search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok sabha elections 2019"

    தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி வைகோ மேல்- சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். இன்னொரு இடத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவி காலம் ஜூன் மாதம் முடிகிறது.

    அ.தி.மு.க.வில் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

    கனிமொழி பாராளுமன்ற எம்.பி.யாகி விட்டதால் அவரது மேல்-சபை எம்.பி. பதவி முடிவுக்கு வந்து விட்டது.

    புதிய 6 மேல்- சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறுகிறது.

    சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்-சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவியை பெறுகிறது.

    இதன் மூலம் மேல்-சபையில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை தொகுதி வழங்குவதாக அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி மேல்-சபை எம்.பி.யாக வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து 2 மேல்-சபை உறுப்பினர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


    தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேல்- சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

    இன்னொரு இடத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் (தொ.மு.ச.) எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    மீதம் உள்ள ஒரு எம்.பி. பதவியை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்காக காங்கிரஸ் கேட்கும் என தெரிகிறது. இதுகுறித்து தி.மு.க. தலைமை விரைவில் முடிவை அறிவிக்கும்.
    பாராளுமன்ற தேர்தலில் தங்களது மகன்களுக்காக சிலர் எம்பி சீட் கேட்டு நிர்பந்தித்ததாக ராகுல் காந்தி வெளியிட்ட தகவலுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு மூத்த தலைவர்கள்தான் காரணம் என்று ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.

    குறிப்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு எம்.பி. சீட் கேட்டு மிரட்டியதை ராகுல் ஆதங்கத்துடன் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

    ப.சிதம்பரம் தனது மகனுக்கு சீட் தரவில்லை என்றால் காங்கிரசில் இருந்தே விலகி விடுவேன் என்று மிரட்டியதையும் ராகுல் அந்த கூட்டத்தில் விமர்சித்தார். அது மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் தங்கள் மகன்களின் தொகுதிகளுக்குள் முடங்கி கிடந்தனர் என்றும் தெரிவித்தார்.


    ராகுலின் இந்த அதிரடி குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம், அசோக் கெலாட் இருவரும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் நேற்று போபால் திரும்பிய மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் இது தொடர்பாக கூறுகையில், “நான் எனது மகனுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவில்லை. இது தொடர்பாக ஒருபோதும் நான் ராகுல்காந்தியிடம் பேசியதும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்ட முதல்-மந்திரி பொறுப்பில் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. எனவே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

    ராகுலின் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் அளித்துள்ள மறுப்பு தகவல், காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    தேர்தல் முடிவுகள் மூலம் தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்து உள்ளதாக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றுச் சிறப்புமிக்க, நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது.

    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தி.மு.க. கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு, தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன.

    22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களை கழகம் கைப்பற்றி உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது. 1971, 2004 பாராளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது.

    சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது. அ.தி.மு.க.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

    இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும் அரசியல் எதிரிகளும், ‘தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை’ என தங்கள் புண்ணுக்குத் தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் மிகவும் தற்காலிக இன்பத்திற்குத் தடையாக இருக்க நான் விரும்பவில்லை. நமக்கான பெரும்பணிகள் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றன.


    தலைவர் கலைஞர் இல்லாத நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவும் கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

    மத்திய - மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும் தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர். பொதுக்கூட்டங்களில், நடைப்பயணங்களில், திண்ணைப் பிரசாரத்தில், தேநீர்க்கடை உரையாடலில் என நான் சென்ற இடமெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக சகோதரனாக, குடும்பத்தில் ஒருவனாகக் கருதி ஓடோடி வந்து அரவணைத்து அன்பைப் பொழிந்தனர். ஆதரவை உறுதி செய்தனர். தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது.

    மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப்பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன் பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன், அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை!

    எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு, நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

    பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக் குரலாக தி.மு.க. ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கை தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோனவற்றை மீட்டெடுக்கவும் ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்.

    மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.க. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.க.வின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்!

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கன்னியாகுமரி உள்பட 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.



    அதேபோல பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினார்கள். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கும்போது தமிழகத்தில் அந்த கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை தற்போது நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பாரதிய ஜனதா கட்சியினரிடம் ஏற்பட்டு உள்ளது.

    அதற்கேற்ப டெல்லி வரும்படி பொன்.ராதா கிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்தது. அதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

    ஏற்கனவே 1999-ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக பதவி வகித்து உள்ளார். அதேபோல கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்று மத்திய மந்திரியானது குறிப்பிடத்தக்கது.
    தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி.க்கள் தமிழர் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வசந்தகுமார் 6 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்றார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை காட்டிலும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இதையடுத்து வசந்தகுமாருக்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் வடநேரே வெற்றி சான்றிதழை வழங்கினார். பின்னர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவித்த ராகுல்காந்திக்கும், என்னை வெற்றிபெற வைத்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பக்கத்து தொகுதியான நாங்குநேரியில் எம்.எல்.ஏ. ஆக இருந்து செய்த சேவைகளை சமுதாய பணிகளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

    எனது முதல் பணி குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான். தேனி ஆராய்ச்சி, ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன். இது தொடர்பாக ஏற்கனவே சில நிறுவனங்களிடம் நான் பேசி உள்ளேன். மத்தியில் காங்கிரஸ் அரசு அமையவில்லை என்ற போதும் அது எனது மக்கள் பணியை பாதிக்காது.

    குமரி மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர்களை எந்த நேரத்திலும் சந்தித்து பேசுவேன். மத்திய அமைச்சராக இருந்தவர் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதே சமயத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் எனக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது இல்லை. கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசின் பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


    இது தமிழகத்தில் எதிரொலித்திருக்கிறது. காங்கிரஸ் பின்னடைவிற்கு என்ன காரணம் என்பதை அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி ஆலோசனை நடத்தி இனி என்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பார்கள். பாரதிய ஜனதா கட்சியிலும் தற்போது மோதல் வெடித்துள்ளது. பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி தயாராக இருந்து வருகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்.க்கு மிகவும் நெருக்கமானவர். அந்த வகையில் பா.ஜ.க. இரண்டாக உடையலாம் என்று கருத்து உள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட தமிழக விரோத போக்கை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது. மோடி, பா.ஜ.க.வுக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும் பிரதமர், தமிழக நலன் கருதி மத்திய அரசு செயல்படும் என்று கருதுகிறோம். தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி.க்கள் தமிழர் நலனுக்காக ஒட்டு மொத்தமாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலத்தில் தனது கட்சிக்கு கிடைத்த வெற்றியானது மக்களின் வெற்றி என்றும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
    அமராவதி:

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது.

    175 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், ஆட்சியமைக்க 88 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பிற்பகல் நிலவரப்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. வரும் 25-ம் தேதி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அவர் சட்டமன்ற கட்சி தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், 30-ம்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த வெற்றி குறித்து ஜெகன் மோகன் ரெட்டி சமூக வலைத்தளம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த தேர்தல் வெற்றியானது மக்களின் வெற்றி. இது எதிர்பார்த்ததுதான். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.



    வாக்காளர்கள் பெருமளவில் தங்கள் உரிமையை நிலைநாட்டி ஜனநாயகத்தின் மதிப்பை மேம்படுத்தியமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

    இதற்கிடையே தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றிருப்பதால் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவதாகவும் கூறினார்.

    இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆந்திராவை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார் எனவும் ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.
    பாராளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று டுவிட்டரில் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

    ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை விட அதிகளவில் பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-


    மதிப்பிற்குரிய பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்த மெகா கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
    லக்னோ:

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின்படி, பாஜக 48 இடங்களில் முன்னிலை வகித்தது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி பின்தங்கியது. மெகா கூட்டணி 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.

    நேரம் செல்லச் செல்ல பாஜக முன்னிலை பெற்ற தொகுதிகள் அதிகரித்தன. மதிய நிலவரப்படி 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது. 19 தொகுதிகளில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது.



    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 55 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பின்னடவை சந்தித்துள்ளார். அமேதியில் ஸ்மிரிதி இரானி முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்ததால், கடும் போட்டி நிலவுகிறது.

    ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதேபோல் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), மேனகா காந்தி (சுல்தான்பூர்), சந்தோஷ் காங்வார் (பரேலி) ஆகியோரும் முன்னிலை பெற்றிருந்தனர். சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி), அவரது மகன் அகிலேஷ் யாதவ் (ஆசம்கர்), அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் (கன்னாஜ்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

    உத்தர பிரதேசத்தில் 2014 பொதுத்தேர்தலில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 
    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கமல் கட்சிக்கு சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3 வது இடம் கிடைத்து வருகிறது.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கமல் கட்சிக்கு சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3 வது இடம் கிடைத்து வருகிறது. முக்கியமாக பிரபலங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மூன்றாமிடமும் மற்ற தொகுதிகளில் நான்காவது, ஐந்தாம் இடங்களும் கிடைத்து வருகின்றன.

    இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 3 முதல் 4 சதவீத வாக்குகள் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்று இருக்கிறது. சட்டமன்ற இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கு 4 மற்றும் 5 ஆம் இடங்களே கிடைத்துள்ளன. சில தொகுதிகளில் வாக்குகளே பதிவாகாத நிலையும் இருந்து வருகிறது.
    டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.

    ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்ததால் வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் செய்து வந்தனர்.

    டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திலும், மாநிலங்களில் உள்ள பா.ஜனதா அலுவலகங்களிலும் வெற்றி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

    இன்று காலை முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியதில் இருந்து பா.ஜனதா தொண்டர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் பா.ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றி விழாவை கொண்டாடினார்கள்.

    டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வர வர பா.ஜனதா அலுவலகத்துக்கு தொண்டர்கள் வருகை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தலைவர்களும், பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வர தொடங்கினார்கள்.

    இன்று மாலை பா.ஜனதா அலுவலகத்துக்கு மோடி, அமித்ஷா மற்றும் தலைவர்கள் வர உள்ளனர். அவர்கள் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

    ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. சார்பில் பணி அமர்த்தப்பட்டுள்ள முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் அவர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    வேலூர் தொகுதியை தவிர 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணும் பணியை மிகுந்த கவனமோடு கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கையை முறையாக கையாள வேண்டும் என்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.

    இதில் தி.மு.க. சார்பில் கனிமொழி பங்கேற்ற நிலையில் தமிழகத்தின் ஓட்டு எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் தா.மோ அன்பரசன், வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இதில் பங்கேற்ற ஓட்டு எண்ணும் மைய முகவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சீல் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களின் சீல் சரியாக உள்ளதா? என்பதை கட்சியினர் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள சீல் சேதாரம் அடைந்தது போன்று காணப்பட்டால் அதில் பதிவான ஓட்டுகளை எண்ணவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மேற்கு மாவட்டம், தெற்கு மாவட்டம், மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    நாளை காலையில் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு தி.மு.க. முகவர்கள் 7 மணிக்கு முன்னதாகவே சென்றுவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பதிவான வாக்குகளும், எண்ணப்படும் வாக்குகளும் சரியாக இருக்கிறதா? என்பதை கவனமோடு கண்காணிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘எப்போதும் இல்லாத வகையில் கட்சியினருக்கு இந்த தேர்தலில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தில்லுமுல்லு நடக்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஓட்டு எண்ணிக்கையின் போது தி.மு.க.வினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் மத்திய மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஓட்டு எந்திரத்தில் பாரதிய ஜனதா தில்லுமுல்லு செய்து இருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டீரிய லோக் சமதா கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான உபேந்திர குஷ்வகா கூறியதாவது:-

    தேர்தல் கருத்து கணிப்பு என்ற பெயரில் பாரதிய ஜனதா மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான எண்ணத்தை உருவாக்க முயற்சித்துள்ளது.

    பாரதிய ஜனதா எப்படி எல்லாம் மக்கள் மனநிலையை மாற்றும் விளையாட்டுகளை கையாளும் என்பது எங்களுக்கு தெரியும்.


    பாரதிய ஜனதா அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் அந்த கட்சிக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்.

    ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் ஓட்டு எந்திரங்கள் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

    முஷாபர்பூரில் ஓட்டல் அறையில் ஓட்டு எந்திரங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற வி‌ஷயங்கள் பல சந்தேகத்தை எழுப்புகிறது.

    மக்களின் உரிமையை பறிக்கும் செயலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் தொண்டர்கள் ஓட்டு எந்திரத்தில் மோசடி நடக்காமல் தடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

    அவர்கள் உரிய ஆயுதங்களை கையில் ஏந்தி செல்வார்கள். தில்லுமுல்லு நடந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உபேந்திர குஷ்வகாவின் கட்சி பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தது.

    அப்போது உபேந்திர குஷ்வகா மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகியதுடன் மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் லாலு கட்சி கூட்டணியில் அவர் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
    ×