search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry robbery"

    • சதீஷ், ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றுள்ளான்.
    • சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குடும்பத்துடன் வசிப்பவர் செல்வேந்திரன் (வயது 57). காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆனந்தலிங்கம் (25).

    இவர் கஞ்சா விற்ற வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி செல்வேந்திரனும், அவரது மனைவி பார்வதியும் வெளியே சென்று இருந்த வேளையில் அவர்களது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதில் திருடப்பட்ட, பணம் ரூ.48 லட்சம் என்றும் பின்னர் ரூ.7 லட்சம் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனிடையே 12 கிராம் தங்க நகையும், ரூ.2 லட்சமும் திருட்டு போனதாக ஆறுமுகநேரி போலீசார் 5-ந் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர் விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஏரல் சேதுக்குவாய்தான் கிராமத்தை சேர்ந்த விஜயராமன் மகன் சத்தியமுகேஷ் என்ற சதீஷ் (24) மற்றும் இவரது உறவினரான மேலாத்தூர் சொக்கப்பழக்கரையை சேர்ந்த கோபால் மகன் சச்சின் (23) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

    விசாரணையில் சதீஷ் மீது ஆறுமுகநேரி, குரும்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இப்படி ஒரு வழக்கின் காரணமாக சதீஷ் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக இருந்தபோது தான் அவருக்கும் காயல்பட்டினம் ஆனந்த லிங்கத்திற்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே சதீஷ் ஜாமீனில் வெளியே வர இருந்த சூழ்நிலையில் அவரிடம், ஆனந்தலிங்கம் உதவி கேட்டுள்ளார். அதாவது, தன்னை பெற்றோர்கள் ஜாமீனில் எடுக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. அதனால் நீ எங்கள் வீட்டிற்கு சென்று அங்கே வைத்திருக்கும் லட்சக்கணக்கான பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டு பின்னர் என்னை ஜாமினில் வெளியே கொண்டு வந்துவிடு. நாம் அதன் பிறகு பணத்தை செலவழித்து ஜாலியாக இருக்கலாம் என்ற திட்டத்தை கூறியுள்ளார்.

    இதன்படி சதீஷ் ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் திசை திருப்பிவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான். தனக்கு உதவியாக சச்சின் என்பவரை சேர்த்துக் கொண்டுள்ளான்.

    தற்போது கைது செய்யப்பட்டுள்ள சதீஷிடமிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.

    • வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்த யோவான்ராஜ் (வயது33). இவருக்கு திருமணம் ஆகி சுதாசெல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    யோவான்ராஜ் திருச்செந்தூரில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். யோவான்ராஜ் நேற்று இரவு விடுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே நேற்று தூத்துக்குடியில் இருந்து சுதாசெல்வியின் உறவினர் பெண்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில் யோவான் ராஜ் வீட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து வாள், அரிவாள், கம்பி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.

    தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகைள் மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் என 15 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். செல்போன்களை எடுத்துச் சென்றதால் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வந்த பெண்கள் திருச்செந்தூர், தூத்துக்குடி சாலையில் வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் நின்று உதவி கேட்டபோது சாலையில் வாகனத்தில் சென்ற யாரும் உதவ முன் வராததால், சுதா செல்வி வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு திருச்செந்தூரில் விடுதியில் பணிபுரியும் கணவரிடம் நேரில் சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்த்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அய்யாசாமி காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் அசரியா. இவரது மனைவி எஸ்தர் (வயது 52).இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    அசரியா இறந்து விட்டதால் வெளிநாட்டில் வசிக்கும் தனது தங்கை கெஸ்த்திதிற்கு சொந்தமான அய்யாசாமி காலனி வீட்டில் வசித்து அவரது 3 குழந்தைகளையும் கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் கோவையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக எஸ்தர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று விட்டு கடந்த 30-ந்தேதி மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது அவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பான புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கலைவாணர், பொன்பாண்டி உட்பட போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அருள்ராஜ் என்ற கருவாடு (20), சந்தோஷ்குமார் (21), சந்திரன்(20), ஹரிபிரசாத் (23), சோட்டையன் தோப்பை சேர்ந்த 18 வயதுடைய 2 பேர் மற்றும் ஒரு இளஞ்சிரார் உட்பட 7 பேர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று சிப்காட் காவல் சரக பகுதியில் மேலும் 5 வீடுகளில் அவர்கள் திருடியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 60 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் (வயது 31).

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காலனி தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் ஒரு வயது குழந்தை உடன் மத்தூர் அருகே தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.

    இந்த நிலையில் பாலச்சந்தர், தனது மனைவி, குழந்தையுடன் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக சொந்த ஊரான உத்திரமேரூருக்கு சென்றுள்ளார். மேலும் சொந்த ஊரிலிருந்து நேற்று மத்தூருக்கு பாலச்சந்தர் மட்டும் வந்துள்ளார்.

    அப்போது வந்து பார்த்தபோது வீட்டின் இரும்பு கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டும், உள்ளே பீரோவில் இருந்து 8 பட்டு புடவைகள், ரூ.30ஆயிரம் மதிப்புள்ள டி.வி., 2ஜோடி வைர தோடுகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலச்சந்தர் மத்தூர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், பாலச்சந்தர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், வைர தோடு, புடவை, டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவ குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பழைய மார்க்கெட் அருகே ஜின்னா வீதியை சேர்ந்தவர் சிராஜூ தீன் (வயது 70). இவரது மனைவி லைலா பானு. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.

    மூத்த மகள் மட்டும் தந்தை வீட்டு அருகே திருமணமாகி வசித்து வருகிறார். சிராஜூதீன் டெக்கரேஷன் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சிராஜூதீன் மற்றும் குடும்பத்தினர் விடுமுறையை கழிக்கும் வகையில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டனர்.

    இதையடுத்து நள்ளிரவு 12:30 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து அனைவரும் உள்ளே சென்றனர். அப்போது நடுவீட்டில் ஓடு பிரிந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோ இருக்கும் அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. சிராஜூதீன் சொந்தமாக நிலம் வாங்குவதற்காக ரூ.20 லட்சம் பணத்தை பீரோவில் வைத்திருந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பி.வி. லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் திருடப்பட்டிருந்து.

    இதே போன்று எஸ்.வி.புரம் ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்யாதேவி (29). இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டைக்கு சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதே போன்று பூட்டியிருந்த கணேசபுரம் நாச்சம்மாள் (75) என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து ரூ.36 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.

    இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரம் அங்கு சென்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகம்மாவின் ஊரில் விசாரணை நடத்தினர்.
    • நாகம்மா உடலை 10 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், கோனே கண்டலா அடுத்த பெத்தமரி வீடுவை சேர்ந்தவர் நாகம்மா (வயது 80). இவரது மகன், பெத்த பஜார். இவருக்கு வெங்கடேஷ், தினா என 2 மகன்கள் உள்ளனர்.

    உள்ளூரில் சரி வர கூலி வேலை கிடைக்காததால் பெத்த பஜார் தனது மனைவி மகன்களுடன் குண்டூருக்கு குடி பெயர்ந்தார். அங்கு வெங்கடேஷ் நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு ஆளானார். மேலும் புதிய செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. புதிய செல்போன் வாங்க வேண்டுமென தனது பெற்றோரிடம் பணத்தை கேட்டார். அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 4-ந் தேதி வெங்கடேஷ் பாட்டி நாகம்மா வீட்டிற்கு வந்தார். பாட்டியை கொலை செய்து அவர் அணிந்திருக்கும் நகைகளை விற்று புதிய செல்போன் வாங்க முடிவு செய்தார்.

    அதன்படி நள்ளிரவில் நாகம்மா வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வெங்கடேஷ் பாட்டியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டார். பின்னர் வீட்டில் குழி தோண்டி பாட்டியின் உடலை புதைத்தார்.

    மறுநாள் காலை ஒன்றும் தெரியாதது போல் பாட்டியின் வீட்டில் இருந்து எமிகானூர் வந்து அங்குள்ள நகைக்கடையில் பாட்டியின் நகைகளை ரூ.29 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார். பின்னர் குண்டூருக்கு சென்று அங்குள்ள செல்போன் கடையில் ரூ.25 ஆயிரத்திற்கு புதிய செல்போன் வாங்கினார்.

    இந்த நிலையில் நாகம்மாவின் வீட்டிற்கு மற்றொரு பேரன் கோபால் என்பவர் வந்தார். வீட்டில் பாட்டி இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து கோனே கண்டலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகம்மாவின் ஊரில் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேஷ் பாட்டியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. போலீசார் வெங்கடேஷை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து விற்பனை செய்ததை வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். மேலும் நாகம்மா உடலை 10 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    • மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன். ரமலான் நோன்பை முன்னிட்டு நேற்று இரவு காஜாமைதீன் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் வெளியே உள்ள மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்காக சென்றார்.

    பின்னர் தொழுகை முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்தனர். வீடு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன், ரூ.2500 ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். பீரோவில் 2 பெட்டிகளில் நகைகள் வைத்துள்ளனர். அதில் ஒரு பெட்டியில் இருந்த 9 பவுன் நகையை கொள்ளையர்கள் எடுத்து சென்ற நிலையில் மற்றொரு பெட்டியில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் விட்டு சென்றிருந்தனர். இது குறித்து காஜாமைதீன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன வீடு அதிக அளவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே கொள்ளையில் ஈடுபட்டது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் வேலப்பகவுண்டம்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

    புஷ்பலதா மற்றும் அவரது மருமகள் ஆகியோர் தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், தங்க சங்கிலி உட்பட 10 பவுன் நகைகளையும், 5000 ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர். ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புத்தரச்சல் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் 10 பவுன் நகைகளை வீட்டுக்குள் புகுந்து மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த உத்தனம்பட்டி பிரிவு அருகே வசிப்பவர் கருப்பையா (வயது 60). அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பரத்.கருப்பையா தனது வீட்டின் அருகே பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதனை கருப்பையா மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 7ந் தேதி கருப்பையா தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் கருப்பையா வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள்,ரொக்க பணம் ரூ.3 லட்சத்து 29 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், போலீசார் கிளாடின், ஜஸ்டின், வினோத், கருணாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை திருப்பூர், தஞ்சாவூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தோமையார்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், பையில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்காக உபகரணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    கொள்ளையடித்த பணத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு லாங் டிரைவ் செய்து வந்ததும், கேரளாவிற்கு சென்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் தனது நண்பர்களுடன் கொள்ளையடித்த சுரேஷ் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனையில் இருந்த போலீசார் அவர்களது காரை மடக்கினர். இதையடுத்து வாலிபர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் பண்ருட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அவர்களை தேடி வந்துள்ளனர்.

    அதன் பின்பு அவரது நண்பர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். சுரேஷ் வேறு இடத்தில் கொள்ளையடிப்பதற்காக திண்டுக்கல் வந்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், நெல்லைக்கு சென்று அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 பவுன் நகை, போலி நம்பர் பிளேட், கொள்ளையடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுரேஷ் மீது திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

    சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    • விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர்.
    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70). அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு, ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

    அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, நீங்கள் யார் என்று கேட்டார். தொடர்ந்து அவர் கூச்சல் போட்டு பக்கத்து வீட்டினரை உதவிக்கு அழைக்க முயன்றார். அப்போது கொள்ளை கும்பல் அவரது வாயை பொத்தி அங்கிருந்த சேரில் கட்டிப்போட்டனர்.

    பின்னர் விஜயலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி, 4 பவுன் தங்க வளையல்கள் மற்றும் 3/4 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பீரோவில் பணம், நகை எதுவும் உள்ளதா என்று கேட்டனர். மேலும் விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர். பின்னர் கொள்ளையர்கள் பீரோவை திறந்து லாக்கரில் இருந்த பணம், நகைகளை ஓட்டுமொத்தமாக கொள்ளையடித்தனர். தொடர்ந்து அவர்கள் கொள்ளையடித்த பணம், நகைகளுடன் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்று விட்டனர்.

    அதன்பிறகு மூதாட்டி விஜயலட்சுமி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் சேரில் கட்டப்பட்ட நிலையில் இருந்த விஜயலட்சுமியை விடுவித்து விசாரித்தனர். அப்போது தான் 2 பேர் கும்பல் வீட்டின் பின்பக்கவாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது.

    இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பேரூர் சரக போலீஸ் டி.எஸ்.பி வெற்றிசெல்வன், தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து போலீசார் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர்.

    இதில் அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் டீச்சர்ஸ் காலனிக்கு வருவதும், பின்னர் விஜயலட்சுமி வீட்டின் பின்பக்க பகுதிக்கு நைசாக சுவரேறி குதித்து செல்வதும் தெரியவந்தது. அதாவது மூதாட்டி வீட்டு வளாகத்துக்குள் சுமார் 7.45 மணியளவில் புகுந்த கொள்ளை கும்பல் அங்கு சாவகாசமாக உட்கார்ந்து மதுஅருந்தியது. பின்னர் அவர்கள் மதுபோதையுடன் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த வீஜயலட்சுமி வீட்டுக்குள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.

    ஆசிரியை வீட்டில் மொத்தம் 25 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.
    • 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர், ஆனைமலை பகுதியில் உள்ள 6 இடங்களில் தொடர்கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

    இதன்படி வால்பாறை டி.எஸ்.பி. ஸ்ரீநிதி மற்றும் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 38) என்பவர் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பகலில் கட்டிடத் தொழிலாளி போல் வலம் வந்துள்ளார். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் வீடு புகுந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் சமீபகாலமாக கோட்டூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    குற்றவாளி ராமச்சந்திரனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை கோட்டூர் போலீஸ் சரகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பூட்டியிருந்த 3 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதம் மேலும் 3 வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அந்த பகுதிக்கு பரிச்சயம் இல்லாத ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பதிவெண் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கோட்டூர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய குற்றவாளி பற்றி தெரியவந்தது. தொடர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த கொத்தனார் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தோம். பின்னர் அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    கோட்டூரில் நடைபெற்ற 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார். இவர் மீது மதுரை மாநகர், மாவட்ட போலீஸ் நிலையங்களில் 15 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் போலீசின் தேடுதல் வேட்டைக்கு பயந்து குடும்பத்துடன் கோவைக்கு வந்து கோட்டூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு பணத்தேவை ஏற்பட்டதால் மீண்டும் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.

    ராமச்சந்திரனை கைது செய்யும் விஷயத்தில் எங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவியாக இருந்தது. எனவே கோவை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும். மேலும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றால், நாங்கள் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×