ஆந்திர லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி கூகுள்-பே மூலம் பணம் பறிப்பு- 2 பேரை கைது

போலீசார் பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி கூகுள்-பே மூலம் பணம் பறிப்பு- 2 பேரை கைது
Published on

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி.பூங்கா காய்கறி மார்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 45), பாஸ்கர் ரெட்டி (60) ஆகிய இருவரும், ஈரோடு மார்கெட்டுக்கு லாரியில் தக்காளி கொண்டு வந்தனர்.

பின்னர் அவற்றை இறக்கிவிட்டு, மார்கெட் அருகில் உள்ள ஏ.பி.டி.ரோடு பகுதியில் தங்களது லாரியை நிறுத்தி சமைத்து சாப்பிட்டு விட்டு லாரியிலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு சென்ற 4 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த மகேந்திரன், பாஸ்கர்ரெட்டி இருவரையும் எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

அப்போது லாரி டிரைவர்கள் இருவரும் தங்களிடம் பணம் இல்லை என கூறவே, கூகுள் பே மூலமாக தங்களது வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி மகேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து அவர்களது வங்கிக் கணக்கிற்கு ரூ.18 ஆயிரத்து 700 அனுப்பவைத்து, பின்னர் மகேந்திரனின் செல்போனில் இருந்து கூகுள் பே ஆப்பையும் அழித்துவிட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து, மகேந்திரன், பாஸ்கர் ரெட்டி இருவரும் தாங்கள் தக்காளி பாரம் இறக்கிய மண்டி உரிமையாளர் வைரவேலிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநில லாரி ஓட்டுனர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்தது, ஈரோடு வீரப்பன் சத்திரம், மிட்டாய்காரர் வீதியை சேர்ந்த சண்முகம் (19), சக்திவேல் (19) என்பது தெரியவந்த்து. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com