search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Judge"

    • மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    • சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் நடந்து வருகிறது.

    நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' சிபாரிசு செய்வதற்கு ஒப்புதல் அளிக்காமல், மத்திய அரசு தாமதம் செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு குற்றம் சாட்டி வந்தது. கொலீஜியம் முறைக்கு எதிராக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையே, கடந்த டிசம்பர் 13-ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் சிபாரிசு செய்தது. ஆனால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்தது.

    கடந்த வாரம் ஒரு வழக்கு விசாரணையின்போது, இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். உடனே அட்டார்னி ஜெனரல், அந்த நியமனத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    அதையடுத்து, கடந்த 4-ந்தேதி, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, 5 நீதிபதிகள் நியமனத்தை அறிவித்தார்.

    ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.வி. சஞ்சய் குமார், பாட்னா ஐகோர்ட்டு நீதிபதி அசானுதீன் அமானதுல்லா, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 5 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் புதிய நீதிபதிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    இத்துடன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆகும்.

    மீதியுள்ள 2 இடங்களுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த குமார் ஆகியோரை நியமிக்க கொலீஜியம் கடந்த மாதம் 31-ந்தேதி சிபாரிசு செய்தது. அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    • சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
    • சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 17-ந் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.

    இவர்களில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வக்கீல்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

    இவர்களில் வக்கீல்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

    • ஆத்திரம் அடைந்த மைதீன் அப்துல்காதர் ஜெய்லானியை கத்தியால் குத்தினார்.
    • கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் ஜெய்லானி (வயது 33). இவர் கடந்த 14-6-2015-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் நண்பரான யாசர்அராபத் ஆகியோருடன் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது டி.வி.யை அதிக அளவு சத்தம் வைத்து பார்த்தாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த மைதீன் என்ற முகமது மைதீன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மைதீன் கத்தியால் அப்துல்காதர் ஜெய்லானியை சராமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 17-6-2015-ம் ஆண்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    கொலை வழக்கில் கைதான மைதீனுக்கு 15 ஆண்டுகள் 1 மாதம் சிறைதண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.

    • மன் பிரீத் மோனிகா சிங், கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார்.
    • முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ்க வுண்டி சிவில் கோர்ட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இன பெண் நீதிபதியாக பதவி ஏற்று உள்ளார்.

    அவரது பெயர் மன் பிரீத் மோனிகா சிங். இவர் கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார். அவர் ஏராளமான வழக்குகளில் வாதாடி உள்ளார். ஹாஸ்டன் நகரில் பிறந்த மன்பிரீத் மோனிகா சிங் தற்போது பெல்லாரில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    அமெரிக்காவில் சீக்கிய பெண் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். சீக்கிய மக்களுக்கு இது பெருமையை தரும் என அவர் கூறினார்.

    • 15 வருடங்கள் வக்கீலாக பணியாற்றினார்.
    • 2-வது முறையாக நீதிபதியாகி இருக்கிறார்.

    திருவனந்தபுரம் :

    அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள்.

    அவர்களில் ஒருவர், ஜூலி ஏ. மேத்யூ. இவர் கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த மலையாளப்பெண் ஆவார்.

    கேரளாவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கிராம பள்ளிக்கூடத்தில் படித்து வந்த இவர் இன்றைக்கு நீதிபதியாக உயர்ந்திருப்பது சுவாரசியமானது.

    இவரது தந்தை அங்கே தொழில் அதிபர். அவர் சில வழக்குகளை எதிர்கொண்டபோதுதான், இந்த பெண்ணுக்கு முதன்முதலாக சட்டம் படிக்கும் ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது.

    பிலடெல்பியா மாகாணத்தில வளர்ந்த அவர் பென் மாகாண பல்கலைக்கழகத்திலும், டெலவாரே சட்ட கல்லூரியிலும் படித்து வக்கீல் ஆனார். 15 வருடங்கள் வக்கீலாக பணியாற்றினார். 4 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிபதி ஆனார். இதன்மூலம் அங்கு முதல் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி என்ற பெயரைப் பெற்றார்.

    இப்போது தொடர்ந்து 2-வது முறையாக அவர் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் பென்ட் கவுண்டியில் நீதிபதியாகி இருக்கிறார். இந்த பதவிக்காக நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய இவர், குடியரசு கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ டார்ன்பர்க்கை வீழ்த்தி வெற்றி கண்டிருக்கிறார்.

    இதன் மூலம் அங்கு இன்னும் 4 ஆண்டுகள் நீதிபதி பதவி வகிப்பார்.

    கேரளாவில் தனது கணவரின் சொந்த கிராம வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியாக போர்ட் பென்ட் கவுண்டி நீதிபதியாக அவர் பதவி ஏற்றார்.

    இதுபற்றி அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:-

    இந்த முறை நான் என் கணவர் வீட்டில் வைத்து பதவி ஏற்கத்தான் விரும்பினேன். இல்லாவிட்டால் இந்த நிகழ்வில் என் கணவர் குடும்பத்தார் பங்கேற்க முடியாமல் போய் இருக்கும். இந்த பதவி ஏற்பு விழாவில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இதுதான் எனது சிறந்த வேலை. அந்த வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன்.

    என் கணவர், பெற்றோர் அனைவரும் எனக்கு மகத்தான ஆதரவு தந்து தூண்களாக திகழ்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதே நேரத்தில் இந்த விழாவில் அவரது பெற்றோரும், மூத்த மகளும் அமெரிக்காவில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.

    இவரது கணவர் அமெரிக்காவில் தொழில் அதிபராக உள்ளார்.

    • ஓய்வுபெறும் வயது ஒரு அடுக்கு விளைவை ஏற்படுத்தக்கூடும்.
    • நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும்.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது.

    இதில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு கடந்த 2010-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் விடப்பட்டது.

    ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை என மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட நீதித்துறை செயல்முறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித்துறை, பணியாளர் நலன், நீதித்துறை சார்ந்த பாராளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பித்து உள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்து நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதுடன் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.

    அதேநேரம் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, செயல்படாத மற்றும் குறைவாகச் செயல்படும் நீதிபதிகள் பணியில் தொடர வழிவகுக்கும்.

    ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால், ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைமை அதிகாரிகளாக அல்லது நீதித்துறை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பதை தீர்ப்பாயங்கள் இழக்க நேரிடும். ஓய்வுபெறும் வயது ஒரு அடுக்கு விளைவை ஏற்படுத்தக்கூடும்.

    மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கமிஷன்கள் போன்றவற்றில் இதே கோரிக்கையை எழுப்புவதால், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும். எனவே, இந்தப் பிரச்சினையை முழுமையாக ஆராய வேண்டும்.

    இவ்வாறு நீதித்துறையின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • திருநங்கைகள், திருநம்பிகளை சமமாக நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
    • பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கண்டாங்கிபட்டி ஊராட்சி கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மனித கடத்தில் மற்றும் வணிக ரீதியில் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் நபர்களுக்கான இழப்பீடு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.

    இதில் அவர் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குடும்ப பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கினார். திருநங்கை கள், திருநம்பிகள் ஆகியோர் சமமாக நடத்தப்பட்ட வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினார்.

    இதில் சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் கோதண்டராமன், ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை, தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் பேசினர். இந்த முகாமில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • அரசியலமைப்பு சட்டத்தில் 11 கடமைகள் உள்ளன.
    • நீதித்துறையும், மருத்துவத்துறையும் இணைந்து செயல்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி இணைந்து தேசிய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு மற்றும் 'போக்சோ' சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவ கல்லூரியில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் பங்கேற்று தலைமை வகித்தார். அரசு மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் வரவேற்றார்.

    இதில் மாவட்ட நீதிபதி பேசியதாவது:- தேசிய அரசியலமைப்பு சட்ட நாளன்று மாணவர்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்வளவு உரிமைகள் உள்ளதோ, அதற்கேற்ற கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு சட்டத்தில் 11 கடமைகள் உள்ளன.

    அவற்றில் நான்காவது கடமை என்னவென்றால், தேசத்துக்கு போர், நோய், பஞ்சம் போன்ற அச்சுறுத்தல்கள் வரும் போது மக்கள் ஆகிய நாம், துறை ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    கொரோனா நோய் தொற்று காலத்தில், நாங்ளெல்லாம் நலமுடன் இருக்க, 24 மணி நேரமும் ஓய்வின்றி பணி செய்து தங்கள் கடமைகளை சிறப்பாக செய்த மருத்துவ துறையினருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. நீதிமன்றங்களுக்கு வரும் பல குற்ற வழக்குகளில், மருத்துவ துறையின் பங்களிப்பு இன்றியமையாதது. நீதித்துறையும், மருத்துவத்துறையும் இணைந்து செயல்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் 'போக்சோ' சட்டம் குறித்தும், சட்ட உதவி மையம் குறித்தும் சிறப்புரையாற்றினர்.

    • சிறுவர்களின் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை.
    • பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? காதல் திருமண விவகாரங்களில் சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்கும். சிறுவர்கள் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை. அது குற்றச்செயல் இல்லை.

    மாணவர்கள் தற்போது ஸ்டைலாக முடிவெட்டி கொள்கிறார்கள். அந்த மாணவர்களை பிடிக்கும் நீங்களெல்லாம் அந்த காலத்தில் ரவிசந்திரன், எம்.ஜி.ஆர் போன்று ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டதில்லையா? அந்த காலத்து நடிகர்கள் போல பெல் பாட்டம் பேண்ட் அணிந்ததில்லையா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது
    • இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி வரவேற்றாா்

    திருப்பூர் :

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில்திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூா் தெற்கு காவல் துறை சாா்பில் சட்ட விழிப்புணா்வு, இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு)

    எழிலி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-

    மாணவிகள் அடிப்படை சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாணவிகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்ய மற்றவா்கள் கட்டாயப்படுத்துவதுகூட குற்றம் என்று பகடிவதை சட்டம் சொல்கிறது. மாணவ, மாணவிகள் செல்போன்களையும், இணையதளங்களையும் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.

    • ஓய்வுபெற்ற நீதிபதிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவுவிடப்பட்டுள்ளது
    • அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

    அரியலூர்:

    சென்னை மேடவாக்கத்தில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 66). இவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆவார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை ரூ.22.500க்கு வாங்கியுள்ளார். இதற்கிடையில் உபகரணத்தில் சில பகுதிகள் வேலை செய்யவில்லை. இது குறித்து தான் வாங்கிய தனியார் நிறுத்தில் குறையை சரி செய்ய கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் அந்த நிறுவனத்தின் மீது ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், சென்னை தெற்கு மாவடட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:

    குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் விற்பனை செய்யப்பட்ட பின்பு உத்தரவாதம் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ள காலத்தில் பழுது ஏற்படும் போது அதனை நீக்கி தர வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமையாகும். ஆனால் அதனை விற்பனையாளர் செய்ய தவிறிவிட்டார். என்பதை புகார்தாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே புகார் தாரருக்கு குடிநீர் சுத்திகரிப்பான உபகரணத்தை மாற்றி புதிய உபகரணத்தை வழங்க வேண்டும் அல்லது அவர் செலுத்திய ரூ.22.500-ஐ 13.10.2015 ஆம் தேதியிலிருந்து ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு புகார்தாரருக்கு யுரேகா போர்ப்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

    சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு புகார்தாரருக்கு நிறுவனத்தினர் ரூ 50,000 இழப்பீடு வழங்க வேண்டும். இதனை 4 வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
    • பல்லடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் பல்லடம் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த வாகன பேரணியை பல்லடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இருசக்கர வாகன பேரணி பல்லடம் நீதிமன்றத்தின் முன்பு துவங்கி கடைவீதி, கோவை- திருச்சி மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளின் வழியாக நடைபெற்றது. இந்த வாகன பேரணியின் போது ரோட்டில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடம் நீதிபதி சித்ரா, துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார்.இதில் நீதிமன்ற ஊழியர்கள்,வழக்கறிஞர்கள்,போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×