search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai"

    • அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.
    • 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும்.

    ஒவ்வொரு தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல் லிங்க வடிவாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரும் திருவீதி உலாவாக ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.

    அந்த நன்னாள் கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரகோவிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார்.

    அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணா மலையார் கிரிவலம் புறப்படுகிறார். 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும். அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் போது தீபாராதனைகள் நடைபெறும்.

    கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும், அவைகளை விரட்டு வதற்காகவும் அண்ணாமலை யார் இவ்வாறு ஆண்டிற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.

    ஒளி கண்டு ஓடும் இருள் போல் திருவண்ணாமலை தீபம் கண்டவுடன் மாந்தர்களின் பாவங்கள் தீரும் என்பது திண்ணம்.

    ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி!

    இருள் ஒழிந்து இன்பம் ஈவாய் போற்றி!

    நாமும் கிரிவலம் செல்வோம், மலையில் ஜோதியாய் தோன்றும் ஈசனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

    • ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய தீர்த்தம் உள்ளது.
    • தீர்த்தத்தில் மூழ்கி ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் ஞானியாக விளங்குவார்கள்.

    அண்ணாமலையின் வடக்குத் திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் வறுமை எல்லாம் நீங்கி, சிவபிரான் திருவடியை அடையலாம். இந்த குபேர தீர்த்தத்திற்கு அருகே வசிஷ்ட்ட முனிவரால் அமைக்கப்பட்ட வசிஷ்ட்ட தீர்த்தம் உள்ளது. இதில் வசிஷ்ட்டர், ஐப்பசி மாதத்தில் மூழ்கி, முனிவர்களுக்கு எல்லாம் முதன்மையாக இருக்கப்பெற்றார்.

    அப்படிப்பட்ட தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு வேதத்திற்கு அங்கமாய் இருக்கின்ற சாத்திரங்கள் எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். அவர்கள் பாவக்கடலையும் கடப்பார்கள். அண்ணாமலையின் ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.

    திருவிளையாடல்களைச் செய்யும் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன்கள் உண்டாகும். அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.

    இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. திருமால் "வராக"அவதாரம் எடுத்த போது இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார். எனவே இந்த தீர்த்தம் பெரும் சிறப்பாக விளங்கியது.

    இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் மூழ்கியவர்களும், இந்த நீரை உட்கொண்டவர்களும் துன்பக் கடலில் இருந்து வெளியே வந்து சிவபிரானின் இரண்டு திருவடி களையும் இடமாக பெருவார்கள்.

    அருணாசலேஸ்வரர் எழுந்தருளி இருக்கின்ற இந்த கோவில் வளாகத் தில் அக்னி திசையில், தாமரையாகிய சிறந்த ஆலயத்தில் வசிக்கும் நான்முகனால் அமைக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஒரு அணு அளவு தங்கத்தை தானம் செய்பவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.

    • பரமசிவன் ஜோதிவடிவமாக இருப்பதாக சாஸ்தீரங்கள் கூறுகின்றன.
    • ஜோதி என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி.

    கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் நீடாடுவது மிகவும் நல்லது.

    அதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விடியற்காலை ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம்.

    ஞாயிறுக்கு அடுத்த ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் சிவபூஜைக்கு விசேஷமாக சொல்லப் பட்டிருக்கிறது.

    எப்படி சிவராத்திரி இரவு பூஜை விசேஷமோ, அப்படி கார்த்திகை மாதம் பகல் நாலு ஜாமமும் சிவ பூஜைக்கு விசேஷமாகும்.

    கார்த்திகை மாதம் அமாவாசை சோமவாரமும் சேர்ந்தால் அன்று அரசமர பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    அரச மர பிரதட்சணத்தின் மூலம் மும்மூர்த்திகளை பிரதட்சிணம் செய்த பலன் உண்டு.

    இதையேதான் பகவானும் பகவத் கீதையில் மரங்களுள் அரசமரமாக நான் இருக்கிறேன் என்றார்.

    கார்த்திகை பௌர்ணமியில் அன்னதானம் மிக விசேஷமாக சொல்லப்படுகிறது.

    பரமசிவன் ஜோதிவடிவமாக இருப்பதாக சாஸ்தீரங்கள் கூறுகின்றன.

    பஞ்ச பூத தலங்களுள் ஜோதி தலமாக திருவண்ணாமலை தலம் திகழ்கிறது.

    ஜோதி என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீபம் மாத்திரம் அல்ல, தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி.

    இப்படிப்பட்ட தலம் திருவண்ணாமலை.

    திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் மலை மேல், தீபம் ஏற்றப்பட்டு ஜோதி வடிவமாக இறைவன் உள்ளதாக நாமெல்லாம் அறிகிறோம்.

    ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட வேண்டும்.

    புழுக்களுக்கும், கொசுக்களுக்கும், வண்டுகளுக்கும், மரங்களுக்கும், ஜலத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும்

    ஆகாசத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும், நலல கதி கிடைக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்து,

    சிவ பூஜை முடிந்த பிறகு, குங்கிலியம் போட்டு ப்ரார்த்தனை செய்வார்கள்.

    ஒவ்வொரு கோயிலிலும் பழமை எல்லாம் கழித்து பாபங்களை பொசுக்கும் நினைவாகவும், நல்ல சொர்க்க

    லோகத்திற்கு செல்லும் நினைவாகவும் சொக்கபானை (ஸ்வர்க்கபானை) கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஆகவே கார்த்திகை மாதம் புனித நீராடல், தானம், பூஜை, பிரார்த்தனை, ஞானம் இத்தனையும் வருகிறது.

    இதனால் தான் மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் விசேஷமான மாதமாகிறது.

    • தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
    • இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.

    தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

    கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.

    இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

    கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள்.

    சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

    இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர்,

    அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.

    • தானத்தில் சிறந்தது அன்ன தானம். அத்தானத்திற்கு சமமான தானம் மூவுலகிலும் இல்லை.
    • பவுர்ணமி தோறும் எதை நினைத்து அன்னதானம் செய்தாலும், அவை நல்ல பயனைத் தரும்.

    தானத்தில் சிறந்தது அன்ன தானம். அத்தானத்திற்கு சமமான தானம் மூவுலகிலும் இல்லை.

    அன்னம் கொடுப்பவர் உயிரையே கொடுப்பவர் ஆகிறார்.

    தென்னாட்டில் முன்னொரு காலத்தில் சிங்கத்வஜன் என்ற அரசன் இருந்தான்.

    அவன் அன்னதானம் தவிர மற்ற தானங்கள் யாவையும் எக்காலமும் செய்து வந்தான்.

    அவன் இறந்த பிறகு இந்திரலோகம் சென்றான். அரசனின் குமாரன் சித்திரகேது அரசபட்டம் சூட்டப் பெற்றான்.

    நாரதர் அவனிடம், உன் தந்தை எல்லாவித தானங்களும் செய்திருந்த போதிலும் அன்னதானம் செய்யாததினால் அவர் மேலோகம் சென்றபோது அமிர்தம் கிடைக்கவில்லை.

    ஆகவே உனக்கும் உன் தந்தைக்கும் அமிர்தம் கிடைக்கும் பொருட்டு நீ அன்னதானம் செய்வாயாக என அறிவுறுத்தினார்.

    அரசனும் அதைக் கேட்டு அன்னதானம் செய்யத் தீர்மானித்தான்.

    அரசன் நாரதரை நோக்கி, "இப்பூவுலகில் எவ்விடத்தில் எந்த நாளில் அன்னதானம் செய்தால் பிற இடங்களில் செய்வதை விட அதிகப்பலன் அடையலாம்" என்று கேட்டான்.

    அதற்கு நாரதர் மற்ற இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு அன்னமளிப்பது காசியில் ஒருவருக்கு அன்னமளிப்பதற்கு ஈடாகும்.

    காசியில் கோடி பேருக்கு அன்னமளிப்பது திருவண்ணாமலையில் ஒருவருக்கு அன்னமளிப்பதற்கு சமமாகும்.

    அப்பேற்றை பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் அளவிட முடியாது.

    திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் வேறெங்கும் கிடையாது என்று கூறினார்.

    சித்ரகேது அண்ணாமலையாரை ஆராதித்து தினமும் அன்ன தானம் செய்து வழிபட்டான்.

    இவன் அன்னதானம் ஆரம்பித்த உடனே இந்திரன் கொடுத்த அமிர்தத்தை அவன் தந்தை அருந்தி சிவலோகம் அடைந்தார்.

    எனவே நீங்கள் ஒவ்வொரு பவுர்ணமி தோறும் எதை நினைத்து அன்னதானம் செய்தாலும், அவை நல்ல பயனைத் தரும்.

    கல்வி, திருமணம், புத்திரம், வேலை, பதவி உயர்வு, அரசியல், வெற்றி, பிறந்தநாள், திருமண நாள், முன்னோர்கள் திதி, ஆரோக்கியம் போன்ற எல்லா வகையான பயனை பெற தாங்களால் இயன்ற சிறுதொகையை அன்னதானத்திற்கு அளிக்கலாம்.

    • நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளது.
    • சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது.

    * நினைக்க முக்தியருளும் தலம்.

    * அருணகிரி நாதரின் வாழ்வில் அருள்திருப்பம் ஏற்படக்காரணமாக இருந்த பதி.

    * ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது)

    * இத்திருக்கோவிலின் கிழக்குக்கோபுரம் 217 அடி உயரம், தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.

    தெற்கு கோபுரம்-திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம்- பேய்க்கோபுரம், வடக்கு கோபுரம்-அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.

    * கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும், பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

    * கோவிலுனுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலதுப்புறம் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி-ரமணர் தவம் செய்த இடம் தரிசிக்கத்தக்கது.

    * உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சன்னதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன. திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சன்னதி.

    * வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமானுக்குச் சாத்திய வேல் இன்றுமுள்ளது.

    * சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது.

    * அம்பாள் சந்நிதியில் சம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுகள் உள்ளன.

    * விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ர பாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

    * மூவர்-அருணாசலப்பெரு மான், தங்கக்கவச நாகா பரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.

    * 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் திருவெம் பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

    * தலபுராணம் -அருணாசல புராணம் அருணைக்கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.

    * அண்ணாமலை வெண்பா குரு நமச்சிவாயர் பாடியது.

    * குருநாமசிவாயர்,குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்யஞானதேசிகர், தெய்வ சிகாமணி தேசிகர், முதலியோர் இப்பகுதியில் வாழ்ந்த அருளாளர்கள்.

    இவர்களுள் பெரும் யோகியாக திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பவர்

    ராமேஸ்வரத்துக்கு யாத்திரையாக சென்ற போது ராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று

    ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோவில்களின் நிர்வாகத்தை தாம் மேற்கொண்டதோடு

    குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர்ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்.

    அதுவே குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் என்று வழங்கப்பட்டு வருகின்றது.

    * நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளது.

    இவை தமிழ், சமஸ்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன.

    • திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.
    • இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

    திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

    அதில் ஒன்று ஒரு முறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள்.

    அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது.

    உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது.

    விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.

    இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.

    தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம் மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள்.

    பௌர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது.

    இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

    அந்த தினமே கார்த்திகை தீப திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம்,

    ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது,

    அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.

    விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது.

    நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது.

    தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது.

    ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார்.

    அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார்.

    முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியல் மகாபலி சக்கரவர்த்தியா பிறந்தார்.

    எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது.

    ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோவிலுக்குச் சென்றார்.

    பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நட ந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி

    சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று.

    செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகை கூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார்.

    தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கி அருளுமாறு வேண்டினார்.

    "தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோவிலில் தீப வரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா.

    காலப் போக்கில் உன் நோய் நீங்கும்" என்று இறைவன் அசரீரியாக சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான்.

    நாள்தோறும் கோவிலுக்கு சென்று வரிசை வரிசையாக நெய்த் தீபங்கள் ஏற்றி வழிபட்டான்.

    இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய

    பௌர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது.

    இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது.

    இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர்.

    காலப்போக்கில் அனைத்து இனத்தவர்களும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது.

    சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.

    ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்க செய்யும்

    வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும்.

    எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.

    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும்.

    என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும்

    எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது,

    அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அபிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.

    தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது

    கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின்,

    இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

    • கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.
    • திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.

    கார்த்திகை தீபம் அது சாதாரண தீபமல்ல.

    ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம்.

    கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த

    திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோவில்களில் பிரகாசமான

    தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

    கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.

    ஏனென்றால் இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி நரம்புகளெல்லாம்

    சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள்.

    அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும்.

    அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான்.

    இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார் எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.

    • பவுர்ணமி அன்று பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மறுநாள்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்படி கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.58 மணிக்கு தொடங்கி மறுநாள் திங்கள் கிழமை மாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    மேலும் தீபத் திருவிழாவில் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
    • வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்களாக இவை காட்டப்படும்.

    கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீப தரிசனத்திற்காக 2500 முதல் 3000 பக்தர்கள் வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    நாளை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டுள்ளது.

    திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் மாலை விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும். வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லாம் திசையும் ஒளி படும் படி ஏற்ற வேண்டும்.

    இந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் சிறப்பு. இந்த பரணி தீபத்தினை வீட்டில் நாம் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நாம் செல்லும் உலகங்களில் எம்னுடைய வதம் இன்றி துன்பம் இன்றி இருக்கலாம் என்பது ஐதீகம்.

    இந்த பரணி தீபத்தின் முக்கியமான சிறப்பு என்னவென்றால் பஞ்சபூதம் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்பதுதான். இந்த பரணி தீபம் 5 விளக்குகளைக்கொண்டு ஏற்றப்படுகிறது.

    அப்படி ஏற்றுவதினால் அகமும் புறமும் சிறப்பாக செயல்படும் மகிழ்வாக இருப்போம் என்பது ஐதீகம் மேலும் பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, காற்று உள்ளிட்ட அனைத்தும் அளவாக நமக்கு கிடைக்க வேண்டிதான் இந்த பரணி தீபம் ஏற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.

    நமது வீட்டு பூஜையறை யில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். 2 முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். 3 முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். 4 முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். 5 முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    திருவண்ணாமலையில் நேற்று பஞ்சரத தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் மகாதீபம் ஏற்றப்படுவதால் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய ப்பட்டுள்ளன. 16 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்கும் விடுதி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை அமர வைத்து நேர்த்திக்கடன்.
    • மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதிஉலா.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்தனர். இரவு 10 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க சாமி வீதிஉலா நடந்தது.

    அப்போது மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சின்ன அதிகார நந்தி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 10 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகர் தங்க சூரியபிரபை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னர் தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் பக்தர்கள் சிலர் கரும்பில் தொட்டில் அமைத்து தங்கள் குழந்தையை அதில் அமர வைத்து நேர்த்தி கடனாக மாட வீதியில் வலம் வந்தனர். இதைபோல் 7-ம் விழாவான தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

    தொடர்ந்து இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமி வீதி உலாவின் போது போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை தீபத் திருவிழா கொடியேற்றம்.
    • துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை நடக்கிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும்.

    அதன்படி இன்று இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை புதன்கிழமை அருணாசலேஸ்வரர் கோவில் 3-ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் வியாழக்கிழமை விநாயகர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும்.

    அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.

    நவம்பர் 23-ந் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.

    மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபத்தில் எழுந்தருள ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2668 அடி உயரமுள்ள அருணாசலேஸ்வரர் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×