search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aam Aadmi"

    • குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    • இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் வெளியானது.

    புதுடெல்லி :

    மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது சமீபத்திய கடிதத்தில், டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது உண்மை இல்லை என்றால், தனது முந்தைய புகாரை வாபஸ் பெறுமாறு சிறை நிர்வாகம் ஏன் என்னை வற்புறுத்துகிறது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அவர் நேற்று வெளியிட்ட மற்றொரு கடிதத்தில், ஆம் ஆத்மி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானால் என்னை தூக்கிலிடுங்கள். அதேநேரம், குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் நேற்று வெளியானது. அதில், 'நான் அமைதியாக இருந்தேன், எல்லாவற்றையும் புறக்கணித்தேன். ஆனால் உங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் சிறை நிர்வாகம், மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆகியோரது அச்சுறுத்தல்கள் என்னை திருப்பிவிட்டிருக்கின்றன' என்று சுரேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

    தனது முந்தைய புகாரில் உண்மை இல்லை என்றால், சிறை நிர்வாகம் தன்னை ஏன் வற்புறுத்துகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இந்த குற்றச்சாட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.
    • சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உள்பட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தற்போது ஆம் ஆத்மி கட்சி மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி திகார் சிறையில் தான் இருந்தபோது தனது சொகுசு வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தியதாக டெல்லி கவர்னர் வினய்குமார் சக்சேனாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடியும், சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ரூ.12.5 கோடி பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    மேலும் தென் மாநிலங்களில் கட்சிக்கு ஆட்கள் சேர்க்க ஆம் ஆத்மி கட்சி தன்னிடம் ரூ.500 கோடி கேட்டதாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மந்திரிகள் சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் "இந்த குற்றச்சாட்டுகள் கற்பனையானவை, குஜராத் தேர்தல் தோல்வி பயத்தில் பா.ஜனதா நடத்தும் வேலை இது' என கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தனது வக்கீல் மூலம் மீண்டும் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    அதில், 'சிறையில்தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று டெல்லி கவர்னரை வலியுறுத்தியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

    சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது. சுகேஷ் கூறியபடி சி.பி.ஐ. விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமாறு டெல்லி கவர்னரை பா.ஜனதா வலியுறுத்த உள்ளது. இது தொடர்பாக விரைவில் கவர்னரை சந்திக்க இருப்பதாக டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

    • ஆம் ஆத்மிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர் கூறியிருந்தார்.
    • கெஜ்ரிவால் மீதும் சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி துணை நிலை கவர்னருக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

    அதில் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மற்றும் திகார் சிறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். சிறையில் தனது பாதுகாப்புக்கு டி.ஜி.பி. ரூ.12.50 கோடி பெற்றதாகவும், மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடி பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், கவர்னருக்கு கடிதம் எழுதியதால் சத்யேந்தர் ஜெயின் மற்றும் முன்னாள் டி.ஜி.பி.யால் தான் மிரட்டப்படுவதாக தனது வக்கீலுக்கும், ஊடகங்களுக்கும் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த கடிதத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீதும் சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதாவது, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.500 கோடி திரட்டுமாறு கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக ஆம் ஆத்மிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர், தன்னை 'குண்டர்' என்று கூறிய கெஜ்ரிவாலை 'மகா குண்டர்' என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகரின் இந்த கடிதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியுள்ளார்.

    டெல்லி மந்திரி கைலாஷ் கெலாட்டின் பண்ணை வீட்டில் வைத்து சுகேஷ் சந்திரசேகரை கெஜ்ரிவால் சந்தித்தது உண்மையா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மந்திரி சத்யேந்தர் ஜெயினை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

    ஆம் ஆத்மிக்கு பணம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ள குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என கூறியுள்ள டெல்லி பா.ஜனதா தலைவர் அதேஷ் குப்தா, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. "குஜராத் மற்றும் டெல்லி உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயம் காரணமாக பா.ஜனதா ஒரு குண்டரை ஆம் ஆத்மிக்கு எதிராக ஒப்பந்தம் செய்துள்ளது" என டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

    • குஜராத் மாநிலத்தில் அடுத்த அரசை ஆம் ஆத்மி கட்சி அமைக்கும்.
    • தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க.வையும் பின்னுக்கு தள்ளி விடுவோம்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    டிசம்பர் 1, 5-ந் தேதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி உள்ளது.

    இங்கு 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றி பெற துடிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது.

    இந்த நிலையில், புதிதாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி கட்சியையும் இந்த தேர்தல் களத்தில் இறக்குகிறார். எனவே இப்போதே தேர்தல் களத்தில் சூடு பறக்கத்தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் டெல்லி முதல்-மந்திரி ஆக்குவதாகக்கூறி மணிஷ் சிசோடியாவிடம் பா.ஜ.க. பேரம் பேசியது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இந்த நிலையில், அந்தக் கட்சியினர் இப்போது என்னை நாடினார்கள். குஜராத் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாமல் விலகிக்கொண்டால், நாங்கள் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகிய இருவரையும் விட்டு விடுகிறோம். அவர்கள் மீதான எல்லா வழக்குகளையும் கைவிட்டு விடுகிறோம் என பேரம் பேசினார்கள்.

    யார் இந்த பேரத்தை பேசியது என கேட்கிறீர்கள். எனக்கு சொந்தமான ஒருவரின் பெயரையே.... நான் எப்படி சொல்ல முடியும்? அவர்கள் மூலமாகவே பேரம் வந்தது... பாருங்கள்... அவர்கள் நேரடியாக என்னை அணுகவில்லை. அவர்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு, இன்னொருவருக்கு, இன்னொருவருக்கு என வந்து கடைசியில் ஒரு நண்பர் வழியாக வந்தார்கள். பின்னர் செய்தி உங்களுக்கு வந்தடைகிறது.

    குஜராத் சட்டசபை தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் தோற்றுவிடுவோம் என்று பா.ஜ.க.வுக்கு பயம் வந்து விட்டது. எங்கள் கட்சியைத் தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளனர்.

    மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் என எங்கள் கட்சித்தலைவர்கள் இருவர் மீதும் போடப்பட்ட வழக்குகள், ஜோடிக்கப்பட்ட வழக்குகள் ஆகும்.

    குஜராத் மாநிலத்தில் அடுத்த அரசை ஆம் ஆத்மி கட்சி அமைக்கும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும்.

    எங்கள் கட்சி ஏற்கனவே 2-வது கட்சியாக முன்னிலை பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க.வையும் பின்னுக்கு தள்ளி விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி.

    புதுடெல்லி :

    தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு பெற்றுத்தர ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்.

    இவர் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், "ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்யேந்திர ஜெயின், 2019-ம் ஆண்டு, எனக்கு சிறையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்னை மிரட்டி ரூ.10 கோடி பணம் பெற்றார்" என்ற குற்றச்சாட்டை 3 ஆண்டுகளான நிலையில் இப்போது எழுப்பி உள்ளார்.

    இது குறித்து சிறையில் இருந்தவாறு சுகேஷ் சந்திரசேகர், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு ஒரு கடிதம் எழுதி, அந்த கடிதத்தை தனது வக்கீல் அசோக் சிங் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளார் என தகவல்கள் வெளியாகி புதிய சர்ச்சை வெடித்து உள்ளது.

    இதுபற்றி டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "குண்டர் வீட்டில் குண்டர் நடமாட்டம் நடந்துள்ளதாக செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்த குண்டரின் பெயர் சுகேஷ் சந்திரசேகர். அவரை ஏமாற்றியவர் ஆம் ஆத்மி கட்சி தலைவர் சத்யேந்திர ஜெயின். இவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இது ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி என காட்டுகிறது" என சாடினார்.

    இதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளிக்கையில், "மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் செயல் இது" என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, "பஞ்சாப் தேர்தலுக்கு முன்பாக குமார் பிஷ்வாஸ் மீது குற்றச்சாட்டு கூறினார்கள். குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது. இப்போது சுகேஷ் கதையை உருவாக்கி உள்ளனர்" என குறிப்பிட்டார்.

    • அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
    • பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை

    புதுடெல்லி :

    முப்படைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்கு பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்தநிலையில், இதுகுறித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    'அக்னிபாத்' திட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், அந்த திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த தொடங்கி விட்டதால், அதை முழுமையாக ஆதரிக்கிறோம். திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் அளித்த பேட்டியில், 'அக்னிபாத்' திட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தார்.

    • பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது.
    • கடந்த ஒரு வாரமாக, எம்.எல்.ஏ.க்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சண்டிகார்

    பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருவதாக அம்மாநில நிதி மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்பால்சிங் சீமா நேற்று குற்றம் சாட்டினார்.அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்தவுடன் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பா.ஜனதா ஏற்பாடு செய்த சிலர், 7 முதல் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

    கட்சி மாறி வந்தால், தலா ரூ.25 கோடி தருவதாகவும், பா.ஜனதா ஆட்சி அமைத்தால் மந்திரி பதவி அளிப்பதாகவும் பேரம் பேசினர். தங்களுடன் கூடுதலாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்தால், இன்னும் அதிக பணம் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.டெல்லியில், பெரிய தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக, எம்.எல்.ஏ.க்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேரம் வரும்போது இதற்கான ஆதாரத்தை வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விசாரணை ஆணையம் தனக்கு "க்ளீன் சிட்" வழங்கியதாக சிசோடியா கூறினார்.
    • சிபிஐ அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இதையடுத்து துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லி புறநகர் பகுதியான காஜியாபாத்தில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கி கிளையில் மணீஷ் சிசோடியா லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.

    இந்த சோதனையின்போது சிசோடியா மற்றும் அவரது மனைவி ஆகியோர் வங்கியில் இருந்தனர். இந்த சோதனை குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வங்கி முன்பு திரண்டனர். செய்தியாளர்களும் அங்கு கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. முன்னதாக இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த சிசோடியா எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை போல வங்கி லாக்கர் சோதனையிலும் எதுவும் கிடைக்காது என தெரிவித்திருந்தார். சிபிஐ அதிகாரிகள் வரவேற்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.

    பின்னர், சிபிஐ குழு தனது லாக்கரை சுமார் இரண்டு மணி நேரம் சோதனை செய்த பிறகு, விசாரணை ஆணையம் தனக்கு "க்ளீன் சிட்" வழங்கியதாக சிசோடியா கூறினார். மேலும், அவர் சிபிஐ அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் நேர்மை மற்றும் தேசபக்தி ஒட்டுமொத்த தேசத்தின் முன் நிரூபணமாகியுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், " முழு நடவடிக்கையும் அழுக்கு அரசியலால் தூண்டப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்த அழுக்கு அரசியல் நிறுத்தப்படும். நாங்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவோம் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பினார்.
    • தற்காலிகமாக ரெயில்வே அமைச்சகத்தால், திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை நிரந்தரமாக வைக்க வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பினார்.அதில், 75 வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக, இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டிதரும் 'டாலர் சிட்டி'யான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தற்காலிகமாக ரெயில்வே அமைச்சகத்தால், திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதற்காக திருப்பூர் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். திருப்பூர் மக்களின் விருப்பமும், நீண்ட நாள் கோரிக்கையுமான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நிரந்தரமாக, இப்பெயரை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ஹவாலா பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.

    இதற்கிடையே, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

    ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்தது.

    இந்நிலையில், சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யேந்திர ஜெயின் வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகளுக்கு சத்யேந்திர ஜெயின் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹவாலா பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவா சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஊழல் கட்சிகள் என தெரிவித்தார்.
    பனாஜி:

    உத்தர பிரதேசம், கோவா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜக கட்சிகள் நேருக்கு நேர் மோதிய மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும், மத்தியில் பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் தவிக்கிறது.

    இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியும் இந்த களத்தில் குதித்துள்ளது. கோவாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் இறங்கியுள்ளது.

    இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவா சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    காங்கிரசும், பா.ஜ.க.வும் ஊழல் கட்சிகள். அதனால் தான் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேச காங்கிரஸ் அஞ்சுகிறது. பா.ஜ.க. குறித்து பேசினால் சிறைக்குச் செல்ல நேரிடும் என காங்கிரசுக்கும் தெரியும். கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க. ஆட்சியில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல் மந்திரிகள் மீதோ, அமைச்சர்கள் மீதோ ஏன் ஒரு வழக்கு கூட இல்லை என தெரிகிறதா?

    இரு கட்சிகளும் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றன. இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஒப்பந்தமிட்டுள்ளன.

    கோவாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களை அயோத்திக்கும், கிறிஸ்தவர்களை வேளாங்கண்ணிக்கும், முஸ்லிம்களை அஜ்மீர் ஷெரீப்புக்கும், சாய்பாபாவை வணங்குபவர்களை ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும் யாத்திரை செல்ல இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #Rahulgandhi #Congress

    புதுடெல்லி:

    டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அந்த கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. இது தொடர்பாக கெஜ்ரிவால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

    காங்கிரஸ் மேலிடம் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் மாநில தலைமை அந்த கட்சியுடன் கூட்டணியை விரும்பவில்லை.

    இதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்து 6 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தது. ஆனாலும் இரு கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல்காந்தி கூறும்போது, “டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். இதை பூத் லெவலில் உள்ள தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கு மே மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    டெல்லியில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்தி விட்டு ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Rahulgandhi  #Congress

    ×