search icon
என் மலர்tooltip icon

    கத்தார்

    • ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    • அவர்கள் கத்தார் தலைநகர் டோகாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்

    டோகா:

    அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் ஈரான் மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் தென்கொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த ரூ.49,138 கோடியை ஈரானுக்கு கிடைக்க செய்யாமல் முடக்கினார்.

    இதற்கிடையே, அமெரிக்கா, ஈரான் இடையே கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பேரில் அமெரிக்காவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு ஈரானில் சிறை தண்டனை அனுபவிக்கும் 5 அமெரிக்கர்களை விடுவிக்க ஈரான் ஒப்புக்கொண்டது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் பொருளாதார தடையால் முடக்கப்பட்டிருந்த ரூ.49,138 கோடியை அமெரிக்கா விடுவித்தது. மேலும் அமெரிக்க சிறையில் உள்ள ஈரானியர்கள் 5 பேரை விடுவிக்கவும் ஆலோசனை நடக்கிறது.

    இந்நிலையில், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட அவர்கள் கத்தார் தலைநகர் டோகாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை கத்தாருக்கான அமெரிக்க தூதர் டேவிஸ் நேரில் சென்று வரவேற்றார்.

    • எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை
    • மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டை விளக்கினர்

    2021-ம் வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டது.

    இதனையடுத்து மத அடிப்படைவாத தலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிலிருந்தே தலிபான் அரசாங்கம் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

    குறிப்பாக மத ரீதியான காரணங்களை வலியுறுத்தி பெண்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தடை செய்திருக்கிறது. இதுவரை எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆட்சியமைத்த 2 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க பிரதிநிதிகள், தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களை கத்தார் நாட்டில் சந்தித்தனர்.

    தலிபான் தரப்பில் இருந்து அவர்கள் நாட்டிற்கு அமெரிக்கர்கள் வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள சுற்றுபயண தடை உட்பட பல தடைகளை நீக்குவது குறித்தும், வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு சொந்தமான சொத்துக்களை திரும்ப பெறுவது குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    அமெரிக்க தரப்பில் ஆப்கானிஸ்தானில் நிலவும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து முக்கியமாக அலசப்பட்டது.

    இந்த சந்திப்பில் சிறப்பு அமெரிக்க பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான தூதர் ரீனா அமிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தலிபானின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டை விளக்கினர். ஆப்கானிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக வேண்டிய உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    பெண் குழந்தைகளின் கல்வி தடை, பெண்கள் வேலைக்கு செல்வதற்கான தடை, ஊடகங்களுக்கான தடை மற்றும் பிற மத வழிபாட்டு தடை உட்பட தாலிபான் விதித்திருக்கும் பல தடைகளை நீக்க கோரும் அமெரிக்க நிலைப்பாடு விளக்கப்பட்டது.

    உலகின் மிகப்பெரிய ஓபியம் பயிரிடும் நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்ததும், ஓபியம் பயிரிடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.

    தலிபான் அரசு ஆட்சியை கைப்பற்றிய உடன் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு மத்திய வங்கியின் பணம் ரூ.57 ஆயிரம் கோடியை ($7 பில்லியன்) நியூயார்க் வங்கியில் முடக்கி வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    • நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
    • 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார்.

    கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார். அதனால், இந்த முறையும் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக்(88.63 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(85.88 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    • மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார்
    • சில நேரங்களில் இருவரும் மோசமாக விளையாடியதாக மெத்வதேவ் கூறினார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    இதுபற்றி மெத்வதேவ் கூறுகையில், 'இன்றைய போட்டி மிகவும் கடினமான போட்டியாக இருந்தது, ஏனெனில் காற்று அதிகம் வீசியது. இன்று கடுமையான போராட்டமாக இருந்தது. சில நேரங்களில் நாங்கள் இருவரும் மோசமாக விளையாடினோம், சில சமயங்களில் இருவரும் நன்றாக விளையாடினோம்' என்றார்.

    • போபண்ணா ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
    • போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    தோகா:

    கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - கான்ஸ்டன் லெஸ்டினே (பிரான்ஸ்)- போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.

    இதில் 6-7 (5-7), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா ஜோடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த ஆட்டம் 1 மணி 39 நிமிடங்கள் நீடித்தது. போபண்ணா- எப்டன் ஜோடியாக வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ரூ.60 லட்சம் பரிசாக கிடைத்தது.

    பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவித்து வருகின்றனர்.
    • முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

    நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது.

    நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த வீடுகள் எல்லாம் குப்பையாக கிடக்க கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் கேரவன்களை கத்தார் அரசு அனுப்புகிறது. உலககோப்பை கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் தங்குவதற்கு சுற்றுசூழல் மாசுபடாத வகையில் கண்டெய்னர்களில் சொகுசு கேரவன்களை உருவாக்கியிருந்தது.

    இப்போது, முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது

    • கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்த டுவிட் தற்போது வைரலானது.
    • என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தகவல்.

    கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ள நிலையில், உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான ஜோஸ் மிகுவல் போலன்கோ என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ந் தேதி தமது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


    இந்நிலையில் தமது கணிப்பு நிறைவேறிய பிறகு, போலன்கோ,  ஸ்பானிஷ் மொழியில் இன்று மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவிற்கு அதிபர் மேக்ரான் பாராட்டு
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்ததாக பேட்டி.

    லுசைல்:

    கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் கண்டு ரசித்தார். தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர் ஆதரவு தெரிவித்தார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும், அதன் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    இறுதி ஆட்டத்தில் தோற்றதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம், மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக எம்பாப்பே உள்பட தோல்வியால் துவண்டிருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவின் ஆட்டம் அசாதாரணமானது என்றும், 24 வயதான அவர், ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் என்றும் மேக்ரான் தெரிவித்தார். இந்நிலையில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று கத்தாரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். உலக கோப்பையை பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் பாரீசில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மேக்ரான் தெரிவித்துள்ளார். 

    • முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2வது பாதியில் பிரான்ஸ் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் சமனிலை அடைந்தது.

    கத்தார்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

    முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் 3-3 என சமனிலை பெற்றன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை 3வது முறையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

    இரண்டாவது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு ரூ.244 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது.

    • அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.
    • அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

    கத்தார்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.

    அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி முதல் கோல் அடித்தார்.
    • முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    கத்தார்:

    கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. கோப்பையைக் கைப்பற்றும் இந்த போட்டியில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதின. 


    ஆட்டம் தொடங்கிய 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்சி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அந்நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து 36-வது நிமிடத்தில் ஏஞ்சல் டிமெரியா அர்ஜென்டினாவிற்கான 2-வது கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெடினா முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியை பிரான்ஸ் வீரர்கள் தீவிரப்படுத்தினர். அதன்படி 80-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் அவர் தமது அணிக்கு மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையை எட்டியது.


    இதையடுத்து முதல் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவதாக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. 108வது நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 118-வது நிமிடத்தில் எம்பாப்பே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.

    இதையடுத்து இரு அணிகளும் 3-3 சமனிலை பெற்றன. எம்பாப்பே ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார்.

    மூன்றாவது கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

    ×