search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாஸ்தா கோவில்களில் அலைமோதிய  பக்தர்கள் கூட்டம்:சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர்
    X

    பக்தர்கள் பொங்கலிட்ட போது எடுத்தபடம்.

    சாஸ்தா கோவில்களில் அலைமோதிய  பக்தர்கள் கூட்டம்:சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர்

    • பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரத்தையொட்டி சாஸ்தா கோவில்களில் குலதெய்வ வழிபாடு இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    காலை பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாஸ்தாவுக்கு மாலைசாத்தி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இதற்காக வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் இன்று குலதெய்வ கோவிலுக்கு வந்தனர். சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக முந்தைய நாளே பக்தர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்.

    அதன்படி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று காலை முதலே கார், வேன், இருசக்கர வாகனங்கள், சிறப்பு பஸ்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    இந்நிலையில் பக்தர்கள் இன்று அங்குள்ள ஆற்றில் புனித நீராடி, பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    மேலும் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன், பேச்சியம்மன், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் ஆரியங்காவு சாஸ்தா கோவில், சீவலப்பேரி அருகே உள்ள மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், கங்கைகொண்டான் அனைத்தலையூர் தென்னூர் அய்யனார் சாஸ்தா கோவில் உள்ளிட்ட சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது.

    இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவநல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

    பங்குனி உத்திர நட்சத்திரம் நேற்று தொடங்கி இன்று வரை நடக்கிறது. நேற்று பல கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    இதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி-கல்லூரிகளும் இன்று செயல்படவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவிலான சாஸ்தா கோவிலுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் இன்று கார்-வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.

    Next Story
    ×