search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள் பே"

    • செந்தில்நாதன் அதே பேப்பர் ஸ்டோரில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன் என்பவரின் செல்போனை திடீரென்று வாங்கி சோதனை செய்தார்.
    • கடந்த 2021 முதல் தற்போது வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டறிந்தார்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலத்தில் தனியார் பேப்பர் ஸ்டோர் உள்ளது. இதன் உரிமையாளர் செந்தில்நாதன் என்பவர், அதே பேப்பர் ஸ்டோரில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன் (வயது 41) என்பவரின் செல்போனை திடீரென்று வாங்கி சோதனை செய்தார். அதில் பேப்பர் ஸ்டோருக்கு திருமண அழைப்பிதழ் அச்சிட வரும் வாடிக்கையாளர்களிடம் தனது ஜிபே எண்ணை கொடுத்துள்ளார். அதன் மூலம் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளார்.

    கடந்த 2021 முதல் தற்போது வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டறிந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் செந்தில்நாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பேரில் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.
    • ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர்.

    தாம்பரம்:

    சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். (40). இவர், நேற்று காலில் சிகிச்சை பெறுவதற்காக ஒமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவற்காக சென்ட்ரலில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.

    தாம்பரம் சானட்டோரியம் அருகே ரெயிலில் ஏறிய 4 மர்ம நபர்கள் ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் கூகுள் பே மூலம் ரூ.1400 பெற்றனர். பின்னர் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மெதுவாக சென்றபோது கொள்ளையர்கள் 4 பேரும் குதித்து தப்பி சென்றுவிட்டனர்.

    • கார்த்திகேயன் தன்னுடைய நடப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார்.
    • ராணுவ வீரர் என்பதால் இந்த கணக்கில் பணம் அனுப்ப முடியாது. எனவே வேறு கணக்கு எண்ணை தருமாறு சாகில் குமார் கேட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர, வளர இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக ஆன்-லைன் மோசடி மூலம் தனி நபர்களையும், நிறுவனங்களையும் குறிவைத்து மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ஒருவர் ராணுவ வீரர் என கூறி 'கூகுள் பே' மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி செய்துள்ளது மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 52). இவர் கோவில்பட்டியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இதன் கிளைகள் விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது, தான் சாகில் குமார், ராணுவ வீரர் காஷ்மீரில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் தனக்கு பர்னிச்சர் பொருட்கள் வேண்டும் என கேட்டுள்ளார்.

    அதற்கு கார்த்திகேயன் நீங்கள் காஷ்மீர் மற்றும் அருகில் உள்ள இடங்களில் வாங்கிக் கொள்ளலாமே என தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த சாகில் குமார், சாத்தூரில் உள்ள எனது நண்பருக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்பதாலும், உங்கள் கடை 4 நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளதால் தரமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் வாங்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

    பின்னர் மீண்டும் கார்த்திகேயனை தொடர்பு கொண்ட சாகில் குமார், தனக்கு சோபா, மேஜை, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் வேண்டும் என அதற்குரிய மாதிரி படங்களை செல்போன் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தார்.

    அதனை பார்த்த கார்த்திகேயன், அதற்கான மதிப்பு ரூ.80 ஆயிரம் என தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் பேரம் பேசி ரூ.65 ஆயிரம் என விலை நிர்ணயித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆன்-லைன் மூலம் பணம் அனுப்புவதாக சாகில் குமார் தெரிவித்துள்ளார்.

    இதனால் கார்த்திகேயன் தன்னுடைய நடப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார். அப்போது, தான் ராணுவ வீரர் என்பதால் இந்த கணக்கில் பணம் அனுப்ப முடியாது. எனவே வேறு கணக்கு எண்ணை தருமாறு சாகில் குமார் கேட்டுள்ளார்.

    இதனால் கார்த்திகேயன் தனது மகன் அருண்குமார் என்பவரின் வங்கி கணக்கு மற்றும் அதற்குரிய 'கூகுள் பே' எண்ணையும் அனுப்பி உள்ளார்.

    முதலில் 1 ரூபாய் அனுப்பிவிட்டு அந்த பணம் வந்துள்ளதா என சாகில் குமார் கேட்டுள்ளார். ஆம் என கார்த்திகேயன் கூறியதும், செல்போனில் ஒரு லிங்கை அனுப்பி அதன் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    அருண்குமார் தனது செல்போன் எண்ணிற்கு வந்த லிங்கை தொட்டதும், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டதற்கான தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது தந்தையிடம் இதுபற்றி கூறி உள்ளார்.

    பின்னர் அவர் சாகில் குமாரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார். அப்போது ரூ.35 ஆயிரம், ரூ.18 ஆயிரம் என பல்வேறு லிங்குகளை அனுப்பி, அதனை தேர்வு செய்தால் உங்களுக்குரிய பணம் மீண்டும் உங்களது வங்கி கணக்கில் வந்துவிடும் என கூறி உள்ளார்.

    ஆனால் உஷாரான கார்த்திகேயன் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எளிமையான முறையில் பொருட்களை வாங்கவும், பணத்தை எடுத்து செல்வதால் ஏற்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும் ஆன்-லைன் பணபரிவர்த்தனை தற்போது தொடங்கப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஆனால் சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதால், ஆன்-லைன் பணபரிவர்த்தனை குறித்து பொதுமக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வந்தாலும் குற்றச் செயல்கள் ஒருபுறம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

    இதற்கிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அதில் சிலர் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டு தவறுதலாக வந்து விட்டது எனக்கூறி, பின்னர் அதனை வாங்குவதற்காக லிங்கை அனுப்புகின்றனர். அதனை பொது மக்கள் தேர்வு செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்த மொத்த தொகையையும் மோசடி கும்பல் எடுத்து கொள்கிறது.

    எனவே உங்களுக்கு யாரேனும் லிங்க் அனுப்பினால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். மேலும் உங்களது வங்கி கணக்கு ஏ.டி.எம். எண், ஓ.டி.பி. எண்ணை யாரேனும் கேட்டாலும் எதிர்வினை ஆற்றவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    ×