என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டொனால்டு டிரம்ப் 20 அம்ச திட்டங்களை பரிந்துரைத்து போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டார்.
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் டிரம்பின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையிலான போர் நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டார். ஹமாஸ் விரைவாக இதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரில் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதல்கட்டமாக ஹமாஸ் அமைப்பினர், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.
அதன்படி காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகள் விடுவிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் பிடியில் 48 பணயக்கைதிகள் உள்ளனர். இவர்கள் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், காசாவில் போர் நிறுத்தத்திற்கான நம்பிக்கை வலுப்பெறும்.
- சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்று செய்தி வெளியானது.
- என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா யாரை திருமணம் செய்வார்? எப்போது திருமணம் செய்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
அடிக்கடி அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வருகிறது. ஆனால் கடைசியில் அது வதந்தியாகவே நின்று விடுகிறது. தற்போது மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று காலை முதல் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, சிரித்தபடி இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார்.
இந்த நிலையில் திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் "என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் திரிஷா இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை எனத் தெரிகிறது.
- இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 7 நாட்களே உள்ள நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் டிரெய்லர் வெளியாகி தேதியை மாற்றியது படக்குழு. அதன்படி வருகிற 13- ந் தேதி டிரெய்லர் வெளியாகும் என புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் உள்ளனர்.
- சாதாரணக் கட்டண பேருந்தில் பெண்கள் கட்டணமில்லைா பயணம் மேற்கொள்ளலாம்.
- மலைப்பகுதியில் மாற்று திறனாளிகள் இனிமேல் விடியல் பயணம் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்தில் பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு விடியல் பயணம் என பெயரிடப்பட்டுள்ளது. விடியல் பயணம் என பெயரிடப்பட்டு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.
மலைப் பகுதியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில, மலைப்பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தி, அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் வரும் ஒரு துணையாளர் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்து போராடி வருகின்றனர்.
- இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத படியே பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும், நிர்வாண புகைப் படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் துறைத் தலைவர் மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுஉள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ரஜினிஸீகுப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாலையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
இதனால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.
- ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
- சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள கேரள பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த ஒரு சில ஆவணங்கள் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2019 ஜூலை 19 அன்று அகற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பலகைகளின் எடை 42.8 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டது.
மறுநாள் (ஜூலை 20, 2019) பலகைகள் உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி என்பவரின் பொறுப்பில், முலாம் பூசும் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இவை 39 நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
சென்னை நிறுவனத்தில் பலகைகள் பதிவு செய்யப்பட்டபோது, அவற்றின் எடை 38.25 கிலோகிராம் எனப் பதிவாகியிருந்தது. இதன் மூலம், பயணத்தின் போது சுமார் 4.54 கிலோகிராம் தங்கம் அல்லது தங்க முலாம் பூசிய செம்பு குறைந்திருந்தது தெரியவந்துள்ளது.
பலகைகள் சென்னைக்குச் செல்லும் வழியில் நேரடியாக கொண்டு செல்லப்படாமல் வழியில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பலகைகள் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் கோயில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில்கள், பெங்களூருவில் உள்ள அய்யப்பா ஆலயம் மற்றும் கேரள நடிகர் ஜெயராமின் வீட்டிற்கு ஒரு தனியார் பூஜைக்காகவும் எடுத்துச் செல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும், இந்த கவசங்களுக்கு நடிகர் ஜெயராமின் சென்னை வீட்டில் வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி 2019 இல் அனுப்பிய மின்னஞ்சலில், தங்கத்தை ஒரு திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?. திரும்பக் கொண்டுவரப்பட்ட பலகைகள் அசல் துண்டுகள்தானா, அல்லது அதுபோன்ற பிரதிகள் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கேரள அரசு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு வாரங்களுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதன் பின்னர் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது.
- ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைத்தனர். 38 ரன்கள் எடுத்த ராகுல் 19-வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் அரை சதமும், மறுபுறம் ஜெய்ஸ்வால் சதமும் விளாசினர்.
தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து கில்- ஜெய்ஸ்வால் ஜோடி பொறுப்புடன் விளையாடினர்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
- வேடந்தூரில் நடைபெற்ற விழாவின்போனது உதயநிதி ஸ்டாலின் காலை தொட்டு ஆசி.
- தனது மகன் வயதுடைய உதயநிதி ஸ்டாலின் காலை தொடலாமா? என விமர்சனம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திண்டுக்கல் மாவட்டம் சென்றிருந்தார். நேற்று வேடசந்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி உள்ளிட்டோர் இருந்தனர். வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் உதயநிதி, அமைச்சர் பெரியசாமிக்கு மாலை அணிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து அவரது காலை தொட்டு ஆசி பெற்றார். 74 வயதான எம்.எல்.ஏ., தனது மகன் வயதுடைய உதயநிதி ஸ்டாலின் காலில் விழந்து ஆசி பெறலாமா?. ஓஹோ இதான் திமுக கற்றுத் தந்த சுயமரியாதையா, இதுதான் திமுக சமூக நீதி ஆட்சியா....? என வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காந்திராஜன் அதிமுக சார்பிலும் எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். மேலும், துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
- தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
- நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அண்மையில் லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டத்தை தூண்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில் அங்கும் மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
ஆயினும், பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது ஒரு தனித்துவமான பிரச்சினை என்றும், பல காரணிகளை பரிசீலிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் கோரினார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்தபோதுதான் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசுக்கு அனுமதி அளித்தால், நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
கடந்த 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2023 டிசம்பர் 11 அன்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று உறுதி செய்து அதேசமயம், ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மீறுவதாகும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.
இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று விசாரணையின்போது, பதிலளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் தாக்கல் செய்யாத நிலையில் தற்போது மேலும் 4 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது.
- சிறுநீரகத் திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு, திமுக அரசு என்பது உறுதியாகியிருக்கிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு குறித்து தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் தலைமையில் விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவே சிறுநீரகத் திருட்டு குறித்து விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
கிட்னி திருட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் நிஷா , சிலம்பரசன், கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய இ.கா.ப. அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஆணையிட்டது. அக்குழு அதன் விசாரணையை முடித்து செப்டம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்த நிலையில் தான் அதற்கு 4 நாள்கள் முன்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
மதுரை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு பதிலாக தாங்கள் கூறும் அதிகாரிகளை சிறப்புப் புலனாய்வுக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்றும், உயர்நீதிமன்றம் அமைத்தக் குழுவே விசாரணையை நடத்தும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது சட்டத்தையும், நீதியையும் வளைத்து சிறுநீரகத் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு விழுந்த சம்மட்டி அடி ஆகும்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த 5 இ.கா.ப அதிகாரிகளும் தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். ஒரு மாநில அரசு அதன் சொந்த அதிகாரிகள் நடத்தும் விசாரணையையே எதிர்க்கிறது என்றால், அவர்கள் நடத்தும் விசாரணையில் உண்மை வெளியாகிவிடும். அதனால் அவர்களுக்கு பதில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து விசாரித்து குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிக்கிறது என்பது தான் பொருள். சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது என்பதற்கு இது தான் சான்று ஆகும்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைக் கடந்து, நீதியை பலி கொடுத்தாவது தங்களுக்கு வேண்டியவர்களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக அரசு துடிக்கிறது. அதற்காகத் தான் சிறுநீரகத் திருட்டு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கிலும் யாரையோ காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. அதிலும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.
திமுக அரசு மக்கள் நலனைக் காக்கும் அரசு அல்ல.... சிறுநீரகத் திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு என்பது உறுதியாகியிருக்கிறது. மக்கள்விரோத திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
- உச்சநீதிமன்றத்தில் இரண்டு முறையீடு வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக உத்தரவு.
- ஒரே நாளில் டெல்லி முதல் மதுரை வரை திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன.
1) திமுக எம்எல்ஏ-வுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சிறுநீரக திருட்டு குறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த தமிழக அரசு ஏற்றுள்ளது, ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள அதிகாரிகளை அரசு பரிந்துரைக்கும் என்ற நிபந்தனையை விதித்தது.
எவ்வளவு வெட்கக்கேடானது!
2) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் அஞ்சுகிறது?
3) விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசின் மீது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
4) திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்களில் பிளவுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதியான நீதிபதி விஜய் குமார், நீதிபதி ஸ்ரீமதியின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில் விலங்குகளை பலியிடுவதை தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்று அழைக்க வேண்டும்.
டெல்லி முதல் மதுரை வரை, நீதி அதன் சொந்த மனசாட்சியை விட வேகமாக திமுக அரசாங்கத்தைத் துரத்துவது போல் தெரிகிறது.
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
- சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடித்துள்ளனர்.
- இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், டீசல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.






