search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panguni festival"

    • பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் வீரபாகு சேனைத்தலைவர் இளைஞர் அணி சார்பில் 3-ம் திருநாள் மண்டகப்படி நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு அம்பை நகராட்சி கலையரங்கம் அருகே மாணவ- மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது. ஏற்பாடுகளை இளைஞரணி தலைவர் துரை, செயலாளர் செல்வராஜ், துனைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் ரவி மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாளை ராஜ கோபாலசுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தேரோட்டம்

    ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவில் 10- ம் திருநாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது.

    இதற்காக காலை 7 மணிக்கு ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி தேருக்கு எழுந்தருளினார். 4 ஆயிர திவ்ய பிரபந்தத்தில் பெரிய திருமொழி பிரபந்த குழுவினரால் அருளப் பாடல் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

    தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    கோவிந்தா... கோபாலா... கோஷம்

    இதில் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி மிக்கேல் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

    • பங்குனி உத்திர திருநாளுக்கு தனிச்சிறப்பு உண்டு.
    • உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன்.

    தெய்வங்களின் பிறந்த நாள், திருமணநாள் என பங்குனி உத்திரம் நாள் மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது. இந்த நாளில் தான் சிவ விஷ்ணுவின் புதல்வராகக் தர்மசாஸ்தா அவதரித்தார். தென் மாவட்டங்களில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் காடுகளில் உள்ள சாஸ்தா கோவில்களுக்குச் செல்வர். சாஸ்தாவின் அவதார தினமான பங்குனி உத்திரநாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ பூஜை உண்டு.

    இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள்.

    கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. இந்த திருமணக் கோலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர்.

    ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த்தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே.

    பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினழும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.

    • பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
    • பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள்.

    1. மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தது பங்குனி நாளில்தான். ஆண்டுதோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

    2. சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.

    3. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.

    4. மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

    5. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

    6. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

    7. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.

    8. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளா, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - சுருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    9. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

    10. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

    11. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக் கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான்.

    12. காரைக்கால் அம்மையார் முக்தி யடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

    13. திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாசேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல் வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திரு மழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

    14. பங்குனி உத்திரவிரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.

    15. பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இன்று ( 5-ந்தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங் குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக் கல்யாணம் நடக்க உள்ளன.

    16. நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலை பங்குனி உத்திரம் நடைபெற உள்ளது.

    17. பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

    18. பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும். பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்ளன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.

    19. பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வரமளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று புராணங்கள் சொல்கின்றன.

    20. கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும்.

    • இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
    • பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்துக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களில் பங்குனி உத்திர நாளில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

    பிழைப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் இன்று ஒருநாளாவது தங்கள் குல தெய்வங்களான சாஸ்தா கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

    குலதெய்வம் எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் உள்ளவர்கள் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமியை குலதெய்வமாக நினைத்து அங்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    குலதெய்வம் கோவில்களுக்கு செல்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்ச்சை கடனாக குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது, ஆடு, கோழி, வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    பங்குனி உத்திரம் பெரும்பாலான கோவில்களில் நேற்று பகல் 11 மணிக்கு மேல் இன்று காலை 11 மணி வரை உத்திர நட்சத்திரம் உள்ளதால் ஏராளமானவர்கள் நேற்று தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் அதன் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தில் அமைந்துள்ள குன்று மலை சாஸ்தா கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவெகு விமர்சையாக நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு வள்ளியம்மன் தபசு காட்சிக்கு புறப்படுதல் நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்றும் அதிகாலை முதலே திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு மேல் தவசு காட்சிக்குச் சென்ற வள்ளியம்மனை அழைத்து வர சுவாமி புறப்படுதல், அங்கு வள்ளியம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு வள்ளி திருக்கல்யாணம் விமர்சையாக நடக்கிறது.

    • பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரத்தையொட்டி சாஸ்தா கோவில்களில் குலதெய்வ வழிபாடு இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    காலை பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாஸ்தாவுக்கு மாலைசாத்தி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இதற்காக வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் இன்று குலதெய்வ கோவிலுக்கு வந்தனர். சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக முந்தைய நாளே பக்தர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்.

    அதன்படி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று காலை முதலே கார், வேன், இருசக்கர வாகனங்கள், சிறப்பு பஸ்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    இந்நிலையில் பக்தர்கள் இன்று அங்குள்ள ஆற்றில் புனித நீராடி, பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    மேலும் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன், பேச்சியம்மன், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் ஆரியங்காவு சாஸ்தா கோவில், சீவலப்பேரி அருகே உள்ள மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், கங்கைகொண்டான் அனைத்தலையூர் தென்னூர் அய்யனார் சாஸ்தா கோவில் உள்ளிட்ட சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது.

    இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவநல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

    பங்குனி உத்திர நட்சத்திரம் நேற்று தொடங்கி இன்று வரை நடக்கிறது. நேற்று பல கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    இதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி-கல்லூரிகளும் இன்று செயல்படவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவிலான சாஸ்தா கோவிலுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் இன்று கார்-வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.

    • சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலாகும். இக்கோவில் மதுரையை அடுத்த அழகர்கோவில் மலை உச்சியில் அமையப் பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர திருவிழா நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும். இந்த விழாவானது நேற்று நடைபெற்றது. இதில் காலையில் அழகர் மலை அடிவாரத்தில் உள்ள 18-ம் படி கருப்பணசுவாமி ராஜகோபுரம் முன்பு இருந்து பக்தர்கள் 108 பால் குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சோலைமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் பகல் 12 மணிக்கு மூலவர் சுவாமிக்கு உச்சிகால பூஜைகள்நடைபெற்றது. தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் உற்சவர் சுவாமிக்கு, சந்தனம், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

    இதில் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி மயில் வாகனத்தில் பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் வெளி பிரகாரங்களின் வழியாக புறப்பாடாகி பின்னர் அதே பரிவாரங்களுடன் வந்து இருப்பிடம் சேர்ந்தது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    மேலும் திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி ஊராட்சியில் ஊருணி கரையில் உள்ள ஸ்ரீஊர்க்காவலன் சேவுகப்பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக 5 கரைதாரர்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தின் கீழ் 2 நாட்கள் நாடகம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் .திருவிழாவின் முத்தாய்ப்பாக 9 நாட்கள் தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடன், நாடகம் விடிய, விடிய நடந்தது.

    • பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு.
    • பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று (5-ந் தேதி) பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.

    இன்னொரு சிறப்பு... தமிழில், 12வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.

    ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்!

    முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம்.

    தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.இந்த நாளில் விரதம் மேற்கொண்ட சந்திரன், அழகுமிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்!

    இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.

    ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். .

    அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

    தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக் கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

    காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத் தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலை யாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங் குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெரு மாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் . இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால், திருமணப்பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் . இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான் .அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி , எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.*

    • நாளை இரவு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
    • 8-ந்தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (புதன்கிழமை) பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் கோவில் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதும் வழக்கம்.

    நாளை இரவு மின் அலங்காரத்துடன் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் பால்குடம், அக்னி மற்றும் அலகு குத்துதல், அங்க பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    8-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. பங்குனி விழாவை முன்னிட்டு இன்று முதல் தாயமங்கலம் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடசேன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது.
    • திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடந்தன. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் உத்சவ பலி நடைபெற்றது,

    அதைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடந்தது. அதற்கு முன்னதாக இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்ப சாமியை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பள்ளி வேட்டைக்கு பின் யானை ஊர்வலம் மீண்டும் புறப்பட்டு இரவு 12 மணிக்கு சன்னிதானத்தை அடைந்தது.

    திருவிழாவின் நிறைவாக இன்று (புதன்கிழமை) பகல் 11.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடக்கிறது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை அமர வைத்து மேளதாளம் முழங்க காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் புடை சூழ ஊர்வலம் புறப்படுகிறது. பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு பின் சாமி ஊர்வலம் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சன்னிதானத்தை வந்தடைகிறது. அங்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.

    இதே போல், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு இன்று (புதன்கிழமை) சங்குமுகம் கடற்கரையில் நடைபெறுகிறது.

    இதற்காக பத்மநாபசாமி கோவிலின் மேற்கு நடையில் இருந்து மாலை 5 மணிக்கு சாமி ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் விமான நிலையம் வழியாக கடந்து செல்லும் என்பதால் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணிநேரம் திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படும். இதன் காரணமாக மாலை 4 மணி முதல் 9 மணி வரை விமான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.
    • இன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத் தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளா கவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    பங்குனி உத்திர தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர் களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திரம் தினத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டு.

    பங்குனி உத்திரம் தினத்தன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சி னைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிவிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை பங்குனி உத்திரம் தினத்தன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். இந்த விரதத்தால் உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார்.
    • நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    சங்க காலத்தில் கோவில்கள் இலக்கியங்களை தோற்றுவிக்கும் பாடு களங்களாக விளங்கின. கோவிலின் சிறப்பு, வரலாறு போன்றவற்றை விளக்க தல புராணம் இருந்தது. காலப்போக்கில் கோவில்களை மையப்படுத்தி பல சிற்றிலக்கியங்களும் தோன்றியது. தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் பெரும்பாலும் பக்தியை பறைசாற்றுபவையாக உள்ளது. எனவே தான் பக்தி இலக்கிய காலத்தில் சிற்றிலக்கியங்கள் வளர்ந்தோங்கின.

    இறைவனை பாடுபொருளாக கொண்ட பிள்ளைத்தமிழ், உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, கோவை, பரணி போன்ற சிற்றிலக்கியங்கள் பக்தி சார்ந்தவைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இதில் எட்டு பாடல்களில் வரும் அட்டமங்கலம், ஒன்பது பாடல்களால் வரும் நவமணிமாலை, பத்துப்பாடல்களால் வரும் பதிகம், இருபது பாடல்களால் வரும் இருபா, முப்பது பாடல்களால் வரும் மும்மணிமாலை, மும்மணி கோவை, நாற்பது பாடல்களால் வரும் நான்மணி மாலை, அறுபது பாடல்களால் வரும் மணிமலை, நூறு பாடல்களால் வரும் இணை மணிமாலை போன்றவை பக்தியை பற்றி பாடப்பட்டு உள்ளது.

    அதன்படி பழனியில் குடிகொண்ட முருகப்பெருமானை பற்றி பதிகம், மாலை, ஒருபா, அந்தாதி, விருத்தம் முதலிய பல சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்று உள்ளன. இலக்கியத்தில் 3-ம் படைவீடாக குறிப்பிடும் திருஆவினன்குடியின் சிறப்பு பத்துப்பாட்டின் முதல் பாட்டான திருமுருகாற்றுபடை விளக்குகிறது. அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார். இதேபோல் வையாபுரிப்பள்ளு, பழனி பிள்ளைத்தமிழ், பழனியாண்டவர் சமயமாலை போன்றவை பழனியை பற்றி பாடப்பட்டுள்ள சிற்றிலக்கியங்கள் ஆகும்.

    இலக்கிய மரபு மட்டுமல்லாமல் வாய்மொழி மரபும் பழனி முருகன் கோவிலை மையமாக கொண்டு வளர்ந்துள்ளன. இதை கோவில் திருவிழாக்களின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வெளிப்படுத்தும் காவடிப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டம், வழிநடை சிந்து பாடல்கள் போன்றவற்றில் காணலாம். நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    ×