search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ma Subramanian"

    • செயற்கை கால் பாதங்கள் ரூ.2,86,000 செலவில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
    • அமைச்சர் மா.சுப்பிரமணியனை சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    சென்னை:

    மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா (வயது 13) எனும் சிறுமி எஸ்.எல்.இ எனப்படும் ரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, இரு கால்களிலும் ரத்த ஓட்டம் தடைபட்டு மிகுந்த வலியுடன் முன்பாதங்களும் கறுத்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

    அதனை சரி செய்ய முடியாத நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றதும், அவரது அறிவுறுத்தலின்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி அச்சிறுமிக்கு, ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை, முடக்கு வாதவியல் துறை மற்றும் சிறுநீரக மருத்துவ துறை போன்ற பல்வேறு உயர் சிறப்பு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர்.

    ரத்தத்தில் உள்ள நச்சு குறைவதற்கான மருந்துகள் செலுத்தப்பட்டு அதனை சரிசெய்து, இருகால்களின் முன்பாதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை காயங்களும் நன்றாக ஆறி, தற்போது வலி நன்கு குறைந்து நலமாக உள்ளார்.

    மேலும் காயங்கள் முழுவதுமாக ஆறியதால், வெளிநாட்டில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட இயற்கை கால்களைப் போன்றே உள்ள செயற்கை கால் பாதங்கள் ரூ.2,86,000 செலவில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சையினால் அக்குழந்தையால் எளிதாக நடக்கவும், அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளவும் செய்ய முடிகிறது.

    இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியனை ஆஸ்பத்திரியில் சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடனிருந்தனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கனையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
    • இன்னும் 2 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.

    சென்னை:

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    அவர் அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தூக்கம் இல்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்தார். மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டதால் உடல் எடையும் குறைந்தது.

    இதனால் கடந்த 15-ந்தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கனையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதற்கு சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் இன்னும் 2 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.

    இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சரிவர தூக்கம் இல்லாத பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளன. கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி, பிரச்சனைகளும் உள்ளதால் அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கனையத்தில் கொழுப்பு கட்டி இருப்பதால் அதை மருந்து-மாத்திரைகள் மூலம் சரிப்படுத்த டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு இன்னும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் அதன் முடிவுகளை வைத்து அறிக்கை தயாரிக்கப்படும். இந்த அறிக்கை விவரங்கள் நாளை வெளியிடப்படும்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து 2,890 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்.
    • இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.

    சென்னை:

    விழுப்புரம் அருகே உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்த 26 வயது வாலிபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.

    உறுப்புகளை தானமாக பெற்ற பிறகு அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இறந்து போன வாலிபரின் தந்தை ஓய்வுபெற்ற அரசு ஊழியர். தாயார் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார்.

    இவர்கள் இறந்து போன மகனின் உடல் உறுப்புகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தானமாக வழங்கி இருக்கிறார்கள். இதயம், கல்லீரல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், சிறுநீரகம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்விழி திரைகள் எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கைந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளார்கள்.

    உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து 55 நாட்கள் ஆகிறது. இந்த குறுகிய கால கட்டத்தில் 26 பேர் உடல் உறுப்பு தானம் செய்து இருக்கிறார்கள். அதே போல் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து 2,890 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்.

    தற்போது 7007 பேர் உறுப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் 8 பேருக்கு இதயம், 68 பேருக்கு நுரையீரல், 25 பேருக்கு இவை இரண்டும் தேவைப்படுகிறது. 6,729 பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது. 42 பேருக்கு சிறுநீரகம், கல்லீரல் இரண்டும் தேவைப்படுகிறது. இதயமும், கல்லீரலும் ஒருவருக்கு தேவைப்படுகிறது.

    இறந்த பிறகு அரசு மரியாதை என்ற அங்கீகாரம் வழங்கப்படுவதால் பலர் மனமுவந்து உறுப்புகளை தானம் செய்து வருகிறார்கள். இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பயணிகள் நிழற்குடைகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசுகிறார்.
    • விழாவில் தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி., ஜே. எம். எச். அசன் மவுலானா எம். எல். ஏ., மேயர் பிரியா, துணை மேயர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி 13-வது மண்டலம் 177 - வது வார்டுக்குட்பட்ட வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் உள்ள பெத்தேல் அவென்யூவில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளத்தை திறந்து வைக்கிறார்.

    மேலும் 177-வது வார்டு கவுன்சிலர் பெ. மணிமாறனின் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பயணிகள் நிழற்குடைகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசுகிறார். விழாவில் தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி., ஜே. எம். எச். அசன் மவுலானா எம். எல். ஏ., மேயர் பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், 13-வது மண்டல குழு தலைவர் இரா. துரைராஜ், 177-வது வட்ட தி.மு.க. பொருளாளர் வழக்கறிஞர் சி.வி. இளங்கோவன், வட்ட செயலாளர்கள் மதிவாணன், சக்திவேல் மற்றும் மீசை கே.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • வருகிற 15-ந்தேதி புதுக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல் மருத்துவ கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறக்கிறார்.
    • தமிழகம் முழுவதும் 708 நலவாழ்வு மையங்கள் தொடங்க திட்டமிட்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த வருகிற டிசம்பர் மாதம் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். நாளை தீபாவளி என்பதால் 3-வது மருத்துவ முகாம் இன்று நடத்தப்பட்டது.

    அமைந்தகரையில் நடத்தப்பட்ட முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மருத்துவ கட்டமைப்புகள் எல்லா நிலைகளிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    வருகிற 15-ந்தேதி புதுக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல் மருத்துவ கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறக்கிறார்.

    தமிழகம் முழுவதும் 708 நலவாழ்வு மையங்கள் தொடங்க திட்டமிட்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 208-ல் 152 நலவாழ்வு மையங்கள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன.

    இதில் சென்னை ஷெனாய் நகர், ஆலந்தூரில் 2 புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையும் தலா ரூ.13 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் ஒவ்வொன்றும் 5 மாடிகள் மற்றும் 100 படுக்கை வசதி கொண்டவை.

    இது தவிர நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பி.கே.கார்டன், பி.ஆர்.என். கார்டன், சி.எஸ்.நகர், வெங்கடாபுரம், சேத்துபட்டு, முத்தையா முதலி தெரு, திருவான்மியூர் ஆகிய இடங்களில் அமைக்கப்படுகிறது.

    இன்னும் 2 மாதத்தில் இந்த பணிகள் நிறைவடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதை தொடர்ந்து ஷெனாய் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டிடத்தை மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முதல்முறையாக தமிழக அரசு நிறுவனமான டேம் கால் இந்த ஆண்டு தீபாவளி லேகியத்தை தயாரித்துள்ளது.
    • நமது பாரம்பரிய மருத்துவ முறைகளால் எந்த பக்க விளைவுகளும் கொடுக்காத முறையில் தீபாவளி லேகியத்தை நிறுவனம் தயாரித்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு மற்றும் கார வகைகளை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் இது தவிர அதிகமாக சாப்பிடுவது போன்ற பிரச்சினைகளால் வயிற்று கோளாறுகள் உருவாகும்.

    கடைகளில் தீபாவளி லேகியம் விற்கப்படும் முதல்முறையாக தமிழக அரசு நிறுவனமான டேம் கால் இந்த ஆண்டு தீபாவளி லேகியத்தை தயாரித்துள்ளது.

    இந்த லேகியத்தை ஆயுர்வேத தினத்தை ஒட்டி இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நமது பாரம்பரிய மருத்துவ முறைகளால் இந்த பக்க விளைவுகளும் கொடுக்காத முறையில் தீபாவளி லேகியத்தை நிறுவனம் தயாரித்துள்ளது.

    பொதுமக்கள் இதை வாங்கி பயன்படுத்தலாம் தமிழகம் முழுவதும் டைம் கால் விற்பனை கடைகளில் இன்று முதல் கிடைக்கும் என்றார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் கஹந்தி சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும்.
    • கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிறப்பு வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

    பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும். எதிர்பாராத தீ விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பதற்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பட்டாசு விபத்தில் தீக்காயம் பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 83 பேர். 2020-ல் மட்டும் ஒருவர் இறந்தார்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் ஆகிய 95 ஆஸ்பத்திரிகளில் தீபாவளிக்காக சிறப்பு தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேவையான மருந்துகள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    • சென்னையில் ஒரு மண்டலத்துக்கு 3 என்ற வீதத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • பெரும்பாலான முகாம்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் மழைக்கால நோய்களும் பரவி வருகின்றன. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது.

    சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் இந்த மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள், வைரஸ் காய்ச்சல், சேற்றுப் புண், தொண்டை வலி ஆகியவை வருவது வழக்கம்.

    தற்போது இந்த நோய் பரவல்கள் உள்ளது. வருமுன் காக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க பொது சுகாதாரத் துறை நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துகிறது.

    இன்று முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை 10 ஞாயிற்றுக் கிழமைகளில் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    சென்னையில் ஒரு மண்டலத்துக்கு 3 என்ற வீதத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடக்கிறது.

    மழைக்கால நோய்களுக்கு தேவையான அனைத்து விதமான மருந்துகளும் முகாம்களில் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

    காலை 9 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை வரை நடக்கிறது. பெரும்பாலான முகாம்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 38 மாவட்டங்களிலும் நடைபாதைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
    • ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் நடந்து செல்பவர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை:

    நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகரில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் நடைபாதையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் டெங்கு பரவல் உள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

    டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களை கட்டுப்படுத்துவதற்காக வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் டிசம்பர் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பத்து வாரங்கள் வாரம் தோறும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் வீதம் பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் இலவசமாக பரிசோதனை செய்வது முதல் மருந்து மாத்திரைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

    நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் என்பது ஜப்பான் நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கு அரசு சார்பில் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கான நடைபாதை சிறப்பாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்த்தேன்.

    அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர் அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதற்கு உத்தரவிட்டார்.

    அதன்படி 38 மாவட்டங்களிலும் எட்டு கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நடைபாதைகள் குண்டு குழிகள் இல்லாமல் ஏற்ற இறக்கங்களும் சமம் செய்யப்பட்டு நடப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் நடந்து செல்பவர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கைகள் அருகில் அது அமர்வதற்கான இடம் என்பதை குறிக்கும் வகையில் அழகிய சிலை ஒன்றும் அமைக்கப்படும்.

    நடைபாதையில் இரு பக்கமும் பசுமையான மரங்கள் இடம்பெறுகிறது. நடந்து செல்பவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளையும் அழைத்து செல்லலாம் . அதை நினைவுபடுத்தும் வகையில் செல்ல பிராணியுடன் நடந்து செல்வது போன்ற காட்சியும் இடம்பெறும்.

    ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திலும் கிலோமீட்டரை குறிக்கும் அறிவிப்பு பலகை மற்றும் நடந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறுகிறது. எட்டு கிலோமீட்டர் தூரம் என்று அமைப்பதற்கு காரணம் எட்டு கிலோமீட்டர் தினமும் நடந்தால் 10 ஆயிரம் அடிகள் நடப்பதாகும். இது உடலுக்கு சிறந்த பயிற்சியை தரும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும்.

    38 மாவட்டங்களிலும் இந்த நடைபாதைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள எட்டு கிலோமீட்டர் நடை பாதையில் சிறிது தூரம் நடந்து சென்று கடற்கரையில் அமைக்கப்படும் மேடையில் இருந்தபடி ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நடைபாதைகளையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மற்றும் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.

    பெசன்ட் நகரில் நடிகர், நடிகைகள், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். பெசன்ட் நகரில் நடந்து செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்தப் பாதையில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய ஒதுக்கீடு வீணாவதை தடுக்கும் வகையில் மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும்

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு என 15 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தப் 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு பொருத்தவரை 6 இடங்கள் காலியாக இருந்து அது வீணானது.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடத்தை நிரப்ப வேண்டும் என தேசிய மருத்துவ துறை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு வீணாவதை தடுக்கும் வகையில் மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    மேலும், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத இட ஒதுக்கீடுகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    • விடுப்பு எடுக்கும் மருத்துவர்களுக்கு பதிலாக புதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி மற்றும் புதிய ஸ்கேன் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பதாகவும், டிஜிட்டல் எக்ஸ்ரே, ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொடுமுடி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் மற்றும் 1 பல் மருத்துவர்கள் பணியில் இருப்பதாகவும் அடிக்கடி விடுப்பு எடுப்பதாகவும் கூறுவது தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடன் பேசி விடுப்பு எடுக்கும் மருத்துவர்களுக்கு பதிலாக புதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோல், புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி மற்றும் புதிய ஸ்கேன் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

    • பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    • மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும்.

    சென்னை:

    அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1-ந்தேதி முதல் (நாளை) ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.

    குறிப்பாக, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இந்த காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.

    காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக டெங்கு பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவுவிட்டுள்ளது.

    அதன்படி, டெங்கு பாதிப்பை கண்காணிக்க 2 இணை இயக்குனர்களும், 7 கூடுதல் இயக்குனர்கள் என மொத்தம் 9 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 45 சுகாதார மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிக்கும் 4 முதல் 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ×