search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Impact"

    • 2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.
    • அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, குழந்தைக்கு மயக்க மருந்து எனப்படும் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.

    இந்நிலையில், அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது.
    • கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதுபற்றி டீன் ஏற்கனவே பெற்றோரிடம் விளக்கமாக கூறி இருக்கிறார். தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    டாக்டர்களோ, செவிலியர்களோ குழந்தைகளை காப்பாற்றத்தான் போராடுவார்கள். தவறுதலாக ஊசி போட வாய்ப்பு குறைவு. ஒருவேளை கவனக்குறைவாக இருந்தார்களா என்று விசாரிப்பதற்காக 3 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு விசாரித்து அறிக்கை தரும். கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த கார் திடீரென எடுக்கப்பட்டதால் பேருந்து காரில் மோதுவது போல் சென்று நின்றது.
    • அங்கு நின்று கொண்டிருந்த ஆசாமிகள் சிலர் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு டவுன் பஸ் ஓட்டுனரை அடிக்கச் சென்றதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டார்.

    பரமத்தி வேலூர்:

    கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் கிளையிலிருந்து அரசு டவுன் பஸ் கரூரிலிருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அப்போது பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த கார் திடீரென எடுக்கப்பட்டதால் பேருந்து காரில் மோதுவது போல் சென்று நின்றது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த ஆசாமிகள் சிலர் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு டவுன் பஸ் ஓட்டுனரை அடிக்கச் சென்றதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டார்.

    இதனால் ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் ,கரூர் ,மதுரை, திண்டுக்கல் பகுதியிலிருந்து பரமத்தி வேலூருக்கு வரும் அனைத்து வாகனங்களும் ,நாமக்கல் ,சேலம், பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் அனைத்து வாகனங்களும், ஜேடர்பாளையம் செல்லும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் சமாதானம் செய்து அரசு பேருந்து ஓட்டுநரை பேருந்து எடுத்து காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். அரசு டவுன் பஸ் எடுக்கப்பட்டதால் அனைத்து வாகனங்களும் வரிசையாக சென்றன.

    அரசு டவுன் பஸ்சை நிறுத்திய போதை ஆசாமிகள் போலீசாரிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு டவுன் பஸ் நடு ரோட்டிலேயே நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நெடுகிலும் கார்கள், வேன்கள் தினமும் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் தினமும் நிறுத்தி வைக்கப் படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    எனவே காவல் துறையை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை ஓரத்தில் தினமும் நிறுத்தி வைக்கப்படும் அனைத்து வாகனங் களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் செய்ய வேண்டு மென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமத்துவபுரம் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ஆதித்தனேந்தல் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவ புரம் குடியிருப்பு உள்ளது. இங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    மேற்கண்ட வீடுகள் மராமத்து செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது. எனவே சமத்துவ புரம் வீடுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆதித்த னேந்தல் சமத்துவபுரத்தில் வீடுகளை புனரமைக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படிய அதிகாரிகளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து வீடுகளை பராமரிக்க பாதிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிதி பரா மரிப்பு பணிக்கு போதாது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என சமத்துவ புரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதை கண்டித்தும், கூடுதல் பராமரிப்பு நிதி ஒதுக்க கோரியும் இன்று காலை நரிக்குடி-ராமேசு வரம் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட் டோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் நிதி விவகாரம் ெதாடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • லேசான காற்று மழை பெய்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
    • திருவோணம் அரசு மருத்துவமனை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான காற்று மழை பெய்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.

    பிறகு இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. பிறகு மறுநாள் காலையில் மின்சாரம் இயக்கப்படுகின்றது.

    இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக காரியாவிடுதி, எஸ்.எஸ்.ஊரணிபுரம் பிடரில் இருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் திருவோணம் அரசு மருத்துவமனை பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடியாக சரி செய்யும் படி இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    • வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு ஆகிய கிராமங்களில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5 பேருக்க டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரத்திற்கு உடல்வலியும், கை, கால் மூட்டு வலியும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்து உள்ளனர். மேலும் வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து காய்ச்சல் பரவிய உப்பளம், பரிக்கப்பட்டு கிராமங்களில் சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மீஞ்சூர் வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தலைமையில், 4 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மருத்துவ முகாமிட்டு பரிசோதனை செய்து வருகிறார்கள். அதிக காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு மருந்து அடித்தல், வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றுதல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், தெருக்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த வகையான வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது என்று கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால் கூறியதாவது:-

    பொதுமக்கள் சேமித்து வைக்கின்ற தண்ணீரை மூடி வைக்க வேண்டும். வாரம் இரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்பக்கம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். இதனை சரியாக செய்யாததே அதிகமான வீடுகளில் காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக உள்ளது. காய்ச்சல் பாதித்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தன்னிச்சையாக கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது. பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் கொடுத்தால் சம்பந்தப்பட்ட மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளில் அனைத்து வகை பரிசோதனையும் செய்யப்படும். மேலும் மலேரியா நிபுணர் குழுவும் ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி நேற்று முன்தினம் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தை சேர்ந்த சேகர், பிரேம்நாத், சிவக்குமார், பிரபாகரன், சங்கர் மற்றும் 3 பெண்கள் உள்பட 8 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
    • கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் தமிழக அரசு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்க முன்வரவில்லை என்றார்.

    தொடர்ந்து, வேதாரண்யம் பகுதியில் கடந்த அ.தி.மு.க அரசின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளை குறித்து பட்டியலை படித்து காண்பித்தார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
    • இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தினருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தது.

    கடலூர் :

    கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் சாலை விரிவாக்க பணி, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட அருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.  இதில் வீட்டின் உரிமையாளர்களான சுப்பிரமணி, விமல் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர். மின் கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து இன்று காலை வீடுகள் மீது விழுந்த மரங்கள் அகற்றப்படாமல், அந்த பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சரி செய்யாமலும் இருந்ததால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் கடும் கோபம் அடைந்தனர்.  இதன் காரணமாக அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாலையில் திரண்டனர். அப்போது தகவல் அறிந்த மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் வீடுகள் மீது விழுந்த மரத்தை உடனடியாக அகற்றவும், மின்சார வசதி உடனடியாக தர வேண்டி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீடுகள் மீது விழுந்த மரத்தை அகற்றுவதற்கும், அந்த பகுதி முழுவதும் மின்சாரம் உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு வழங்க நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் ஒன்று வைக்கப்பட்டது.
    • கனமழை காரணமாக கீழ் பாலம் தண்ணீர் தேங்கி இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயிலடி , கான்வென்ட், ராமநாதன் ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையம் வந்து செல்லும் பஸ்களும், அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு , தனியார் அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பயணிக்கின்ற இந்த வழியில் ரெயில்வே கீழ் பாலம் அமைந்துள்ளது.

    ஆனால் மழை பெய்யும் நேரங்களில் இந்த ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் தேங்குகிறது.

    போதிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வடிந்து வெளியே செல்ல வழி இல்லாததால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மழை நேரங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க ஏ.ஐ.டி.யூ.சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    பின்னர் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் வெளிவதற்கு வடிகால்கள் ஓரளவு சரி செய்யப்பட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் ஒன்று வைக்கப்பட்டது.

    ஆனால் நிரந்தரமாக தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    நேற்று மாலை திடீரென பெய்த கன மழை காரணமாக கீழ் பாலம் தண்ணீர் தேங்கி, வெளியேற முடியாமல் நிரம்பியதால் இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் ரெயிலடி, கான்வென்ட், ராமநாதன் வழியாக பழைய பஸ் நிலையத்திலிருந்து , புதிய பஸ் நிலையம் செல்பவர்களும், வருபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

    வருங்காலத்தில் இந்த மாதிரி நிலைமைகளை தவிர்த்திட, மழைக்காலம் வருவதற்கு முன்னர் நிரந்தரமாக ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் வெளியேறுவதற்குரிய பணிகளை விரைவாக செய்து முடித்து தர வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • .கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
    • கடலூர் நகரின் முக்கிய சின்னமாக இருந்து வந்த இரும்பு மேம்பாலத்தை அதிகாரிகள் இடித்து தகர்த்தனர்

    கடலூர்:

    கடலூரின் முக்கிய பாலமாக அண்ணா மேம்பாலம் உள்ளது. இது கடலூர் நகரின் இணைப்பு மேம்பாலமாக இருந்து வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றது.     இங்கு ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் நாளடைவில் அதன் பயன்பாடு முழுவதும் குறைந்து வந்தது. இந்தநிலையில், மாநகராட்சிக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் குழாய், இரும்பு மேம்பாலம் வழியாக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரும்பு பாலத்தை சரியான முறையில் பராமரித்து வராத காரணத்தினால் இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், கடலூர் நகரின் முக்கிய சின்னமாக இருந்து வந்த இரும்பு மேம்பாலத்தை இடித்து தகர்த்தனர்.இந்த பாலத்தின் வழியாக தான் கடலூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ராட்சத குழாய்களும், பாதாள சாக்கடை குழாய்களும் செல்கின்றன. தற்போது புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ராட்சத குடிநீர் குழாய்களையும், பாதாள சாக்கடை குழாய்களையும் வேறு வழியாக மாற்றி அமைக்கும் வகையில் சிறிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பில் ஆற்றின் குறுக்கே மண் பாதை அமைக்கப்பட்டு, அதன் மூலம் பணியாளர்கள் சென்று குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக குழாய் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட பாதை அந்த நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தப் பாதையை விரைந்து சீரமைத்து, குடிநீர் குழாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும்.
    • சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்ப ட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச் சாலை அமைக்கப்ப டுகிறது.

    இதற்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன.

    வடக்கு தெற்க்காக அமையும் இந்த புறவழிச்சாலை காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மழைக் காலங்களில் தண்ணீர் வடிவதற்கு சிரமம் ஏற்படும் என்றும் இதன் காரணமாக மேலமங்க நல்லூர் கழனிவாசல் வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 2000 ஏக்கர் விளை நிலங்கள் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும் என்றும் பல கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் அப்புறப்படுத்தக்கூடிய நிலைமை உருவாகி உள்ளதாகவும் இதனை தவிர்க்க இப்பகுதியில் புறவழிச் சாலையை முழுவதுமாக பாலமாக கட்டி தர வேண்டும் என்றும், சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கோரியும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதற்காக நூற்றுக்கு மேற்பட்ட மனுக்களின் நகல்களை தோரணமாக கட்டி கையில் கருப்புக்கொ டியுடன் கழனிவாசல் வயல்வெளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    தங்களது கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் விவசாயி சம்பந்தம் கூறுகையில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் பயிர்கள் அதிகப்படியாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இதனை அழித்து சாலை அமைப்பதால் பெரும் வரலாற்று பிழை ஏற்படும்.

    இங்கே உள்ள தத்தங்குடி கிராமத்தில் தான் நெல் ஆராய்ச்சி நிலையம் வைக்க முற்பட்டது விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் ஆடுதுறையில் மாற்றியமைக்கப்பட்டனர்.

    எனவே மத்திய மாநில மாவட்ட அரசுகள் இப்பகுதியில் மாற்று அமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும் விவசாயம் அழிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டாம் என அப்பகுதி விவசாயிகளின் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

    ×