search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீட்டில் மோப்பநாய் மூலம் சோதனை நடந்தபோது எடுத்த படம்.

    ஆலங்குளம் அருகே இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளை

    • கோவில் திருவிழாவையொட்டி அழகாபுரியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரவு நேரத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தங்கி மறுநாள் காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
    • அதன்படி நேற்று இரவு வேதாளசெல்வம் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 4 மணிக்கு வேதாளசெல்வம் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் அழகாபுரி கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் வேதாளசெல்வம்(வயது 38).

    இவர் நெல்லை-தென்காசி மெயின்ரோட்டில் அடைக்கலப்பட்டினத்தில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள அருணாப்பேரி என்ற கிராமத்தில் மேகம் திரைகொண்ட சாஸ்தா கோவில் திருவிழா நடந்து வருகிறது.

    இந்த கோவில் திருவிழாவையொட்டி அழகாபுரியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரவு நேரத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தங்கி மறுநாள் காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    அதன்படி நேற்று இரவு வேதாளசெல்வம் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 4 மணிக்கு வேதாளசெல்வம் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாறையால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேதாள செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவும் கடப்பாறையால் உடைக்கப்பட்டு இருந்தது.

    அதில் அவர் வைத்திருந்த ரூ.30 லட்சம் பணத்தை காணவில்லை. ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரியில் உள்ள தோட்டம் ஒன்று விலைக்கு வந்துள்ளது. அதனை வாங்குவதற்காக வேதாள செல்வம் பணத்தை ஏற்பாடு செய்து வைத்துள்ளார்.

    கோவில் கொடை விழா முடிந்ததும் பத்திரம் கிரையம் செய்து கொள்ளலாம் என்று உறவினர்கள் தெரிவித்ததால் பணத்தை வீட்டில் அவர் வைத்துள்ளார். இதனை நன்கு அறிந்த நபர்கள் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    உடனடியாக அவர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்றுவிட்டு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    அங்கு தடயவியல், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×