search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric train"

    • ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த 19-ந் தேதி தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை-2 மகள்கள் மின்சார ரெயில் மோதி பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் நிலையத்தில் முடிக்கப்படாத சுரங்கநடைபாதை பணி மற்றும் மேம்பாலப்பணியே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் 3 பேர் பலியான இடத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த்துறை மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

    அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் பிரபு சங்கரிடம் கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் குறித்து சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் பிரபு சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகள் முழுமையாக செய்வதற்கு நில எடுப்பு சம்பந்தமான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

     


    மேம்பால பணிகள், ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

    இதேபோல் மாவட்டத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகளை தடுக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். சுரங்கப்பாதை அமைப்பதற்கு தனிநபரிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை பணிகளுக்கு அதற்கான நில உரிமையாளரிடம் கலந்தாலோசித்து வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்கள் செல்வ நம்பி, கணேசன், ரெயில்வே துறை கோட்ட பொறியாளர் ஜம்ஷீர், உதவி கோட்ட பொறியாளர் சரவணன் பவன், திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ் குமார் உடன் இருந்தனர்.

    • பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.
    • மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கநடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடை மேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர். தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்கநடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கிடையே நேற்று மதியம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மனோகரன், அவரது மகள்கள் தாரணி, தேவதர்ஷினி ஆகியோர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது மின்சார ரெயில் மோதி பலியானர்கள். இவர்களில் தாரணி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், தேவதர்ஷினி 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். பல்வேறு எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவிகள் 2 பேரின் வாழ்க்கையும் நொடிப்பொழுதில் முடிந்து போனது.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ.38 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.


    ஆனால் அந்த சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த இடம் தண்ணீர் நிறைந்து குப்பைகளால் சுரங்கப்பாதை இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு உள்ளது. பணிகள் நடைபெற்றதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. ரெயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் சுரங்கநடைபாதை மற்றும் மேம்பாலம் இல்லாததால் வேப்பம்பட்டு ரெயில் நிலைத்தில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? என்பதே பொதுமக்களின் ஆவேசமாக உள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியின் பெரும்பகுதியை கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்துள்ளது.

    ஆனால், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட்டின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன. மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது. இதற்காக 5-க்கும் மேற்பட்ட தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோர்ட்டில் நடைபெற்ற வழக்குகளில் சாதகமான உத்தரவு வந்த பின்னரும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது. இப்படி 10 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரெயில் பயணி தியாகராஜன் கூறியதாவது:-

    வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட்டு நீக்கியும் மேம்பால பணி கிடப்பில் உள்ளது.

    தியாகராஜன்

    தியாகராஜன்

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது மிகவும் சோகமானது. ரெயில் நிலையத்தில் பயணிகளின் தேவையை அறிந்த அதற்கேற்ப வசதிகள் செய்துதர வேண்டும். ரெயில் நிலையத்தில் நடை மேம்பாலம், சுரங்கப்பாதை இல்லை என்று பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் கூறிவருகிறார்கள்.

    ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கையும் ரெயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. இப்போது ஒரே விபத்தில் 3 பேர் தங்களது வாழ்க்கையை இழந்து விட்டனர். இதற்கு யார் பொறுப்பு? அதிகாரிகள் தான் இதற்கு முழுகாரணம் ஆகும்.

    வேப்பம்பட்டு ரெயில்வே கேட்டை தாண்டி பெருமாள்பட்டு மற்றும் வேப்பம்பட்டு பகுதிகளுக்கு மட்டும் இல்லாமல், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருமழிசை, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழியாக இருக்கின்றன. ரெயில்வே மேம்பால பணி கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணியை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இது போன்ற விபத்து பலிகள் தொடரத்தான் செய்யும் என்றார்.

    ஜோதி விஸ்வநாதன்(வேப்பம்பட்டு):-

    தினமுன் ஏராளமானோர் பயன்படுத்தும் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் சுரங்கநடைபாதை இதுவரை அமைக்காதது மிகப்பெரிய தவறு. வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 100 கி.மீட்டருக்கும் மேல் வேகத்தில் செல்கின்றன. ஆனால் தண்டவாளத்தை கடந்து செல்ல எந்த முன்எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் பல ரெயில் நிலையங்களில் ரெயில்வே நடை மேம்பாலம், சுரங்கநடைபாதை இல்லாத நிலையே காணப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இனியாவது ரெயில்வே வாரியம் விரைந்து எடுக்க வேண்டும்.

    ஜோதி விஸ்வநாதன்

    ஜோதி விஸ்வநாதன்

    இதேபோல் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுக்கு மேல் கிடப்பில் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    மருத்துவ மனைக்கு உடனடியாக அழைத்து செல்லவேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டி இருக்கிறது. மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
    • பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவரது மகள்கள் தர்ஷினி (வயது18), தாரணி (12).

    மனோகரனின் மனைவி உடல்நிலைபாதிக்கப்பட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக இன்று காலை மனோகரன் தனது 2 மகள்களுடன் மின்சார ரெயிலில் செல்ல வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    காலை 11.30 மணி அளவில் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் தர்ஷினி, தாரணி ஆகிய 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் தர்ஷினி கல்லூரி மாணவி ஆவார். அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை தாரணி 12-ம் வகுப்பு படித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திப்பதற்காக இருவரும் தந்தையுடன் மின்சார ரெயிலில் செல்ல தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி பலியாகிவிட்டனர்.

    இதற்கிடையே ரெயில் மோதி ஏற்படும் உயிர் பலிக்கு வேப்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் என்று கூறி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே மேம்பால பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெயில்வே சுரங்கப் பாதை இல்லாததால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    • கடந்தவாரம் ஆறுமுகநேரியில் தண்டவாளத்தின் மீது அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போனார்.
    • எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆறுமுகநேரி நகர தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி :

    நெல்லை-திருச்செந்தூர் இடையில் டீசல் என்ஜின் ரெயில் மாற்றப்பட்டு கடந்த சில மாதங்களாக மின்சார ரெயிலாக இயங்கி வருகிறது. இந்த நவீன மாற்றத்திற்கு ஏற்ப மக்கள் தங்களின் நடைமுறைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    மின்சார ரெயில்

    அதாவது இத்தனை நாட்களாக டீசல் என்ஜின் ரெயில் பெரும் சத்தத்துடன் சென்று வந்தது. இதனால் எவ்வளவு அருகில் அந்த ரெயில் வருகிறது என்பதை கணித்து அதற்கு ஏற்ப தண்டவாளம் அருகில் இருந்து மக்கள் விலகிச் செல்வதற்கு பழக்கப்பட்டு இருந்தனர்.

    ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக மின்சார ரெயிலின் இயக்கம் உள்ளது.

    இந்த ரெயிலில் ஹாரன் சத்தத்தை தவிர என்ஜினில் இருந்து வேறு எந்த சத்தமும் கேட்பதில்லை. அதே நேரத்தில் ரெயிலின் வேகமும் கூடுதலாக உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஆறுமுகநேரியில் தண்டவாளத்தின் மீது அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போனார்.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆறுமுகநேரி நகர தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அந்தப் பிரசுரத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருமாள்புரம், செல்வராஜபுரம், கீழ சண்முகபுரம், கமலாநேரு காலனி, காணியாளர் தெரு கிழக்கு, பூபாலா நகர், பி.எஸ். ராஜா நகர், பாரதிநகர், காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் தண்டவாளத்தின் இருபுறமும் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றன.

    மின்சார ரெயில்கள் இயங்கி வரும் இந்த சூழலில் சிறுவர்கள் தண்டவாளத்தின் அருகில் விளையாடுவதையும், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து பேசுவதையும் அவ்வழியே கவனமின்றி நடந்து செல்வதையும் அறவே தவிர்த்து விட வேண்டும். மேலும் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் வருகிறதா? என்று கவனித்து பின்னர் செல்ல வேண்டும். இதன்மூலம் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் தலைமையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் தி.மு.க. நகரத் துணைச் செயலாளர்கள் அகஸ்டின், முத்தீஸ்வரி, மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், வார்டு கவுன்சிலர் மாரியம்மாள், மகளிர் அணி அந்தோணி லதா, மகளிர் தொண்டரணி இசக்கியம்மாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிஷோக், வார்டு செயலாளர்கள் சரவண வெங்கடேஷ், மாரிஸ்குமார், இளைஞர் அணி மிக்கல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.
    • ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர்.

    தாம்பரம்:

    சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். (40). இவர், நேற்று காலில் சிகிச்சை பெறுவதற்காக ஒமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவற்காக சென்ட்ரலில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.

    தாம்பரம் சானட்டோரியம் அருகே ரெயிலில் ஏறிய 4 மர்ம நபர்கள் ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் கூகுள் பே மூலம் ரூ.1400 பெற்றனர். பின்னர் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மெதுவாக சென்றபோது கொள்ளையர்கள் 4 பேரும் குதித்து தப்பி சென்றுவிட்டனர்.

    • கல்லூரி மாணவர்கள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
    • சுமார் அரை மணி நேரம் வரை ரெயில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு புறப்பட்டு சென்று உள்ளது.

    சென்னை:

    வேளச்சேரியில் இருந்து பறக்கும் ரெயிலில் பயணம் செய்த மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சேப்பாக்கம் ரெயில் நிலையம் முதல் கடற்கரை ரெயில் நிலையம் வரை ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    இதில், சுமார் அரை மணி நேரம் வரை ரெயில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு புறப்பட்டு சென்று உள்ளது. இது தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்தனர்.

    • புறநகர் மின்சார ரெயில்களில் பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
    • மின்சார ரெயில்கள் மற்றும் குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் ‘மெமு’ வகை ரெயில்களில் பெண்களுக்கான பெட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடத்திலும் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். நெரிசல் மிகு நேரங்களில் திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கும்போது நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் பிரீத்தியின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். இச்சம்பவத்தில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சிகிசை பெற்று வந்த பிரீத்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல, தாம்பரம், ஆவடி வழித்தடங்களில் உள்ள மின்சார ரெயில் நிலையங்களிலும் திருட்டு சம்பவங்களும், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாடு குறித்து சமீபத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், ரெயில்வே கோட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையின் மண்டல பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாம்பரம், ஆவடி, வேளச்சேரி ரெயில் பணிமனை மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புறநகர் மின்சார ரெயில்களில் பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவில் போதிய ஆட்கள் உடனடியாக நியமிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

    எனவே, மின்சார ரெயில்கள் மற்றும் குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் 'மெமு' வகை ரெயில்களில் பெண்களுக்கான பெட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கான பெட்டிகள் ரெயில்களின் நடுப்பகுதியில் ஒரே பெட்டியாக ஒதுக்கீடு செய்தால் ரெயில்வே பாதுகாப்பு பணிக்கு வசதியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார்போல், ரெயில்களின் பெட்டிகளிலும், ரெயில் நிலையங்களிலும் உரிய மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    • மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    அம்பத்தூர்:

    அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை விரைவு மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயிலில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த விரைவு மின்சார ரெயில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நிற்காது.

    இந்த நிலையில் காலை 8:15 மணியளவில் கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் வந்தபோது ஒரு பெட்டியில் பயணம் செய்த கல்லூரி மாணவர் திடீரென அவசர கால அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    அபாய சங்கிலியை பிடித்து இழுத்த கல்லூரி மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மின்சார ரெயில்களும் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.
    • பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இடுப்பளவு வெள்ளம் தேங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பல நாட்கள் வெயிலில் நடமாட முடியாமல் தவித்த மக்களை ஒரேநாள் மழை தவிக்க வைத்துவிட்டது. பல இடங்களில் ரோடுகளில் வெள்ளம் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளம் வெளியே தெரியாத அளவுக்கு மூழ்கி உள்ளது. மின்சார ரெயில் தண்டவாளம் லேசாக தெரியும் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி ரெயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ரெயில்கள் தூரத்தில் வரும்போதே கையில் வைத்திருக்கும் அவசரகால விளக்கை காட்டி ரெயில்களை மெதுவாக செல்ல வைக்கிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மின்சார ரெயில்களும் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.

    பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இடுப்பளவு வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் நடந்து செல்லும் பயணிகளும் செல்ல முடியவில்லை.

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அந்த வழியாக தரைதளத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்ல முடியவில்லை. ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த சாலை இப்படித்தான் வெள்ளத்தால் துண்டிக்கிறது. இந்த பகுதியில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு எதையும் காணவில்லை.

    மழைக்காலத்தில் மட்டும் மோட்டார் வைத்து ஓரளவு தண்ணீரை வெளியேற்றி சமாளிப்பார்கள். அதன்பிறகு அடுத்த மழை காலத்தில் தான் அதுபற்றி யோசிக்கிறார்கள்.

    • எண்ணூர் முதல் கும்மிடிப்பூண்டி வரை 3 ரெயில் பாதை மட்டுமே இருக்கிறது.
    • எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் வரும்போது மின்சார ரெயிலை நிறுத்தி இயக்குகிறார்கள்.

    பொன்னேரி:

    சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரெயில் சேவையை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பணியாற்று பவர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் என கும்மிடிப்பூண்டி, கவரப் பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சென்னை-கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்க மின்சார ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காலை 8 மணி முதல் 9 மணி வரை கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில் காலையில் தாமதமாக வருவதால் வேலைக்கு செல்வோர், பள்ளி- கல்லூரி மாணவர்கள், மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    நேற்று பொன்னேரி ரெயில் நிலையத்துக்கு காலை 8.15 மணிக்கு வரவேண்டிய மின்சார ரெயில் 8.35 மணிக்கு வந்து சேர்ந்தது. மேலும் ரெயில் வரும் நடைமேடை குறித்தும் சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடாததால் பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதேபோல் இன்று 4-வது நாளாகவும் மின்சார ரெயில்கள் தாமதமாக வந்தன. இதனால் பொன்னேரி, மீஞ்சூர், திருவொற்றியூர், கொருக்குப் பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் தவித்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:- எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக சரக்கு ரெயில்கள் வரும் போது அதனை புறநகர் ரெயில் பாதையில் மாற்றி மாற்றி நிறுத்துகின்றனர். இதனால் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் காலையில் வட மாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக மீஞ்சூர், எண்ணூர் பகுதிகளில் புறநகர் ரெயிலை நிறுத்தி விடுகின்றனர். சென்னை சென்டரலில் இருந்து எண்ணூர் வரை 4 ரெயில் பாதை உள்ளது. எண்ணூர் முதல் கும்மிடிப்பூண்டி வரை 3 ரெயில் பாதை மட்டுமே இருக்கிறது. இதனால் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் வரும்போது மின்சார ரெயிலை நிறுத்தி இயக்குகிறார்கள்.

    மின்சார ரெயில்களில் வருபவர்கள் விரைந்து செல்வதற்காக ஏராளமானோர் விம்கோ நகரில் மெட்ரோ ரெயில்களுக்கு மாறி செல்லும் நிலை உள்ளது. எனவே எண்ணூர்- கும்மிடிப்பூண்டி இடையே 4-வது ரெயில் பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பித்ரகுண்டா ரெயில் கவரப்பட்டை அருகே என்ஜின் கோளாறால் நிறுத்தப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில் சேவை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கவரைப்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது
    • ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்தனர்.

    பொன்னேரி:

    ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது.காலை 7.40 மணியளவில் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பயணிகள் ரெயில் கவரப்பேட்டை அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது.

    ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்தனர். பின்னர் காலை 8.45 மணியளவில் அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

    நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வந்த ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    • தடம் புரண்ட பெட்டியின் வலது பக்க பகுதி தண்டவாளத்தை விட்டு வெளியேறி காணப்பட்டது.
    • பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் ரெயில்வே ஊழியர்கள் உஷாராக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பேசின்பிரிட்ஜ் யார்டுக்கு சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையில் பயணிகளுடன் சென்ற மின்சார ரெயில் திடீரென தடம் புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.30 மணி அளவில் திருவள்ளூர் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. 9 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் கடைசி பெட்டி பெண்கள் பெட்டியாகும்.

    அதற்கு முன்பு உள்ள ரெயில் பெட்டி பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென தடம் புரண்டது. அந்த ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

    இதில் ரெயில் பெட்டி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. இதனால் உஷாரான என்ஜின் டிரைவர் சாதுர்யமாக ரெயிலை நிறுத்தினார். தடம் புரண்ட பெட்டியின் வலது பக்க பகுதி தண்டவாளத்தை விட்டு வெளியேறி காணப்பட்டது.

    இதனால் பெட்டியின் இடது பகுதி தண்டவாளத்துக்கு நடுவே போய் நின்றது. இதனால் பெட்டியில் இருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர். அவர்கள் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து விட்டதாக நினைத்து கூச்சல் போட்டனர். பின்னர் தடம் புரண்ட பெட்டியில் இருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள்.

    தடம் புரண்ட ரெயில் நின்று கொண்டிருந்த தண்டவாளம் வழியாக மற்ற ரெயில்களும் வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் தங்களிடம் இருந்த சிகப்பு கலர் கர்சிப், துப்பட்டா உள்ளிட்டவைகளை காட்டி மற்ற ரெயில்களை நிறுத்தினார்கள். இதனால் பெரும் விபத்தும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    மின்சார ரெயில் தடம்புரண்டதால் சென்னை சென்ட்ரலில் இருந்து மின்சார ரெயில்கள் புறப்படுவதில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகி உள்ளது. இதனால் ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.

    ×