search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பங்குனி திருவிழா:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம்
    X

    பங்குனி திருவிழா:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம்

    • நாளை இரவு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
    • 8-ந்தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (புதன்கிழமை) பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் கோவில் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதும் வழக்கம்.

    நாளை இரவு மின் அலங்காரத்துடன் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் பால்குடம், அக்னி மற்றும் அலகு குத்துதல், அங்க பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    8-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. பங்குனி விழாவை முன்னிட்டு இன்று முதல் தாயமங்கலம் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடசேன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×