என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilpauk govt hospital"

    • இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
    • இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில்

    ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.

    பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசில், உயிரை பறிக்கும் களமாகவும், கஞ்சா செடி வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது.

    சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல பொய்யான அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.

    பேருந்து நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனைகள் என கொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொலைக்களமாகவும், ரவுடிகளின் தலைமையிடமாகவும் தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு.

    தமிழக காவல்துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க வக்கற்ற பொம்மை முதல்வராலும், தலைமையில்லாமல் சரியானபடி செயல்படாத காவல்துறையாலும் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.

    நான் ஏற்கனவே சொன்னது போல பொம்மை முதலமைச்சரின் கீழ் இயங்கும் விளம்பர அரசையும், காவல்துறையையும் இனியும் நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதால், பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை அவரவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். 

    • தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரவுடி ஆதியை வெட்டிக்கொன்றது தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தலைமறைவான சுசித்ராவின் உறவினர்களாக சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
    • மின் தடையை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் இன்று சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த மின் ஊழியர்கள் மின் தடையை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கட்டுமான பணியின்போது மின் வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    தொடர் மின் தடையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும்.
    • கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிறப்பு வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

    பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும். எதிர்பாராத தீ விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பதற்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பட்டாசு விபத்தில் தீக்காயம் பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 83 பேர். 2020-ல் மட்டும் ஒருவர் இறந்தார்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் ஆகிய 95 ஆஸ்பத்திரிகளில் தீபாவளிக்காக சிறப்பு தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேவையான மருந்துகள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    • இறந்து பிறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழில் மசூத் என்பவரின் மனைவி சோனியா என்பவருக்கு கடந்த 5-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மிச்சாங் புயலால் தேங்கிய மழைநீரில் ஆம்புலன்ஸ் வராததாலும், உரிய மருத்துவ உதவி கிடைக்காததாலும் சௌமியாவுக்கு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.

    இதையடுத்து சோனியாவுக்கு சிகிச்சை அளிக்க அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அங்கு கருவிகளும், மருத்துவர்களும் இருந்தும் மின்சாரம் இல்லாததால் சோனியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸ் கிடைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து இறந்து பிறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், திரும்ப பெற முயன்ற மசூத்திடம் ஊழியர்கள் குழந்தையின் உடலில் உரிய முறையில் துணி சுற்றாமல் அட்டை பெட்டியில் வைத்து வழங்கியதாகவும், ரூ.2,500 லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் தொடர்பாக பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 3பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இளம் பருவத்திலேயே பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து இருப்பதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் திருமண வயதை எட்டும் முன்னரே தவறான பழக்க வழக்கத்தால் இளம்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரியவந்தது.

    இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் 8742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் பேரில் போக்சோ சட்டமும் பாய்ந்துள்ளது.

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இளம் பருவத்தில் பெண்கள் கர்ப்பமாவது அதிகரித்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3429 பெண்கள் இளம் பருவத்திலேயே கர்ப்பம் ஆகி உள்ளனர்.

    இதன் மூலம் இந்த வேதனை பட்டியலில் தர்மபுரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர் மாவட்டத்தில் 1057 இளம்பெண்களும், வேலூரில் 921 பேரும் கர்ப்பம் தரித்துள்ளனர்.

    சிவகங்கையில் 439 பேர், திருச்சியில் 349 பெண்கள், நெல்லையில் 347 பேர், மதுரையில் 260 பேர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

    தூத்துக்குடியில் 162 பெண்களும், தேனியில் 104 பேரும், திருவள்ளூரில் 79 பேரும், கன்னியாகுமரியில் 73 பெண்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் 3 ஆண்டில் 72 பெண்களும், தஞ்சாவூரில் 70 பெண்களும், புதுக்கோட்டையில் 33 பெண்களும் இளம் வயதிலேயே கர்ப்பமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.



    சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தகவல் மூலமாக 905 இளம்பெண்கள் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்திருப்பது போல கஸ்தூரிபா ஆஸ்பத்திரி அளித்த தகவலில் 230 பேரும், தாய்-சேய் மருத்துவமனை தகவலில் 92 பேரும் கர்ப்பம் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் சென்னையில் 3 ஆண்டில் அறியா பருவத்தில் கர்ப்பமான இளம்பெண்களின் எண்ணிக்கை 1317 ஆக உள்ளது. இதன்மூலம் இந்த பாதிப்புகள் பட்டியலில் தர்மபுரிக்கு அடுத்து 2-வது இடத்தில் சென்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையும் மீறி வாலிபர்களுடன் பழகி கர்ப்பமாகும் இளம்பெண்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இப்படி அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் இதுபோன்ற இளம் வயது கர்ப்பங்களை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • புதிய மருத்துவமனைக் கட்டிடம் மொத்தம் 88,039 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 239 படுக்கை வசதிகளுடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது.
    • மூன்றாம் தளம் உள்நோயாளிகள் பிரிவு, புலன் உணர்வு அறை, அடிமைத்தன்மை மீட்பு ஆலோசனை அறை, போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவதற்கான நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய மனநல மற்றும் நரம்பியல் நிலையத்திற்கான ஒப்புயர்வு மையக் கட்டிடம் ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார்.

    அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30.3.2023 அன்று ரூபாய் 35 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக 24.8.2023 அன்று இக்கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    புதிய மருத்துவமனைக் கட்டிடம் மொத்தம் 88,039 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 239 படுக்கை வசதிகளுடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது. தரைத்தளத்தில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, மனநலப் புறநோயாளிகள் பிரிவு நரம்பியல் புறநோயாளிகள் பிரிவு; முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் மூப்பியல் பிரிவு, நரம்பியல் புற நோயாளிகள் பிரிவு, அறிவாற்றல் பழகுமுறை மற்றும் குழந்தைகள் ஆலோசனை அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

    மூன்றாம் தளம் உள்நோயாளிகள் பிரிவு, புலன் உணர்வு அறை, அடிமைத்தன்மை மீட்பு ஆலோசனை அறை, போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    4-ம் மற்றும் 5-ம் தளங்கள் நரம்பியல் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 6-ம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள் போன்ற வசதிகளும் இடம்பெறும்.

    இக்கட்டிடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொதுக் கழிப்பிடம், இரண்டு மின் தூக்கிகள், இரண்டு படிக்கட்டுகள், சாய்வு தளம், மருத்துவ-திரவ ஆக்சிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை மேம்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பொதுப்பணித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 4,821 கோடியே 55 லட்சம் ரூபாய்ச் செலவில் 941 மருத்துவ துறைச் சார்ந்த புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் மருத்துவத் துறையில் மேலும் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டிஜிட்டல் மெமோகிராம் நவீன மருத்துவ கருவி மூலம் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #KilpaukGovtHospital
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிஜிட்டல் மெமோகிராம் நவீன மருத்துவ கருவி பொருத்தப்பட்டன.

    பெண்களுக்கு மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் இந்த மருத்துவ கருவி 3-டி தொழில்நுட்பம் கொண்டது. ஜூன் மாதம் முதல் தற்போது வரை நவீன கருவி மூலம் 1868 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

    இதில் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் வசந்தாமணி கூறியதாவது:-

    சராசரியாக மாதம் 10 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது. ஜூன் மாதம் முதல் தற்போது வரை நவீன கருவி மூலம் பரிசோதனை செய்ததில் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    மேலும் 66 பேருக்கு மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது. பரிசோதனையில் மார்பக புற்றுநோய் இல்லை என்றால் 15 நிமிடத்தில் பரிசோதனை முடிவு கிடைத்துவிடும். ஒருவேளை புற்றுநோய் இருந்தால் அதை உறுதி செய்ய 1 அல்லது 2 நாட்கள் ஆகும்.

    மேலும் ஆஸ்பத்திரியில் மார்பக புற்று நோய் கிளினிக்கும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வசதிகள் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே மார்பக புற்றுநோய் கண்டு பிடிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மெமோகிராம் நவீன மருத்துவ கருவி மூலம் 4 மி.மீ. அளவில் உள்ள புற்றுநோய் சிதைவைக்கூட துல்லியமாக கண்டறிய முடியும். அதன்மூலம் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் சிதைவை அப்புறப்படுத்த முடியும். #KilpaukGovtHospital
    ×