து அதிகாரமும் தங்களுக்கே வேண்டும் என்று செயல்படும் தேவேகவுடா குடும்பத்தினரின் செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். பின்னர், அவர் கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமித்ஷா, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கர்நாடக பாஜக தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி, வேட்பாளர்கள் தேர்வு குறித்து கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு தேவனஹள்ளியில் நடந்த ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்களின் ஒருங்கிணைக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய குடிமக்கள் பதிவு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), கம்யூனிஸ்டு கட்சிகளும், மம்தா, ஆகியோரும் பிறநாடுகளில் இருந்து ஊடுருவி இந்தியாவில் வசிப்பவர்களை விரட்டி அடிக்க விரும்புவது இல்லை. இவ்வாறு ஊடுருவி வருபவர்களை அவர்கள் வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் எங்களுக்கு வாக்கு வங்கி அல்ல. அவர்கள் இந்திய நாட்டுக்கான அச்சுறுத்தல்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்டுபிடித்து வருகிறது. அசாமில் மட்டும் 40 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.
காங்கிரசின் 55 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பாதுகாக்கப்படவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தல் பாஜக கட்சிக்கு மட்டுமின்றி, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கே முக்கியமானது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கின்றன. இந்த கூட்டணி அந்தந்த கட்சிகளின் கொள்கை, நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த கூட்டணிக்கு எந்த சித்தாந்தமும் கிடையாது.
மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது தெரியாது. ஒருவேளை, தேவேகவுடாவும் பிரதமராக விரும்பலாம். இதுபோன்ற கூட்டணி ஒருபோதும் இந்தியாவை முன்னேற்றம் அடையவும், பாதுகாக்கவும் செய்யாது. இளைஞர்களின் பொருளாதார வளத்தையும் உயர்த்தாது.
ராகுல்காந்தி விவசாயிகளை தவறான பாதையில் அழைத்து சென்று தனக்குத்தானே பள்ளம் தோண்டி கொள்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய 10 ஆண்டு ஆட்சியில் ஒரு முறை மட்டும் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் 3 கோடி விவசாயிகள் மட்டும் பயன் அடைந்தனர். ஆனால், பாஜக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.75 ஆயிரம் கோடிகளை ஒதுக்கி 13 கோடி முதல் 15 கோடி விவசாயிகளுக்கு பயன் கிடைக்க செய்கிறது.
அதன்படி பார்த்தால் பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தால் விவசாயிகளுக்காக ரூ.7.5 லட்சம் கோடியை வழங்கும். இந்த சிறிய கணக்கு கூட ராகுலுக்கு தெரியவில்லை. உருளைக்கிழங்கு பூமிக்கடியில் விளையுமா?, பூமிக்கு மேல் விளையுமா? அல்லது தொழிற்சாலையில் கிடைக்குமா? என்பது ராகுலுக்கு தெரியாது. ஆனால் அவர் உத்தர பிரதேசத்தில் உருளைக்கிழங்கு தொழிற்சாலை அமைக்க உள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசுவதற்கு யார் எழுதி கொடுக்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை.
கர்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி கிளர்க்காக உள்ளார். சித்தராமையா சூப்பர் முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் பாதியளவிலான முதல்-மந்திரியாகவும் இருக்கிறார். இது ஒருபோதும் கர்நாடகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லாது. கர்நாடகத்தை போன்ற ஒரு கூட்டணி ஆட்சி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #AmitShah
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி புகார் கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவுடன் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசி பா.ஜனதாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவை கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கடந்த 8-ந் தேதி வெளியிட்டார்.
பா.ஜனதாவில் இணைய உள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று சபாநாயகருடன் பா.ஜனதா பேரம் பேசியதாகவும் தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிவனகவுடாநாயக், பிரிதம் கவுடா ஆகியோர் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவிடம் பேரம் பேசி உள்ள ஆடியோவை குமாரசாமி நேற்று வெளியிட்டார்.
இதனால் மீண்டும் ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜனதாவின் இமேஜை குலைக்கும் முயற்சியில் அந்த கட்சி தொடர்பான ஆடியோக்களை குமாரசாமி வெளியிட்டு வருவது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #kumaraswamy #bjp #yeddyurappa
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்