search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Production"

    • நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விதைச்சான்று இயக்குனர் வளர்மதி (சென்னை) தலைமையில் தாராபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:- உலகத்துக்கே உணவு வழங்கும் உற்பத்தித் தொழிலான விவசாயத்தின் முக்கிய இடுபொருளாக விதைகள் உள்ளது.அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விதைகளை உற்பத்தி செய்யும் பணியை விதை உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை தன்னிறைவு பெறச் செய்ததில் நமது மாவட்டத்தின் பங்கு முக்கியமானது. தற்போது விவசாயிகளிடையே குண்டு நெல் ரகங்களான சாவித்திரி, சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது. தமிழக அரசின் பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக அரசு கொள்முதல் நிலையங்களில் சிகப்பு நிற மட்டை அரிசி ரகமான டிகேஎம் 9 ரகம் கொள்முதல் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி.கே.எம். 9 ரகம் தவிர அனைத்து குண்டு ரகங்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும்.

    எனவே விதை உற்பத்தியாளர்களும் டிகேஎம் 9 தவிர மற்ற ரக நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் விதைச் சான்றுத்துறை அலுவலர்களை நேரடியாக ஒரே இடத்தில் சந்தித்து பயன் பெறும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விதை வளாகம் கட்டப்படவுள்ளது. இதற்கென ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விதைச் சான்றுத்துறை, விதை ஆய்வுத்துறை மற்றும் விதை பகுப்பாய்வு நிலையம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமையவுள்ளது. இது விவசாயிகளுக்கும் விதை உற்பத்தியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இ்வ்வாறு அவர் கூறினார்.  

    • விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயிகளுக்கு‘’தரமான விதை உற்பத்தி’’குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், மேல்சாத்தம்பூர், ஆவாரங்காட்டு மேடு சமுதாயக்கூடத்தில் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயி களுக்கு''தரமான விதை உற்பத்தி''குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் தரமான விதை உற்பத்தியின் நோக்கம், விவசாயத்தின் ஆதாரமாம் விதையின் முக்கியத்துவம், சாகுப டிக்கு ஏற்ற விதையின் உற்பத்தி திறன், உணவு உற்பத்தியில் விதைகளின் முக்கியத்துவம்,பயிர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.

    நாமக்கல், விதை சான்றளிப்புத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர் சித்திரைசெல்வி,

    வேளாண்மை அலுவலர் அருண்குமார் ஆகியோர் விதை உற்பத்தியில் மண்பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

    பயிற்சியில் பரமத்தி வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், ஆகியோர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும், மேற்கண்ட பயிற்சியின் நோக்கம் அதன் பயன்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

    பரமத்தி உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன் உதவி வேளாண்மை அலுவலர், கவுசல்யா,, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் தரமான விதைகள் தேர்வு, விதை நேர்த்தி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

    • பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது.

    உடுமலை,

    உடுமலை சுற்றுப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக,மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வகை வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட முன்பு விவசாயிகள் அதிக தயக்கம் காட்டி வந்தனர்.

    இதையடுத்து மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மற்றும் மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.எனவேஇத்தொழிலில்ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில்வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலை பெற்றது.பிற மாநிலங்களில் இருந்து உடுமலைக்கு வந்து மல்பெரி தோட்ட பராமரிப்பு, புழு வளர்ப்பு மனை பராமரிப்பு, அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுச்செல்லும் அளவுக்குஇப்பகுதி இத்தொழிலில் முன்னிலையில் இருந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக மல்பெரி வளர்ப்பு, இளம்புழு பராமரிப்பு, நோய்த்தாக்குதல் கட்டுப்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் முறையாக கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காலத்தில் பட்டுக்கூடுகளை சந்தைப்படுத்த, சிரமம் நிலவியது.அப்போது விலை வீழ்ச்சி, விற்பனை சந்தை பிரச்னை காரணமாக இத்தொழிலை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெண்பட்டுக்கூடுகள் விலை கிலோ 700 ரூபாய் அளவுக்கு உயர்ந்த போது உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.கடந்த சில மாதங்களாக உற்பத்தியை சீராக்க விவசாயிகள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். விலையும் நிலையாக கிடைக்கத்துவங்கியது. ஆனால் தற்போது, உடுமலை பகுதியிலுள்ள மல்பெரி தோட்டங்களில் இலைப்பேன் உள்ளிட்ட நோய்த்தாக்குதல் துவங்கி வேகமாக பரவி வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு காரணங்களால், மல்பெரி செடிகளில் இலைப்பேன் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இவ்வகை பேன்கள் மல்பெரி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சிக்கொள்கிறது.எனவே தரமில்லாத மல்பெரி இலைகள் உருவாகிறது. இவ்வகை இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளித்தால், புழுக்களும் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி தரமற்ற பட்டுக்கூடுகளே உற்பத்தியாகும்.கொழுந்து செடிகளில் இத்தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாததால் இந்த சீசனில் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து நஷ்டத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில் முன்பு குறிப்பிட்ட இடைவெளிகளில் தொழில்நுட்ப விழிப்புணர்வு கூட்டங்கள் கிராமம் வாரியாக நடத்தப்படும். இதனால்அந்தந்த பகுதி விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.மீண்டும் இத்தகைய கூட்டங்களை நடத்திதரமான மல்பெரி இலை, பட்டுக்கூடு உற்பத்திக்கு அரசு உதவ வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே ஹைட்ரோ கார்பன் அகழ்வு திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ள நிலையில் ஹைட்ரோ கார்பனின் உற்பத்தி, அதன் பயன்பாடு மற்றும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
    இந்தியா பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல 45 சதவீதம் எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறார்கள்.

    இதற்காக பெருமளவு பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. மேலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. எனவே இந்தியாவிலேயே எரிபொருள் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.

    இதனால் மாற்று ஏற்பாடாக எரிபொருள்களை உற்பத்தி செய்யும் திட்டங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதில் ஒன்று தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்.

    நாம் பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் ஹைட்ரஜனும், கார்பனும் கலந்துள்ளது. அவைதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோன்று ஹைட்ரஜனும், கார்பனும் கலந்த பல்வேறு வகையான எரிபொருள்கள் பூமிக்கு அடியில் வாயுவாக தேங்கி உள்ளன. அவை மீத்தேன், புரோபைன், பியூடேன், ஈத்தேன், பென்டேன் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் எரிபொருள் ஆகும்.

    அதாவது ஹைட்ரஜன் அணுக்களும், கார்பன் அணுக்களும் எந்த வகையில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன என்பதன் அடிப்படையில் இவற்றிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    உதாரணத்திற்கு 4 ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு கார்பன் அணுவும் சேர்ந்திருந்தால் அது மீத்தேன். 2 கார்பன் அணுவும், 6 ஹைட்ரஜன் அணுவும் கலந்திருந்தால் அது ஈத்தேன்.

    இவ்வாறு அணுக்கள் சேர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு எரிபொருளும் உள்ளன. நிலத்திற்கு அடியில் இந்த அனைத்து வகை எரிபொருள்களும் கலந்திருக்கின்றன. இவற்றை ஒட்டுமொத்தமாக ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கிறார்கள்.

    பூமிக்கு அடியில் இவைகள் பாறைகளின் இடுக்குகளில் ஆங்காங்கே ஏராளமாக தேங்கி நிற்கின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

    அவ்வாறு அதிகமாக காணப்படும் பகுதிகளில் தமிழ்நாடு ஒன்று. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் வரை அதிக அளவில் ஹைட்ரோ கார்பன்கள் பூமிக்கு அடியில் இருக்கின்றன.

    இவற்றை தோண்டி எடுப்பதற்கு தான் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இவற்றை தோண்டி எடுக்கும் பணிகளை மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா நிறுவனங்கள் செய்து வந்தன. ஆனால் இந்த நிறுவனங்களால் பெருமளவு பணத்தை செலவிட்டு பணிகளை செய்ய முடியவில்லை. எனவே தனியாருக்கு இது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    பூமிக்கு அடியில் 1000 மீட்டரில் இருந்து 5000 மீட்டர் ஆழம் வரை இவை படிந்திருக்கின்றன. அவற்றை தோண்டி எடுக்கவேண்டுமானால் ராட்சத வடிவில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். செங்குத்தாகவும், குறுக்கு நெடுக்குமாகவும் இந்த கிணறு அமைக்கப்படும்.

    அப்போது பாறை இடுக்குகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேறும். இதற்காக உள்ளுக்குள் தண்ணீர் அல்லது வாயுக்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்படும். அப்போது வெளியே வரும் வாயுக்களை கலன்களில் சேமித்து அவற்றை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வார்கள். அங்கிருந்து தரமான ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கப்பட்டு அவை எரிபொருள்களாக பயன்படுத்தப்படும்.

    பொதுவாக நமது நிலப்பரப்பில் மீத்தேன் வாயுதான் அதிகமாக பரவி உள்ளது. கிட்டத்தட்ட 90-லிருந்து 95 சதவீதம் வரை மீத்தேன் எடுக்கப்படும். இதற்காகத்தான் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள்.



    1000 மீட்டரில் இருந்து 3000 மீட்டர் வரை ஆழ்துளை கிணறு தோண்ட உள்ளனர். அப்போது அங்கு தேங்கி இருக்கும் ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேற தொடங்கும். அந்த இடுக்குகளில் நிலத்தடி நீர் சென்றுவிடும்.

    உதாரணத்திற்கு தற்போது நிலத்தடி நீர் பூமிக்கு கீழே 100 மீட்டரில் இருந்து 400 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும்போது 1000 மீட்டரிலிருந்து 3000 மீட்டர் ஆழத்தில் ஏற்படும் வெற்றிடத்திற்குள் இந்த தண்ணீர் புகுந்துவிடும்.

    அதாவது மேல்மட்டத்தில் உள்ள தண்ணீர் கீழ்மட்டத்திற்கு சென்றுவிடும். அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகளில் இருந்து பெருமளவு தண்ணீரையும் வெளியேற்றுவார்கள்.

    இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நிலத்தடி நீரே கிடைக்காத நிலை ஏற்படும். இதன் காரணமாக அந்த பகுதி விவசாயமே அழிவு நிலைக்கு தள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியேறும். இவை காற்றில் கலந்து சுற்றுப்புற சூழலை முற்றிலும் நாசமாக்கிவிடும்.

    மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். செடி, கொடிகள் என இயற்கைகளையும் நாசமாக்கிவிடும்.

    விவசாயம் இல்லாத பாலைவன பகுதி அல்லது மக்கள் அதிகம் பயன்படுத்தாத பகுதி ஆகியவற்றில் இந்த கிணறுகளை தோண்டினால் அதனால் பெரிய அளவில் பிரச்சினைகள் வராது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இவற்றை உருவாக்கும்போது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    எனவே தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தொடர் விபத்துகளால் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைக்க போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. #Boeing737MAX8
    சிகாகோ:

    அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தது, பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகர் நைரோபிக்கு கடந்த மாதம் 10-ந்தேதி புறப்பட்டு சென்றது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 6 நிமிடங்களில் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 157 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    அதற்கு முன்பாக கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் 29-ந்தேதி இதே ரக லயன் ஏர் விமானம், இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளாகி 189 பேர் பலியாகினர்.

    இப்படி தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் இந்த விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்தன.

    இந்த விபத்துகளால் போயிங் விமான நிறுவனம் மீது அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் 2 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. விமானத்தின் தொழில் நுட்ப கோளாறுதான் விபத்துக்கு காரணம் என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைக்க போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இந்த விமானத்தின் மாதாந்திர உற்பத்தி இலக்கு 52-ல் இருந்து 42 ஆக குறைக்கப்படுகிறது.

    தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவதால் பல்வேறு விமான நிறுவனங்கள் இந்த விமானத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால்தான் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைப்பது என போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. #Boeing737MAX8 
    கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. #FireCracker #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி, தசரா பண்டிகை காலத்தில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக கூறி, டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி மற்றும் ஜேயா ராவ் பசின் என்ற 3 சிறுவர்கள் சார்பில் அவர்களுடைய தந்தையர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.



    சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், பல்வேறு இந்து அமைப்புகள் என சுமார் 100 பேர் எதிர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன் மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் நட்கர்னி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளுடன் தீபாவளி சமயத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு பற்றி கலந்தாலோசித்து ஆலோசனைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தீபாவளியின்போது பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மீது பரிசோதனை நடத்தப்படும். குறைந்த அளவில் புகையை வெளியிடும் பட்டாசுகள் தயாரிக்க வலியுறுத்தப்படும்.

    * சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமை பட்டாசுகள் தயாரிக்க அறிவுறுத்தப்படும்.

    * பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு தடை செய்யப்படும். பட்டாசுகளில் அலுமினியம் தாது கலப்பதை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மறு ஆய்வு செய்யும்.

    * தீபாவளிக்கு 14 நாட்களுக்கு முன்பும் தீபாவளி முடிந்து 7 நாட்களுக்குப் பிறகும் அலுமினியம், பேரியம், இரும்புத்தாதுப் பொடி ஆகியவை பட்டாசுகளில் பயன்படுத்துவது குறித்தும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

    * சரவெடிகளால் சுற்றுச்சூழல் மிகவும் மாசு அடைவதால் அவற்றின் தயாரிப்புக்கு தடை விதிக்கலாம்.

    * வெளிநாடுகளைப் போல இந்தியாவின் பெரிய நகரங்களில் குடியிருப்போர் சங்கங்கள் வழியாக குடும்பங்கள் கூட்டாக பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்யலாம். அதற்கான இடம், மைதானத்தை மாநில அரசுகள் முன்கூட்டியே தீர்மானித்து அறிவிக்கலாம்.

    * மாநிலம் மற்றும் தேசிய அளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    மேலே கூறப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக அரசு நிறுவனங்களுக்கும் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் 2 வாரங்களில் அவற்றை அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே கோர்ட்டு 2 வாரங்களுக்குள் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், வரும் தீபாவளியில் அமல்படுத்தலாம்.

    இவ்வாறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கு இடையே தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, பா.வினோத் கன்னா ஆகியோர் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது:-

    இத்தனை நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு, சிவகாசியில் அனைத்து ஆய்வு வசதிகளும் கொண்ட மத்திய அரசு நிறுவனமான பட்டாசு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் ஏன் ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இது குறித்து உத்தரவு பிறப்பித்தும் மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்தியாவின் 90 சதவீத பட்டாசு உற்பத்தி தமிழ்நாட்டில் குறிப்பாக சிவகாசியில் நடைபெறுகிறது. அதில் 40 சதவீதம் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது. டெல்லி, பட்டாசுக்கான வர்த்தக மையமாக செயல்படுகிறது. அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தராஞ்சல் போன்ற மாநிலங்களுக்கும் டெல்லியில் இருந்து பட்டாசு அனுப்பப்படுகிறது.

    எனவே, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தால் தமிழகத்தின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். சிவகாசியின் பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் சிறுகுறு நடுத்தர தொழில் முனைவர்கள் ஆவார்கள். 1,070 பட்டாசு தொழிற்சாலைகளால் 5 லட்சம் குடும்பங்கள் பயன் அடைகின்றன. பட்டாசுகள் பிரச்சினை என்று கருதி, தீர்வாக பட்டாசுக்கு தடை விதிப்பது மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடும். பட்டாசு மீதான தடை என்பது கண்டிப்பாக ஒரு தீர்வாக இருக்காது. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

    இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் என்னும் தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் வக்கீல் ஜே.சாயி தீபக் வாதிட்டபோது, “தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. இது கொண்டாட்டம் சார்ந்த மத ரீதியான நடவடிக்கை. இந்துக்கள் மட்டுமே பட்டாசு வெடிப்பதில்லை. சீக்கியர்களும் சமணர்களும் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் பண்டிகைகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். பட்டாசு வெடிப்பதற்கு எதிரான முறையான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இதுவரை முழுமையாக செய்யப்படவில்லை. இங்கு தீபாவளி என்பது பிரச்சினை அல்ல. சுற்றுச்சூழல் மாசுபடுவதே பிரச்சினை. எனவே மத்திய அரசு பரிந்துரைத்தபடி சில கட்டுப்பாடுகளுடன் பட்டாசு தயாரிப்புக்கும் விற்பனை, உபயோகம் ஆகியவற்றுக்கும் அனுமதி வழங்கலாம்” என்று குறிப்பிட்டார்.

    வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 28-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  #FireCracker #SupremeCourt #Tamilnews
    2019-ம் ஆண்டு முதல் மட்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், தயாரித்து விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #WorldEnvironmentDay #noplasticfrom2019
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறியதாவது:-

    இன்று, ஜுன் 5, “உலக சுற்றுச்சூழல் தினம்”. சமுதாயம் நலமாக வாழவும், வளமுள்ள நாடு உருவாகவும் இன்றியமையாததாக விளங்குவது சுற்றுச்சூழல். இத்தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் உறுதி எடுப்போம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் துறை மூலமாக புரட்சிகரமான திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா நிறைவேற்றினார். அவர்கள் வழியில் செயல்படும் அம்மாவின் அரசு தொடர்ந்து அதனை பின்பற்றி வருகிறது.

    “பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு” என்ற சிறப்புக் குழுவினை அம்மா அமைத்தார். இந்த வல்லுனர் குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருட்களை தடை செய்யவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது.

    இவற்றில், அன்றாடம் மக்களுக்கு தேவைப்படும் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் போன்ற பொருட்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், நிலங்களில் தேங்கிவிடும் போது, நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் நீரின் போக்கு மாறி, நீர் தேங்கி விடும் நிலை உருவாகிறது.

    மேலும், கழிவு நீர் செல்லும் பாதைகளிலும் இதன் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைகிறது. மேலும் மழைநீர், பூமியில் கசிந்து நிலத்தடியினை அடையாமல் போவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் பாதிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கும் போது, கொசு உற்பத்தியாகி, அதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன.

    மேலும், மழைநீர்க் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்படவும் காரணமாகி விடுகிறது. மண் வளமும் பாதிக்கப்படுகிறது.


    தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும்போது, அதன் மூலம் வெளியாகும் நச்சு வாயுவின் மூலமாக மனிதன் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றும் மாசடைகிறது. உணவுப் பொருட்களுடன் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பிற உணவுகளுடன் சேர்ந்து உண்ணும் நிலை ஏற்படுவதனால், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகி விடுகிறது.

    மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியம்.

    இவ்வாறு நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுகிறது. எனவே இவற்றை அறவே தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது.

    மேற்படி பாதிப்புகளை கருத்தில் கொண்டும், இந்தத் தீங்கினை நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு, ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறு பாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்ய அம்மாவின் அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் தடை செய்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், 2019, ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அம்மாவின் தொலை நோக்குத் திட்டமான ‘மழை நீர் சேகரிப்புத் திட்டம்’, பொதுமக்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், வெற்றிகரமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் பெரிய அளவில் செறிவூட்டப்பட்டது.

    அதே போன்று, உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், அம்மாவின் அரசு செயல்படுத்த இருக்கும் “பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை” நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம் ! என்று கூறி அமர்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #EdappadiPalanisamy #WorldEnvironmentDay #noplasticfrom2019
    ×