search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்காசி கொள்ளை"

    • மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன். ரமலான் நோன்பை முன்னிட்டு நேற்று இரவு காஜாமைதீன் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் வெளியே உள்ள மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்காக சென்றார்.

    பின்னர் தொழுகை முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்தனர். வீடு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன், ரூ.2500 ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். பீரோவில் 2 பெட்டிகளில் நகைகள் வைத்துள்ளனர். அதில் ஒரு பெட்டியில் இருந்த 9 பவுன் நகையை கொள்ளையர்கள் எடுத்து சென்ற நிலையில் மற்றொரு பெட்டியில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் விட்டு சென்றிருந்தனர். இது குறித்து காஜாமைதீன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன வீடு அதிக அளவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே கொள்ளையில் ஈடுபட்டது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையம் அருகே ஆசீர்வாதபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சமுத்திரக்கனியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
    • சமுத்திரகனி கடையம் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் அந்த சாலையில் இருந்த சோதனை சாவடிகளில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் தேவக்கனி. இவரது மனைவி சமுத்திரக்கனி(வயது 50). இவர் கீழக்கடையம் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.

    கடையம் கானாவூரை சேர்ந்தவர் ஞானம்(36). இவர் பெரும்பத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நீரேற்று நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஞானம் ஓட்டி சென்றார்.

    கடையம் அருகே ஆசீர்வாதபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சமுத்திரக்கனியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுதொடர்பாக சமுத்திரகனி கடையம் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் அந்த சாலையில் இருந்த சோதனை சாவடிகளில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது கடையம்-தென்காசி சாலையில் நம்பர் பிளேட் இல்லாத ரேஸ் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஹெல்மட் அணிந்தபடி 2 கொள்ளையர்கள் சென்றதும், அவர்கள் சமுத்திரக்கனியிடம் செயினை பறித்ததும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில், இந்த சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பாகவே பொட்டல்புதூரில் அந்த கொள்ளையர்கள் சாலையில் சென்ற பெண்ணிடம் ஒரு செயினை பறித்து வந்ததும், அது கவரிங் நகை என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவையொட்டி அழகாபுரியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரவு நேரத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தங்கி மறுநாள் காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
    • அதன்படி நேற்று இரவு வேதாளசெல்வம் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 4 மணிக்கு வேதாளசெல்வம் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் அழகாபுரி கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் வேதாளசெல்வம்(வயது 38).

    இவர் நெல்லை-தென்காசி மெயின்ரோட்டில் அடைக்கலப்பட்டினத்தில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள அருணாப்பேரி என்ற கிராமத்தில் மேகம் திரைகொண்ட சாஸ்தா கோவில் திருவிழா நடந்து வருகிறது.

    இந்த கோவில் திருவிழாவையொட்டி அழகாபுரியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரவு நேரத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தங்கி மறுநாள் காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    அதன்படி நேற்று இரவு வேதாளசெல்வம் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 4 மணிக்கு வேதாளசெல்வம் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாறையால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேதாள செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவும் கடப்பாறையால் உடைக்கப்பட்டு இருந்தது.

    அதில் அவர் வைத்திருந்த ரூ.30 லட்சம் பணத்தை காணவில்லை. ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரியில் உள்ள தோட்டம் ஒன்று விலைக்கு வந்துள்ளது. அதனை வாங்குவதற்காக வேதாள செல்வம் பணத்தை ஏற்பாடு செய்து வைத்துள்ளார்.

    கோவில் கொடை விழா முடிந்ததும் பத்திரம் கிரையம் செய்து கொள்ளலாம் என்று உறவினர்கள் தெரிவித்ததால் பணத்தை வீட்டில் அவர் வைத்துள்ளார். இதனை நன்கு அறிந்த நபர்கள் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    உடனடியாக அவர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்றுவிட்டு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    அங்கு தடயவியல், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சங்கரன்கோவில் அருகே உள்ள உசிலங்குளம் கிராமத்தில் உள்ள உச்சி உடையார் அய்யனார் கோவில் உள்ளது.
    • நேற்று முன்தினம் அந்த கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு தர்மகர்த்தா வேலுச்சாமி வழக்கம் போல கோவில் கதவை அடைத்து விட்டு சென்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல் குளத்தில் ரேணுகா தேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சீனிவாசன் என்பவர் நிர்வகித்து வருகின்றார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கோவிலை அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் நேற்று கோவிலின் வளாகத்திற்கு உள்ளே சென்று பார்த்த போது அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சீனிவாசனுக்கு தகவல் அளித்தார். இதில் 40 கிராம் வெள்ளி கொடி, 2 கிராம் தங்கம் மாங்கல்யம், சில்வர் உண்டியல் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளை பதிவு செய்யும் எந்திரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல சங்கரன்கோவில் அருகே உள்ள உசிலங்குளம் கிராமத்தில் உள்ள உச்சி உடையார் அய்யனார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அந்த கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு தர்மகர்த்தா வேலுச்சாமி வழக்கம் போல கோவில் கதவை அடைத்து விட்டு சென்றுள்ளார்.

    நேற்று அங்கிருந்த உண்டியல் மற்றும் சி.சி.டி.வி. காட்சி பதிவு செய்யும் எந்திரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் மற்றும் கடைகள், அலுவலகங்கள் பாதுகாப்பிற்காக போலீசார் சி.சி.டி.வி .கேமரா பொருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் சூழ்நிலையில் சி.சி.டி.வி. காட்சிப்பதிவு எந்திரத்தையே கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளையர்கள் தம்பதியை தாக்கி விட்டு மேஜையில் இருந்த சாவிகளை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.
    • எனவே பீரோ சாவியை தம்பதியினர் மேஜையில் வைத்திருப்பதை பல நாட்களாக நோட்டமிட்டு, அவர்களுக்கு அறிமுகமானவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 88). இவரது மனைவி ஜாய் சொர்ண தேவி (83). இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆவர்.

    இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் அரசு துறையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அருணாசலம், ஜாய் சொர்ண தேவி ஆகிய இருவர் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த 4 பேர் இருவரையும் கட்டிப்போட்டு விட்டு பீரோவில் இருந்த 140 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    வள்ளியூரில் பணிபுரிந்து வரும் அவர்களது மகள் ராணி இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய போது தான் கொள்ளை சம்பவம் வெளியே தெரிந்தது.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.

    வீட்டில் சி.சி.டி.வி. கேமிரா இல்லாத நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் ஒரு தனிப்படை, ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு தலைமையில் 2 தனிப்படை என மொத்தம் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்கள் தம்பதியை தாக்கி விட்டு மேஜையில் இருந்த சாவிகளை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளனர். எனவே பீரோ சாவியை தம்பதியினர் மேஜையில் வைத்திருப்பதை பல நாட்களாக நோட்டமிட்டு, அவர்களுக்கு அறிமுகமானவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள ஆஸ்பத்திரி ஒன்றின் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நடமாடுவது தெரிய வந்தது.

    இதுகுறித்து நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்களுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும், இதில் ஈடுபட்ட மேலும் 2 பேர் பற்றிய தகவல்களும் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கொள்ளையடித்த நகை, பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்கள்? இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×