search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்ல பிராணிகள்"

    • மனிதர்களைப் போன்று செல்லப்பிராணிகளையும் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துவிட்டு படையல் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.
    • புளூ கிராஸ் அமைப்பின் சார்பிலும் செல்ல பிராணிகளை தகனம் செய்து கொடுத்து வருகிறார்கள். இதற்காக இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

    சென்னையில் செல்லப் பிராணிகள் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சென்னை மாநகரில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை தங்களது வீட்டில் ஒருவராகவே எண்ணி வளர்ப்பவர்கள் அதிகம்.

    குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தொடங்கி அடுக்குமாடிகளில் வசதியாக வாழ்பவர்கள் வரை அத்தனை பேருமே செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். தங்களது வசதிகளுக்கு ஏற்ப ரோட்டோர தெரு நாய்கள் முதல் விலை உயர்ந்த ஜாதி நாய்கள் வரை வளர்க்கப்பட்டு வருகிறது.

    இப்படி வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் உயிரிழக்க நேரிடும் போது தங்களது வீட்டில் ரத்த சொந்தத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டது போலவே உணர்கிறார்கள் சென்னை வாசிகள். இதன் காரணமாக மனிதர்களைப் போன்று செல்லப்பிராணிகளையும் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துவிட்டு படையல் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் செல்ல பிராணிகளை அடக்கம் செய்வதற்காகவே கண்ணம்மா பேட்டை சுடுகாடு தனியாக செயல்பட்டு வருகிறது. மயிலாப்பூர் இடுகாட்டிலும் அதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் திரை நட்சத்திரங்கள் முதல் சாதாரண பொது மக்கள் வரை அனைத்து தரப்பினருமே தங்களது செல்ல பிராணிகளை நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.

    இது போன்ற நேரங்களில் தங்களது வீட்டில் ஒருவர் உயிரிழந்துவிட்டதைப் போன்று அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுவதும் இடுகாட்டை விட்டு பிரிய மனமின்றி திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் செல்வதும் பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது.

    இந்த இடுகாட்டில் ஒவ்வொரு மாதமும் 25லிருந்து 30 செல்ல பிராணிகள் வரை அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இந்த இடுகாட்டில் ஸ்ரீவித்யா, சொல்லின் செல்வன் என்கிற இரண்டு கால்நடை உதவி மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள் செல்லப்பிராணிகளை இழந்தவர்கள் அதனை கண்ணம்மாபேட்டை இடுகாட்டுக்கு கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கு முன்பு விண்ணப்ப படிவம் ஒன்று வழங்கப்படுகிறது.

    அதனை பூர்த்தி செய்து ஆதார் கார்டு, செல்ல பிராணிகள் இறந்ததற்கான காரணம் உள்ளிட்ட சான்றிதழுடன் அவைகளை அடக்கம் செய்துவிட்டு கண்ணீருடன் திரும்பிச் செல்கிறார்கள்.

    அடக்கம் செய்த இடம் அருகே சிறிய கல்வெட்டு ஒன்றையும் பொறித்து அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு எப்போதும் பலர் வணங்கி வருகிறார்கள். சென்னை மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவர் கமார்உசேன் மேற்பார்வையில் இந்த இடுகாடு செயல்பட்டு வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் செல்லப் பிராணிகளுக்காக தனியாக கண்ணம்மாபேட்டையில் இடுகாடு உருவாக்கப்பட்டு இப்போது அங்கு ஏராளமான செல்ல பிராணிகள் புதைக்கப்பட்டுள்ளன. தாங்கள் ஆசை ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணிகளுக்காக அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் வாரா வாரமோ, மாதத்துக்கு ஒரு முறையோ, 15 நாட்களுக்கு ஒரு முறையோ என தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்லப் பிராணிகளை வளர்த்து இழந்தவர்கள் படையல் செய்து வழிபடவும் மறப்பதில்லை.

    செல்ல பிராணிகள் விரும்பி சாப்பிடும் உணவுகளை எடுத்துக் கொண்டு அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகில் வைத்து கண்ணீர் மல்க வழிபட்டு விட்டு அங்கிருக்கும் ஊழியர்களிடம் செல்ல பிராணிகளை வீட்டில் ஒருவனாக நினைத்து வளர்த்து வந்தோம். அவன் இல்லாமல் எங்களால் இருக்கவே முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறிச் செல்பவர்களும் உண்டு.

    சென்னை மாநகரில் கண்ணம்மாபேட்டை இடுகாடு செல்ல பிராணிகளுக்காக தனியாகவே செயல்பட்டு வரும் நிலையில் மயிலாப்பூர் இடுகாட்டில் ஒரு பகுதியும் செயல்பட்டு வருகிறது. அங்கும் செல்ல பிராணிகள் புதைக்கப்பட்டு வருகின்றன.

    இப்படி சென்னை மாநகர் முழுமைக்குமே செல்லப் பிராணிகள் அடக்கம் செய்யும் இந்த இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே செல்லப் பிராணிகளை வளர்ப்போர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "விரைவில் அது தொடர்பாக ஆலோசித்து அனைத்து பகுதிகளிலும் அது சாத்தியமா? என்பதை கண்டறிந்து செல்ல பிராணிகளுக்கான இடுகாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

    இது தொடர்பாக பெருங்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது எனது வீட்டில் செல்லமாக வளர்த்த நாய் இறந்ததையடுத்து அதை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள இடுகாட்டுக்கு சென்றோம். ஆனால் அங்கு புதைப்பதற்கு இடம் தரவில்லை. இதையடுத்து பெருங்குடி குப்பை கிடங்கு பகுதிக்கு சென்று நான் புதைத்தேன் என்று வேதனையோடு குறிப்பிட்டார்.

    சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தனி வீடுகளை வைத்திருந்தால் தங்களது வீடு வளாகத்திலேயே அதனை புதைத்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு அது சாத்தியமில்லை.

    அதுபோன்ற நபர்களே ஆசை ஆசையாக வளர்த்த செல்லப்பிராணிகளை தெருவில் தூக்கி வீசுவதற்கு மனமின்றி முறைப்படி அடக்கம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

    புளூ கிராஸ் அமைப்பின் சார்பிலும் செல்ல பிராணிகளை தகனம் செய்து கொடுத்து வருகிறார்கள். இதற்காக இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் செல்லப்பிராணிகளின் உடலை எரித்து சாம்பலை அதன் உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து புளூ கிராஸ் அமைப்பினர் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வரும் இடுகாடுகளில் செல்லப்பிராணிகளுக்காக தனி இடத்தை ஒதுக்கி கொடுத்து அவர்களுக்கும் உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதே விலங்குகள் நல ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கருத்து கேட்டபோது விரைவில் கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் விலங்குகளை தகனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படுகிறது விலங்கு கள் நல ஆர்வலர்கள் குறிப்பிடுவது போல அனைத்து பகுதிகளிலும் செல்ல பிராணிகளை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    வாயில்லா ஜீவன்களான செல்லப் பிராணிகள் பல சாலையோரம் இறந்த பிறகு தூக்கி வீசப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். வரும் காலங்களில் அது போன்று இல்லாமல் செல்ல பிராணிகளுக்கும் இறந்த பிறகு உரிய மரியாதையை தர வேண்டும் என்கிற விலங்குகள் நல ஆர்வலர்களின் கோரிக்கை நியாயமானதாகவே உள்ளது. அவர்களும் நம் செல்ல சொந்தங்கள் தானே....

    • நாளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.
    • 3 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி–யிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ. சங்கத்திற்கு சொந்தமான மாதாக்கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இதனை நான் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறேன்.

    எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 3 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி, கொடிய நோயில் இருந்து தங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார்.
    • முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை வட்டார கால்நடைதுறை மருத்துவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷிவிகாஸ் யோஜனா 2022-23-ம் ஆண்டு திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (29-ந்தேதி) நடைபெறுகிறது.

    முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார். இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார், ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா, துணைத்தலைவர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இதில் பொதுமக்கள், விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×