search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dog"

    • ஜெயங்கொண்டத்தில் நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதால் கீழே விழும் அவலம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு குமரன் நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக பள்ளி செல்லும் குழந்தைகளையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடிக்க முயற்சிக்கின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். ேமலும் நாய்கள் துரத்தியதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் முதியவர்கள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும் தனியாக செல்வதை தவிர்த்து சிலர் ஒன்று சேர்ந்து கையில் தடியுடன் சென்று வருகின்றனர். இதேபோல் நகரில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றில் சில நாய்கள் கழுத்து, கால், உடல் உள்ளிட்ட இடங்களில் ஆறாத புண்ணுடன் மிகவும் மோசமாக நோய் தொற்று பரவும் அபாயத்தில் அலைந்து திரிகின்றன. எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்பீக்மேன் இத்துறையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என காவல்துறை அறிவிப்பு
    • ஸ்பீக்மேன் நியாயமான காரணங்களின்றி நீக்கப்பட்டிருக்கிறார் என காவலர் நலச்சங்கம் அறிவிப்பு.

    அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலமான ஒஹியோவின் சர்க்கிள்வில் நகரத்தில் நெடுஞ்சாலையில், ஒரு கறுப்பினத்தவர் மீது தனது நாயை கட்டவிழ்த்துவிட்ட காவல் அதிகாரியை காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது.

    அந்த அதிகாரியின் பெயர் ரையான் ஸ்பீக்மேன்.

    "காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் வைத்திருக்கும் தரநிலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ரையான் ஸ்பீக்மேன் பூர்த்தி செய்யவில்லை. அதனால் அவர் இத்துறையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    "ஸ்பீக்மேன் நியாயமான காரணங்களின்றி நீக்கப்பட்டிருக்கிறார். அவர் சார்பாக குறைகேட்பு மனு ஒன்றை நாங்கள் தாக்கல் செய்வோம்" என காவலர் நலச்சங்கம் கூறியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு, ஒரு அறிக்கையையும், வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

    அந்த அறிக்கையில், "ஜூலை 4ல், 23 வயதான ஜடேர்ரியஸ் ரோஸ் என்பவர் டிராக்டர் டிரெய்லர் வாகனம் ஒன்றை ஓட்டி சென்றுள்ளார். சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை நிறுத்தும்படி கை காட்டி உள்ளனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது.

    கொலம்பஸ் பகுதியிலிருந்து தெற்கே 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் அதிகாரிகள் "ஸ்டாப் ஸ்டிக்ஸ்" எனப்படும் டயரின் காற்றை குறைத்து விடும் சாதனங்களை பயன்படுத்தி அவ்வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் காணப்படுவதாவது:

    போலீஸ் அதிகாரிகள் ரோஸை வாகனத்தில் இருந்து இறங்க உத்தரவிட்டதால், ரோஸ் தனது கைகளை உயர்த்தி வாகனத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறார். "நாயை விடுவிக்க வேண்டாம்" என்று ஒரு உள்ளூர் அதிகாரி கூறியதையும் மீறி சர்க்கிள்வில் காவல்துறை அதிகாரி ஸ்பீக்மேன், காவல்துறை நாய் ஒன்றை ரோஸ் மீது கட்டவிழ்த்துவிடுகிறார். முழங்காலிட்டிருக்கும் ரோஸை நோக்கி ஓடும் அந்த நாய், அவரை கடித்து இழுக்கிறது. "தயவுசெய்து நாயை விலக்குங்கள்" என ரோஸ் அலறுகிறார்.

    இக்காட்சிகள் அந்த வீடியோவில் தெரிகின்றன.

    இதனை கண்ட பலரும் கொந்தளித்து தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    ரோஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும், காவல்துறை அதிகாரி ஸ்பீக்மேன் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஷான் பாயர் ஆகியோரை பணிநீக்கம் செய்யுமாறும் முகநூலில் ஆர்வலர்கள் கோரினர்.

    இந்நிலையில் ஸ்பீக்மேனின் பணிநீக்க அறிவிப்பு வந்துள்ளது.

    • வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 300 மில்லி மீட்டருக்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது.
    • வீடியோவில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க ஒருவர் சாய்ந்த ஏணி மூலம் இறங்குகிறார்.

    டெல்லி, இமாச்சலபிரதேசம், காஷ்மீர், சண்டிகர் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சண்டிகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 300 மில்லி மீட்டருக்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது.

    இதனால் சண்டிகரில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சண்டிகரின் குடா லாகூர் பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நாய் ஒன்றை ஒருவர் உயிரை பணயம் வைத்து போராடி மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சண்டிகர் காவல்துறையால் டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க ஒருவர் சாய்ந்த ஏணி மூலம் இறங்குகிறார்.

    அதன்மூலம் நாயை மீட்ட அவர் அதனை ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையில் ஏணிப்படிக்கட்டுகளை பிடித்துக் கொள்கிறார். பாலத்தின் மேல் நிலையில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அவரை வெளியே இழுப்பது போன்று காட்சிகள் உள்ளது. கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோ 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் நாயை மீட்ட நபர் மற்றும் போலீசாரின் முயற்சிகளை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.
    • இரையை தூக்கி செல்லும் சிறுத்தை அவற்றை வயிறாற தின்று விட்டு குகைக்குள் பதுங்கி கொள்கிறது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை அங்கு பதுங்கியிருந்து வருவதுடன், மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.

    காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இருந்து வருவதுடன், தொடர்ந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.

    சம்பவத்தன்று இரவு அங்குள்ள தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, இரும்பு சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை அலேக்காக தூக்கி சென்றது. பின்னர் காலை ஆட்டுப்பட்டியை பார்க்க சென்ற விவசாயி அங்கு கட்டப்பட்டிருந்த நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சங்கிலிகள் சேதமடைந்தது மற்றும் சிறுத்தையின் கால்தடங்கள் இருந்ததை வைத்து சிறுத்தை நாயை தூக்கி சென்றதை உறுதி செய்தனர்.

    4 மாதமாகியும் சிறுத்தை பிடிபடாததால் ஊதியூர் பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கும் நிலை உள்ளது. வனத்துறையினர் கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    ஊதியூர் மலைப்பகுதி மிகவும் வளம்மிக்கது. மேலும் மலையை சுற்றிலும் அதிக பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்பு காட்டில் மான்கள் அதிக எண்ணிக்கையில் உலா வருகிறது. அதுமட்டுமல்ல மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆட்டுப்பட்டி, மாட்டுப்பட்டி அமைத்து ஆடு, மாடுகளை தோட்டத்து உரிமையாளர்கள் வளர்த்து வருகிறார்கள்.

    இந்த மலையில் பதுங்கி உள்ள சிறுத்தை அவ்வப்போது அடிவார பகுதிக்கு வந்து நாய், மாடு மற்றும் ஆடுகளை தூக்கி சென்று விடுகிறது. அதுவும் மலையில் ஆங்காங்கே குகை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு தேவையான தண்ணீர் இருக்கிறது. இரையை தூக்கி செல்லும் சிறுத்தை அவற்றை வயிறாற தின்று விட்டு குகைக்குள் பதுங்கி கொள்கிறது. பின்னர் பசிக்கும்போது கீழே வந்து வேட்டையாடுகிறது. அதனால்தான் அதை பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் விரைவில் சிறுத்தையை பிடித்துவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர்.
    • பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    சென்னை:

    உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் இன்றும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் மாதவரத்தில் உள்ள புறநகர் கால்நடை மருத்துவமனையில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர். வெறிநாய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கே.என்.செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவ-மாணவிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் சவுந்தர்ராஜன், டாக்டர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாகனத்துடன் திருப்பி அனுப்பினர்.
    • சோதனை சாவடியில் மெத்தனை போக்குடன் நடந்து கொண்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் மது, மாமிசம், பீடி, சிகரெட், கஞ்சா வெளியிட்ட பொருட்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வீட்டு வளர்ப்பு பிராணிகளை வாகனங்களில் அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் ஒரு வேனில் திருப்பதிக்கு வந்தனர். அவர்கள் வந்த வேனில் வீட்டு வளர்ப்பு நாயை அழைத்து வந்தனர்.

    அலிப்பிரி சோதனை சாவடியில் சரிவர வாகனத்தை சோதனை செய்யாததால் பக்தர்கள் நாயை மலைக்கு கொண்டு சென்றனர்.

    திருப்பதி மலைக்கு நாயுடன் வந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் வளர்ப்பு நாயை எடுத்து வந்த பக்தர்களை மடக்கினர். நாயுடன் திருப்பதி மலைக்கு வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் அந்த பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாகனத்துடன் திருப்பி அனுப்பினர்.

    சோதனை சாவடியில் மெத்தனை போக்குடன் நடந்து கொண்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இலக்கியம்பட்டி பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளின் கதவுகளை தட்டுகின்றனர்.
    • இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருடுபோய் உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி அருகே இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி அருகே இலக்கியம்பட்டி பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளின் கதவுகளை தட்டுகின்றனர். இதனால் அந்த நேரத்தில் வீடுகளை யாரும் திறப்பதில்லை.

    ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருடுபோய் உள்ளது.

    இதனை தொடர்ந்து எங்கள் குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினோம். அப்போது வீட்டில் இருந்த என்னுடைய வளர்ப்பு நாயை காணவில்லை. இதனால் பல இடங்களில் தேடி பார்த்தேன்.

    ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இளைஞர் தன் பாசமுள்ள வளர்ப்பு நாயின் புகைப்படத்தை போஸ்டர் பிரிண்ட் செய்து இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள காமவுண்டு சுவர்களில் ஒட்டி விளம்பரப்படுத்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நாய்க்கு இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து வளைகாப்பு நடத்திய காட்சிகள் உள்ளது.
    • நாய் மீது சாமந்தி மலர்களை பொழிவதையும், பின்னர் நாயின் கழுத்தில் ஒரு சிறிய மாலையை அணிவதையும் காண முடிகிறது.

    தெருநாய்கள் மீது வெறுப்பு காட்டுபவர்களுக்கு மத்தியில், ஒரு தெருநாய்க்கு இளைஞர்கள் சிலர் சேர்ந்து வளைகாப்பு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பரத் சந்திரன் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பெல்லா என்று பெயரிடப்பட்ட தெருநாய் ஒன்று கர்ப்பமான நிலையில் அந்த நாய்க்கு இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து வளைகாப்பு நடத்திய காட்சிகள் உள்ளது.

    அந்த நாய் மீது சாமந்தி மலர்களை பொழிவதையும், பின்னர் நாயின் கழுத்தில் ஒரு சிறிய மாலையை அணிவதையும் காண முடிகிறது. மேலும், வீடியோவை பகிர்ந்துள்ள பரத்சந்திரனின் பதிவில், வெறுப்பு நிறைந்த உலகில் நாங்கள் எங்கள் பெல்லாவுக்கு வளைகாப்பு விழாவை கொண்டாடுகிறோம். அவளுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 2 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • முந்தைய கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கின் அளவு மூன்று முதல் நான்கு அங்குலம் இடையில் இருந்துள்ளது.
    • முந்தைய சாதனையாளரான மோச்சியின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராக்கியின் உரிமையாளர் போட்டிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார்.

    அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த நாய் ஒன்று, 5.6 அங்குலங்கள் நீளமான நாக்கு கொண்டுள்ளதை அடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    பிராட் மற்றும் கிரிஸ்டல் வில்லியம்ஸின் 9 வயதான பாக்ஸர் வகையை சேர்ந்த நாய் ராக்கி. இந்த நாய்க்கு வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாக்கு இருப்பதை உரிமையாளர்கள் அறிந்தனர். இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்ததால் கின்னஸ் சாதனையில் போட்டியிட உரிமையாளர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

    முந்தைய சாதனையாளரான மோச்சி என்கிற நாயின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராக்கியின் உரிமையாளர்கள் போட்டிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தனர்.

    அப்போதுதான், முந்தைய கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கின் அளவு மூன்று முதல் நான்கு அங்குலம் இடையில் இருப்பதாகச் சொன்னார்கள். இதை அறிந்தவுடன் ராட் மற்றும் கிரிஸ்டல் ஆகியோர் இது தங்களுக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பாக கருதி விண்ணப்பித்தனர்.

    இதற்கான சமர்ப்பிப்பு செயல்முறை நீண்ட மற்றும் கடினமானதாக இருந்ததாகவும், போட்டிக்கு விண்ணப்பிக்கும் முன் ராக்கியின் நாக்கு அளவீடுகளை இரண்டுக்கு அல்லது மூன்று முறை சாிபார்த்து பின்னர் சமர்ப்பித்ததாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, கின்னஸ் குழுவினர் தங்கள் கால்நடை மருத்துவரான டாக்டர் பெர்னார்ட்டை ராக்கியின் நாக்கை அளவீடு செய்ய அனுப்பியுள்ளனர். அளவு எடுத்த டாக்டர், "ராக்கி சாதனைக்கு தகுதியானது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், ராக்கி 5.6 அங்குல நீள நாக்கு கொண்ட நாய் என்கிற பட்டத்துடன் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    • 2 வயது சிறுமி பிரீத்தி உள்ளிட்டவர்களை தெருநாய் துரத்தி கண்டித்துள்ளது.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை நாய் கடித்து தாக்கியதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

    சிங்கை:

    விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பகுதியில் சேக்கிழார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி பிரீத்தி, 6 வயது சிறுவன் மிதில், 13 வயது சிறுவன் சிவசங்கர் ஆகியோரை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் துரத்தி சென்று கண்டித்துள்ளது.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 43), காந்திமதி நாதன் (76), வேலம்மாள் (61) ஆகியோரையும் நாய்கள் கடித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நாய் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை கடித்து தாக்கியதாக அப்பகுதி யினர் புகார் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இது சாலையில் செல்லும் சிறுவர்கள் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரையும் கடித்து வருகிறது. நாய் கடித்து காயமடைந்தவர்கள் எங்கள் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் சிவந்திபுரம் ஊராட்சி இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவே இல்லை. எனவே சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • மனிதர்களைப் போன்று செல்லப்பிராணிகளையும் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துவிட்டு படையல் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.
    • புளூ கிராஸ் அமைப்பின் சார்பிலும் செல்ல பிராணிகளை தகனம் செய்து கொடுத்து வருகிறார்கள். இதற்காக இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

    சென்னையில் செல்லப் பிராணிகள் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சென்னை மாநகரில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை தங்களது வீட்டில் ஒருவராகவே எண்ணி வளர்ப்பவர்கள் அதிகம்.

    குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தொடங்கி அடுக்குமாடிகளில் வசதியாக வாழ்பவர்கள் வரை அத்தனை பேருமே செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். தங்களது வசதிகளுக்கு ஏற்ப ரோட்டோர தெரு நாய்கள் முதல் விலை உயர்ந்த ஜாதி நாய்கள் வரை வளர்க்கப்பட்டு வருகிறது.

    இப்படி வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் உயிரிழக்க நேரிடும் போது தங்களது வீட்டில் ரத்த சொந்தத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டது போலவே உணர்கிறார்கள் சென்னை வாசிகள். இதன் காரணமாக மனிதர்களைப் போன்று செல்லப்பிராணிகளையும் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துவிட்டு படையல் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் செல்ல பிராணிகளை அடக்கம் செய்வதற்காகவே கண்ணம்மா பேட்டை சுடுகாடு தனியாக செயல்பட்டு வருகிறது. மயிலாப்பூர் இடுகாட்டிலும் அதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் திரை நட்சத்திரங்கள் முதல் சாதாரண பொது மக்கள் வரை அனைத்து தரப்பினருமே தங்களது செல்ல பிராணிகளை நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.

    இது போன்ற நேரங்களில் தங்களது வீட்டில் ஒருவர் உயிரிழந்துவிட்டதைப் போன்று அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுவதும் இடுகாட்டை விட்டு பிரிய மனமின்றி திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் செல்வதும் பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது.

    இந்த இடுகாட்டில் ஒவ்வொரு மாதமும் 25லிருந்து 30 செல்ல பிராணிகள் வரை அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இந்த இடுகாட்டில் ஸ்ரீவித்யா, சொல்லின் செல்வன் என்கிற இரண்டு கால்நடை உதவி மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள் செல்லப்பிராணிகளை இழந்தவர்கள் அதனை கண்ணம்மாபேட்டை இடுகாட்டுக்கு கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கு முன்பு விண்ணப்ப படிவம் ஒன்று வழங்கப்படுகிறது.

    அதனை பூர்த்தி செய்து ஆதார் கார்டு, செல்ல பிராணிகள் இறந்ததற்கான காரணம் உள்ளிட்ட சான்றிதழுடன் அவைகளை அடக்கம் செய்துவிட்டு கண்ணீருடன் திரும்பிச் செல்கிறார்கள்.

    அடக்கம் செய்த இடம் அருகே சிறிய கல்வெட்டு ஒன்றையும் பொறித்து அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு எப்போதும் பலர் வணங்கி வருகிறார்கள். சென்னை மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவர் கமார்உசேன் மேற்பார்வையில் இந்த இடுகாடு செயல்பட்டு வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் செல்லப் பிராணிகளுக்காக தனியாக கண்ணம்மாபேட்டையில் இடுகாடு உருவாக்கப்பட்டு இப்போது அங்கு ஏராளமான செல்ல பிராணிகள் புதைக்கப்பட்டுள்ளன. தாங்கள் ஆசை ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணிகளுக்காக அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் வாரா வாரமோ, மாதத்துக்கு ஒரு முறையோ, 15 நாட்களுக்கு ஒரு முறையோ என தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்லப் பிராணிகளை வளர்த்து இழந்தவர்கள் படையல் செய்து வழிபடவும் மறப்பதில்லை.

    செல்ல பிராணிகள் விரும்பி சாப்பிடும் உணவுகளை எடுத்துக் கொண்டு அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகில் வைத்து கண்ணீர் மல்க வழிபட்டு விட்டு அங்கிருக்கும் ஊழியர்களிடம் செல்ல பிராணிகளை வீட்டில் ஒருவனாக நினைத்து வளர்த்து வந்தோம். அவன் இல்லாமல் எங்களால் இருக்கவே முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறிச் செல்பவர்களும் உண்டு.

    சென்னை மாநகரில் கண்ணம்மாபேட்டை இடுகாடு செல்ல பிராணிகளுக்காக தனியாகவே செயல்பட்டு வரும் நிலையில் மயிலாப்பூர் இடுகாட்டில் ஒரு பகுதியும் செயல்பட்டு வருகிறது. அங்கும் செல்ல பிராணிகள் புதைக்கப்பட்டு வருகின்றன.

    இப்படி சென்னை மாநகர் முழுமைக்குமே செல்லப் பிராணிகள் அடக்கம் செய்யும் இந்த இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே செல்லப் பிராணிகளை வளர்ப்போர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "விரைவில் அது தொடர்பாக ஆலோசித்து அனைத்து பகுதிகளிலும் அது சாத்தியமா? என்பதை கண்டறிந்து செல்ல பிராணிகளுக்கான இடுகாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

    இது தொடர்பாக பெருங்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது எனது வீட்டில் செல்லமாக வளர்த்த நாய் இறந்ததையடுத்து அதை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள இடுகாட்டுக்கு சென்றோம். ஆனால் அங்கு புதைப்பதற்கு இடம் தரவில்லை. இதையடுத்து பெருங்குடி குப்பை கிடங்கு பகுதிக்கு சென்று நான் புதைத்தேன் என்று வேதனையோடு குறிப்பிட்டார்.

    சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தனி வீடுகளை வைத்திருந்தால் தங்களது வீடு வளாகத்திலேயே அதனை புதைத்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு அது சாத்தியமில்லை.

    அதுபோன்ற நபர்களே ஆசை ஆசையாக வளர்த்த செல்லப்பிராணிகளை தெருவில் தூக்கி வீசுவதற்கு மனமின்றி முறைப்படி அடக்கம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

    புளூ கிராஸ் அமைப்பின் சார்பிலும் செல்ல பிராணிகளை தகனம் செய்து கொடுத்து வருகிறார்கள். இதற்காக இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் செல்லப்பிராணிகளின் உடலை எரித்து சாம்பலை அதன் உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து புளூ கிராஸ் அமைப்பினர் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வரும் இடுகாடுகளில் செல்லப்பிராணிகளுக்காக தனி இடத்தை ஒதுக்கி கொடுத்து அவர்களுக்கும் உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதே விலங்குகள் நல ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கருத்து கேட்டபோது விரைவில் கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் விலங்குகளை தகனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படுகிறது விலங்கு கள் நல ஆர்வலர்கள் குறிப்பிடுவது போல அனைத்து பகுதிகளிலும் செல்ல பிராணிகளை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    வாயில்லா ஜீவன்களான செல்லப் பிராணிகள் பல சாலையோரம் இறந்த பிறகு தூக்கி வீசப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். வரும் காலங்களில் அது போன்று இல்லாமல் செல்ல பிராணிகளுக்கும் இறந்த பிறகு உரிய மரியாதையை தர வேண்டும் என்கிற விலங்குகள் நல ஆர்வலர்களின் கோரிக்கை நியாயமானதாகவே உள்ளது. அவர்களும் நம் செல்ல சொந்தங்கள் தானே....

    • கோவை வனச்சரக கோட்டத்துக்கு கடந்த ஆண்டு சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த வளவன் என்ற வேட்டை நாய் வழங்கப்பட்டது.
    • சமூகவிரோதிகளுக்கு வளவனுடன் இனிமேல் பைரவாவும் சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை கோட்டத்தில் 670 சதுரஅடி பரப்பளவில் காட்டுப்பகுதிகள் உள்ளன. அங்கு உள்ள வனவிலங்குகள் மற்றும் அரிய தாவரங்களை பாதுகாக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை வனத்துறை கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 சரகங்கள் உள்ளன. அங்கு காட்டுக்குள் அத்துமீறி நுழையுவம் சமூகவிரோதிகள், வனவிலங்குகளை வேட்டையாடும் குற்றவாளிகளை சல்லடை போட்டு தேடும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவர்களுக்கு உதவியாக வேட்டை நாய்களையும் பயன்படுத்துவது என்று தமிழகஅரசு முடிவு செய்தது.

    அதன்படி கோவை வனச்சரக கோட்டத்துக்கு கடந்த ஆண்டு சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த வளவன் என்ற வேட்டை நாய் வழங்கப்பட்டது. அந்த நாய்க்கு போளுவாம்பட்டியில் பயிற்சி தரப்பட்டு வேட்டை தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை வனச்சரக கோட்டத்துக்கு மேலும் ஒரு வேட்டை நாய் வழங்கப்பட்டு உள்ளது. டாபர்மேன் வகையை சேர்ந்த இந்த நாய்க்கு பைரவா என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த நாய்க்கு தற்போது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் தீவிர பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோவை கோட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை வனச்சரக கோட்டத்தில் ஏற்கெனவே சிப்பிப்பாறை வகையை சேர்ந்த வளவன் என்ற வேட்டை நாய் பணியமர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மேலும் ஒரு வேட்டை நாய் தரப்பட்டு உள்ளது. அதற்கு பைரவா என்று பெயர்சூட்டி உள்ளோம். இதற்கு போளுவம்பட்டி வனச்சரகத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் பயிற்சி கொடுத்து வருகிறோம்.

    இதுதவிர வாரம் ஒருமுறை நீச்சல் பயிற்சி தரப்பட்டு வருகிறது. கோவை கோட்ட வனச்சரகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள பைரவாவுக்கு மோப்பசக்தி உடன் பாய்ச்சல் திறனும் அதிகம். எனவே கோவை வனச்சரக கோட்டத்தில் அத்துமீறி நுழையும் சமூகவிரோதிகளுக்கு வளவனுடன் இனிமேல் பைரவாவும் சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    ×