search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Poll"

    • குஜராத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது.
    • திறமையான தலைவர்களை அடையாளம் காணவில்லை.

    பெங்களூரு :

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கட்சிக்கு முன்பு வெற்றியை தேடி தந்தவர்களை கட்டாயம் மதிக்க வேண்டும். இமாசலபிரதேசத்தில் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ரசிங்கின் மனைவிக்கு கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த முயற்சி அங்கு வெற்றி பெற்றுள்ளது. அங்கு 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.

    சோதனையான காலக்கட்டங்களில் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தியவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களை புறக்கணித்ததால் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குஜராத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநிலங்களின் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில தலைவர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது.

    கட்சிக்கு நேர்மையாக, விசுவாசமாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்க வேண்டும். 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்று நல்ல ஆதரவை காங்கிரஸ் பெற்றது. ஆனால் அதன் பிறகு உள்ளூர் தலைவர்களுக்கு உரிய பதவி வழங்கவில்லை. திறமையான தலைவர்களை அடையாளம் காணவில்லை.

    இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.

    • குஜராத்தில் பா.ஜ.க. தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.
    • இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

    புதுடெல்லி :

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சாதனை வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. இந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நோட்டா ஓட்டுகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட எந்தவொரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்று கூறி அவர்களை நிராகரிக்கும் வகையில் கடைசியில் இடம்பெறுகிற சின்னத்தில் பதிவு செய்கிற வாக்கு ஆகும்.

    இந்த சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கு 5 லட்சத்து ஆயிரத்து 202 ஓட்டுகள் விழுந்துள்ளன. மொத்த வாக்குகளில் இது 1.5 சதவீதம் ஆகும். கடந்த 2017 தேர்தலில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 594 ஆகும். இத்துடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

    இந்த தேர்தலில் அதிகபட்சமாக கேத்பிரம்மா தொகுதியில் நோட்டாவுக்கு 7 ஆயிரத்து 331 ஓட்டுகள் விழுந்தன. தண்டா தொகுதியில் 5 ஆயிரத்து 213 வாக்குகளும், சோட்டா உதய்பூரில் 5 ஆயிரத்து 93 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.

    • ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி சிதைத்து இருக்கிறது.

    அகமதாபாத் :

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதுவரை இல்லாத அளவில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் வெற்றி, தோல்விகள் குறித்த புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன. அது பற்றிய ஒரு பார்வை வருமாறு:-

    சவுராஷ்டிரா பகுதியில் பா.ஜ.க.வுக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. அங்கு மொத்தம் 48 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 40 இடங்களை பா.ஜ.க. தன்வசப்படுத்தி உள்ளது. கடந்த முறை இந்த பிராந்தியத்தில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களை பெற்றிருந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சி அங்கு வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது.

    ஆம் ஆத்மிக்கு இந்தப் பகுதியில் 4 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரசை விட ஒரு இடம் ஆம்ஆத்மிக்கு கூடுதலாக கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

    சமாஜ்வாடி வேட்பாளர் காந்தல் ஜடேஜா குட்டியானா தொகுதியில் வெற்றிக்கொடி கட்டி இருக்கிறார்.

    பா.ஜ.க.வுக்கு சவுராஷ்டிரா பகுதியில் 48.23 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் காங்கிரசுக்கு 26 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆம் ஆத்மிக்கு 20 சதவீத ஓட்டுகள் விழுந்துள்ளன. காங்கிரசின் வீழ்ச்சிக்கு ஆம் ஆத்மி இங்கு வழிவகுத்துள்ளது.

    2017 தேர்தலில் காங்கிரசுக்கு 45.37 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 44.90 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

    கடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் அதன் பலத்தை 99 இடங்களுடன் காங்கிரஸ் கட்டுப்படுத்தியது என்றால், அதற்கு பட்டிதார் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குகள் கை கொடுத்ததுதான் காரணம் ஆகும்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரசில் இருந்து கட்சி தாவியவர்களுக்கும், புதுமுகங்களுக்கும் டிக்கெட் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.

    மத்திய குஜராத் பகுதியில் பா.ஜ.க. 61-ல் 56 இடங்களைப் பிடித்துள்ளது. 4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது.

    ஆம் ஆத்மி 8 தொகுதிகளில் இரண்டாவது இடத்தில் வந்துள்ளது.

    5 முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்த மது ஸ்ரீவஸ்தவ் சுயேச்சையாக வகோடியா தொகுதியில் களம் இறங்கினார். இங்கு பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வின் படேல் தோற்றார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரான தர்மேந்திர வகேலா வெற்றி பெற்றிருக்கிறார்.

    ஆமதாபாத், வதோதரா, நாடியத், உம்ரெத், மட்டார் நகர்ப்புறங்களிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    வடக்கு குஜராத்தில் 32 இடங்களில் 22 இடங்கள் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வென்றுள்ளனர்.

    கடந்த 2017 தேர்தலில் இந்தப் பகுதியில் காங்கிரசுக்கு 17 'சீட்டு'களும், பா.ஜ.க.வுக்கு 14 'சீட்டு'களும் கிடைத்தன.

    தெற்கு குஜராத்தில் 35 இடங்களில் 33 இடங்களில் பா.ஜ.க. வென்றிருக்கிறது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் தலா ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி சிதைத்து இருக்கிறது.

    சூரத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களையும் அப்படியே பா.ஜ.க. வாரிச்சுருட்டி விட்டது. கட்ச் பகுதியிலும் இதே கதைதான். 6 இடங்களையும் பா.ஜ.க. அள்ளியது. காங்கிரஸ் கட்சி இருந்த 2 இடங்களையும் இழந்துள்ளது. ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறாத போதும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது.

    ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய ஆம் ஆத்மிக்கு 5 இடங்களே கிடைத்தாலும், அதில் அந்தக் கட்சி திருப்தி அடைந்துள்ளது.

    இதுபற்றி அதன் மாநில தலைவர் கோபால் இடாலியா கருத்து தெரிவிக்கையில், "எங்கள் கட்சி குஜராத்தில் பா.ஜ.க.வின் கோட்டையில் குறிப்பிடத்தக்க அளவில் நுழைந்து இருப்பதே வெற்றிதான். இது கெஜ்ரிவாலின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி" என குறிப்பிட்டார். ஆனால் இவரும் சூரத்தில் உள்ள கட்டார்காம் தொகுதியில் தோல்வியைத் தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
    • பூபேந்திர படேலின் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி இது.

    கவுகாத்தி :

    குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து உள்ளது. இந்த வெற்றி வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'குஜராத் வெற்றி, இந்தியாவுக்கு. பிரதமர் மோடிஜி மீது கொண்ட அன்பு மற்றும் நம்பிக்கையால் இந்த வரலாற்று தீர்ப்பை அளித்துள்ளதன் மூலம், மக்கள் 2024-க்கான பாதையைக் காட்டியுள்ளனர்' என குறிப்பட்டு இருந்தார்.

    மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை, மத்திய மந்திரி அமித்ஷாவின் வியூகம், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர படேலின் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி இது எனவும் அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது.
    • பா.ஜனதா எல்லா சாதனைகளையும் முறியடித்து சரித்திர வெற்றி படைத்துள்ளது.

    புதுடெல்லி :

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    குஜராத்தில் பா.ஜனதாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த அம்மாநில மக்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது.

    கடந்த 20 ஆண்டுகளாக மோடியின் தலைமையின் கீழ், குஜராத்தில் அனைத்து வளர்ச்சி சாதனைகளையும் பா.ஜனதா முறியடித்தது. தற்போது, பா.ஜனதாவை மக்கள் ஆசீர்வதித்து, அனைத்து வெற்றி சாதனைகளையும் முறியடிக்கச் செய்துள்ளனர்.

    இந்த அமோக வெற்றியால், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பா.ஜனதாவுடன் இருப்பது தெளிவாகிறது. இலவசம், வெற்று வாக்குறுதிகள் ஆகியவற்றை அளிக்கும் அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். மக்கள் நலனுக்காக பாடுபடும் மோடியின் பா.ஜனதாவுக்கு முன்எப்போதும் இல்லாத வெற்றியை அளித்துள்ளனர்.

    இந்த வெற்றிக்காக பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, முதல்-மந்திரி பூபேந்திர படேல், கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குஜராத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த சரித்திர வெற்றி, வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவை மீது பா.ஜனதா கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    இந்த வெற்றிக்கான பெருமை, பிரதமர் மோடியின் தலைமை, அவரது புகழ், நம்பகத்தன்மை ஆகியவற்றையே சாரும்.

    ஜே.பி.நட்டா, அமித்ஷா, பூபேந்திர படேல், சி.ஆர்.பட்டீல் ஆகியோரின் கடின உழைப்பால், பா.ஜனதா எல்லா சாதனைகளையும் முறியடித்து சரித்திர வெற்றி படைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குஜராத்தில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
    • பிரதமர் மோடி பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    புதுடெல்லி :

    குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை பிடித்து, குஜராத் மாநிலம் பா.ஜனதாவின் கோட்டை என நிரூபித்து இருக்கிறது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று டெல்லியில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பா.ஜனதாவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குஜராத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும், பா.ஜனதா மீது மக்கள் தொடர்ந்து பொழிந்து வரும் அன்பின் காரணமாக மாநிலத்தில் அனைத்து சாதனைகளும் முறியடித்து வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.

    குடும்ப ஆட்சி மற்றும் அதிகரிக்கும் ஊழல் மீதான மக்களின் கோபத்தையே இந்த வெற்றி காட்டுகிறது.

    ஏழை, நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளையும் விரைவாக எடுத்துச்சென்றதால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து உள்ளனர்.

    இமாசல பிரதேசத்திலும் பா.ஜனதாவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சியை விட ஒரு சதவீத வாக்குகளே நமக்கு குறைந்திருக்கிறது.

    மக்களுக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதம் மகத்தானது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • குஜராத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
    • தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை.

    அகமதாபாத் :

    குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

    இந்த தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜக்திஷ் தகோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்பட எல்லாவற்றையும் காங்கிரஸ் சரியாகச் செய்திருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை என தெரிகிறது' என தெரிவித்தார்.

    குஜராத்தில் புதிய அரசை அமைப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீலுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு புதிய அரசு தீர்வு காணும் என நம்புவதாகவும் கூறினார்.

    இதற்கிடையே குஜராத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ரகு சர்மா ராஜினாமா செய்து உள்ளார்.

    • 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    அகமதாபாத் :

    182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.

    19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

    அப்போது 59.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

    ஆனால் 5 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாக்குப்பதிவு மேலும் அதிகரித்தது.

    இதன்மூலம் மொத்தம் 63.14 சதவீத வாக்குகள் இறுதியில் பதிவாகி இருந்தது. இறுதி நிலவரத்தை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

    இந்த தொகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 78.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பழங்குடியினர் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தில் வாக்களிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.

    பழங்குடியினரின் ஆதிக்கம் மிகுந்த மற்றொரு மாவட்டமான தபி மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் முறையே 76.91 மற்றும் 71.06 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருக்கிறது.

    மாநிலத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    பின்னர் 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    • பா.ஜ.க. ஆதரவாளர்களே பெருமளவில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடப்போகிறார்கள்.
    • சாதாரண மனிதர்கள் பயப்படுகிறார்கள்.

    ஆமதாபாத் :

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களில் எனது கணிப்புகள் பலித்துள்ளன.

    உங்கள் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கணித்துக்கூறுகிறேன். குறித்துக்கொள்ளுங்கள். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எனது கணிப்பு குஜராத்திலும் நன்றாகவே பலிக்கும்.

    27 ஆண்டு கால தவறான ஆட்சிக்குப்பின், குஜராத் இந்த மனிதர்களிடம் இருந்து (பா.ஜ.க.) விடுபடப்போகிறது.

    (குஜராத் தேர்தல் பற்றிய தனது கணிப்பை கெஜ்ரிவால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி நிருபர்களிடம் காட்டினார்.)

    பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள அரசு ஊழியர்கள், எங்கள் கட்சி ஆட்சி அமைக்க உதவுங்கள்.

    ஜனவரி 31-ந் தேதிக்குள் குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் அறிவிக்கையை நாங்கள் வெளியிடுவோம். நான் சும்மா சொல்லவில்லை. பஞ்சாப்பில் நாங்கள் அப்படி அறிவிக்கை வெளியிட்டுள்ளோம்.

    பிற ஒப்பந்த பணியாளர்கள், போலீசார், மாநில போக்குவரத்து ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தர ஊதியம், பணி நிரந்தரம், சம்பள உயர்வு, இட மாறுதல் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

    நாங்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்பதை அவர்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

    ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு அரசு ஊழியர்கள் ஆதரவு முக்கியம். எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது தபால் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு போடுங்கள்.

    27 ஆண்டுகளில் இப்போதுதான் பா.ஜ.க. முதல் முறையாக கொந்தளித்துப்போய் இருக்கிறது. நீங்கள் தெருவில் இறங்கி மக்களிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறீர்கள் என கேளுங்கள். அவர்கள் ஆம் ஆத்மிக்கு அல்லது பா.ஜ.க.வுக்கு என்று சொல்வார்கள். பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவதாக சொல்கிறவர்கள் 5 நிமிடங்கள் கழித்து தாங்கள் துடைப்பத்துக்கு (ஆம் ஆத்மி தேர்தல் சின்னம்) ஓட்டு போடுவோம் என்று வெளிப்படுத்துவார்கள்.

    நாங்கள் பல மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம். ஆனால் குஜராத்தில்தான் முதல்முறையாக மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கப்போகிறோம் என கூறுவதற்கு பயப்படுகிறார்கள். சாதாரண மனிதர்கள் பயப்படுகிறார்கள். காங்கிரசுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களை எங்கும் காண முடியவில்லை. பா.ஜ.க. ஆதரவாளர்களே பெருமளவில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடப்போகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
    • பிரதமர் மோடியும், தலைவர்களும் தீவிர ஓட்டு வேட்டையாடினர்.

    காந்திநகர் :

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது.

    அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ந் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.

    வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் கலவர வழக்கு குற்றவாளி மனோஜ் குக்ரானியின் மகள் பயல் குக்ரானி நரோடா தொகுதியிலும் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 4 பழங்குடியினர் தொகுதிகளில் காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆம் ஆத்மியும் 3 பழங்குடியினர் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்துள்ளது.

    89 தொகுதிகளில் 1-ந் தேதி நடக்கிற முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில் 167 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 பேர் மீது கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஏ.டி.ஆர். என்னும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

    ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் போட்டியில் உள்ளது. இந்த 88 வேட்பாளர்களில் 36 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அந்த வேட்பாளர்களில் 35 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.

    89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள பா.ஜ.க.வில், 16 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    முதல் கட்ட தேர்தலில் வைர நகரம் என்று அழைக்கப்படுகிற தொழில் நகரான சூரத் முக்கிய இடம் பிடிக்கிறது. இங்கிருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள்.

    முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற இந்த சூரத்தில் நேற்று பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். அவர் சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    மேலும் அவர் பாரூச் மாவட்டத்தில் உள்ள நேட்ராங்க், கெடா மாவட்டத்தின் மெகமதாபாத் ஆகிய நகரங்களிலும் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    கெடா மாவட்டத்தில் மெகமதாபாத்தில் அவர் பேசும்போது, "ஜனநாயகம் வலிமை பெற அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்கு அளிக்க வேண்டும். ஜனநாயகம் வலுவானால், நாம் அனைவரும் வலிமை பெற முடியும்" என தெரிவித்தார்.

    பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்துகிற நர்மதா மாவட்டத்தின் டெடியாபடா நகரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கார்கே நேற்று ஓட்டு வேட்டையாடினார். அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சாடினார். அப்போது அவர், "பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காங்கிரஸ் 70 வருடங்களில் என்ன செய்தது என கேட்கிறார்கள். நாங்கள் எதுவுமே செய்யவில்லையென்றால் ஜனநாயகமே கிடைத்திருக்காது. நீங்கள் உங்களை ஏழை என்கிறீர்கள். நானும் ஏழைதான். ஏழையிலும் பரம ஏழை" என குறிப்பிட்டார்.

    காங்கிரசுக்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    அவர் அங்கு ஜவுளித்தொழில் அதிபர்கள் மற்றும் ரத்தினக்கல் கைவினைஞர்களுடன் டவுன்ஹால் சந்திப்புகளை நடத்தி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார்.

    முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் நாளை (29-ந் தேதி) மாலை தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆளும் பா.ஜ.க. மட்டுமே அனைத்து இடங்களிலும் நிற்கிறது.
    • பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந்தேதி எண்ணப்படுகின்றன.

    ஆமதாபாத் :

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

    கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிற இந்த மாநிலத்தில், இம்முறை ஆளும் பா.ஜ.க., காங்கிரசுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்கிறது.

    மும்முனைப் போட்டி நடைபெறுகிற தேர்தலில் பிரசார களத்தில் சூடேறி வருகிறது.

    முதல் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. இரண்டாவது கட்ட தேர்தல் 93 இடங்களில் டிசம்பர் 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல், பரிசீலனை, திரும்பப்பெறல் யாவும் முடிந்துள்ளன.

    இந்த நிலையில், அங்கு 1,621 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

    முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாவது கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்கின்றனர்.

    ஆளும் பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் (182) வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.

    எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கூட்டணிக்கட்சியான சரத் பவாரின் தேசியவாதக்காங்கிரசுக்கு ஒதுக்கித்தந்து விட்டு எஞ்சிய 179 இடங்களிலும் வேட்பாளர்களை போட்டியிடச்செய்துள்ளது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கோப்சிங் லாவர், தேவ்காத் பரியா தொகுதியில் தனது வேட்புமனுவைத் திரும்பப்பெற்றுள்ளார். எனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.

    கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 182 இடங்களிலும் போட்டி போடுவதாக அறிவித்தது. ஆனால் அதன் வேட்பாளர் சூரத் கிழக்கு தொகுதியில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், அந்தக் கட்சி 181 தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது.

    ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் அதன் வேட்பாளர் பாபுநகர் தொகுதியில் வேட்பு மனுவை திரும்பப்பெற்று விட்டதால் 13 இடங்களில் மட்டுமே அக்கட்சி களத்தில் உள்ளது.

    இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 765 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் (2 கோடியே 37 லட்சத்து 51 ஆயிரத்து 738), ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். 2 கோடியே 53 லட்சத்து 36 ஆயிரத்து 610 ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.

    மூன்றாம் பாலினத்தவர் 1,417 பேர் இந்த மாநிலத்தில் வாக்காளர்களாக உள்ளனர்.

    இந்த தேர்தலில் பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந் தேதி எண்ணப்படுகின்றன. அதே நாளில் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    • மிக அதிகளவில் இடங்களை பிடிப்போம்.
    • அதிக ஓட்டுகள் வாங்குவோம்.

    ஆமதாபாத் :

    குஜராத் சட்டசபை தேர்தலில் சனந்த் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கனுபாய் படேல் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்த தொகுதி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் காந்திநகர் மக்களவை தொகுதியில் அடங்கியது. எனவே மனுதாக்கலின்போது அவரும் கலந்து கொண்டார்.

    அப்போது அமித்ஷா கூறும்போது, "குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்கும். இங்கு மீண்டும் பலத்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். மிக அதிகளவில் இடங்களை பிடிப்போம். அதிக ஓட்டுகள் வாங்குவோம்" என கூறினார்.

    ×