search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இளம் பருவத்திலேயே பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து இருப்பதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் திருமண வயதை எட்டும் முன்னரே தவறான பழக்க வழக்கத்தால் இளம்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரியவந்தது.

    இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் 8742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் பேரில் போக்சோ சட்டமும் பாய்ந்துள்ளது.

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இளம் பருவத்தில் பெண்கள் கர்ப்பமாவது அதிகரித்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3429 பெண்கள் இளம் பருவத்திலேயே கர்ப்பம் ஆகி உள்ளனர்.

    இதன் மூலம் இந்த வேதனை பட்டியலில் தர்மபுரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர் மாவட்டத்தில் 1057 இளம்பெண்களும், வேலூரில் 921 பேரும் கர்ப்பம் தரித்துள்ளனர்.

    சிவகங்கையில் 439 பேர், திருச்சியில் 349 பெண்கள், நெல்லையில் 347 பேர், மதுரையில் 260 பேர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

    தூத்துக்குடியில் 162 பெண்களும், தேனியில் 104 பேரும், திருவள்ளூரில் 79 பேரும், கன்னியாகுமரியில் 73 பெண்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் 3 ஆண்டில் 72 பெண்களும், தஞ்சாவூரில் 70 பெண்களும், புதுக்கோட்டையில் 33 பெண்களும் இளம் வயதிலேயே கர்ப்பமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.



    சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தகவல் மூலமாக 905 இளம்பெண்கள் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்திருப்பது போல கஸ்தூரிபா ஆஸ்பத்திரி அளித்த தகவலில் 230 பேரும், தாய்-சேய் மருத்துவமனை தகவலில் 92 பேரும் கர்ப்பம் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் சென்னையில் 3 ஆண்டில் அறியா பருவத்தில் கர்ப்பமான இளம்பெண்களின் எண்ணிக்கை 1317 ஆக உள்ளது. இதன்மூலம் இந்த பாதிப்புகள் பட்டியலில் தர்மபுரிக்கு அடுத்து 2-வது இடத்தில் சென்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையும் மீறி வாலிபர்களுடன் பழகி கர்ப்பமாகும் இளம்பெண்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இப்படி அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் இதுபோன்ற இளம் வயது கர்ப்பங்களை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இறந்து பிறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழில் மசூத் என்பவரின் மனைவி சோனியா என்பவருக்கு கடந்த 5-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மிச்சாங் புயலால் தேங்கிய மழைநீரில் ஆம்புலன்ஸ் வராததாலும், உரிய மருத்துவ உதவி கிடைக்காததாலும் சௌமியாவுக்கு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.

    இதையடுத்து சோனியாவுக்கு சிகிச்சை அளிக்க அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அங்கு கருவிகளும், மருத்துவர்களும் இருந்தும் மின்சாரம் இல்லாததால் சோனியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸ் கிடைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து இறந்து பிறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், திரும்ப பெற முயன்ற மசூத்திடம் ஊழியர்கள் குழந்தையின் உடலில் உரிய முறையில் துணி சுற்றாமல் அட்டை பெட்டியில் வைத்து வழங்கியதாகவும், ரூ.2,500 லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் தொடர்பாக பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 3பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும்.
    • கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிறப்பு வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

    பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும். எதிர்பாராத தீ விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பதற்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பட்டாசு விபத்தில் தீக்காயம் பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 83 பேர். 2020-ல் மட்டும் ஒருவர் இறந்தார்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் ஆகிய 95 ஆஸ்பத்திரிகளில் தீபாவளிக்காக சிறப்பு தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேவையான மருந்துகள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    • மருத்துவ உலகில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிக்கேற்ப புதிய மருத்துவ உபகரணங்கள் புகுத்தப்படுகின்றன.
    • மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் கூட்டத்தை சமாளிக்க இடநெருக்கடி ஏற்படுவதால் புதிய கட்டிடம் அவசியமாக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் சிறப்பு பிரிவு கள் அதிநவீன தொழில் நுட்ப மாற்றத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது. மருத்துவ உலகில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிக்கேற்ப புதிய மருத்துவ உபகரணங்கள் புகுத்தப்படுகின்றன.

    அந்த வகையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 63 ஆண்டு கால கீழ்பாக்கம் மருத்துவமனையில் 6 அடுக்கு கோபுர கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது.

    ஏற்கனவே உள்ள பழைய கட்டிடத்தில் இட நெருக்கடி மற்றும் படுக்கை வசதிகள் போதுமான அளவு இல்லாததால் புதிய கட்டிடத்தில் 450 படுக்கைகளுடன் நவீன மருத்துவ வசதிகளுடன் தரம் உயர்த்தப்படுகிறது.

    இந்த 6 அடுக்குமாடி கோபுர கட்டிடம் ரூ.358.87 கோடி செலவில் 24,973 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டு முகமையின் உதவியுடன் தமிழ்நாடு சுகாதார திட்டம் மூலம் மருத்துவ வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

    பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சிறுநீரகம், நரம்பியல், இருதயவியல், அறுவை அரங்குகள், அவசர சிகிச்சை வார்டு மற்றும் விஷ மருந்து சிகிச்சை பிரிவுகள், புதிய கோபுர கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

    இந்த மருத்துவ பிரிவுகள் செயல்படுவதற்கு பழைய கட்டிடம் தகுதி இல்லை என்று பொதுப் பணித்துறை அறிவித்ததன் அடிப்படையில் புதிய அடுக்குமாடி மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் கூட்டத்தை சமாளிக்க இடநெருக்கடி ஏற்படுவதால் புதிய கட்டிடம் அவசியமாக உள்ளது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்டத்தை கையாள்வதில் சிரமம் ஏற்படுவதால் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் சிறப்பு மருத்துவனை போன்று நரம்பியல் துறை, இருதய துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ கட்டிடத்தின் மூலம் நோயாளிகளுக்கு கூடுதலான வசதிகளை வழங்க முடியும் என்று டீன் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்தார்.

    • முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • சாமானிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மருத்துவ உதவியாகும்.

    சென்னை:

    மண்டையை உடைத்து விடுவேன் என்று சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால் ஒரு மனிதனின் மண்டை ஓடு என்பது பாதுகாப்பு பெட்டகம் போன்றது. மூளை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை மண்டை ஓடுதான் பாதுகாக்கிறது.

    இந்த மண்டை ஓடு உடைந்தால் ஆபத்து. விபத்து, தலையில் அடிபடுதல் போன்றவற்றால் சில நேரங்களில் மண்டை ஓடு உடைவதுண்டு. அவ்வாறு மண்டை ஓடு உடைந்து தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடும்.

    இந்த மாதிரி மண்டை ஓட்டு சிகிச்சைக்கு ஆபரேசன் செய்து 'பீக்' எனப்படும் பிளாஸ்டிக்கை அதிக வெப்ப நிலையில் உருக்கி தயாரிக்கப்படும் ஒரு விதமான மெட்டீரியலை பொருத்தி வந்தனர். இது இலகுவாக இருப்பதால் அந்த இடத்தில் தெரியாமல் ஏதாவது அடிபட்டால் உள்ளே அமுங்கிவிடும்.

    இந்நிலையில் அதற்கு பதிலாக 'டைட்டானியம்' உலோகத்தால் புதிய மெட்டீரியல் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது. இதை பொருத்த சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. அதிலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.

    இந்நிலையில் முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    கொளத்தூரை சேர்த்த செல்வமணி, பாடியை சேர்ந்த ரவி, கோயம்பேட்டை சேர்ந்த கிஷோர் ஆகியோர் தனித்தனி விபத்துகளில் சிக்கி மண்டை உடைந்தவர்கள். இவர்களுக்கு டைட்டானியம் உலோகத்திலான மண்டை ஓடு பொருத்தப்பட்டுள்ளது.

    இதுபற்றி மருத்துவமனை டீன் நாராயணசாமி கூறியதாவது:-

    இந்த நவீன சிகிச்சை முறை செலவு அதிகம். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரது சீரிய முயற்சியால் இந்த சிகிச்சை அரசு ஆஸ்பத்திரியிலும் சாத்தியமாகி உள்ளது.

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையும் செய்யப்படுகிறது. இந்த மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சையை அளித்த டாக்டர்கள் கோடீஸ்வரன், சந்திரசேகர் ஆகியோர், இது சாமானிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மருத்துவ உதவியாகும்' என்றனர்.

    • செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் நாராயணசாமி சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியின் டீனாக நியமிக்கப்படுகிறார்.

    சென்னை:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் நாராயணசாமி சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, ஓமந்தூரார் ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி பணி ஓய்வு பெறுவதால் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் அரசி ஸ்ரீவத்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியின் டீனாக நியமிக்கப்படுகிறார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியின் டீனாக நியமிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×