search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்தி"

    • கடந்த சில நாட்களாக ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
    • உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று விரைவில் திரும்புவர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்து தொடங்கி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.

    அதன்படி, திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    விடுமுறை முடிந்து தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும் கடந்த சில நாட்களாக, ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது. புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர் என்றனர்.

    • உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
    • கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பல்லடம், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.

    கடந்த 1-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5-ந் தேதி 92 ரூபாய், 10-ந் தேதி 82 ரூபாய், 15-ந் தேதி 98 ரூபாய், 20-ந் தேதி 82 ரூபாய், 25-ந் தேதி 88 ரூபாய் என படிப்படியாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.

    கடந்த 27-ந் தேதி 98 ரூபாய், நேற்று 107 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த 20-ந் தேதி 82 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 107 ரூபாயாக உயர்ந்ததால் 10 நாட்களில் கொள்முதல் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

    பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால் தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. ஒரு கோழி 3 கிலோ, 2.7 கிலோ, 2.5 கிலோ என்ற நிலையில் இருந்தது. தற்போது 2 கிலோ, 2.2 கிலோவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக, 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழிகள், 41 நாட்கள் கழித்து பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் போது விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு 5 வாரத்துக்கு முன்பே, 4 வாரம் கோழிக்குஞ்சு விடுவதை நிறுத்திவிட்டனர்.

    அதனால் வரும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். தற்போது வாரம் 4.50 கோடி கிலோ விற்பனையாகும் நிலையில், 50 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி சரிந்துள்ளது. அதன் காரணமாக கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
    • உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர்மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பா ளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.

    இங்கு வாங்கப்படும் வெல்ல சிப்பங்களை லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வைப்பர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,170 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,220 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.

    • விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும்.
    • ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்துக்கு உட்பட்ட கோட்டமங்கலம் பகுதியில் உள்ள பாசிப்பயறு கோ 8 ஆதார நிலை 1 விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும். பசுமைப்புரட்சிக்குப்பிறகு பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவையை பூர்த்தி செய்ததிலும், உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதற்கும் நல்ல முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, அதிக மகசூல் அளித்த ரகங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு தரமான விதைப்பண்ணைகள் அமைத்து, வயலாய்வுகள் மேற்கொண்டு பெறப்பட்ட சான்று செய்யப்பட்ட விதைகள் முக்கிய காரணமாக இருந்தன. ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும். தற்போது ஆதார நிலை விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ள பாசிப்பயறு கோ 8 ரகமானது 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிற பாசிப்பயறு ரகங்களுடன் ஒப்பிடும் போது 55 முதல் 60 நாட்களில் வளர்ந்து ஏக்கருக்கு 340 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஒரு செடிக்கு 20 முதல் 25 காய்களுடனும், ஒரு காய்க்கு 10 முதல் 14 விதைகள் உடன் 1000 தானியங்களின் எடை 35 முதல் 45 கிராம் கொண்டதாக இருக்கும். அஸ்வினி தண்டு துளைப்பான், மஞ்சள் மொசைக் வைரஸ் மற்றும் வேர் அழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. விதைப்பண்ணை பூ பருவத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது விதை ஆதாரம், பயிர் விலகு தூரம், கலவன்கள் சதவீதம், வயல் தரம் உள்ளிட்ட காரணிகள் ஆய்வு செய்யப்படும். கலவன்கள் குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் ஆதார நிலை விதை பண்ணைக்கு 0.1 சதவீதம் , சான்று நிலைக்கு 0.2 சதவீதம் இருக்குமாறு வயல் தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு வயல் தரங்கள் பராமரிக்கப்படாத விதை பண்ணைகள் தகுதி நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சரவணன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

    • பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ,000 மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.கறிக்கோழி நுகா்வை பொறுத்தே பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி விலை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா். புரட்டாசி விரதம் காரணமாக தற்போது கறிக்கோழி நுகா்வு குறைந்துள்ளது.இதனால் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி 25 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சின்னசாமி கூறியதாவது:-

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கோழிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன. தற்போது புரட்டாசி மாத விரதம் காரணமாக கோழி இறைச்சி நுகா்வு குறைந்துவிட்டது. இதனால் கறிக்கோழிகள் பண்ணைகளில் தேக்கம் அடைவதை தவிா்க்கும் வகையில் 25 சதவீதம் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் என்றாா்.

    • உற்பத்தி செலவு அதிகமாவதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.
    • சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு, குரவப்பு லம், தாணிக்கோட்டகம், செம்போடை, பிராந்தி யங்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 அடியிலிருந்து 20 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு அனுப்பப்படும்.

    அவ்வாறு தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தற்போது வாட்டர் கலர்கள் கொண்டு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு உற்பத்தி செலவு அதிகமாகதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கும், 10 அடி சிலை ரூ. 20 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

    இதுகுறித்து சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில்:-

    இந்த ஆண்டு அதிகளவில் விநாயகர் சிலைகளுக்கு முன்பதிவு செய்திருப்பதால் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பும், கூடுதலான வருமானம் கிடைத்துள்ளது என்றனர்.

    • மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
    • அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு வளர்க்கப்படும் மீன்கள் உரிமம் பெற்ற மீன வர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .

    இதற்காக அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    6 லட்சம் மீன் குஞ்சுகள்

    நடப்பாண்டில் முதல்கட்ட மாக அணை யின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாப் பாளையம் காவிரியாற்றில் மீன்வளத்துறை சார்பில் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் ரோகு 4.5 லட்சமும், மிர்கால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் கோகுல ரமணன் ஆர்.டி.ஓ. தணிகாசலம், சதாசிவம்

    எம்.எல்.ஏ. (பா.ம.க.) மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், சுசீந்திரம், தக்கலை, இரணியல், குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 29.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வந்த நிலையில் தற்பொழுது உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் 5¾ அடி உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 2¾ அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 25.95 அடியாக உள்ளது. அணைக்கு 301 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.71 அடியாக உள்ளது.

    அணைக்கு 826 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 14.6, சிற்றாறு 1-12, சிற்றார் 2-16.8, களியல் 6, கன்னிமார் 3.6, கொட்டாரம் 1.2, குழித்துறை 4, மயிலாடி 5.4, நாகர்கோவில் 2.2, சுருளோடு 9.6, தக்கலை 5.3, குளச்சல் 4.6, இரணியல் 6.2, திற்பரப்பு 14.2, கோழிப்போர்விளை 10.2, அடையாமடை 2, முள்ளங்கி னாவிளை 9.6, ஆணைக்கிடங்கு 4.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குலசேகரம் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்க ளில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும்.

    திருப்பூர்:

    கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மும்பையில் நாளுக்கு நாள் மழை தீவிரமடைந்து வருகிறது.இது குறித்து லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

    திருப்பூரில் உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி சில மாதங்களாக சற்று வேகமெடுத்துள்ளது. ஏப்ரல் முதல் இம்மாதம் வரை கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஆடை வர்த்தகத்தில் 30 சதவீதம் மும்பை சந்தையை சார்ந்துள்ளது. மழையால் தற்போது மும்பையில் ஆடை வர்த்தகம் சரிந்துள்ளது.

    இதனால் திருப்பூரிலிருந்து ஆடை கொள்முதல் செய்வதை மும்பை வர்த்தகர்கள் குறைத்து வருகின்றனர். மழை தீவிரமடையும் போது வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு சரக்கு அனுப்புவதும் தடைபடும். வெயில் நீடிப்பதால் ஆந்திரா, டில்லி, பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு கோடைக்கால ஆடை ரகங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

    பருவமழை தீவிரமடைந்து செப்டம்பர் வரை திருப்பூரின் உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை பாதிக்க செய்யும். அதன் பின் தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பின்னலாடைத் தொழில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியில் ஏராளமான சோதனையை சந்திக்கிறது.
    • கடந்த நிதியாண்டில் திருப்பூரில் இருந்து 36 ஆயிரத்து 419 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.

    திருப்பூர் :

    பின்னலாடைத் தொழில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியில் ஏராளமான சோதனையை சந்திக்கிறது. எவ்வளவு தான் நெருக்கடி எழுந்தாலும் விடாமுயற்சியில் இறங்கும் தொழில்துறையினர் சவால்களை முறியடித்து வெற்றி மகுடம் சூட்டிக்கொள்கின்றனர். 'சி-பாரம்' பிரச்சினையில் துவங்கி, கடந்த ஆண்டு தொழிலை புரட்டிப்போட்ட நூல் விலை உயர்வு வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், பின்னலாடை உற்பத்தியாளர்களும் தீர்வு கண்டுவிடுகின்றனர்.

    கொரோனாவுக்கு பின் வளர்ச்சிப்பாதையில் வேகமாக பயணித்த பனியன் தொழிலுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது நூல் விலை உயர்வு மட்டுமல்ல, ரஷ்யா - உக்ரைன் போர் சூழலும்தான். அப்படியிருந்தும் கடந்த நிதியாண்டில் திருப்பூரில் இருந்து 36 ஆயிரத்து 419 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது :- இறக்குமதி நாடுகளில் இயல்புநிலை திரும்பி வருவதால் சிறு, குறு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும்.விரைவில் நிலை மாறும். செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு திருப்பூர் முழு அளவில் தயாராகிவருகிறது. முதல்கட்டமாக செயற்கை நூலிழை துணி உற்பத்தி மற்றும் சாயமிடுவதில் சோதனை முறை வெற்றியடைந்துள்ளது.

    இந்தாண்டில் மட்டும் 100 நிட்டிங் எந்திரங்கள், பாலியஸ்டர் பின்னலாடை துணி உற்பத்தியை துவக்கியுள்ளன. சாய ஆலைகளும் பாலியஸ்டர் துணிக்கு சாயமிட்டு வெற்றி கண்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் இத்தகைய புதிய முயற்சி துவங்கியுள்ளது.ஆடை உற்பத்தியில் பெரிய மாற்றம் தேவையில்லை. வழக்கமாக பயன்படுத்தும் தையல் மெஷின்களில், ஊசிகளை மட்டும் சரிசெய்தால் பாலியஸ்டர் பின்னலாடைகளை உற்பத்தி செய்யலாம். நிட்டிங் , டையிங் பிரிவில் வெற்றிகரமாக பாலியஸ்டர் துணியை தயார் செய்து வருகிறோம். திருப்பூரை பொறுத்தவரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி பாதையில் நகர துவங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் வேகமெடுக்க வாய்ப்புள்ளது. தற்போதைய மந்தநிலையும் சில மாதங்களில் மாறிவிடும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • உற்பத்தி அதிகரிக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி
    • ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து மேயர் மகேஷுக்கும் புகார்கள் சென்றது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. நாகர்கோவில் நகரில் இன்று காலையிலும் ஆவின் பால் தட்டுப்பாடு இருந்தது. இதனால் ஆவின் பாலகத்திற்கு பால் வாங்க வந்த பொதுமக்கள் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து மேயர் மகேஷுக்கும் புகார்கள் சென்றது. இதையடுத்து இன்று காலை அவர், ஆவின் பாலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பொது செயலாளர் நடராஜனுடன் பால் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. தற்பொழுது தமிழக அரசு கறவை மாடுகள் வாங்க அதிக நிதி ஒதுக்கி உள்ளது. குமரி மாவட்டத்திலும் மாடுகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்கு வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத் திற்கு 23 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில், தற்பொழுது 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. நமது மாவட் டத்தில் 6 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    வெளி மாவட்டங்களில் இருந்து மீதமுள்ள பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு பால் குறைவான அளவு வருகிறது. இதை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இது தொடர்பாக அதிகாரியிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பால் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசரை சந்தித்து பேச உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
    • தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

    மங்கலம் :

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறிகள் பல ஆண்டுகளாக நவீனப்படுத்தப்படாமல் உள்ளன.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:- பாரம்பரியமாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், போதிய வருவாய் இன்றி தறிகளை நவீனப்படுத்த முடியாமல் உள்ளனர். சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்த தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதன் மூலம் உற்பத்தி திறன் நான்கு மடங்கு அதிகரிக்கும். தமிழக அரசு சார்பில் விசைத்தறிகளை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

    முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 67.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக சட்டசபை மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்குவது போல் மத்திய அரசும் விசைத்தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்கினால் உற்பத்தி அதிகரித்து விசைத்தறி தொழில் வளர்ச்சி பெறும். விசைத்தறியாளர் வாழ்வாதாரம் மேம்ப மத்திய அரசு தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×