search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "income tax"

    • தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.

    சிவா டெக்ஸ்டைல்ஸ்

    இந்நிலையில் இந்த நிறுவனங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கடை அடைக்கப்பட்டதால் ஜவுளிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியோடு நிறைவடைகிறது.
    • சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    சென்னை :

    வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியோடு நிறைவடைகிறது. இந்த கால கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.

    இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது.
    • இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    கொழும்பு :

    இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தனிநபர் மற்றும் கார்பரேட்டுக்கான வருமான வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்தவகையில் மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.12 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தாலே வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    ஆனால் இந்த வரி உயர்வு நடவடிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியாயப்படுத்தி உள்ளார். நாட்டின் உயர்ந்த நன்மைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    இலங்கையின் முதன்மை பட்ஜெட்டில் உபரி வருவாய் தேவை என சர்வதேச நிதியம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இலங்கையின் வருவாயையும் 8.5 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீத ஜி.டி.பி.யாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    நாட்டின் பெரும்பான்மையான வரி வருவாய் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உள்பட பெரும்பாலான குடிமக்கள் மறைமுக வரி செலுத்துவதை தவிர வேறு வழியில்லை.

    இலங்கையின் நேரடி வரி வருவாயை 20 சதவீதம் அதிகரிக்குமாறு சர்வதேச நிதியம் கூறியுள்ளது. இல்லையென்றால் சாதாரண மக்களும் வரி செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்து உள்ளது.

    எனவே ரூ.1,00,000-க்கு மேல் சம்பாதிக்கும் நபர்களுக்கு வருமான வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது குடிமக்கள் மத்தியில் ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது.

    ஆனால் இந்த வரி அமைப்பு இல்லாமல், 2026-ம் ஆண்டுக்குள் 14.5 முதல் 15 சதவீதம் ஜி.டி.பி. என்ற விரும்பிய இலக்கை அடைய முடியாது.

    இந்த வரி முறையை அரசு திரும்ப பெற்றால், சர்வதேச நிதியத்தின் உதவி கிடைக்காது. சர்வதேச நிதியத்தின் ஒப்புதல் இல்லாமல், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் நிதி ரீதியாக உதவி வரும் நாடுகளிடம் இருந்தும் உதவி கிடைக்காது. எனவே இந்த வரி உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்ந்தாலோ அல்லது மேலும் மோசமடைந்தாலோ நாட்டின் வணிகத்துறை பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    அதிகரிக்கும் பணவீக்கம், உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றால் நாட்டின் வர்த்தகத்துறையினரின் வருவாய், இலாபம் மற்றும் பணப்புழக்கத்தை வெகுவாக பாதித்து இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    இந்த நிலையில் நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருப்பதாக பிரபல புத்தமத துறவி வரககோடா குணவர்தனே தேரா குற்றம் சாட்டியுள்ளார். நாட்டுக்கான தங்கள் கடமையையும் அவர்கள் புறக்கணித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தேசிய சொத்துகளை பாதுகாப்போம் என்ற வாக்குறுதியின் பேரில் வரும் அனைத்து அரசுகளும் அதற்கு மாறாக சொந்த நலன்களில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறை கூறினார்.

    • அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
    • 5 இடங்களில் வருமான சோதனை நடத்தினர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 47). நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். 20 ஆண்டுகளுக்கு முன் இவரது தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் ரோடு ரோலர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். பணியின் போது அவர் உயிரிழந்ததை தொடர்ந்து வாரிசு அடிப்படையில் பாண்டிதுரை நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் புதுக்கோட்டையில் நெஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணி உயர்வு பெற்றார். அப்போது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சாலையோரம் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை டெண்டர் எடுத்து கொடுத்து வந்தார்.

    பின்னர் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று நெடுஞ்சாலை துறையில் அரசு ஒப்பந்ததாரராக பணி செய்ய தொடங்கினார். ெநடுஞ்சாலை துறையில் சாலையில் பதிக்கக்கூடிய ஒளி பிரதிபலிப்பான், சாலையில் வைக்கக்கூடிய பிரதிபலிப்பு பலகைகள் உள்ளிட்டவைகளை ஒப்பந்தம் எடுத்து வந்தார்.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள இவரது பிரதான அலுவலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் 2 கார்களில் திடீரென வந்து அலுவலகத்தில் இருந்த ஒவ்வொரு அறையையும் சோதனை செய்தனர்.

    மேலும் அவரது அலுவலகத்தின் அருகே உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மச்சுவாடி அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலை, சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை, கீழ 2-ம் வீதியில் உள்ள கட்டிட அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் முழுவதும் சோதனை நடந்தது.

    அதை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் மட்டும் அவரது வீடு, அலுவலகம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

    • வருமான வரி செலுத்துவதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது.
    • வருமானவரி செலுத்துவதில் பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு குடிமக்கள் செலுத்தும் வரிப்பணம் முக்கியமானது. இந்திய சுதந்திரப்போரின் போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவும், சமூகத்தை கட்டமைக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் 1860-ம் ஆண்டு ஜூலை 24-ம் நாள் வருமானவரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2010-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் வருமானவரி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    வருமான வரி கணக்கீடு

    வருமான வரி செலுத்துவதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. இந்திய மக்கள் தொகை யில் 48 சத வீதம் பெண்கள் உள்ளனர். இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெண்களின் பங்கு குறைவாகவே இருந்தது. பெண் தொழில் முனைவோர் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே இதற்குக் காரணம். சமீபகாலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் பொருளாதார ரீதியாக விழிப்புணர்வோடு இருப்பதும், பொருளாதார பலத்தை அதிகரிப்பதும் அவசியமானது.

    வருமானவரி செலுத்துவதில் ஆணும், பெண்ணும் சமம் என்றாலும், பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. வருமானவரியானது சம்பளம், சொத்து, தொழில், மூலதன ஆதாயங்கள், நிலையான வைப்புத் தொகை , சேமிப்புக் கணக்குகளில் இருந்து பெறப்படும் வட்டி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்படுகிறது.

    கல்வி கட்டணம்

    2.5 லட்சம் வரை வருமானம் உள்ள , 60 வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு வரிவிகிதம் இல்லை. பெண்களில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 5 லட்சம் வரை வரிவிகிதம் இல்லை. பெண்கள் தங்கள் வருமானத்திற்கு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெற முடியும். தேசிய சேமிப்பு சான்றிதழ், ஓய்வூதிய திட்டம், பணியாளர் வருங்கால வைப்பு நிதி, ஈக்டிவிட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சே மிப்புத் திட்டங்கள், சுகன்ய சம்ரித்தி யோஜனா முதலியன இதில் அடங்கும். பெண்களின் கல்வி கடனுக்கு செலுத்தப்படும் மொத்த வட்டியில் இருந்து விலக்கு அனுமதிக்கப்படுகிறது.

    உடல்நல காப்பீடு திட்டங்களுக்கு பிரிவு 80D சில வரம்புகளை முன்வைத்து வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கிறது. இதில் மகப்பேறு காப்பீடும் அடங்கும். இதன்மூலம் குறைந்தது ரூ.25,000 முதல் வரிவிலக்கு பெறலாம். காப்பீட்டு வருடாந்திர திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை க்கு ரூ.1,50,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டு விலக்கு அளிக்கப்படுகிறது. உடல் ஊன முற்றோர் மற்றும் மனநல குறைபாடு உடைய பெண்களுக்கான மருத்துவச் சிகிச்சையில் 40 முதல் 80 சத வீதம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.

    வரிசெலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லாத பெண்களும் வருமானவரி படிவம் தாக்கல் செய்யலாம். வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடியேற விரும்பினால், நீங்கள் செலுத்தியுள்ள வருமான வரி தாக்கல் படிவம் உதவும். வீட்டுக் கடன், கார்கடன், மற்றும் இதர கடன்களுக்காக விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே வருமான வரி படிவம் தாக்கல் செய்ததற்கான விபரங்களை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்று பல நேரங்களில் வருமானவரி தாக்கல் விவரங்கள் நமக்கு கை கொடுக்கும்.

    • இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.
    • நிதி மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நாடு முழுவதும் அதிரடி சோதனை

    மும்பை:

    தேர்தல் கமிஷனில் பதிவு செய்தபோதிலும் அங்கீகரிக்கப்படாமல் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.

    இந்த கட்சிகள் நன்கொடை குறித்த விவரங்களை சமர்ப்பித்தல் முகவரி, நிர்வாகிகள் குறித்த விவரங்களை புதுப்பிக்க தவறியது உள்ளிட்ட விதிகளையும், தேர்தல் சட்டங்களையும் மீறியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதில் சில கட்சிகள் தீவிர நிதி மோசடியிலும் ஈடுபட்டன.

    இதைத்தொடர்ந்து நிதி மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நேற்று அதிரடி சோதனை நடத்தியது. குஜராத், டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா, சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 110 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மும்பையில் நடந்த சோதனையில் அங்குள்ள அங்கீகரிக்கப்படாத 2 கட்சிகள் ரூ.150 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்தது.

    சயான் கோலிவாடா குடிசை பகுதியில் உள்ள கட்சியும், போரிவிலியில் உள்ள கட்சி ஒன்றும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.150 கோடி நன்கொடை பெற்றுள்ளன. ஹவாலா மூலம் இந்த பண பரிமாற்றம் நடைபெற்றதும், இதனால் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டறியப்பட்டது.

    அபனா தேஷ் கட்சி 2017-18 மற்றும் 2019-20ல் மொத்தம் ரூ.232 கோடி நன்கொடை பெற்றது. அந்த கட்சியின் முகவரி உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கட்சி தலைவரின் முகவரி குஜராத் மாநிலத்தில் பதிவு ஆகி இருந்தது.

    இப்படி பல கட்சிகள் நன்கொடை விவரம், முகவரியில் குழப்பம் இருப்பது இந்த சோதனையின் போது தெரியவந்தது.

    தேர்தல் கமிஷனில் அளித்த முகவரியில் செயல்படாத 87 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ரத்து செய்து இருந்தது.

    • புகார்தாரர் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸைப் பெற்றுள்ளார் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
    • இந்த வழக்கு குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகாரில் தினக்கூலி செய்யும் ஒருவருக்கு 37.5 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    ககாரியா மாவட்டத்தில் உள்ள மகௌனா கிராமத்தில் வசிக்கும் கிரிஷ் யாதவ். தினக்கூலியான இவர் ஒரு நாளைக்கு சுமார் ரூ.500 சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு ரூ.37.5 லட்சம் வருமான வரி செலுத்துமாறு கிடைத்த நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து, இதுகுறித்து கிரிஷ் யாதவ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார்.

    இந்நிலையில், கிரிஷ் பகிர்ந்துகொண்ட தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், முதல்கட்ட விசாரணையில் இது ஒரு மோசடி வழக்காகத் தெரிவதாகவும் அலவுலி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி புரேந்திர குமார் கூறினார்.

    புகார்தாரர் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸைப் பெற்றுள்ளார் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

    "டெல்லியில் தான் சிறிய வேலைகளைச் செய்து வந்தேன். அதைக் கொண்டு ஒரு முறை பான் கார்டைப் பெற முயற்சித்தேன் என்று கிரிஷ் கூறியுள்ளார்.

    மேலும், அந்த நோட்டீசில், கிரிஷ் ராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலைக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று கிரிஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய வருமானவரி திட்டத்துக்கு மாற விருப்பம்.
    • இந்த திட்டம் மக்களை மேலும் கவரும்.

    புதுடெல்லி :

    வருமானவரி கணக்கு தாக்கலில், சில சேமிப்புகள், மருத்துவ காப்பீடு, கல்வி கட்டணம் போன்றவற்றுக்கு வரிக்கழிவும், வரிவிலக்குகளும் அளிக்கப்படுகின்றன. இதற்கிடையே, 2020-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2020-2021 நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவதில் இருவிதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    ஒன்று, வரிவிலக்கு, வரிக்கழிவுகளுடன் கூடிய பழைய திட்டம். மற்றொன்று, வரிவிலக்கு மற்றும் கழிவுகள் இல்லாமல், வரிவிகிதம் குறைக்கப்பட்ட திட்டம். இந்த இரண்டில் எந்த திட்டத்தையும் வரி செலுத்துவோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    வருமானவரி செலுத்தும் தனிநபர்களுக்கு நிவாரணம் அளிப்பதும், வருமானவரி சட்டத்தை எளிமைப்படுத்துவதுமே இதன் நோக்கம்.

    இதுபோல், கார்ப்பரேட் வரி செலுத்துவோருக்கு கடந்த 2019-ம் ஆண்டு இருவிதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    இந்தநிலையில், வரிவிலக்குகள், கழிவுகள் இல்லாத புதிய வருமானவரி திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் விரைவில் மறுஆய்வு செய்ய உள்ளது. அந்த திட்டத்தை வரி செலுத்தும் தனிநபர்களை மேலும் கவரக்கூடியவகையில் சிறப்பாக மாற்றும் நோக்கத்தில் மறுஆய்வு செய்கிறது.

    புதிய வருமானவரி திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி கேட்டதற்கு மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

    வீட்டு கடன், கல்விக்கடன் ஆகியவற்றை செலுத்தி முடித்தவர்களுக்கு வரிவிலக்கு பெற எதுவும் இருக்காது. அதனால் அவர்கள் புதிய வருமானவரி திட்டத்துக்கு மாற விரும்புகிறார்கள். வரிவிகிதத்தை இன்னும் குறைப்பதன் மூலம், இந்த திட்டம் மக்களை மேலும் கவரும்.

    இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    நாளடைவில், வரிவிலக்கு இல்லாத புதிய வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்குவதும், வரிவிலக்கு, கழிவுகள் கொண்ட பழைய திட்டத்தை ரத்து செய்வதும்தான் மத்திய அரசின் நோக்கம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தயாரிப்பாளர்கள் அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பலரின் வீட்டில் சோதனை நடைப்பெற்றது.

    சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

     

    இந்நிலையில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
    • தயாரிப்பாளர்கல் அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு ஆகியோரை தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

    திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் பிரபல தயாரிப்பார்களான அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு ஆகியோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் லக்‌ஷ்மனன், மன்னார், சத்யஜோதி தியாகராஜன், சீனு உள்ளிட்ட தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
    • குறுந்தகவல் மற்றும் இ-மெயில் வாயிலாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி :

    2021-2022-ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.

    அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம், ஜனவரி, முதல் மார்ச் வரை, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.

    இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு குறுந்தகவல் மற்றும் இ-மெயில் வாயிலாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, வருமான வரி கணக்குளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்தது.

    அதே போல இந்தாண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று தகவல் பரவி வந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்று வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மதுரை ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடு-அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
    • இந்த சோதனையின்போது அலுவலர்கள் யாரும் வெளியே செல்லமுடியாதபடி கதவு பூட்டப்பட்டது.

    மதுரை 

    மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன்கள் அழகர், முருகன், ஜெயகுமார், சரவணக்குமார், செந்தில்குமார் இவர்கள் கிளாட்வே, ஜெயபாரத், அன்னைபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய 4 கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்தவி்ல்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உள்பட 50-க்கும் மேற்பட புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்தன. இதையடுத்து மேற்கண்ட நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    காலை 9 மணி முதல் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அண்ணாநகர், கோச்சடை, சிலைமான், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரியல்எஸ்டேட், கட்டுமான அலுவலகங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் ரியல்எஸ்டேட் உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் மதுரை கோச்சடையை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சரவணபெருமாள், முருகபெருமாள் ஆகியரது வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. மதுரை மாவட்ட கோர்ட்டு எதிரே அமைந்துள்ள இவர்களது நிறுவனத்திலும் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோசுக்குறிச்சி சாலையில் இதன் கிளை நிறுவனம் ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இவர்கள் தற்போது நத்தம்-துவரங்குறிச்சி 4 வழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும், முன்னாள் அரசு ஒப்ப ந்ததாரர் செய்யாத்துரை என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார். அருப்புக்கோட்டை உள்பட பல்வேறு ஊர்களில் செய்யாத்துரைக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் முருகபெருமாள், சரவண பெருமாளுக்கு சொந்தமான நத்தம் கட்டுமான நிறுவனத்தில் இன்று காலை 8 மணிமுதல் மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல துவரங்குறிச்சி அருகில் உள்ள இவர்களுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனத்திலும், ஒட்டன்சத்திரத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த சோதனையின்போது அலுவலர்கள் யாரும் வெளியே செல்லமுடியாதபடி கதவு பூட்டப்பட்டது. அங்குள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ×