search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arudra darshan"

    • சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசி பெற பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.
    • மற்ற தலங்களைவிட இங்கு உள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது.

    தங்கம்போல் புடம்போட்டு தன் பக்தர்களை ஜொலிக்கச் செய்யும் பரமன், அந்த பக்தர்களின் பக்தியை பார்போற்றும்படி செய்திடுவான். அதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி, ஆட்கொள்வான். அப்படி பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எண்ணற்ற அடியவர்களுள் ஒருவரே மானக்கஞ்சாறர்.

    மானமேப் பெரிதென வாழ்ந்த வேளாளர்க்குடியில் பிறந்த இவர், சோழ மன்னனின் படைகளுக்கு தலைமை வகிக்கும் படைத்தளபதியாக விளங்கினார். ''மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறனுக்கு அடியேன்'' என்று சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் இவரது பெருமையையும், வலிமையையும் புகழ்ந்து போற்றுகின்றார். சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்த மானக்கஞ்சாறர் தனது வீரத்தாலும், உழைப்பினாலும் செல்வங்கள் யாவையும் பெற்றார். இருப்பினும், இவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. பல நாட்கள் குழந்தைப்பேறு இன்றி வருந்திய இவருக்கு ஈசன் அருளால் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தாள்.

    அவளுக்கு 'புண்ணியவர்த்தினி' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த புண்ணியவர்த்தினி பருவமெய்தி, திருமண வயதை அடைந்தாள். பேரழகுடைய இவளுக்கு ஏயர்கோன் கலிக்காமரை மணம் முடித்திட, பெரியவர்கள் நிச்சயித்தனர்.


    திருமண நாளும் வந்தது. சுற்றமும், நட்பும் சூழ்ந்தனர். தன் பக்தன் மானக்கஞ்சாறன் மீது தீராக்காதல் கொண்ட மகாதேவர், ருத்ராட்ச மாலையோடு, எலும்பு மாலைகளையும் அணிந்து கொண்டு, கேசத்தையே பூணூலாக தரித்துக் கொண்டு, உடல் முழுதும் விபூதி பூசிய வண்ணம் மகாவிரதம் பூண்ட மாவிரதராய் (அகோரியாக) மணப்பந்தலை வந்தடைந்தார்.

    அவரைக் கண்ட மானக்கஞ்சாறர் மனம் பூரிப்படைந்து, அவ்வடியாரை வரவேற்று மகிழ்ந்தார். தனது மகள் புண்ணியவர்த்தினியை அழைத்தார். சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசி பெற பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அப்போது அவளது அழகிய நீண்ட கருங்கூந்தலை கண்ணுற்றார் அகோரியாய் வந்த அர்த்தநாரீசர்.

    ''ஆஹா, இந்த நீண்டக் கூந்தல் எனது மார்பில் அணியும் பஞ்சவடிக்கு (கேசத்தால் அணியும் பூணூல்) உதவுமே'' என்று மானக்கஞ்சாறரிடம் கூறினார். திருமண வேளையில், அதுவும் மகளின் கூந்தலை வெட்டுவது அமங்கலம் என்று கூட கருத்தில் கொள்ளாத மானக்கஞ்சாறர், உடன் தனது வாளை எடுத்தார். தன் மகளின் கூந்தலை அறுத்தார். வந்திருந்த மாவிரதரிடம் அளித்தார். அதை வாங்கிட எழுந்த அவ்வடியார் மறைந்தார்.

    மறுகணமே தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்து, கஞ்சாறரை ஆட்கொண்டு, அவரை கண்ணீர்மல்கச் செய்தார் கயிலைநாதர். ''உனது அன்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே தாம் இவ்வாறு செய்தோம்'' என்று கூறி அவரை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். அறுபட்ட புண்ணியவர்த்தினியின் கூந்தல் மீண்டும் வளர்ந்தது. ஈசனுக்கே தனது கேசத்தை அளித்து, பெரும் புண்ணியம் செய்த புண்ணியவர்த்தினி ஏயர்கோன் கலிக்காமரை மணந்தாள். இரு வரும் சிவத்தில் திளைத்து வாழ்ந்தனர். இறுதியில் இணையில்லா ஈசனடியைச் சேர்ந்தனர்.


    ஆதியில் சப்தமாதர்களுள் அன்னை கவுமாரி வழிபட்ட இப்பதி பாரிஜாத வனமாக திகழ்ந்துள்ளது. இந்த பாரிஜாத வனத்தில் ஆசிரமம் அமைத்து, தவமியற்றி வந்த பரத்வாஜ முனிவரின் வேண்டு கோளுக்கு இணங்க பெருமான் இங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டியருளியுள்ளார். இதனால் இப்பதி ''பரத்வாஜாசிரமம்'' என்று அழைக்கப்பட்டது. இத்தல நாயகர் பரத்வாஜீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அதன் பின்னர் இத்தலம் கஞ்சாறூர் என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த முனிவரை ஆட்கொண்ட பின்னர் ஆனந்த தாண்டவபுரம் என்றாகி, தற்போது ஆனதாண்டவபுரம் என்று மருவியுள்ளது.

    ஆனந்த மாமுனிவர் அனுதினமும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இரவு அர்த்தஜாம பூஜைக்கு சிதம்பரம் சென்று தில்லையம்பல வாணரை தரிசிப்பது வழக்கம். தினமும் சரியாக நடந்துவந்த இந்த வழக்கம் ஏனோ தில்லைக்கே உரிய திருநாளான ஆருத்ரா அன்று முரண்பாடானது. அன்றைய தினம் ராமேஸ்வர ஸ்நானம் முடித்து, கஞ்சாறூர் நெருங்கும் வேளையில் புயல் காற்றோடு, கடும் மழையும் பெய்தது. செய்வதறியாமல் திகைத்த ஆனந்த முனிவர் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அடியார் துயரம் காணப் பொறுக்காத அம்பலத்தரசர் தனது ஆனந்தத் திருநடனத்தை இத்தலத்தில் ஆனந்தமாய் அரங்கேற்றினார். பேரானந்த பெருவெள்ளத்தில் மூழ்கினார் அனந்த மாமுனிவர். இதனால் இத்தலம் அன்று முதல் ஆனந்தத் தாண்டவபுரம் என்றே அழைக்கலானது.

    ஆனந்த மாமுனிவருக்கு ஆருத்ரா தரிசனத்தை இங்கேயே காட்டியருளியதால் சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்ய முடியாதவர்கள் இந்த ஆனந்த தாண்டவபுரத்திலேயே அந்த அருட்காட்சியை கண்டு மகிழலாம். அதோடு சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்வதற்கு முன்னரோ அல்லது தரிசனம் செய்த பின்னரோ கூட இங்கு நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது உன்னதமான சிவனடியார்களின் மரபாக உள்ளது.


    மற்ற தலங்களைவிட இங்கு உள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது. இந்த தூக்கிய திருவடியே 'குஞ்சிதபாதம்' என்று போற்றப்படுகின்றது. திருவாசியின் துணையின்றி முயலகன் மீது மட்டுமே தனது வலது காலை ஊன்றி நிற்பது முற்றிலும் வித்தியாசமான அமைப்பாகும்.

    உற்சவர் சிலைகளில் விசேஷ மூர்த்தியாகத் திகழும் ஸ்ரீ ஜடாநாதர், அறிந்தக் கூந்தலை தனது இடது கையில் பிடித்தபடி காட்சி தரும் தரிசனத்தை வேறு எங்கும் நாம் காண முடியாது. அருகே மானக்கஞ்சாறரது விக்ரஹமும் உள்ளது. பின் தென் முகம் பார்த்தபடி அன்னை பிரஹன்நாயகி தனியே சன்னதி கொண்டிருக்கிறாள். அம்பிகையை வணங்கி ஈசன் சன்னிதியை அடையலாம்.

    கருவறையுள் சிறிய மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார், ஸ்ரீபஞ்சவடீஸ்வரர். ஆலய வாமபாகத்தில் இன்னொரு தல நாயகியாம் அன்னை ஸ்ரீகல்யாணசுந்தரி கிழக்கே முகம் காட்டி, தனியே சன்னிதி கொண்டிருக்கிறாள். தென்மேற்கில் தான்தோன்றி கணபதியும், மேற்கில் வள்ளி - தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியரும் வீற்றுள்ளனர்.

    தினசரி நான்கு கால பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கும். தலவிருட்சமாக பாரிஜாதம் திகழ்கின்றது. பொதுவான சிவாலய விசேஷங்களோடு ஆருத்ரா மற்றும் மானக்கஞ்சாறர் குருபூஜை ஆகியன இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. சுவாமியும், அம்பிகையும் இங்கு திருமணக்கோலத்தில் உள்ளதால் திருமண தடை நீக்கும் தலமாக திகழ்கிறது.

    இங்குள்ள அமிர்த பிந்து தீர்த்தத்தில் நீராடி, இறை வன் - இறைவியை வழிபடுபவர்களுக்கு எல்லா விதமான தோல் நோய்களும் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முற்பிறவியில் ஏற்பட்ட சாப-பாப-தோஷங்கள் யாவும் இத்தலத்தை வழிபட்டால் போக்கிக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை - சேத்தூர் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆனந்ததாண்டவபுரம்.

    • தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி.
    • சிறப்பு பூஜைகள் நடந்தது.

    சிதம்பரம்:

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். சிவபெருமானுக்குரிய ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நாளில் ஆடல் அரசனான நடராஜருக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுவாமி நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இந்த தரிசனத்தின் போது மூலவரே தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

    ஆகையால், நடராஜரின் தரிசனத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வருவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் நடராஜருக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

    விழாவில் 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மூலவராகிய நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் ஊர்வலமாக ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு நேற்று முன்திம் இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    பின்னர், சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 3 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது, பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் தந்தார். இந்த அற்புத காட்சியை கோவிலுக்குள் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சிவ, சிவா, ஓம் நமசிவாயா என்று பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.

    • மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜருக்கு மகா தீப மை திலகமிடப்பட்டது.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நேற்று காலை நாடராஜருக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

    அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவம் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 30-ந் தேதி முதல் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
    • மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலானது முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்த கோவிலில் சிவபெருமான் மங்களநாதராகவும், அம்மன் மங்களநாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடராஜருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.

    மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையை காப்பதற்காக மரகத நடராஜர் மீது ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இருக்கும். ஆண்டில் ஒருநாள், அதுவும் ஈசனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தனக்காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம்.

    இதன்படி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக காலை 7.45 மணி அளவில் நடராஜர் சன்னதி நடைதிறக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.

    பின்னர் மரகத நடராஜருக்கு சந்தனம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.

    தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, நான்கு ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று (புதன்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜர் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இதைத்தொடர்ந்து நடராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்படும்.
    • 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும்.

    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் உயர்வானது. திருவாதிரை நட்சத்திரத்தை யொட்டி, நடராஜப் பெருமானுக்கு மிகச்சிறந்த விழா, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு `திருவாதிரை திருவிழா' என்று பெயர். இத்திருவிழாவை ஒட்டி பல சிவாலயங்களில் உள்ள நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகாஅபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் காண பக்தர்கள் குவிவார்கள்.

    ஆருத்ரா தரிசனத்தை தரிசிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் நீங்கி பெரும் புண்ணியம் சேரும். வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவபெருமானின் திருநடனத்தைக் காண விரும்பி அவரை துதிக்க, அவர் தன்னுடைய திருநடனத்தை, இந்த ஆதிரை நாளில் நிகழ்த்திக் காட்டியதாக புராண வரலாறு. நடராஜ மூர்த்திக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதில் முக்கியமான அபிஷேகம் ஆருத்ரா அபிஷேகம் ஆகும். உத்தரகோசமங்கை எனும் தலத்தில் மகா அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இதுதவிர மற்ற திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளிலும் இந்த சிறப்பு உண்டு.

    திருஆலங்காடு, மதுரை, நெல்லை, குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள சிவாலயங்களிலும் அபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது திருவாதிரைக் களி படைப்பார்கள். பெருமானுக்கு விசேஷமான திருவாதிரைக் களியும், பல்வேறு காய்கறிகளை போட்டு கூட்டினை செய்வார்கள். களி என்பது ஆனந்தம் என்ற பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மாவானது ஆனந்தமாக இருக்கும்.

    அந்த களியைத் தரும் பிரசாதம் திருவாதிரை நாளில் நிவேதனம் செய்யப்படும் திருவாதிரைக் களி ஆகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து, சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல மாங்கல்ய பலம் பெருகும். பாவங்கள் நீங்கும். அறிவும் ஆற்றலும் கூடும்.

    • உற்சவ மூர்த்திகள் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர்.
    • ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தங்கர தத்தில் பிச்சாண்டவர் வெட்டுங்குதிரை வாகன வீதிஉலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழா நடை பெற்றது.

    சித்சபையில் வீற்றுள்ள மூலவரான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்ரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை யொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகா பிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை யும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

    28-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. தேரோட்டத்தை யொட்டி சிதம்பரம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
    • பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது

    சிதம்பரம்:

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். இதனை தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.

    வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடை பெறுகிறது. வருகிற 27-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

    28-ந் தேதி (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் சிவ சங்கர தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

    • பவுர்ணமி பூஜை ,ஸ்ரீ உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • சாய்கிருஷ்ணா நுண்கலைகூடம் சார்பில் ஆருத்ரா தரிசன பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சி அண்ணாமலைகார்டன், திருமலை கார்டன் பகுதியில் உள்ள ஸ்ரீ உண்ணாமலை அம்பிகை சமேத ஸ்ரீ அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இடுவாய் அழகிய பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3மணிக்கு ஸ்ரீஅண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பவுர்ணமி பூஜை ,ஸ்ரீ உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நடராஜர்- சிவகாமியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வேதிகா பூஜை, மாங்கல்யதாரணம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் , காலை 9 மணிக்கு சுவாமி திருவீதிஉலா நடைபெற்றது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஸ்ரீ உண்ணாமலை அம்பிகை சமேத ஸ்ரீ அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சன்ஸ்டார் , ஸ்ரீ எட்டுக்கையம்மன் குழுமம் மற்றும் சாய்கிருஷ்ணா நுண்கலைகூடம் சார்பில் ஆருத்ரா தரிசன பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    • பெரம்பலூர் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டது
    • சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜபெருமான்- சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது.இதைத்தொடர்ந்து சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது. ஊர்வலம் மேளதாளத்துடன் சன்னதி தெரு, கடைவீதி, மேற்கு தெரு, வடக்குத் தெரு வழியாக சென்று மீண்டும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதே போல் பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் 40-வது ஆண்டு திருவாதிரை திருவிழா தொடங்கி 2 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலையில் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் நடத்தினார். இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசன உற்சவமும், மகாதீபாராதனையும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து நடராஜபெருமான் மற்றும் சிவகாமி அம்பாள் திருமேனிகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு, எடத்தெரு, செக்கடித்தெரு, பெரியதெற்குத்தெரு, கடைவீதி வழியாக ஆருத்ரா தரிசன காட்சி, சுவாமி திருவீதி உலா நடந்தது. திருவாதிரை விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர சோழிய வேளாளர் சமூகத்தினர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


    • பல்வேறு அபிஷேகங்களுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.
    • மரகத நடராஜர் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனம் களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி காலையில் சந்தனம் களையப்பட்டு, பல்வேறு அபிஷேக தீபாராதனைகளுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. பின்னர் நடைசாத்தப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    அதிகாலை 4.30 மணி அளவில் அருணோதய காலத்தில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது புதிய சுத்தமான சந்தனம் பூசப்பட்டது. பச்சை மரகத நடராஜர் சிலை முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நன்கு அரைக்கப்பட்ட சந்தனம் மென்மையாக பூசி வைக்கப்பட்டது. இதன்பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    மேலும் மரகத நடராஜர் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் பூசப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவிலில் கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    இரவு 9 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி ரிஷப சேவை நடைபெற்றது. சிவனுக்கு உகந்தநாளாக கருதப்படும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது விஷேசம் என்பதாலும், விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததாலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.

    ஆருத்ரா தரிசன ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • இன்று பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
    • நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் தனிசிறப்புகள் வாய்ந்தது.

    ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜரே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பிறகு தினமும் சாமி வீதிஉலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி 4 வீதியில் வலம் வந்தனர்.

    தேரோட்டம் முடிந்ததும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு எழுந்தருளினார்கள். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 4.45 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து மாலை 5.20 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி திருநடனம் புரிந்தபடி தரிசனம் அளித்தார். இந்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...! நடராஜ பெருமானே...!, சிவ, சிவ... ஓம் நமச்சிவாய என்று விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர்.

    இதையடுத்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசன் தீட்சிதர், துணை செயலாளர் சேதுஅப்பாசெல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    • ஈரோடு கோட்டை ஈஸ்வ ரன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது
    • ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வழியாக சென்று மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் திருவீதி உலா வந்து நிறைவடைந்தது

    ஈரோடு,

    ஈரோடு கோட்டை ஈஸ்வ ரன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி கோவி லில் திருவெம்பாவை மாணிக்க வாசகர் உற்சவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. பிச்சாண்டவருக்கு அபிஷே கம், தீபாராதனை நடை பெற்றது.

    உச்சிக்கால பூஜை நடை பெற்ற பிறகு பிச்சாண்டவர் புறப்பாடு வீதி உலா நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவாருணாம்பிகா சமேத ஆருத்ரா கபாலீஸ்வர பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் சிவகாமி அம்பிகை சமேத நடராஜர் பெருமாளு க்கு ஆருத்ரா அபிஷேகம் தொடர்ந்து ஆருத்ரா தரிசன வைபவம் நடைபெற்றது.

    இதில் நெய் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் உட்பட 14 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 63 நாயன்மாரு க்கும் அபிஷேகம், மகாதீபா ராதனை நடந்தது.

    இதனைத் தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வழியாக சென்று மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் திருவீதி உலா வந்து நிறைவடைந்தது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை ஊஞ்சல் உற்சவம் நடை பெறுகிறது.

    ×